நாட்டு நடப்பு (2)
வையவன்
கோடிகளும் ஊடகங்களும்
அமிதாப் ஆரம்பித்து வைத்தார்! கவுன் பனேகா க்ரோர்பதி? பிடித்துக்கொண்டது பைத்தியம் .இந்தியாவின் எல்லா டிவிகளிலும். ஒரு சானல் ஆரம்பித்து வைத்தால் அதற்கு வருகிற வரவேற்பைப் பார்த்து மற்றொரு சானல் தொடங்குகிறது. ஒருவர் கேள்வி கேட்பார். பதில் சொன்னால் போதும் . படிப்படியாக ஏறிக்கொண்டே போகும் அவருக்கு வரவேண்டிய தொகை. பதில் சொல்கிறவருக்கு டென்ஷன் ஏறுகிறது. தெரிந்த பதிலைக்கூட தடுமாறி ஒலியும் ஒளியும் கூடவே அலங்கார பிரம்மாண்டங்களும் மிரட்ட தவறான பதிலைக் கூறுகிறார்.
டிவியில் ஒளிபரப்பாவதால் பார்த்துக்கொண்டே இருப்போருக்கும் டென்ஷன் ஏறுகிறது. தம்மை மறந்து வரவிருக்கும் தொகை தமக்கு வரப்போவது போல அவர் கட்சியில் நின்று தவிதவிக்கிறார் . இதில் சினிமா நட்சத்திரங்களைப் பங்கேற்க வைத்து கவர்ச்சியை கூட்டுகிறார்கள் .தம்மை அறியாமல் கோடிக்கணக்கான மக்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் ஆசை ஒரு சூதாட்ட வெறி போல் உள்ளிறங்குகிறது.
இது சரியா? முறையா?
கேட்கப்போனால் எத்தனையோ ஏழைகள் பயன் பெறுகிறார்கள் என்று வருகிறது பதில்.
.போராடி வாழும் வாழ்க்கை வேண்டாம். போராட்ட உணர்வில் வரும் முன்னேற்றம் வேண்டாம் அது தருகிற தன்னம்பிக்கை வேண்டாம். யாராவது சூதாட்டம் நடத்தி பணம் கொடுத்தால் போதும் என்று பொதுவான வேட்கை காற்றிலே ஈதர் போல் பரவுகிறது பொழுதுபோக்கு ஒரு சூதாட்ட மேடையாகிறது . ஆசை உள்ளவர் இல்லாதவர் எல்லாரையும் சூதாட்டத்தில் தம்மை மறந்து பங்கு கொள்ள வைக்கிற இவர்களுக்கு, தங்கள் பொருள்கள் விற்க வேண்டும்; தங்களுக்கு விளம்பரம் வேண்டும் என்ற குறிக்கோள் தவிர என்ன இருக்கிறது? நாமும் பார்க்கிறோம் . நம் மக்களையும் பார்க்க வைக்கிறோம் . மறைமுகமாக அவர்களையும் எப்படிப் பணம் வந்தாலும் பரவாயில்லை என்ற கருத்துக்கு பழக்கப்படுத்துகிறோம்
ஊடகங்கள் நாட்டிலும் வீட்டிலும் ஏற்படுத்தியுள்ள விளைவுகள் பற்றி பொதுவாகப் பேசினால் மட்டும் போதுமா? நமது தலைமுறைகளுக்கு நாமே வழிகாட்டியாக இருக்க சிறிதாவது எச்சரிக்கை மனசுக்குள்ளே இருந்தால் எந்த தீமையும் நம் வீட்டைப் பொறுத்தவரை நம் கண்காணிப்பில் உள்ளவரை நுழையாது
இது போன்ற நிகழ்ச்சிகளில் தற்போது கேட்கப்படும் கேள்விகளும் கூட அவ்வளவு வலுவான…பொது அறிவை வளர்க்கின்ற அளவுக்கு இருப்பதில்லை என்பதே என் கருத்து.
கேள்விக்குச் சரியான பதில் சொன்னால் பரிசு. இது, அறிவை மையமாகக் கொண்டது இல்லையா? இதைச் சூதாட்டம் எனலாமா?