இணையப் பயன்பாடு – கட்டுரைப் போட்டி
அன்பு நண்பர்களே,
இணையம், நல்லதைவிட அல்லதை நிறைய தருவதாக ஒரு புகார் நம்மிடையே அவ்வப்போது கூறப்படுகிறது.
ஆனால், உண்மை அங்ஙனமில்லை. இணையம் எவ்வளவோ நல்ல விஷயங்களை நமக்குத் தருகிறது. குறிப்பாக, இளைய தலைமுறையினர் இந்தத் தொழில் நுட்ப வசதியை எப்படி உபயோகிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே, நன்மையோ, தீமையோ பெறுகிறார்கள்.
நம் வல்லமை மின்னிதழின் மூன்றாம் ஆண்டுத் தொடக்கத்தை முன்னிட்டு, 16-05-2012 அன்று கட்டுரைப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தோம். அது தொடர்பான விவரங்கள் இங்கே:
https://www.vallamai.com/literature/articles/20546/
சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வைப் பற்றிய போட்டி என்பதாலும், சரியான நேரத்தில் இது பற்றிய கருத்துகளைப் பதிவு செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதாலும், இந்தப் போட்டியில் நீங்கள் ஒவ்வொருவரும் கலந்து கொண்டு உங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டியது மிக்க அவசியமாகிறது. குறிப்பாக வல்லமையில் தமது படைப்புகளை ஏற்கனவே அளித்து வரும் வல்லமையாளர்கள் இத்தருணத்தில் தங்களது கட்டுரைகளின் மூலம், தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.
அத்தோடு மட்டுமல்லாமல், உங்கள் குழந்தைகளையும் இந்தப்போட்டியில் கலந்து கொள்ள சொல்ல வேண்டியது பெற்றோராகிய உங்கள் ஒவ்வொருவருடைய கடமை. தமிழில் எழுத இயலவில்லை என்போர் (தமிழை ஒரு பயிற்று மொழியாகக் கொள்ளாதோர்) உங்கள் குழந்தைகளில் யாராவது இருந்தால், அவர்கள் ஆங்கிலத்தில் எழுதும் கட்டுரையை மொழி பெயர்க்கும் வேலையை நீங்களே செய்யலாம்.
வல்லமை அன்பர்களின் வசதிக்காக, போட்டிக்கான கால அவகாசம் மேலும் ஒரு மாதம் (16-07-2012 வரை) நீட்டிக்கப்படுகிறது. ஆர்வலர்களின் பங்கேற்பை பெருமளவில் வரவேற்கிறோம்.
இளங்கோவன்
உதவி ஆசிரியர்-வல்லமை