முனைவர்.கி.காளைராசன்

அண்டபகிரண்ட நாயகனாம் பரமேசுவரனாம் சிவபெருமான், தன்திருநடனத்தை நாம் அனைவரும் காணும்படித் தில்லையில் ஆடுகிறான்.  கால்களில் வேதமாகிய சிலம்பும் வீரகண்டாமணியும் ஒலிக்கின்றன.   இடையில் புலித்தோலைப் போர்த்தியும், பாம்பைக் கையில் கங்கணமாக அணிந்து கொண்டும்,  வலதுகையில் உடுக்கை ஒலித்து, இடதுகையில் நெருப்பை ஏந்தி, வலதுகையால் அருள்பாலித்து, இடது கையால் தன் திருவடியைக் காட்டி, கழுத்தில் விஷத்தை நிறுத்தியும்,  ஒரு காதில் குழை அணிந்தும் மறுகாதில் குண்டலம் அணிந்தும் அழகாக ஆடுகிறான்.  முகத்தில் புன்சிரிப்புடன், தலையில் கங்கையையும் அந்தி வெண்பிறையையும் சூடி, பரமானந்த நடனம் செய்கிறான் அந்த நடராசன்.

 வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகியவன்,

ஊனாகி உண்மையுமாய் இன்மையுமாய்க்

கோனாகி யான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டுவானாகி நிற்பதேன்?

 மற்ற தெய்வங்கள் உட்கார்ந்து கொண்டும் நின்று கொண்டும இருக்க,  நடராசன் மட்டும் திருநடனம் ஆடுவது ஏன்? அவனால் சதாசர்வ காலமும் எவ்வாறு நிற்காமல் ஆடிக் கொண்டே இருக்க முடிகிறது?

இறைவன் மனித வடிவம் எடுத்து ஆடுவது ஏன்?

அஞ்ஞானத்தினால் மனதில் தோன்றும் இவ்வினாக்களுக்கு விஞ்ஞானத்தின் அடிப்படையில் விடைகாண விளைவோம்.

நடராசனின் இந்த ஆனந்தத்தாண்டவம் அறிவியல் அடிப்படையிலானது!

இயற்பியல்(Physics) விதிகளுக்கு ஒப்பத் தானும் ஆடி, நம் அனைவரையும் ஆட்டுவித்து, அருள் வழங்கி ஆட்கொள்கிறார்!

முதலில் நடராசனின் வடிவழகைக் காண்போம்.  பின்னர் அவருடைய திருநடனம் எவ்வாறு இயற்பியல் விதிகளுக்கு உட்பட்டது என்றும் ஆய்வோம்.  இறைவனை ஆய்ந்து அறிவோம்.

நடராசனின் வடிவம்

வட்ட வடிவச் சக்கரம். அதன்மீது சுற்றிலும் தீச்சுடர்கள் எரிந்து கொண்டிருக்கின்றன. இவ்வட்டவடிவத்தைச்  ‘திருவாசி‘ என்றும், தீச்சுடர்களைப் ‘பிரபை‘ என்றும் கூறுவது மரபு.  திருவாசியின் இருபுறங்களும் மகரங்கள் உள்ளன.  பார்ப்பதற்கு மகரங்கள் இரண்டும் தங்களது தலையை மேலே தூக்கி, அலகால் திருவாசியை விழுங்கிக் கொண்டிருப்பது போலத் தோன்றும்.  தாமரை மலர்ந்து அதன் மீது ஒரு பீடம்.  அப்பீடத்தின் மேல் பாம்பினைக் கையில் பிடித்தபடி பிதுங்கிய விழிகளுடன் எழுந்திட முயன்றிடும் முயலகன்.

 தில்லைக்கூத்தன், முயலகனின் முதுகின் மீது தன் வலது காலை ஊன்றியும், இடதுகாலை வலப்பக்கம் தூக்கியும், கங்கையையும் அந்திவெண் பிறையையும் அணிந்த சடை(ஜடா) முடியுடனும், வார்சடையுடனும் காட்சி அருளுகிறார். நான்கு திருக்கரங்களுள், தனது முன்வலது கையினால் அனைவருக்கும் அபயம் அளித்தும் பின்வலது கையில் துடி (உடுக்கை) ஏந்தியும், தனது முன்இடது கையினால் தனது தூக்கிய திருவடி சுட்டியும், பின்இடது கையில் அக்னி ஏந்தியும் சதா சர்வ காலமும் ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறான்.

தில்லைக்கூத்தனின் இடப்பக்கம் சற்று முன்னால் அம்மை சிவகாமி இருக்கிறார்.  கருவறைக்கு வெளியே, படிகளில் ஒருபுறத்தில் ஆதிசேஷனின் அவதாரமான பதஞ்சலி முனிவர் வணங்கியபடி நிற்கிறார்.  மற்றொரு புறத்தில் புலிக்கைகளையும் கால்களையும் கண்களையும் பெற்ற வியாக்கரபாத முனிவர் வணங்கியபடி நிற்கிறார்.

கூத்தன் நடனமாடுகிறான். எனவே ஆடும் பொருட்களுடனும்  (Oscillating bodies) அதிரும் பொருட்களுடனும் (vibrating bodies) தொடர்புடைய இயற்பியல் (Physics) விதிகளையும், அவ்விதிகளின் அடிப்படையிலான சோதனைகளையும் காண்போம்.

தனி ஊஞ்சலை (simple pendulum) ஆடும் பொருளுக்கும், இசைக்கவையை (Tuning fork) அதிரும் பொருளுக்கும் உதாரணங்களாகக் கொண்டு அவற்றின் அறிவியல் பண்புகளை

 1)     இயல்பு அலைகள் (Free Oscillation)

2)     தடையுறு அலைகள் (Damped Oscillation)

3)     திணிப்பு அலைகள் (Forced Oscillation)

4)     ஒத்திசைவு (Resonance Oscillation)

என்ற வரிசையில் காண்போம்.

தனிஊசல்

முறுக்கற்ற நூலில் அல்லது பட்டு நூலில் ஒரு உலோகக் குண்டு கட்டப்பட்டுத் தொங்க விடப்பட்டிருக்கும்.  இதனை ஆட்டிவிட்டால் ஆடிக்கொண்டே இருக்கும்.  பின்னர் சிறிது சிறிதாக ஆட்டத்தின் வீச்சு குறைந்து நின்றுவிடும்.  இதுவே தனிஊசல்.  தனிஊசலுக்குக் கடிகாரத்தில் உள்ள பெண்டுலம் சிறந்த உதாரணமாகும்.

இசைக்கவை

கவைபோன்று உலோகத்தினால் செய்யப்பட்ட பொருளுக்கு இசைக் கவை என்று பெயர்.  தனி ஊஞ்சலுக்குக் கூறப்பட்ட அனைத்து விதிகளும் இதற்கும் பொருந்தும்.

 

 

தனிஊசலின் சிறப்பு

மதுரையை ஆளும் அன்னை மீனாட்சி ஊஞ்சலில் ஆடுகிறார்.   அவர் ஆடும் ஊஞ்சலை விட அவர் காதில் அணிந்துள்ள கம்மல் வேமாக ஆடுகிறது என்பதை மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ் பாடுகிறது.  உயரம் குறைவான ஊஞ்சல் (காதில் உள்ள கம்மல்) வேகமாக ஆடும்.  நீளமான ஊஞ்சல் மெதுவாக ஆடும்.  ஊஞ்சல் அலையும் தூரம் (வீச்சு) கூடினாலும் குறைந்தாலும்,  அது ஆடுவதற்காக எடுத்துக்கொள்ளும் நேரம் மாறாது.

ஓர் ஊசல் வேகமாக ஆடினாலும் மெதுவாக ஆடினாலும், ஆடுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் கூடாது குறையாது,  மாறாது.  அதனால்தான் கடிகாரத்தில் உள்ள பெண்டுலம் (Pendulum) வேகமாக ஆடினாலும், மெதுவாக ஆடினாலும் நேரம் மாறாது.

1) இயல்பு அலைகள் (Free Oscillation)

 ஆடாமல் அசையாமல் தொங்கிக் கொண்டிருக்கும் தனி ஊசலை அதன் சமநிலையிலிருந்து சிறிது இடப்பெயர்ச்சி அடையுமாறு செய்தால் அதன் மீள் விசையின் காரணமாக அலைவுறும்.  இத்தகைய அலைவுகள்  இயல்பு அலைகள் எனப்படும்.

இவ்வாறு ஆடும் ஊசல் வினாடிக்கு எத்தனைமுறை அலைகிறதோ அது அந்த ஊசலின் “இயல் அதிர்வெண் (Natural frequency)“ எனப்படும்.  ஆடும் ஊசலின் இயல் அதிர்வெண்  அந்த ஊசலின் பரிமாணம், அதன் மீட்சியியல் பண்பு ஆகியவற்றைப் பொறுத்துள்ளது.

 

 

இறைவன் ஏன் நடனமாடுகிறார்?

ஆலயத்தில் உள்ள அனைத்துத் தெய்வங்களும் தாமரை மீதோ அல்லது பீடத்தின் மீதோ அமர்ந்திருப்பர்,  அல்லது நின்று கொண்டிருப்பர்.

ஆனால் நடராசன் எழுந்திட முயன்றிடும் முயலகனின் முதுகின் மீது நிற்கிறார்.  தவழ்ந்து எழுந்திட முயன்றிடும் முயலகன் முதுகின் மீது நிலையாக எப்படி நிற்க முடியும்!  முயலகனால், இறைவன் தனது சமநிலையிலிருந்து இப்பெயர்ச்சி அடைவதால், எம(தர்ம) திசையாம் தென்திசை நோக்கித் தனது இயல்புக்கு திருநடனம் (ஆனந்தத் தாண்டவம்) புரிகிறார். (HE begins HIS restless dance as HE is being on the “apasara muyalagan”  who tries to move and stand).  நடராசனின் ஆட்ட இயல்பானது அவரது பரிமாணம் மற்றும் அவரது பண்பு ஆகியவற்றைப் பொறுத்திருக்கும்.

 2) தடையுறு அலைகள் (Damped Oscillation) அலைவுறும் ஊசல், காற்றில் மோதுவதாலும், புவியீர்ப்பு விசையால் ஈர்க்கப்படுவதாலும் அதனுடைய இயக்கத்திற்குத் தடை ஏற்படுகிறது.   தடையை மீறி ஊசல் இயங்கும்போது அது தன்னுடைய ஆற்றலில் சிறிதளவு செலவிடுகிறது.  இதனால் இயக்கம் தொடரும் பொழுது ஆற்றல் குறைந்து கொண்டே செல்கிறது.  காலத்தைப் பொறுத்து அலைவீச்சு குறைந்து முடிவில் அலையாமல் நின்றுவிடுகிறது.  இத்தகைய அலைவு தடையுறு அலைவு எனப்படும்.

களைப்பு அடையாத் திருநடனம்

தனிஊசலில் புவியீர்ப்பு என்ற விசையால் ஆற்றல் இழப்பு ஏற்படுவதுபோல, முயலகனின் முதுகின் மீது மிதித்தாடும் விசையால் கூத்தனின் ஆற்றலில் இழப்பு ஏற்படும்.  தனி ஊசலில் இயக்கம் காற்றில் மோதுவதால் ஆற்றல் இழப்பு ஏற்படுவது போல, நடராசனின் அருள் வழங்கும் தன்மையாலும் ஆற்றல் இழப்பு ஏற்படும்.

 இதனால் ஆடல் தொடரும் போது, ஆற்றல் சிறிது சிறிதாகக் குறைவடையும் நிலை ஏற்படுகிறது.  இதனால் காலத்தைப் பொறுத்து ஆட்டத்தின் வேகம் குறைந்து இது ஒரு ‘தடையுறு ஆட்டம்‘ ஆக வேண்டும்.  ஆனால், ஆற்றல் செலவழியும் போது, சதா சர்வ காலமும் ஆனந்த நடனம் ஆடுகிறார் நடராசன்.  இது எவ்வாறு இயலும்?

 

3) திணிப்பு அலைகள் (Forced Oscillation)

தடையுறு அலை இயக்கத்தின் மீது தொடர்ந்து சீரிசையியக்கப் புறவிசை (Simple harmonic periodic force) ஒன்றைச் செயல் படுத்துவதாகக் கொள்வோம்,   அப்போது இயக்கம், இழந்த ஆற்றலை அவ்விசை மூலம் பெறுகின்றது.  அதனால் அலைஇயக்கம் தொடர்ந்து இருந்து வரும்.  இவ்வலைவுகள் திணிப்பு அலைவுகள் எனப்படும்.

கடிகாரத்தில் உள்ள பெண்டுலம் அலைவுற்று, பின்னர் வீச்சுக் குறைந்து சிறிது நேரத்தில் நின்று விடும்.   ஆனால் முடுக்கி வைக்கப்பட்ட மீள்விசையுடன் கூடிய கம்பிச் சுருளுடன் (Keyed spring) இணைக்கப்படும் போது, தொடர்ச்சியாக ஆடிக்கொண்டே இருக்கும்.  சாவி தீரும் வரை பெண்டுலம் நிற்காமல் ஆடிக் கொண்டே இருக்கும்.  கடிகாரமும் ஓடிக்கொண்டிருக்கும்.  சாவி கொடுப்பதற்குப் பதிலாக மின்கலமும் (battery) பயன்படுத்தப்படுகிறது.  இதனால் மின்கலம் தீரும்வரை பெண்டுலம் ஆடிக்கொண்டே இருக்கும்.

 

நடராசன்  எப்படித் தொடர்ச்சியாக ஆடிக்கொண்டே இருக்கிறார்?

கடிகாரத்தின் ஊசல் நின்றுவிடாமல் தொடர்ச்சியாக ஆடிக் கொண்டிருப்பதற்காகக் கம்பிச்சுருளுடன் (Keyed spring) இணைக்கப்பட்டுள்ளது.  அதே போல் நடராசனின் திருவுருவத்தைச் சுற்றிலும்  பின்னால் ஒரு வட்ட வடிவமான திருவாசி (Jvala mala prabha mandala) உள்ளது.  நடராசரின் சடை(ஜடா)முடியும் விரிசடையும், துடி(உடுக்கை) எந்திய கையும், அக்னி ஏந்திய கையும், அங்கவஸ்திரமும் திருவாசியுடன் ஒட்டித் திருவாசிக்குள் அமையுமாறு உள்ளன.

திருவாசியானது ‘ஓம்‘ எனும் பிரணவ வடிவம்.  நடராசர் ‘நமசிவாய‘ எனும் பஞ்சாட்சர மந்திரத்தின் வடிவம்.

பிரணவத்தைக் கூறாமல் பஞ்சாட்சர மந்திரத்தைக் கூறக்கூடாது.  அதுபோல திருவாசி இல்லாத நடராசரை வழிபடக்கூடாது என்பது ஐதீகம். பிரபை இல்லாத நடராசர், பேட்டரி இல்லாத கடிகாரம் போன்றவர்.  இயங்காத கடிகாரம் தவறான நேரத்தைக் காட்டும், அதுபோல் பிரபை இல்லாத நடராசரை வழிபட்டால் தவறான பலன்கள் கிடைக்கும். தாமரைபோல் விரிந்து, பரந்து, பிரபைபோல் எரிந்து கொண்டிருக்கும் இப்பிரபஞ்சத்தின் சுருக்கமே திருவாசியாகும் (miniatured universe). உலகில் உள்ள எல்லாமும் துடியில் தோன்றி, உயிர்த்து, அக்னியில் ஒடுங்கி இறையடி சேர்வன.  திருவாசியே, பிரமன் முதலான அனைத்துத் தேவர்களுக்குப் பிறப்பிடமாகவும், சிவபெருமானுக்கு இருப்பிடமாகவும் உள்ளது!  சிவபெருமானே அதன் பொருளாகவும் இருக்கிறார்.

எரியும் சுடர்கள் எரிசக்தியாகும்  ‘ஓம்‘ எனும் பிரணவ வடிவான இவ்வண்ட சராசரமே இறைவனது திருநடனத்திற்கு ஆற்றல் அளிக்கிறது இறைவன் நடராசருக்கு. இப்பிரபஞ்சத்தின் சக்தியை ‘சீரிசை இயக்கப் புறவிசை‘யாக இத்திருவாசி தொடர்ச்சியாக வழங்குகிறது.  இதனால் இந்த அண்டத்தில் கோடானுகோடி சூரியன்கள் எரிந்து கொண்டிருக்கும் வரையிலும், நடராசனுக்கு ஆற்றல் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும்.  ஆனந்தத் தாண்டவம் நடந்து கொண்டே இருக்கும்,  நடனமேடையில் தீப்பந்தங்கள் எரிந்து கொண்டிருக்கும் வரையிலும் இறைவன் தொடர்ந்து திருநடனம் செய்வார்.

4) ஒத்திசைவு (Resonance Oscillation)

ஒத்திசைவு என்பது திணிப்பு அலைவின் சிறப்பு வகையாகும்.  அலைவுறும் ஊசலின் இயல் அதிர்வு எண்ணிற்குச் சமமான அதிர்வெண் கொண்ட சீரிசையியக்கப் புறவிசையைச் செலுத்தி அதன் வீச்சினை அதிகரிக்கச் செய்யும் நிகழ்ச்சியே ஒத்திசைவு எனப்படும்.  இரு அதிர்வெண்களும் சமமானால் வீச்சு பெரும் மதிப்பை அடையும்.

தனி ஊசலைப் பயன்படுத்தி ஒத்திசைவுக்கான சோதனை

            ஒரே கிடைமட்டத்தில் மீட்சியல் கொண்ட கயிற்றில் சில தனி ஊசல்கள் தொங்கவிடப்பட்டுள்ளன.   ஒரு தனி ஊசலைச் சற்று இழுத்து விட்டால், சிறிது நேரத்தில் எல்லா ஊசல்களும் அலைவுறும்.  ஆனால் சீரான அலைவு ஏற்படாது.  சமநீளமுடைய 3ஆம் ஊசலுக்கும், 5ஆம் ஊசலுக்கும் ஒத்திசைவு ஏற்பட்டு, அவைகள் மட்டும் ‘பெரும வீச்சினை‘ அடையும்.  சமமான ஊசல்களின் அலைவுநேரம் சமமாக இருக்கும்.  நமது இந்தச் சோதனையில், 3ஆம் ஊசலும், 5ஆம் ஊசலும் சமநீளமுடையனவாக இருப்பதால் அவையிரண்டும் ஒத்திசைவுக்கு உட்பட்டு நன்றாக (பெரும மதிப்பிற்கு) அலைவுறும்.   ஆனால், மற்ற ஊசல்கள் வெவ்வேறான நீளத்தில் இருப்பதால்  ஒத்திசைவுக்கு உட்படுவதில்லை.  எனவே 3ஆம் ஊசலும் 5ஆம் ஊசலும் நன்கு ஆடும்.  ஆனால் மற்றபிற ஊசல்கள் ஆடாமல் குலுங்க மட்டுமே செய்யும்.

 

இசைக்கவையைப் பயன்படுத்தி ஒத்திசைவுக்கான சோதனை

ஒரே அதிர்வெண் கொண்ட இரு இசைக்கவைகளை ஒலிப்பெட்டியின் மீது ஒன்றுக்கொன்று அருகில் வைத்து, ஒரு கவையை இரப்பர் சுத்தியால் அதிர்வடையச் செய்தால், இரண்டாவது இசைக்கவை தானாகவே அதிர்வடையும்.  முதற்கவையைக் கையில் தொடுவதன் மூலம் நிறுத்தினால், ஒலியானது தொடர்ந்து கேட்டும்.  இதற்குக் காரணம் இரண்டாவது கவை தொடர்ந்து அதிர்வடைவதே யாகும்.

 

இறைவன் ஏன் மனித உருவம் எடுத்து ஆடுகிறார்?

 ஒரே கிடைமட்டத்தில் மீட்சியல் கொண்ட கயிற்றில் பல தனி ஊசல்களைத் தொங்கவிட்டு, ஓர் ஊசலைச் சற்று இழுத்து விட்டு ஆடச் செய்தபோது எல்லா ஊசல்களும் அலைவுற்றன.  ஆனால் சீரான அலைவு ஏற்படவில்லை.  சமநீளமுடைய இரு ஊசலிலும் ஒத்திசைவு ஏற்பட்டுப் ‘பெரும வீச்சினை‘ அடைந்தன.  சமமான ஊசல்கள் இரண்டும் நன்றாக ஆடின.  அவற்றின் அலைவுநேரம் சமமாக இருந்தன.  மற்ற ஊசல்கள், வெவ்வேறான நீளத்தில் இருந்ததால் ஒத்திசைவுக்கு உட்பட வில்லை.

ஒரே அதிர்வெண் கொண்ட இரு இசைக்கவைகளை ஒலிப்பெட்டியின் மீது ஒன்றுக்கொன்றுஅருகில் வைத்து, ஒரு கவையை இரப்பர் சுத்தியால் அதிர்வடையச் செய்தபோது, இரண்டாவது இசைக்கவை ஒத்திசைவுக்கு உட்பட்டுத் தானாகவே அதிர்வடைந்ததையும் கண்டோம்.

இவ்வுவலகத்தில் லட்சகணக்கான யோனிபேதங்களில் உயிரினங்களை இறைவன் தோற்றுவித்தபோதும், அவன் மனித வடிவில் தோன்றி ஆனந்தத் தாண்டவம் ஆடும்போது எல்லா உயிரினங்களும் திருவருள் பெறுகின்றன.   ஆனால் ஒரே வடிவம் கொண்ட இறைவனுக்கும் மனிதனுக்கும் ஒத்திசைவு ஏற்பட்டுப் ‘பெரும ஆற்றல்‘ பரிமாற்றம் நடைபெறுகிறது.

ஒத்திசைவு ஏற்படுவதால், இறைவனின் ஆட்டத்திற்கு ஏற்ப அவன்முன் நிற்கும் மனிதன் ஆட்டுவிக்கப்படுகிறான்.  யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டுவானாகிறான்.  இறைவன், இவ்வாறு இறைவனின் ஆட்டத்திற்கு உட்படும் மனிதர்களுக்கு சிறுகச் சிறுக இறைவனின் பண்புகளும் கிட்டும்.  இதனால் இறைவனால் ஆட்டுவிக்கப்படும் மனிதன், இறைப்பண்புகளைப் பெறுகிறான்.  இறைவனால் ஆட்கொள்ளப் படுகிறான்.

இப்போது இயற்பியல் விதிகளையும் இறைவனது நடனவிதிகளையும் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

அறிவியல் வல்லான் (Scientific Expert of matter, motion and radiation)

 1) இயல்பு அலைகள்

நம் நிலையில் (in a stable position) உள்ள ஒரு ஊசலை (பெண்டுலத்தை) அசைத்து விட்டவுடன், அது தனது இயல்புக்கு ஆடத் தொடங்கி விடும்.  அதுபோல எழுந்திட முயன்றிடும் முயலகன்  மீது உள்ள இறைவன், சமநிலையில் நிற்காமல், மாறுபட்டுத் தன் இயல்புக்குத் திருநடனம் செய்கிறார்.

 2) திணிப்பு அலைகள்

கடிகாரத்தில் உள்ள பெண்டுலம் தொடர்ந்து ஆடுவதற்குச் சாவியில் உள்ள விசையானது பயன்படுத்தப்படுகிறது.  அதுபோல, இறைவன் சதாசர்வகாலமும் தொடர்ந்து திருநடனம் செய்ய அண்டத்தின் ஆற்றலைச் சீரிசை இயக்கப் புறவிசையாகப் பயன்படுத்துகிறார்.

 3 அ)  ஒத்திசைவு அலைவகள்

ஆடும் ஒரு ஊசல் மற்ற பிற ஊசல்களை ஆட்டுவித்தபோதும், சமவடிவுடைய ஊசல்களில் ஒத்திசைவு ஏற்படுத்தி அதையும் தன்னளவிற்கு முழுவீச்சில் நன்றாக அலைவுறச் செய்தது,   அதுபோல மனிதவடிவில் தோன்றி ஆனந்த நடனமாடும் இறைவன், தன் இயல்பிற்கும் பண்பிற்கும் ஒப்பத் தன் முன் வணங்கி நிற்கும் மனிதனை ஆட்டுவிக்கிறார்.

3ஆ) ஒத்திசை அதிர்வுகள்

அதிர்வடையச் செய்யப்பட்ட ஒரு இசைக்கவை, அதன் அருகில் உள்ள சம அதிர்வெண் கொண்ட மற்றொரு இசைக்கவையை அதிர்வடையச் செய்கிறது.  அதுபோல மனிதவடிவில்  ஆடும் இறைவன், தன்முன் நிற்கும் மனிதர்களை ஆட்டுவிக்கிறார்

 

இவ்வாறாக அறிவியல் அலைவு விதிகளுக்கு ஒப்பத் தானும் ஆடித் தன் அடியார்களையும் ஆட்டுவித்து ஆட்கொள்ளும் இறைவன் நடராசர், ஆடல்வல்லான் மட்டுமல்ல!  மானிடர்களை உய்விக்கும் ஓர் அதி அற்புத அறிவியல் வல்லானும் ஆவார்.  அறிவியல் விதிகளின் படி இறைவன் ஆடுவதால், ஆற்றல் பரிமாற்றம் சிறப்பாக நடைபெற்று அண்டத்தின் ஆற்றல் இறைவனுக்கும், இறையாற்றல் (திருவருள்) அவர் முன் நிற்கும் மனிதனுக்கும் கிடைக்கப்பெறுகிறது.

வானுலகச் சக்திகளை மனிதர்களுக்குத் தேவைப்படும் ஆற்றலாகவும் பண்பாகவும் மாற்றி, அறம் பொருள் காமம் இவற்றுடன் கலந்து கொடுத்து, வீடுபேற்றினை அடைந்திடச் செய்திடும் அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தும் ஆடல்வல்லான் ஒரு மெய்ஞ்ஞான அறிவியல் வல்லான் ஆவார்.

நடராசரிடமிருந்து கிளம்பும் ஆற்றல் தெற்கு நோக்கியோடித் திருக்கோயிலையும் தாண்டி ஊர் முழுவதும் பரவியிருக்கும்.  கோயிலுக்குச் சென்று இறைவன் நடராசரை வணங்காவிடில் இறையாற்றல் முழுமையாகக் கிடைக்கப்பெறாது!  எனவேதான், இறைவனுடன் ஒத்திசைவு பெற்று உய்ந்திட ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றனர் சான்றோர்.

தனிஊசலின் இயற்பியல் கோட்பாடுகளைப் பயன்படுத்திக் காலம் காட்டும் கடிகாரத்தைக் கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்.  இசைக் கவையின் அதிர்வுகளின் வழியாகப் பெறப்பட்ட அறிவியல் விதிகளைப் பயன்படுத்திக் கடலின் ஆழத்தையும் மற்றும் அதனுள் உள்ள பொருட்களை அறிந்திடும் முறையையும் கண்டனர்.  மேலும் கப்பல்களுக்கு இடையிலான தொலைத் தொடர்புகளுக்கும் இவ்வறிவியலைப் பயன்படுத்துகின்றனர், விஞ்ஞானிகள்.

ஆனால், விஞ்ஞானத்தை விஞ்சிய மெய்ஞ்ஞானிகளோ, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்த்திருநாட்டில் ஆலயங்களை உருவாக்கி, இயற்பியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தி இறைவன் நடராசரின் அருளை மனிதர்களுக்கு அருளச் செய்துள்ளனர்.

இது வியப்பினும் வியப்பானதன்றோ!

 “குனித்த புருவமுங் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்

பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறும்

இனித்த முடைய எடுத்த பொற் பாதமுங் காணப் பெற்றால்

மனித்த பிறவியும் வேண்டுவதே யிந்த மாநிலத்தே”

என்ற அப்பரின்திருவாக்கிற்கு இணங்க இந்த மண்ணுலகிலே, இறைவனால் ஆட்டுவித்து ஆட் கொள்ளப்படுவதற்கு, மானிடப் பிறவியே வேண்டும்.

இறைவன் நடராசன் ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறார்.  அவர் முன் ‘சிவகாமி்த்தாயார் நிற்கிறார்,  இவர்களைச் சதாசர்வகாலமும் வணங்கியபடி பதஞ்சலி முனிவரும் வியாக்கரபாத முனிவரும் வாயிலில் நிற்கின்றனர்.  இறைவனின் அழகிய புன்னகை பூக்கும் முகத்தில் உள்ள கருணைக் கண்கள் நேராகப் பார்க்காமல் சற்று இடப்பக்கமாகத் திரும்பி அன்னையைப் பார்த்திருக்கும்.   திருவருள் வழங்கும் வலது கரமும் நேராக இல்லாமல் அன்னையைப் பார்த்துத் திரும்பி இருக்கும்.  இறைவனின் இப்பிரத்தியோக வடிவழகானது (this unique superb style) முற்றிலும் பயன்படுத்தப்பட்டுள்ள அறிவியல் தொழில் நுட்பத்திற்கும் மேலானது.  எவ்வாறு என்பதை ‘மெய்ஞ்ஞானத் திருக்கோயிலும், விஞ்ஞானத் தொலைக்காட்சியும்‘  என்ற தலைப்பில் தனியாகக் காண்போம்.

விஞ்ஞானத்தினால் மனிதனுக்கு நன்மையும் தீமையும் உண்டு,  ஆனால் ஆலய வழிபாட்டினால் பெறப்படும் மெய்ஞ்ஞானத்தினால் மனிதனுக்கு அளவற்ற நன்மை மட்டுமே கிடைக்கப் பெறும்.  அதனால் ஆடல் வல்லானாகிய அறிவியல் வல்லானை ஆலயம் சென்று தொழுது அண்டத்தின் அளப்பரிய அறிவையும் ஆற்றலையும் பெறுவோம்!

 “சிவலோக நாதனைக் கண்டு

சேவித்திடுவோம் வாரீர்

பாவபயங்களைப் போக்கி – அவர்

பரம பதத்தைக் கொடுப்பார் அந்த

சிவலோக நாதனைக் கண்டு

சேவித்திடுவோம் வாரீர் “

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஆடல்வல்லான் ஒரு அறிவியல் இறைவன்

  1. இந்த உண்மையை உணர்ந்த திருஞானசம்பந்தர் தில்லை வட்டம் திசை கை தொழுவார் வினை தீர்த்தல் திண்ணமே !!என்று பாடியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *