உயர்தர இசையில் நிகழ்ந்த நேர்த்திமிகு கலையழகு

0

— ஜெயந்தி சங்கர்
Abiraami_veenai

காரைக்குடி வீணை இரட்டையர்களுள் ஒருவரான சாம்பசிவ அய்யர் அவர்களின் மகள் வயிற்று பெயர்த்தி, காரைக்குடி திருமதி ஜெயலட்சுமி சுகுமார். சிங்கப்பூரில் ‘வைணிகா மியூஸிக்’ என்ற இசைப் பள்ளியை நிறுவி 12 ஆண்டுகளாக வீணையிசைக்கு முக்கியத்துவமளித்து மிகச் சீரிய முறையில் நடத்தி வரும் இவரின் மாணவிகளுள் ஒருவர் செல்வி அபிராமி. வி.கௌதம். 26 ஜூன் 2010 அன்று மாலையில் ரா·பிள்ஸ் ஹோட்டேல் ஜூப்ளி ஹாலில் நடந்தேறிய அபிராமியின் வீணை அரங்கேற்றத்திற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் வீணை ஈ.காயத்ரி.

பைரவி அடதாள வர்ணமான ‘விரிபோணி’யைச் சிறப்பாக இரண்டு காலத்தில் வாசித்து விட்டு ஹம்சத்வனியின் ‘வாதாபி கணபதிம்’ வாசித்தார். ‘ப்ரணவ ஸ்வரூப’வில் அபிராமி இசைத்த நெரவல் மற்றும் அதையடுத்து வாசித்த ஸ்வரம், கச்சேரியைச் சடாரென்று முடுக்கி முன்னகர்த்தியது என்றே சொல்ல வேண்டும். மூன்றாவதாக ஸ்ரீரஞ்சனியில் ‘எந்தன்குறை இன்னும் சொல்லவா’ வாசிக்கும் போது, மேடை மட்டுமே என் கண்களில் நிறைந்தது. கன்னட பங்களாவின் ரேணுகா தேவி வாசித்த கணத்தில் வீணையும் அபிராமியும் மட்டுமே என் கருத்தில். இந்த ராகத்தை நிறைய கேட்டிருக்கிறேன் என்று தான் தோன்றியது. அது மலஹரி ராகம் தானாம். பந்துவராளியைக் காமவர்த்தினி என்கிறோமில்லையா அதேபோல ஒரே ராகத்துக்கு இரண்டு பெயர்கள் என்று பிற்பாடு குருவே என்னிடம் சொன்னார். அடைப்புக் குறிக்குள் அதைக் கொடுத்திருந்தால் குழப்பங்களுக்குள் போகாமல் கண்டிப்பாக அந்த ரேணுகா தேவி கீர்த்தனையின் கம்பீரத்தை இன்னும் ஆழ்ந்து அதிகமாக ரசித்திருப்பேன்.
ஐந்தாவது உருப்படியான காபிநாராயணியில் ‘சரச சாமதான’ முடித்து, ‘ராகம் தானம் பல்லவி’ வாசிக்கும் போது ஒரு எதிர்பார்ப்போடு நிமிர்ந்து உட்கார்ந்தேன்.  எதிர்பார்த்ததைவிட பன்மடங்காகவே அளித்துவிட்டார். ராகம் வாசிக்கும் போது அரங்கம் முழுவதும் சண்முகப்ரியா நிறைந்து வீணை மட்டும் என் கருத்தில் நிரம்பியிருந்தது. மலையமாருதம், காம்போஜி, கௌளை ஆகிய ராகங்களில் அடுத்தடுத்து தானம் வாசித்துவிட்டு ஷண்முகப்ரியாவுக்கு வரும் போதும் அபார அழகுடன் அமைந்து எனக்குள் ஏற்படுத்திய மன எழுச்சி கண்டிப்பாக அன்று அரங்கில் அனைவருக்குமே ஏற்பட்டிருக்கும். தானம் வாசித்த போது அங்கே உயரிய இசை நிகழ்ந்தது. அன்றைக்கு நான் கேட்ட தானம், இதுவரை கேட்ட வீணையிசை தானங்களில் மிகச் சிறந்த ஒன்று என்ற உணர்வேற்பட்டது எனக்கு. அபிராமியின் விரல்கள் மட்டுமே என் கண்களில். காதுகளில் விழுந்தவை அனைத்தும் சுநாதம் சுநாதம் சுநாதம். சுநாதம் தவிர வேறில்லை.
மயில் தோகை விரித்தாடுவது போலவும் நர்த்தகி சலங்கை கட்டி அபிநயம் பிடிப்பது போலவும் கிண்கிணி ஒலியுடன் பரிவட்டம் கட்டிய வேழம் ஒன்று அசைந்து வருவது போலவும் என்னென்னவோ மின்னல் எண்ணங்கள் எனக்குள். தானம் எப்போதும் மயக்கக் கூடியதென்றே அறியப்படுகிறது. அன்றைக்கு தானம் சிந்தையைத் துளியும் நகரவிடாமல் கட்டிப் போட்டுவிட்டது. ‘தன்யதே இதி தானம்’ என்று சங்கீத ரத்னாகரம் எனும் இசை நூலில் சாரங்க தேவர் சொல்கிறார். தன்யதே என்றால் விஸ்தரிக்கக் கூடிய இயல்புடையது. பல நூற்றாண்டுகளில் தானம் வாசிப்பதென்பது பல்வேறு மாறுதல்களைக் கண்டு இன்றைக்கு தானம் வாசிக்கும் முறை உருவாகியிருக்கிறது என்பார்கள். விஸ்தரிக்கிறேன் பேர்வழி என்று பிய்த்துப் பிரித்து விரித்து தன்னுடைய வித்வத்தைக் காட்டும் ஆர்வத்தில் அவையோரின் பொறுமையைச் சோதிப்பதோடு பல நேரங்களில் கலைஞர்கள் கலை எனும் அழகியலை மறந்து போய்விடுவதைக் காணமுடியும். ஆனால், அவர் அன்றைக்கு வாசித்த தானம் விஸ்தாரமாக விரிந்து, இசையை உயர் தளத்துக்குக் கொண்டு சென்ற அதே வேளையில், கலையை நிகழ்த்தத் தவறவில்லை. திறனும் ஆழமும் கலையழகும் மிகச் சரியான சமச்சீராக ஒருங்கிணைந்து அபிராமி வழங்கிய பல்லவி, நெரவல், எடுப்பு எல்லாம் அரங்கேற்றக் கச்சேரி போலவே இல்லை. கண்டஜாதி த்ரிபுடை தாளத்தில் வாசிக்கும் சவாலான செயலைக் கணக்கு வழக்குகளுடன் கையாண்ட விதம் மிக அனுபவம் வாய்ந்த தேர்ந்ததொரு இசைஞரின் வாசிப்பு போல மிளிர்ந்தது.

Ramesh_Mridangam
மிருதங்க வித்வான் ரமேஷ் ஸ்ரீனிவாசன், சங்கீத கலாநிதி வெல்லூர் ராமபத்ரன் அவர்களுடைய சீடராம். அமெரிக்காவில் லயக் கலைப் பள்ளி நடத்தும் இவர், கடம் வாசித்த அகிலேஷ்வருடன் சேர்ந்து அரங்கேற்றத்திற்கு அளித்த அனுசரணையான லயம், மிக நேர்த்தி. அன்றைக்கு தனியாவர்த்தனம் தொடங்கிய தருணத்தில் ஷண்முகப்ரியாவில் கட்டுண்டு கிடந்த அவையோர் அபிராமிக்குக் கொடுக்கத் தவறிய கரவொலியை ரமேஷ் மிக அழகாகக் கைதட்டி வாங்கிவிட்டு, ‘தனி’க்குள் போன பாங்கும் பதவிசும் என்னை நிறைவோடு புன்னகைக்க வைத்தது. கட வித்வானை சிநேகமுடன் ஊக்குவித்து அருமையாக வாசித்தார். எட்டு வயதிலிருந்து கடம் வாசிக்கும் அகிலேஷ்வரும் ரமேஷ¤க்கு ஈடு கொடுத்துச் சிறப்பாக வாசித்தார்.

குருவின் பாடமுறை மற்றும் தயாரிப்பு, மாணவியின் திறமை ஆகியவை அரங்கேற்றத்துக்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதையும் தாண்டி கலை நிகழ்வது என்பது அச்சமயத்தில் இசைக்கும் கலைஞரின் அப்போதைய மனக் குவிப்பினாலும் சிரத்தையினாலும் மட்டுமே சாத்தியம். உட்புகுந்து ஆன்மாவைத் தொட்டு வருடும் ஒரு அபூர்வ நிகழ்வாக இருக்கக் கூடியது அது. அன்று கலை மிக அழகாக நிகழ்ந்து, அக எழுச்சி ஏற்பட்டு, எல்லோரையும் ஒரே போல நெகிழ்த்தியது. கலைகளின் நோக்கம் அதைவிட உயர்ந்ததாக இருக்கவே முடியாது. கணக்குகள் முக்கியம் தான். இருப்பினும், வெறும் கணக்குகள் சடங்காகிப் போகும் அபாயத்தை உருவாக்கி விடக்கூடும். இதயத்தைத் தொடக் கூடிய இசை நிகழ, இசைஞருக்கு அதைத் தாண்டியதொரு சிந்தைக் குவிப்பும் ஒன்றுதலும் வேண்டியிருக்கிறது. நவீன யுக யுவதி அபிராமிக்கு அது வாய்த்திருப்பது மிக அரிய சிறப்பு மட்டுமின்றி ஒரு கொடுப்பினையும். இவர் வீணையை விடாமல் தொடர வேண்டுமே என்ற எண்ணம் என்னைப் போலவே பலரிடையே அன்றைக்குக் கண்டிப்பாகத் தோன்றியிருக்கும்.
இத்தனை மேம்பட்ட இசையை அரங்கேற்ற முடிந்த அபிராமி, மருத்துவப் படிப்புக்குச் செல்லவிருக்கிறார். இருந்தாலும், இசைப் பயணத்தையும் மேலும் கற்றலையும் அவர் விடவே கூடாது. தொடர்ந்தும் கற்றபடி இருந்தால் மனோதர்மம் மற்றும் புத்தாக்கத் தளத்திற்கு தனது இசையைக் கொண்டு செல்ல அவரால் மிக எளிதில் முடியும் என்பது அரங்கேற்றத்தில் நிரூபணமாகியுள்ளது. அதிகமில்லா விட்டாலும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நகரங்களில் வருடத்திற்கு இது போன்ற ஒரேயொரு கச்சேரியையேனும் கொடுப்பது என்ற குறிக்கோள் வைத்துக்கொள்வது தன்னிடம் குடி கொண்டிருக்கும் வித்வத்துக்கு அவர் செலுத்தும் ஒரு நியாயமாக அமையும். அபிராமியின் பெற்றோர் இதற்குப் பெரிதும் துணை நிற்பார்கள் என்பது அவர்களது ஆர்வத்திலும் உழைப்பிலும் அன்றைய ஏற்பாடுகளிலும் துல்லியமாகத் தெரிந்தது. ஏழாவது உருப்படியாக அம்ருதவர்ஷிணியில் ‘சுதாமயி’ வாசித்ததும் மாலை மரியாதைகளும் உரைகளும் நடந்தேறின.
வீணை ஈ.காயத்ரி அவர்களின் ஆங்கில உரை, கச்சிதமாகவும் சுருக்கமாகவும் சிறப்பாகவும் அமைந்தது. வீணையிசையின் சிறப்புகள், அது யோக மார்க்கத்தில் ஆற்றக் கூடிய பெரும் பங்கு போன்றவற்றைச் சொல்லிவிட்டு அவர் அபிராமியின் குரு காரைக்குடி திருமதி ஜெயலக்ஷ்மி சுகுமார் அவர்களைக் குறித்து தான் அதிகமும் பாராட்டிப் பேசினார். அதைக் கேட்டபோது ஒரு சக கலைஞரையும் அவரது திறனையும் உளப்பூர்வமாகவும் அழகாகவும் சபையோர் முன்னால் அங்கீகரிக்கும் பண்பு இசைக் கலைஞர்கள் அனைவருமே கற்றுக் கொள்ள வேண்டிய உயரிய பண்பு என்றே எனக்குத் தோன்றியது. ஒவ்வொரு முறை பாராட்டிய போதும் அவையில் பலத்த கரவொலி எழுந்தது. பிறகு, எல்லோரையும் எழுந்து நின்று கைதட்டுமாறு காயத்ரி தானே வேண்டிக்கொண்டார். அவையோர் தாமே எழுந்து கைதட்டுவர் என்று எதிர்பார்த்திருக்கிறார் என்பது அப்போது தான் புரிந்தது. குருவுடைய ஆற்றலும் உழைப்பும் யாராலும் சிறிதும் மறுத்துவிடக் கூடியதன்று எனும் உண்மை அவரை அறிந்தவர்களுக்கு மட்டுமின்றி அன்றைக்கு அபிராமியின் வாசிப்பைக் கேட்டு ரசித்த புதியவர்களுக்கும் புரியும். இருப்பினும், வேறு எதையெதையோ பேசி முடித்துவிட்டு இறங்கி விடாமல் குருவை முறையாகக் கௌரவித்த அன்றைய சிறப்பு விருந்தினர், தான் உயர்ந்ததுடன் குருவைப் பல படிகள் உயர்த்தியதோடு அன்றைய நிகழ்வுக்கும் ஒரு முழுமையைச் சேர்த்தார். அபிராமியின் வாசிப்பைச் சிலாகித்த காயத்ரி, அந்த அளவுக்கு உயர்தரத்தை தான் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார். அன்றைக்குக் கேட்ட வீணையிசையை ரத்தினங்கள் பதித்த அழகிய ஆபரணம் என்று உவமைப்படுத்தினார். அவர் சொன்னது சற்றும் மிகையில்லை. அப்படியே தான் இருந்தது. ஸ்வர்ணலயத்தில் பதித்த ராகரத்தினங்களாலான அழகிய ஆரத்தை நானும் அருவமாய் உணர்ந்தேன். எனக்குத் தோன்றியதையே அவர் மேடையில் சொன்ன போது மகிழ்ச்சியில் லேசாகத் துள்ளினேன். பைரவி வர்ணத்தில் தசவித கமகங்களுடன் வாசித்து தன்னை மிகவும் கவர்ந்ததென்றார் வீணை ஈ.காயத்ரி. ராகம் தானம் பல்லவியில் வாசித்த மலையமாருதத்தைப் பிரத்யேகமாக தான் ரசித்ததாகக் குறிப்பிட்டுக் கூறினார். மலையமாருதம் வாசித்த போதே முதல் கரவொலி அவரிடமிருந்து எழும்பியிருக்கிறது.

அபிராமியின் குரு, காரைக்குடி ஜெயலட்சுமி சுகுமார் அவர்கள் அரங்கேற்றத்தின் வெற்றி மற்றும் சிறப்பு விருந்தினரின் அங்கீகாரம் காரணமாக சற்றே நெகிழ்ந்து போயிருந்தார். தன் உரையை மிக எளிமையாகவும் சுருக்கமாகவும் முடித்துக்கொண்டார். சொல்லிக் கொடுப்பதைச் சட்டென்று பிடித்துப் பயின்று உழைக்கக் கூடிய மாணவி அபிராமி என்று சொன்னதோடு இசையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார். தெய்வ பக்தியும் மனித நேயமும் கொண்டு அவர் வாழவேண்டும் என்று வாழ்த்தினார். சரளமான ஆங்கிலத்தில் நன்றியுரையை அபிராமி மிகச் செம்மையாகவும் சுவையாகவும் அளித்தார். வாசிக்கும் போது இருந்த அவரது தீவிர முக பாவத்திலிருந்து மாறுபட்டு மிக இயல்பாகவும் சற்றே பிரசன்னமாகவும் இருந்தது. மேடையில் பேசி நல்ல பழக்கம் இருப்பவர் போலும். வளவளவென்று நீட்டாமல், நன்றி சொல்ல நினைத்தவர்களுக்கு அழகாகக் குட்டிக் குட்டிக் கதைகளோடு சேர்த்து லாகவத்துடன் சொன்னார். மேடை சம்பிரதாயங்கள் முடிந்து, ‘சின்னஞ்சிறுக் கிளியே’வும் இறுதியில் காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி இயற்றிய சிவரஞ்சனி ராகத்திலான தில்லானாவும் வாசித்த பிறகு மங்களம் இசைத்து, இனிதே முடித்தார்.
==========================================

மேலதிக தகவல்களுக்கு:

வைணிகா மியூஸிக் – sujay@singnet.com.sg
திருமதி. லக்ஷ்மி .வி.கௌதம் – kumarakshi@yahoo.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *