உலக சாதனை படைத்த சேவாக் – கிரிகெட் செய்திகள்
இந்தோர். டிசம்பர் 8. இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையேயான சர்வதேச ஒரு நாள் போட்டி இந்தோரில் நடைபெறுகின்றது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. மூன்றாவது ஒரு நாள் போட்டியில் தோல்வியைத் தழுவியிருந்த இந்திய அணி இப்போட்டியில் வெல்லவேண்டும் என்ற உறுதியுடன் களம் இறங்கியது. வீரேந்திர சேவாக் மற்றும் கவுதம் கம்பீர் இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
இந்த இந்திய இணை பவுண்டரிகளை விளாசித் தள்ளியது. இந்திய அணி மொத்தம் 176 ஓட்டங்கள் என்ற நிலையில், 67 ஓட்டங்கள் எடுத்த கவுதம் கம்பீர் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய இந்திய பேட்ஸ்மேன் விரேந்திர சேவாக் 44வது ஓவரில், 140 பந்துகளில் 201 ஓட்டங்கள் எடுத்து ஒரு நாள் போட்டிகளில் அதிக பட்ச ஓட்டங்கள் என்ற டெண்டுல்கரின் முந்தைய சாதனையான 200 ஓட்டங்களைக் கடந்தார்.
தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த சேவாக் போட்டியின் 47ம் ஓவரின் போது சிக்ஸருக்கு முயற்சித்தார். அப்போது கேட்ச் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். அப்போது சேவாக் 219 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இந்திய அணியின் மொத்த ஓட்டங்கள் 376 ஆக இருந்தது.
சேவாக் எடுத்த 219 ஓட்டங்களில் 25 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் அடங்கும்.
219 ஓட்டங்கள் எடுக்க சேவாக் சந்தித்த பந்துகளின் எண்ணிக்கை 149.
தொடர்ந்து 208 நிமிடங்கள் விளையாடி இந்த உலக சாதனையைப் படைத்திருக்கிறார் சேவாக்.
இப்போட்டியின் 50வது ஓவரின் முடிவில் இந்திய அணி மொத்தம் 418 ஓட்டங்களை எடுத்தது. இது இந்திய அணி ஒரு நாள் போட்டிகளில் எடுத்த அதிகபட்ச ஓட்ட எண்ணிகையாகும்.
வாழ்த்துக்கள் சேவாக்.. கலக்கிட்டீங்க.!