பரஸ்பரம்
சாந்தி மாரியப்பன்
மதுபானக் கடையினின்றும்
கசிந்த கோடி சூரிய ஒளிவெள்ளம்
குளிப்பாட்டி விட்டது,
அருகிருக்கும் கோவிலையும்
கொஞ்சம்,
போனால் போகிறதென்று..
இருண்டிருந்த கோயிலில்
நிவேதனத்துக்கும் வழியின்றி,
வெகு நாட்களாய்ச்
சோர்ந்தமர்ந்திருந்த கடவுள்,
நிதானம் தப்பிய நிலையிலேனும்
எவரேனும் வருவரோவென்று
விழி பூத்துக் காத்திருக்கிறார்
நம்பிக்கையுடன்..
பரஸ்பரம்
குறைகளைச் சொல்லியழ..