ஏமாறுபவர்களும் ஏமாற்றுபவர்களும்
நாகை வை. ராமஸ்வாமி
இந்தியாவில், அதுவும் தமிழ் நாட்டில், “செலுத்தும் பணத்தை மிகக் குறுகிய காலத்தில் இரட்டிப்பு செய்து தருகிறோம், அதிக வட்டி தருகிறோம், பெரிய கம்பெனிகளில், அயல் நாட்டில் ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பளத்தில் வேலை வாங்கித் தருகிறோம்” என்றெல்லாம் ஆசை காட்டி மோசடி செய்யும் தனி நபர் மற்றும் போலி நிறுவனங்கள் அதிகமாகி வருகின்றன.
அறிவு பூர்வமாக ஆலோசிக்காமல், தீர விசாரிக்காமல், இவற்றில் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தைக் கொடுத்துவிட்டு மோசம் போகின்றனர் பெருவாரியான மக்கள். பிறகு தொலைக் காட்சி நிருபர்களிடம் குய்யோ முறையோ என்று அலறி அடித்து, அரசு தான் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று முறையிடுகின்றனர். இது மிகவும் தவறு, தெரிந்து செய்யும் தவறுகளுக்கு அரசு எவ்வாறு உதவவோ உத்திரவாதமோ அளிக்க இயலும்?
முதலில் தனி நபர்களிடமும் , அங்கீகாரமில்லா நிறுவனங்களிடமும், மிக அதிக வட்டிக்காகவோ, வேலைக்காகவோ பணம் கொடுப்பதோ, அவர்கள் பணம் வாங்குவதோ சட்டப்படி சரியா என்று தெரிந்துகொள்ளவேண்டும். அடுத்து, ஏதாவது நிறுவனம் இம்மாதிரி உறுதி அளித்தால், அவர்கள், சரியான அங்கீகாரம் பெற்றவர்களா என்றும், அவர்களிடம் சேமிப்பு செய்யலாமா என்றும் உறுதி செய்துகொள்ளவேண்டும். உறுதி அளிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்பட்டவர்களிடம் சேமிப்பு செய்து ஏமாந்து போனால் மட்டுமே அரசிடமோ, காவல் துறையிடமோ முறையிடலாம்.
இம்மாதிரி விஷயங்களில் மக்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும், சம்பந்தப்பட்ட அரசு, காவல் துறையினரும் அவ்வப்போது மக்களுக்கு பல ஊடகங்கள் வாயிலாக, இம்மாதிரி சந்தர்ப்பங்களில், எந்த துறையிடம், எந்த அதிகாரியிடம் ஆலோசனை பெறவேண்டும் என்பன போன்ற அறிவுரைகளையும் அவ்வப்போது வழங்கிக் கொண்டு வரவேண்டும். குற்றங்களும் ஏமாந்து நஷ்டமடையும் மக்கள் எண்ணிக்கையும் குறையும் வாய்ப்பு உண்டாகும்.