இருதய மருத்துவம் சார்ந்த கேள்வி – பதில்

இருதய நோய் வல்லுநர் – டாக்டர். ஸ்ரீதர் ரத்தினம்

மதுசூதனன் – சென்னை.

ஹலோ டாக்டர்
இரத்த நாளங்களில் (blood vessels) 60% அடைப்பு இருந்தாலும் ஆப்பரேஷன்(operation) அவசியமா?இல்லை மருந்து மாத்திரையிலேயும் டயட்டிலேயும் சரி பண்ணிவிடலாமா?

இருதயம் நம் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியான ஒன்று. நான் முன்பே கூறியதுபோல் மற்ற முக்கிய உறுப்புகள் இரண்டு இருக்கும் உடலில் மூளை,இருதயம், ஈரல், மற்றும் கருப்பை ஒன்று மட்டும் இருப்பது இதை உணர்த்தும்.

இருதயமானது ஒரு தசையும் நாணும் இனைந்த ஒரு உறுப்பு, அதில் நான்கு அறைகள், இரத்த ஓட்டம் அந்த நான்கு அறை (chambers) வழியாகவும் செல்லுவதை ஒருவழிப்படுத்துவதற்கென்று சாதனங்கள் – வால்வுகள் (valves) உண்டு. அவை அசுத்த இரத்தம் உடலின் அனைத்து உறுப்புகளிலிருந்தும் இருதயத்தை அடைந்து, அங்கிருந்து நுரையீரலளினுள் நுழைந்து சுத்தப்படுத்தப்பட்டு மீண்டும் இருதயத்தை அடைந்து இரத்தநாளங்கள் மூலமாக ஏனைய உறுப்புகளையும் அடைவதற்கு மிகவும் அவசியமாகிறது.

நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் அது தம் பணியைச் செய்ய பிராணவாயு (Oxygen) மற்றும் குளுகோஸ் (Glucose) அவசியமாகிறது. கையளவு இதயம் அவற்றை உடல் முழுவதும் தமனி (Arteries) எனப்படும் இரத்த நாளங்கள் மூலமாக அதை அனுப்பும். இதயம் தம் வேலையைச் செய்யவும் அதற்கு பிராணவாயு மற்றும் குளுகோஸ் தேவை. இவை இருதயத்தில் உள்ள இரத்தநாளங்களின் வழியாக இருதயத்தின் தசையைச் சென்றடையும். இந்த கரோனரி ஆர்டரீஸ் (Coronary arteries) எனப்படும் இரத்தநாளங்கள் மிகவும் முக்கியமனைவை.

நம் உடலின் வலது (Right coronary) மற்றும் இடது (left coronary) கரோனரி தமனிகள் உண்டு, இவற்றில் இடது கரோனரி தமனி மேலும் இரண்டு பெரிய கிளைகளாகப் பிரியும், இருதயத்தின் முன் பக்கம் இறங்கும் இரத்தநாளத்தை ’இடது முன்புறமாக இறங்கும் தமனி’ ( left anterior descending artery LAD) என்றும் இருதயத்தைச் சுற்றி இறங்கும் மற்ற கிளை வட்டச்சுற்று தமனி (circumflex artery) என்றும் அழைக்கப்படும். இவற்றில் இடது முன்புறமாக இறங்கும் தமனிக்கு ( left anterior descending artery LAD) விதவைகளின் இரத்தநாளம் (widow’s artery) என்ற ஒரு பட்டப் பெயரும் உண்டு , காரணம் இதில் அடைப்பு ஏற்பட்டால் முன்பெல்லாம் உயிர் போவது உறுதி. எனவே நிறைய பெண்களை விதவையாக்கியதால் இந்தப் பெயர். இந்த மூன்றுஇரத்தநாளங்களும் மேலும் சிற்சில கிளைகளாகப் பிரிந்து குருதியைக் கொண்டு சேர்க்கும்.

இவை கொழுப்புப் படிந்து (Atherosclerosis) சிறியதாகும் பட்சத்தில் இருதயம் தனக்குத் தேவையான உணவு கிடைக்காமல் தவிக்கும் அந்தத் தவிப்பே நெஞ்சு வலியாக (angina) உருவெடுக்கிறது. நீரிழிவு(Diabetes) நோய் இந்த இரத்தநாளங்கள் அடைபடும் படலத்தை அதிகபட்சம் அதிகமாகும். புகை பிடிப்பது இருதய இரத்தநாளங்களை தடிக்கச் செய்து அவை குறுகி விரியும் (arteriosclerosis) தன்மையை மிகவும் பாதிக்கும்.

கொழுப்பு படிவது நாளங்கள் எல்லாவற்றையும் பாதித்தாலும் ஓரிரு இடங்களில் மிகவும் குறுகும் (critical stenosis) பட்சத்தில் நெஞ்சுவலி மற்றும் மிகவும் குறுகினாலோ திடீரென்று இரத்தஅடைப்பு எற்பட்டாலும் மாரடைப்பு (Heart attack/ Myocardial infarction) வருகிறது. இவை எத்தனை கிளைகளை பாதித்திருக்கிறது என்பது பொருத்து, ஒன்று, இரண்டு, மற்றும் மூன்று நாளங்கள் அடைப்பு (single, double or triple vessel disease.) என்று கொள்வோம்.

நாளங்கள் 50% மேலே அடைப்பு இருந்தாலே சிகிச்சை தேவை. அவற்றிற்கு குறைவாக இருந்தால் உணவு மற்றும் மருந்தினால் குணப்படுத்தலாம். உணவில் கொழுப்பு மற்றும் உப்பைக் குறைத்து, நீரிழிவு நோய் இருந்தால் அதைக் கட்டுப்பாட்டில் வைப்பது, கொழுப்பை குறைக்க மருந்து சாப்பிட்டு ஆரோக்கியமாக உடற்பயிற்சி செய்வது போன்றவை மிக முக்கியம்.

ஆக, இரண்டிற்கும் மேற்பட்ட நாளங்களில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாகக் குறுகி இருந்தால் மருந்தாலும், உணவாலும் கட்டுப்படுத்துவது கடினம். எந்த மருந்து எப்படி உதவுகிறது என்பதை மற்ற ஒரு இதழில் பார்க்கலாம்.

குறுகிய நாளங்களை பைபாஸ் (Coronary Artery Bypass Graft (CABG)) சிகிச்சையோ அஞ்சியோப்லாச்ட்டியோ (angioplasty) செய்து இரத்தஓட்டத்தை மீண்டும் பெருகச் செய்யவேண்டும்.

படத்திற்கு நன்றி :   http://science.nationalgeographic.com/science/photos/heart/#/heart-angiogram_986_600x450.jpg

பதிவாசிரியரைப் பற்றி