நாட்டு நடப்பு – (1)
வையவன்
தண்ணி குறைஞ்சிடுச்சி
குழாய் திறந்திருக்கிறது . தண்ணீர் அது பாட்டுக்கு வழிந்து தரையில் கொஞ்சம் கொஞ்சமாக குட்டை கட்ட ஆரம்பித்து விட்டது. மக்கள் நடந்து போகிறார்கள் .வாகனங்களில் போகிறார்கள். தேங்கியிருக்கிற தண்ணீரைத் தாண்டிக்கொண்டோ மிதித்துச் சபித்துக்கொண்டோ போகிறார்கள். திறந்திருக்கிற குழாயை யாருக்கும் மூடத் தோன்றவில்லை. நேரமில்லை. குழாய் என்ன அவர்கள் வீட்டுக்குழாயா என்ன?
ஒரு மேல் நிலைத்தொட்டி.விரிசல் விட்டு விட்டது. தண்ணீர் கசிகிறது வழிந்து வழிந்து குட்டையாகி தேங்கி கொசு உற்பத்திக்களமாக எப்போது மாறலாம் என்று யோசிக்கிறது பார்த்துக்கொண்டே மக்கள் நடந்து போகிறார்கள் .வாகனங்களில் போகிறார்கள். யாருக்கும் அதைப் போய் உரிய அதிகாரி அல்லது அலுவலத்தில் சொல்லி செய்ய வேண்டிய எச்சரிக்கையைச் செய்யலாம் என்று தோன்றவில்லை. அது நம் வேலையா என்ன? அதற்கென்று வேலை பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சம்பளம் ஊதிய உயர்வு என்று சகலவிதமான சௌகரியங்களும் இருக்கின்றன. நம்ப வேலையை நாம்ப பார்க்க வேண்டாமா?
[என்னப்பா.. விடிஞ்சதும் ஆரம்பிச்சாச்சா தர்மோபதேசம்? கேட்பீர்கள். கேட்கத் தோன்றும் . தப்பே கிடையாது. ஒரு சின்ன தகவல்
இடம் கொள்ளளவு — போன வருடம் இந்த வருடம்
மேட்டூர் 93,470 5,2639 38,974
பவானி சாகர் 32800 14,680 2515
பரம்பிக்குளம் 13508 11,453 7288
முல்லைப்பெரியார் 6118 2574 1543
என்ன அட்டவணை ? பொருளாதார புள்ளிவிவரம் காட்டி உடற பீடாவா?
இல்லீங்க பாஸ். இதுதான் நம்ப அணைகளோட பேங்க் பாலன்சே. தண்ணி பாலன்சே. அந்தந்த பெரிய அணைகள்ளே இருந்துதான் நமக்குத் தண்ணி வரணும் 2011 வருடம் பாதி கூட ரொம்பலே. இந்த வருஷம் சுத்தம். மழை பெய்யலேப்பா! அதுக்கு நமபளை என்ன பண்ண சொல்றே? நியாயமான கேள்வி மழை வர்ற வரைக்கும் தண்ணியைச் சிக்கனமா செலவு செய்யணும் இல்லியா? வந்துட்டாருப்பா போதகர்னு சலிச்சிக்க வேண்டாம் கையிலே காசு இருந்தா ஜல்சாவா செலவு பண்றோம் ? கை சுருங்கினா செலவைச் சுருக்கிறது இல்லியா?. அவ்வளவு தான். கண்ணெதிரில் வீணாகும் தண்ணீர் மழை விட்ட கண்ணீர். இன்னா கவிதை போல இருக்கா? சரி மாத்தி சொல்றேன். மழைக்காக நாம விடப்போற கண்ணீர். கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்கணும். தலைமுறைகள் கேள்வி கேட்கும்.