மலர் சபா

மழை வருமா என்று அண்ணாந்து பார்த்தபடியே கோரிப்பாளையம் பிராஞ்ச் பேங்க் வாசலை விட்டு வெளியே வந்தாள் சாரதா. நல்ல வேளை அதற்கான அறிகுறியே இல்லை. கைப்பேசி எடுத்து எண்களைச் சுழற்ற ஓட்டுநர், “என்னம்மா வண்டி எடுத்தாரட்டா” என்று கேட்டார்.

“வாப்பா..நான் வாசலுக்கு வந்துட்டேன்…லேட் பண்ணிராத..”

ஒரிரு நிமிடங்களில் கார் வர, விரைந்து சென்று ஏறியவள்..”மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போப்பா.”

“சரிம்மா.”

இந்நேரம் மாப்பிள்ளை வந்திருப்பாரா.. இந்த வித்யா என்னதான் மனசில நெனச்சிட்டிருக்காளோ புரியலை.. வித்யா சாரதாவின் மூத்த பெண். இரண்டாவது பெண் பூஜா 12-ம் வகுப்பு படிக்கிறாள். கடந்த வருடம்தான் வித்யாவுக்கும், டாக்டர் அரவிந்துக்கும் திருமணம் நடந்தது. வித்யா பொறியியல் பட்டதாரி. விரும்பிப் படித்தாளேயொழிய, வேலைக்குச் செல்வதில் துளியும் விருப்பமில்லை. படித்த முடித்த கையுடன் நல்ல சம்பந்தம் வந்து விட கல்யாணத்தைச் சீரும் சிறப்புமாக நடத்தி வைத்தார்கள்.

ஆயிற்று. வருடம் ஒன்று ஆவதற்குள் என்னென்ன ப்ரச்னைகள்….. ப்ரச்னைகள் என்ன ப்ரச்சனைகள்… ஒரேயொரு தலைவலிதான்.. டாக்டர் எப்போதும் பிஸி. இவளுக்கு வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை.. புதுக் கல்யாணக் கனவுகள்.. கணவனுடன் அங்கே இங்கே சுற்ற வேண்டும் என்ற அவா..

திருச்சிதான் அவர்கள் சொந்த ஊர்; அங்கே தில்லை நகரில் சொந்தமாய் மருத்துவமனை வைத்துக் கொடுத்திருந்தார் அரவிந்துக்கு, கட்டடக் கான்டிராக்டரான அப்பா. இத்தனைக்கும் மாமியார், நாத்தனார் பிடுங்கல் இல்லாத தனிக்குடித்தனம்தான்…

அரவிந்திடம் குறை சொல்ல ஒன்றுமில்லை… அவன் கல்யாணம் நிச்சயித்த போதே தன் பிஸியான, மூச்சு விட நேரம் இல்லாத வாழ்க்க்கையைப் பற்றி ஒளிவு மறைவு இல்லாமல் அவளிடம் சொல்லியிருந்தான். அப்போதெல்லாம் சரி சரி என்று தலையாட்டியவள், சாரதாவும், கணவர் ரமேஷ்பாபுவும் வரப்போகும் கஷ்டங்களை, சந்தோஷங்களை எடுத்துக்கூறும் போது பொறுமையாகக் கேட்டவள்… இப்போது எடுத்ததுக்கெல்லாம் குத்தம் சொல்கிறாள்..

“வேலைக்குப் போகச் சொல்றாரும்மா…அப்போதான் அவர் கஷ்டம் எனக்குப் புரியுமாம்..எனக்கும் மனசு அலை பாயாம இருக்குமாம்..”

“அதுல என்னம்மா தப்பு..”ரமேஷ் பாபு கேட்க..

“அது சரி.. அம்மா வேலைக்குப் போனதால நானும், பூஜாவும் எவ்வளவு கஷ்டப்பட்டோம்னு எங்களுக்குத்தான் தெரியும். அதையே என் பிள்ளைகளும் படணுமா… அதும் க்ளினிக்கையே கட்டிக்கிட்டு எப்பவும் இவர் மாரடிக்கிற லட்சணத்துக்கு நானும் வேலைக்குப் போனா நல்லாத்தான் இருக்கும்.”

“வெளில வேற எங்கயும் போகாட்டாப் பரவால்ல… மாப்பிள்ளை க்ளினிக்கத்தான கவனிச்சுக்கச் சொல்றார்.. அதைச் செய்யலாமில்ல..”

“போங்கம்மா… அதுக்கு டாக்டர் பொண்ணாக் கட்டிருக்க வேண்டியதுதானே… ரெண்டு பேரும் வேல பிஸின்னு இருந்திருக்கலாமே.. சரிக்குச் சரியா ஜாடிக்கேத்த மூடியா இருந்திருக்கும்… நீங்கதான் இந்த வயசுலயும் வேலக்குப் போயிக் கஷ்டப்படுறீங்க… வேலைய விட்டுட்டு அக்கடான்னு இருங்கன்னாக் கேக்குறீங்களா. அப்போதான் தேவையிருந்துச்சு..வேலைக்குப் போனீங்க..இப்ப என்ன தேவை…நிம்மதியா வீட்ல இல்லாம..இந்த வயசுலயும் உங்க அம்மா எப்படி உழைக்கிறாங்கன்னு உம் மாப்பிள்ளை நக்கல் பேச்சு வேற..”

அரவிந்த் நல்ல டாக்டர்னு பேரெடுத்தவன்..பணக்கார அப்பாக்குப் பொறந்து, நல்லாவும் படிச்சு வந்தவன். அவனிடம் வரும் நோயாளிகள், அந்த டெஸ்ட், இந்த ஸ்கேன்னு அங்கே இங்கே அலைய வேண்டியதில்லை. நவீன கருவிகள் எல்லாம் அங்கேயே இருந்தது. அவன் மட்டுமின்றி, கூட இருந்த 5 டாக்டர்களும் நல்ல பேர் எடுத்து விட, நோய்க்குத்தான் பஞ்சமா, நோயாளிகளுக்குதான் பஞ்சமா.

சின்னச் சின்னதாய்த் தொடங்கிய ப்ரச்னை, வித்யா வீட்டோடு வந்து விடும் அளவுக்கு முற்றி விட்டது.. இரண்டு தரப்பிலும் சமாதானமும் செய்தாகி விட்டது.. சும்மா சொல்லக்கூடாது அவ்வளவு வேலையிலும், மாதம் இருமுறையாவது திருச்சியிலிருந்து வந்து அவளைச் சமாதானப் படுத்திக்கொண்டுதான் இருந்தான்.. நோயாளியைக் குணப்படுத்த அவ்வப்போது வரும் ஹவுஸ் விஸிட் போல.

இன்றும் அப்படி அவன் வருவதால்தான், அவர்கள் தனியாக இருக்கட்டும் என்று இவர்கள் ஒதுங்கி விட்டார்கள். அலுவலகப் பணிக்காய் ரமேஷ்பாபு சென்னை சென்றுவிட, பூஜாவும் தோழி பிறந்த நாள் பார்ட்டிக்குப் போய் விட, இதோ சாரதா மீனாட்சி கோவில் தெப்பக்குளப் படிகளில்.

மணி 7 ஆக, மீண்டும் டிரைவருக்கு நம்பரைச் சுழற்றி, வீட்டுக்குக் கிளம்பினாள். வீடு பசுமலையில். வரும் வழியெல்லாம் மனசு பதைத்தது. கணவனுக்கு போன் அடிக்க, அவர் எடுத்தால்தானே. “என்னதான் பிஸியோ!” பேங்கில் என்ன வேலையிருந்தாலும், வீட்டில் யாரிடமிருந்தாவது போன் வரும்போது, தலை போற வேலையாயிருந்தாலும், அட்லீஸ்ட்15 நிமிடம் கழித்தாவது போன் பேசி விடுவாள்..

“அது சரி.. கணவன் என்ன! மாப்பிள்ளை என்ன! இந்த ஆண்கள் எல்லாரும் இப்படித்தான். அய்யயோ.. இது என்ன நானும் வித்யா மாதிரிப் புலம்புகிறேன்…”

இன்னிக்காவது மனசு மாறியிருப்பாளா.. என்னாச்சோ தெரியலை என்று குழம்பியபடி வீட்டுக்குள் நுழைந்தாள். வித்யாவின் இறுகிய முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

“மாப்பிள்ளை போயிட்டாரா வித்யா..”

“ம்..ம்..” வேறு எதுவும் கேட்காதே என்கிற தோரணை…

“என்ன சொன்னார்..”

“வழக்கமான பல்லவிதான்..வீட்டுக்கு வான்னு… ஹாஸ்பிட்ல்ல மோகன்னு ஒரு டாக்டர்.. அவங்க பொண்டாட்டியாம் போர் அடிக்குதுன்னு வேலைக்குப் போறாங்களாம்.. இன்னோரு டாக்டரோட பொண்டாட்டி வீட்டுல இருந்தாலும் ஜாலியா இருக்காங்களாம். இதேதான் புராணம்..”

வேலைக்குப் போகலாமா வேணாமான்னு ஒரு பொண்ணே முடிவெடுக்கிற சூழல் எத்தனை பேருக்கு வாய்க்கும்….. தன்னோட கொடுப்பினை இந்தப் பொண்ணுக்கு ஏன் புரிய மாட்டேங்குது..

இந்தப் பூஜா நாளைக்கு என்ன கூத்தடிக்கப் போறாளோ. கட்டுப்பாடாய்த்தானே வளர்த்தோம். என்னதான் பண்றதோ. காபி கலக்க கிச்சனுக்குச் சென்றாள் சாரதா..

“யம்ம்மோவ்…”வேலைக்காரச் சுப்பம்மாவின் குரல்.

“வாங்க மகாராணி.. என்ன ரெண்டு நாளா ஆளயே காணோம்… “காபியைக் கொஞ்ச நேரம் மறந்து விட்டு அவளிடம் பாயலானாள் சாரதா.

ஓங்கிக் குரலெடுத்து அழ ஆரம்பித்தாள் சுப்பம்மா. திரும்பி முதுகைக் காண்பித்து, “அந்தப் பாழாப் போன மனுசன் குடிச்சுட்டு வந்து போட்டு அடியா அடிச்சுட்டான். காய்ச்சல்ல ரெண்டு நாள் படுத்துட்டேன். இன்னிக்காவது பொழுதோட வரணும்னு இருந்தேம்மா. தூங்கிப்புட்டேன், அதான் லேட்டாயிர்ச்சு..” என்றவள் வித்யா பக்கம் திரும்பி,

“என்ன பாப்பா மாப்பிள்ளை இன்னிக்கு வந்திருப்பாரே..கூடப் போகலியா…”

“ஆமா ..ஆமா..உனக்கெல்லாம் அறிவே இல்லியா…இப்படி அடி வாங்குற..இதெல்லாம் ஒரு பொழப்பு…ஆம்பளையா லட்சணமா உன் புருஷனை வேலைக்குப் போகச் சொல்லாம நீ சம்பாரிச்சுப் போடுற திமிர்…நீ வேலைக்கு வராம, நாலு நாள் பட்னி போடு..வயிறு காஞ்சா எல்லாம் வழிக்கு வந்து சேரும்..”

“என்னம்மா பண்றது..உத்யோகம் புருச லச்சணம்னு சொல்வாக..குடிக்குறதுதான் இந்தாளோட லச்சணமாருக்கு. அதெல்லாம் பாத்தா முடியுமா…அதெல்லாம் பாத்தா என் பொழப்பைப் பாக்க முடியுமாம்மா…நாலு நாள் அந்த ஆள் மட்டுமா என் புள்ளயும்தான் பட்னியாக் கெடக்கும். பாவம்…என் மகன மாதிரித்தான் அந்தாளும்னு நெனச்சுச் சமாதானமாப் போக வேண்டியதுதான்..அதுவும்…தப்புச் செஞ்சுப்புட்டு அப்றம் தலையைச் சொறிஞ்சிட்டு வந்து நிக்கும்…எங்க ஆத்தா சொல்லும்…புருசன உன் புள்ள மாதிரி நெனச்சுக்கோ..தப்பு செஞ்ச புள்ளய அடிச்சாலும் பின்ன நம்மதான தாயி அணச்சுக்கிறோம்…புருசனயும் அப்படி மன்னிச்சுட்டா எல்லாம் சரியாப் போய்ரும் தாயி..நீங்க ஒரு புள்ள பெறும் போதுதான் பாப்பா உங்களுக்குப் புரியும்”

“மாப்பிள்ளைத் தம்பி எவ்ள தங்கமான புள்ள…பொழுத வெட்டியாப் போக்குற மாதிரிக் கோச்சுக்கிறீங்களே பாப்பா. எத்தன உசுரைக் காப்பாத்துது.. போன தரம் உங்க ஊருக்கு வந்தப்ப பாத்தேன். ஆஸ்பத்திரில, எவ்வளவு பேரு வாழ்த்துறாங்க. பாவம் பாப்பா அந்தத் தம்பி. புரிஞ்சு பக்குவமா நடந்துக்காம ஏன் கஷ்டப்படுத்துறீக. ஒங்க அம்மா அப்பாவும் பாவம்தானே பாப்பா..மனசுக்குள்ள மருகிப் போறாக..இத்தன நாள் சொல்லத் தயக்கமாருந்துச்சு. இன்னிக்கு என்னமோ மனசு தாங்கல..அதான் சொல்லிப்புட்டேன்..”

சுப்பம்மா சொல்லிக்கொண்டேசேலையை இழுத்துச் சொருகியபடி புழக்கடைப்பக்கம் போக, அடுக்களையில் இருந்து காபி குடித்தபடியே வந்த சாரதா, வித்யாவின் முகத்தில் என்றும் இல்லாத மென்மையும் தெளிவும் பொலிவது கண்டு, பெருமூச்செறிந்தாள்.

 

படத்திற்கு நன்றி:http://www.boldsky.com/relationship/marriage-and-beyond/2011/husband-wife-talk-tips-200711-aid0165.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *