பாரதிப் பெருங்கடல் – 10
பாஸ்கர பாரதி
மேற்கே பகலவன் மறையும் நேரம். ஒரு சிறிய மேடை. அதன் மீது நான். எதிரே..
நீண்டு நீண்டு விரிந்து விரிந்து செல்லும் நீலக் கடல்; அதன் முடிவில், கரலை முத்தமிடக்
கீழிறங்கி வரும் பரந்து பட்ட நீல வானம்; காணுதற்கரிய கவின்மிகு காட்சி. கண்களில் உறைந்துவிட்ட,
கருத்தில் நிலைத்துவிட்ட காட்சியில் லயிட்துவிட்ட போழ்தில் நேரம் நகர்வதே தெரிவதில்லைதான்.
தன்னை மறந்த நிலையில் ஒருவனுக்கு காலமும் இடமும் என் பொருட்டு?
‘யார் இது?’ என் கண்களை, பின் நின்று மறைப்பது யார்?
கண்களை மூடிய கரங்களைத் தீண்டிய மாத்திரமே தெரிந்து போனது – அவள்தான்.
இதோ.. இந்த மணம்.. என்னைப் பற்றிக்கொண்டு, இல்லையில்லை, இழுத்துக்கொண்டு போகிற
மகிழ்ச்சிப் பெருவெள்ளம். என் உள்ளத்தைத் தன்னதில் பதித்துக் கொண்டுவிட்ட
உண்மையில்.. திண்மையில்.. புரிந்துகொண்டு விட்டேன். அவள்தான். அவளேதான்!
“நீதான்—- ” பெயர் சொல்லி விளித்தேன். அவள் கை விலக்க கண் விழித்தேன்.
புன்முறுவல் பூத்து நின்ற பூவையெனை வினவினாள். “நெடுங்கடலில் நீ என்ன கண்டாய்?”
“வான வீதியில் என்ன கண்டாய்?” “அலை தரித்த நுரைகளில் என்ன கண்டாய்?’
“நீர்க்குமிழி முகங்களிலே என்ன கண்டாய்?” “பிரிந்து சேர்ந்து பிரிந்து செல்லும்
மேகங்களில் என்ன கண்டாய்?’
சொன்னேன் – “நீள் கடலில், நீல வானில், நுரைகளில், குமிழிகளில், மேகக் கூட்டங்களில்…
ஏன், என் விழிகளைப் பொத்திய கரங்களை விலக்கி விழித்ததில்… நான் கண்டதெல்லாம்
நின் முகமன்றி பிறிதில்லை!”
அவள் நேர் நின்றால் தெரிவது அவள் முகம். அவள் இல்லாத போழ்தும் அவள் முகமே..
கடலாய், வானமாய், காற்றாய், நீராய், காணுகின்ற காட்சியெல்லாம் அவளன்றி வேறல்லவாய் …
மெய்ப்பொருள் தேடி அலையும் பகரும் இறைமையின் தத்துவம் காதலில் எளிதில் கைவரப் பெறுமோ..?
‘எங்கும் எதனிலும் அவனே’ – இது இறையடியார் வாக்கு.
எங்கும் எதனிலும் அவனே/அவளே – இது இளங்காதலர் நோக்கு.
மகாகவியின் பாடல் மனதை மயக்குவதில் வியப்பென்ன?
அவனுடைய சாயங்காலத்தில் சந்தோஷம் தடவிய அப்பாடல்..
படிக்குந்தோறும் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தும் அப்பாடல்…
காதலர் அனுபவித்தறியும் அப்பாடல்… இதோ..
கண்ணம்மா – என் காதலி
மாலைப் பொழுதில் ஒரு மேடைமிசையே
வானையும் கடலையும் நோக்கி இருந்தேன்;
மூலைக் கடலினை அவ் வான வளையம்
முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
நேரம் கழிவதிலும் நினைப்பு இன்றியே
சாலப் பல பல நற் பகற்கனவில்
தன்னை மறந்து அலயந் தன்னில் இருந்தேன்.
ஆங்கு அப்பொழுதில் என் பின்புறத்திலே,
ஆள்வந்து நின்று எனது கண்மறைக்கவே,
பாங்கினில் கையிரண்டும் தீண்டி யறிந்தேன்,
பட்டு உடை வீசு கமழ் தன்னில் அறிந்தேன்;
ஓங்கிவரும் உவகை ஊற்றில் அறிந்தேன்;
‘வாங்கி விடடி கையை யேடி கண்ணம்மா,
மாயம் எவரிடத்தில்?’ என்று மொழித்தேன்.
சிரித்த ஒலியில் அவள் கை விலக்கியே,
திருமித் தழுவி, “என்ன செய்தி சொல்” என்றேன்;
“நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்?
நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?
சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?
பிரித்துப் பிரித்து நிதம் மேகம் அளந்தே,
பெற்ற நலங்கள் என்ன? பேசுதி” என்றாள்.
“தெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;
நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;
பிரிதுப் பிரித்துநித மேகமளந்தே,
பெற்றதுன் முகமன்றி பிறிதொன்றில்லை;
சிரித்த ஒலியினில் உன் கை விலக்கியே,
திருமித் தழுவியதில் நின் முகங்கண்டேன்.
படத்திற்கு நன்றி:
http://www.eegarai.net/t76466-topic