தாய்ப்பால்
யுகநிதி, மேட்டுப்பாளையம்
உடைத்து உடைத்துப்
போட்டேன்
தயக்கத்தின் நடுவே
அந்த
வார்த்தைகளை..
கனத்தது இதயம்..
எத்தனை ஆண்டுகள்
தன் சிறகுகளுக்குள்
என்னைப் பொத்திப் பொத்தி
வளர்த்திருப்பாள்..
என் வளர்ச்சிக்காக
எத்தனை இரவுகள்
உறக்கம்
இழந்திருப்பாள்..
ஒரு
மஞ்சள் கயிற்றால்
என்னைக்
கட்டிக்கொண்டவளுக்காக
தனிக்குடித்தனம் என்றேன்..
முகம்
சுருங்கிய தாய்
இமை கவிழ்த்தாள்..
அதிலிருந்து
பொலபொலவெனக் கொட்டியது
நானருந்திய தாய்ப்பால்..!
உடன் தோன்றிய விமர்சனக் கவிதை:
சுற்றும் உள்ள
இயற்கையைக் கொன்றான்
கற்று வந்த
கல்வியை மறந்தான்
ஊட்டிய பாலை
உடனே மறந்தான்
கூட்டுக் குடும்பத்தை
கூடிச் சிதைத்தான்
யாதும் ஊரே
யாவரும் கேளிர் என்ற
பொதுநலக் கூற்றை
பொசுக்கிவிட்டு
யாதும் எனதே
யாவரும் பிறரேயென்றே
சுயநலப் பேயைச்
சுமந்து போனான்.
தேவை என்றவுடன்
தேடி வருவான்.
கவலை வேண்டாம்
கண்ணீர் வேண்டாம் தாயே..
தாய்ப்பாலின் பாசத்திற்குத்
தரணியாளும் சக்தியுண்டு..
அதில் “தாய்ப்பால்” எழுதிய(ஊட்டிய) கவிஞனுக்கும் ஒரு பங்குண்டு..
– ஓ.கே.விஜயகுமார், மேட்டுப்பாளையம்.