காதலும், நாய்க்குட்டியும்
பாகம்பிரியாள்
விழி கவர் விளம்பரத்தில் மயங்கிய நீ
விசுக்கென்று நம் காதலை நாய்க்குட்டியாக்கி
மடி மீது வைத்ததோடு அல்லாமல்,
அணைத்தும் கொண்டாய் மெத்தென்று இருப்பதால்.
நாம் தூக்கிப்போடும் நினைவுகளை
அது கவ்விக்கொண்டு
திரும்பத் திரும்ப வருவதில் உனக்கு ஓர் ஆர்வம்.
சொடக்குப் போடும் போதெல்லாம்,
அது சிலிர்த்து நிற்பதைக் கண்டு
நீ வியந்து போகிறாய்!
நாம் போகும் இடமெல்லாம்,
அதுவும்
குடுகுடுவென்று ஓடி வருவது தனி அழகுதான்.
ஆனால், கூடவே இணைந்து வருகிறது ,
குறிஞ்சி மலர் பூக்கும் ஆண்டுகள்தானா
நம் காதலின் ஆயுள்
என்ற நெருடலான கேள்வியும்?
படத்திற்கு நன்றி:http://the-best-top-desktop-wallpapers.blogspot.in/2010/12/love-wallpapers.html