பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43)

28

 

பேரா. இ. அண்ணாமலையின் பதில்கள் (42)

கேள்வி:

தற்காலத்தில் ர  , ல சொற்களின் முதலில் வருவது சகஜமாகி விட்டது. ஆனால், சிலர் இன்னும் ரகர சொற்களின் முன் அ, இ போடுவதும், லகர சொற்களின் முன் இ போடுவதும் பழமையைத் தொற்றிக்- கொண்டிருப்பதாகவும், வேண்டாததாகவும் உள்ளது. வழக்குதான் இலக்கணத்தை நிர்ணயிக்கின்றது என்றால், இதைப் போல் காலத்திற்கு ஒவ்வாத நியதிகளைத் தள்ளிவிடுவது நியாயம்தானே?  
— விஜயராகவன்

பதில்

தமிழின் ஒரு சிறப்பு ஒரு சொல்லை எழுதுவது போலவே வாசிப்பது. (பேசுவது வேறுபடும்). ககரத்தை உயிர்களுக்கிடையே ஹகரமாகவும், மெல்லெழுத்தை அடுத்து ஒலிப்புடனும் (g போல) உச்சரிப்பது வருமிடத்தைப் பொறுத்து ஊகிக்கக் கூடியது. ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டலும் வாசிப்பும் ஒன்றாகப் போகாது. but, put என்ற சொற்களில் உள்ள உயிரின் உச்சரிப்பை வருமிடத்தை வைத்து ஊகிக்க முடியாது. knight, night என்னும் சொற்கள் வேறாக எழுதப்பட்டாலும் ஒன்றாக உச்சரிக்கப்படுகின்றன. முதல் சொல்லில் உள்ள k உச்சரிக்கப்படுவதில்லை; இரண்டு சொற்களிலும் உள்ள gh உச்சரிக்கப் படுவதில்லை.

தமிழின் இந்தச் சிறப்பை  இரயில், உரோமம் போன்ற சொற்கள் முறியடிக்கின்றன. இந்தச் சொற்களின் முதலில் உள்ள உயிர் வாசிக்கும்போது உச்சரிக்கப்படுவதில்லை. இந்த உயிர்கள் பேச்சிலும் இடம் பெறுவதில்லை. ஒரு மொழியில் பேச்சே எழுத்தில் வடிக்கப்படுகிறது என்னும் பொது விதிக்கு இது ஒரு விலக்கு. சில சொற்களில் சொல்லோடு இணைந்த் நிலையில் இந்த உயிர்கள் உச்சரிக்கப்படும். எடுத்துக்காட்டு: அரங்கம், உலோகம். இவை வரலாற்றுநோக்கில் பிற மொழிச் சொற்கள் என்றாலும் வழக்கில் தமிழ்ச் சொற்கள் ஆகிவிட்டன் என்பதை இது காட்டுகிறது.

தமிழில் சொற்களின்  முதல் மெய் எதுவாக இருக்கும்  என்பதற்கு விதி இருக்கிறது. ங, ண, ன, ழ ள ஆகிய மெய்கள் சொற்களின் முதலில் வராது. பழைய தமிழில் ல, ர ஆகிய மெய்களும் இதில் அடங்கும். இக்காலத் தமிழில் இவை சொற்களின் முதலில் வரும். லட்டு, ரவை போனற பிற மொழிச் சொற்களிலும், லேசு, ரொம்ப போன்ற எழுத்திற்கு வந்துவிட்ட பேச்சு வழக்குச் சொற்களிலும் இந்த இரணடு மெய்களும் சொல்லின் முதலில் வரும். தமிழின் புதிய சொல் வரவை ஏற்றுக்கொண்டு இந்த மாதிரியான சொற்களைச் சொல்லோடு ஒட்டாத முன்னுயிர் இல்லாமலே எழுதலாம். அதுவே முதலில் சொன்ன தமிழின் சிறப்பைப் பாதுகாக்கும். தமிழின் சொற்களின் இயல்பு மாறும்போது அதை எழுதும் முறையும் மாற வேண்டுமல்லவா?

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

28 thoughts on “பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43)

  1. மதிப்பிற்குரிய பேராசிரியரே, உங்கள் கூற்று முற்றிலும் தவறு!! ர,ல முதலான எழுத்துகளில் தொடங்கும் சொற்களை ஒலிக்கும் பொழுது முன்னே நுட்பமாய் துணை உயிரொலி *கட்டாயம்* உண்டு!!! நுணுகிக் கேட்டுப்பாருங்கள்! இதேபோல ஸ்டாலின் என்று மக்கள் எழுதினாலும் முன்னே இகர ஒலி நுட்பமாக உண்டு மொழியியலிலே (தற்கால மேற்கு நாடுகள் வளர்த்தெடுத்த மொழியியலே) இதனை prosthetic vowel என்றும் அழைக்கின்றார்கள் என்பதைத் தாங்கள் அறியாதவர் அல்லர். “லட்டு” என்று சொல்லும்பொழுது கொஞ்சம் நுட்பமாகத் தன்னுணர்வோடு சொல்லிப்பாருங்கள். இ*லட்டு என்பதுபோலவே இருக்கும். அந்த இ என்பது இ-போன்ற ஒரு குறுகிய உயிரொலி கொண்டது. குழந்தைகள் கூட, ராமன் என்பதை ஆமன் என்றுதான் கூறும். ஏனெனில் ர என்று ஒலிக்க இன்னும் பயிற்சி அதிகம் தேவை (வளர்ந்தபின்னும் முதலெழுத்தாக ர, ல,ட முதலான சொல்ல மிஉயற்சி தேவை, முன்னே உயிரொலி வருவது தவிர்க்க இயலாதது). ர, ல போன்ற எழுத்துகளை ஒலிக்க நாக்கின் நுனி உயர வாய் திறப்பதாலும் அந்த ஒலிகளை ஒலிக்கும் முன் சிறிது உயிரொலி வெளிப்படுவதாலுமே, இவ்விதியை மிக மிக அருமையாகவும் நுண்ணறிவோடும் நம் முன்னோர்கள் அறிந்து வகுத்தனர். தமிழ் முன்னோர்களின் நுண்ணறிவுக்கு அடையாளச் சான்றுகள் இவை!! இசுக்கூல் என்று “பாமரன்” கூறுகின்றான், படித்தவன் கூறும் *ஸ்கூல் என்பதிலும் ஸ் என்னும் எழுத்தை ஒலிக்கும் முன்னே சிறு உயிரொலி *கட்டாயம்* உண்டு. சொல்லிப்பாருங்கள் (“படித்தவர்” கூறுவதில் இந்த முன்னே நிற்கும் உயிரொலி சற்று சிறிதாக இருக்கலாம்- அவ்வளவே). இது ஏதும் தமிழ் விதி மட்டும் அல்ல, வட இந்தியர்களும் இப்படி முன்னே உயிரொலி இட்டு அழைக்கின்றனர்.

    //இந்த மாதிரியான சொற்களைச் சொல்லோடு ஒட்டாத முன்னுயிர் இல்லாமலே எழுதலாம். அதுவே முதலில் சொன்ன தமிழின் சிறப்பைப் பாதுகாக்கும். தமிழின் சொற்களின் இயல்பு மாறும்போது அதை எழுதும் முறையும் மாற வேண்டுமல்லவா?//

    என்னும் உங்கள் கூற்று உண்மையின் அடிப்படையில் தவறு ஐயா! ஏன் தான் நீங்கள் “தற்கால மொழியியல்” என்னும் பெயரில் தமிழின் அறிவார்ந்த சீர்மைகளை இப்படிக் குலைக்கின்றீர்களோ?!! மெள்ள “லட்டு” என்று ஒரு 5-10 முறை சொல்லிப்பாருங்கள். ஒலிப்பதிவும் செய்து பாருங்கள் முன்னே சிறிய உயிரொலி உள்ளதா இல்லையா என்று நேர்படக் கூறுங்கள்! முன்பொரு முறை “ஸ்டாலினைப்” பாராட்டும் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் இந்து நாளிதழின் ஆசிரியர் (அன்றைய) இராம் அவர்கள் பேசிய பேச்சிலும் இ*ஸ்டாலின் என்று இ வருவதைச் சுட்டிக்காட்டினேன் (நிகழ்படம் மீண்டும் கிடைத்தால் பகிர்கின்றேன்). ஏன் தமிழ் மக்களிடம் ஸ்டேஷன், ஸ்டாலின், லட்டு, ராமன் என்னும் சொற்களை சொல்லச்சொல்லி பதிவு செய்து, அறிவியல் ஒழுக்க நேர்மையுடன் அலசிப் பாருங்கள். இதனை முறைப்படி பலதரப்பட்ட தமிழர்களிடம் சொல்லி நடத்தப்பட வேண்டும். எந்த அளவுக்குக் கூடுதலாகவோ குறைவாகவோ அந்த உயிரொலி உள்ளது என்பதை அறியலாம். அந்த உயிரொலி இல்லவே இல்லை என்று நிறுவிக்காட்டுங்கள் பார்க்கலாம்!!

  2. திரு.விசயராகவனின் கேள்வியும் முனைவர் அண்ணாமலையின் பதிலும்
    திட்டமிட்ட ஒன்றாகவேத் தெரிகிறது. முறையான ஒலியியல் ஆய்வும் ஆதாரமும்
    இல்லாமல் தமிழ் மொழியின் அடிக்கட்டைப் பற்றிய தீர்ப்பெழுதுவது தமிழ்நாட்டில் மட்டும்தான் காணமுடிந்த ஒன்று.  தமிழ் மொழியின் அடிக்கட்டைத் குறி வைத்தே எழுதப்படுகின்ற பரப்பப் படுகின்ற கருத்துகளுக்குத் தொடர்ந்து வல்லமை இதழ் களமமைத்துக் கொடுப்பது வருந்தத் தக்கதாகும். 

  3. திரு.விசயராகவன் போன்றவர்கள் தமிழ்நடையைக் குலைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு கேள்விகளை எழுப்புவதும், அதற்குப் பேராசிரியர் மறுமொழி தருவதும் வேடிக்கையாக இருக்கிறது.

    இங்கு இந்த முன்னீடு எழுதும் போது மேலே படிவத்தைப் பார்க்கிறேன். மின்னஞ்சல் என்ற சொல் புழக்கத்திற்கு வந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் இங்கு ஈ-மெயில் என்றுதான் குறிக்கப் படுகிறது. இதன்படி, இளையோருக்கு என்ன ஒரு வழி காட்டுதல் தரப்படுகிறது? வலைத்தளம் என்பதற்கு மாறாய் வலைதளம் என்றிருக்கிறது. புணர்ச்சியைக் காணோம். இப்படித் தப்பும், தவறுமாய் எடுத்துக் காட்டுக்கள் இருக்குமிடம் என்ன சொல்லிக் கொடுக்கும்? “ர,ற என்று இரண்டு வேண்டாம்; ஒன்றே போதும். ல.ழ.ள என்று மூன்று வேண்டாம், ஒன்றே போதும் என்று வலையெங்கும் புகல்பவர் விசயராகவன். அவர் இதுவரை வலையிற் கொடுத்திருக்கும் பரிந்துரைகளைப் பின்பற்றினால் தமிழை ஒரு வழி பண்ணிக் குலைத்துப் புதைத்துவிடலாம். அது தான் அவருக்கு எண்ணமோ, என்னவோ? ஆங்கிலத்தில் இப்படியெல்லாம் அவர் பரிந்துரைத்துப் பார்க்கவில்லை. வாலைச் சுருட்டிக் கொண்டு அங்கு எழுதுவார் போலும். தமிழை ஒழுங்காகப் படித்து நடைபழகுவதற்கு முயலாது ……. “ஆடத் தெரியாதவள் தெருக்கோணல்” என்று சொன்னாளாம்.
    சரி, விசயராகவன் ஒருபக்கம் இருக்கட்டும். ஒரு மொழியியற் பேராசிரியர் இப்படித் தவறான நடைமுறைகளுக்குச் சப்பைக்கட்டுச் சொல்வது எப்படி? போகக் கூடாத இடத்திற்குப் போகும் வழி சொல்வதாகுமே? தவறுகளை நேரே கண்டு திருத்தாமல், புழங்குவோர் தவறுகளுக்கு நீக்குப் போக்கு சொல்லப் போனால், அப்புறம் வேலியே பயிரை மேய்ந்த கதையாகி விடுமே?

    அன்புடன், இராம.கி.

  4. வணக்கம். நேரமின்மை காரணமாக இப்போதைக்கு இரண்டே இரண்டு கருத்துக்களை முன்வைக்கிறேன். பிறகு நேரம் கிடைக்கும்போது மீண்டும் பங்குகொள்கிறேன். 

    1. துணை உயிரொலி பற்றி. அதாவது … ர, ல போன்ற ஒலிகள் சொல் முதலில் பயிலும்போது என்ன நடக்கின்றது என்பது பற்றி. 
    இதை ஒலிப்பதிவு (spectrogram) ஆராய்ச்சி மூலம் கண்டு உறுதி செய்யவேண்டும். என் ஒலியியல் பேராசிரியர் லீ லிஸ்கர் (Leigh Lisker) போன்றவர்கள் “சும்மா ஒலித்துப் பார்த்தேன்; அப்படித்தான் தோன்றுகிறது” என்ற கூற்றுகளை ஒப்புக்கொண்டதில்லை. 

    2. துணை உயிர்மெய்யொலி பற்றியும் நினைத்துப் பார்க்க வேண்டாமா? தமிழ் உயிரொலிகள் ஆகிய ‘இ’ ‘உ’ ‘எ’ ‘ஒ’ (+ அவற்றின் நீட்டொலிகள்) தொடங்கும் சொற்களை ஒலிக்கும்போது அங்கே நுணுக்கமாக முதலில் நுழைவது ‘ய’ ‘வ (w)’ என்ற உயிர்மெய்யொலிகள்! பொய்யில்லை! நான் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் நுழைந்து தமிழ் கற்பிக்கத் தொடங்கியபோது என் மாணவர்கள் இதைக் குறிப்பிட்டார்கள். நான் ஆங்கிலச் சொற்கள் ஆகிய every, vowel, போன்றவற்றை ஒலித்ததைக் கேலி செய்தார்கள். ‘yevery’ என்றும் ‘wovel’ என்றும் தவறாக ஒலித்ததைக் குறிப்பிட்டார்கள். பிறகு திருத்திக்கொண்டேன். 
    இந்தத் துணை உயிர்மெய்யெழுத்திற்காக ‘எப்படி’ என்ற சொல்லை ‘யெப்படி’ என்றும், ‘இவன்’ என்ற சொல்லை ‘யிவன்’ என்றும் எழுதுகிறோமா? இல்லையே. 

  5. இராம்.கி.எழுதுகிறார் ““ர,ற என்று இரண்டு வேண்டாம்; ஒன்றே போதும். ல.ழ.ள என்று மூன்று வேண்டாம், ஒன்றே போதும் என்று வலையெங்கும் புகல்பவர் விசயராகவன்.” விசயராகவன் என்பது யாரென்பது தெரியாது; ஆனால் விஜயராகவன் என்பதை தவறாக எழுதிவிட்டார் எனும் பக்ஷத்தில் , இதற்கு மறுப்பு அளிக்க வேண்டியுள்ளது. நான் இப்படி புகன்றதாக ஏன் கற்பனை செய்து கொள்கிறார் என புரியவில்லை. ர, ற இரண்டு எழுத்தும் தற்கால தமிழில் ஒன்றாகி விட்டன, அதனால் காலப்போக்கில் இவ்விரண்டில் ஒன்று தேவையில்லை. ல, ழ, ள மூன்றும் வேண்டும், ஏனெனில் அவை தற்கால தமிழ் பேச்சில் தனியானவை. இவற்றில் ஒன்றே போதும் என ஒரு பொழுதும் நான் எழுதவில்லை. அதே சமயம் பெரும்பான்மை தமிழர்கள் பேச்சில் ழ வருவதில்லை, ள வாகி விடுகிறது. அதனால் தமிழ் , தமிள் என எதிர்காலத்தில் மொழி பிரியலாம். இங்குள்ள கேள்வியையும் பே.அண்ணாமலையின் பதிலையும் ஒதுக்கித் தள்ளி, வேண்டாத விஷயங்களில் கவனத்தை திருப்ப வேண்டாம் என ராம.கி.யையும் மற்றவர்களையும் கேட்டுக் கொள்கிறென். ஒரு விவாத கட்டுப்பாடை பின்பற்றுவோம் வன்பாக்கம் விஜயராகவன்.

  6. செல்வக்குமார், இளங்கோவன், ராம.கி. ஆகியோர் பே.அண்ணாமலை ஏதோ பேசக்கூடத்தை பேசிவிட்டார் , அவர் செய்தது தவறு என எழுதுவது வியப்பாக உள்ளது. அண்ணாமலை அவர்கள் 40 ஆண்டு காலம் தமிழில், மொழியியலில் ஆராய்ச்சி செய்து , பல மாணவர்களுக்கு ஆசானாகி, பல தமிழ் ஆய்வுக் கட்டுரைகளையும், புஸ்தகங்களையும் வெளியிட்டவர். அதாவது தமிழ் மொழியியலில் தன் வாழ்வை செலவழித்தவர். செல்வக்குமார், இளங்கோவன், ராம.கி ஆகியோர் பிழைப்புத் தொழில், ஃப்ரொஃபெஷனல் வேலை தமிழ் ஆராய்ச்சியோ, மொழியியலோ இல்லை. 40 வருஷம் தமிழ் மொழியியல் செய்தவர் சொல்வதை அடக்கத்துடன் கேட்க வேண்டாமா . எல்லாம் தன்க்குத் தெரியும் என்ற மனப்பான்மை அறிவு வளர்ச்சிக்கு உகந்ததல்ல. Some humility and openmindedness is needed in talking to subject experts , who take the trouble to explain things and answer our questions. வன்பாக்கம் விஜயராகவன்

  7. //எல்லாம் தன்க்குத் தெரியும் என்ற மனப்பான்மை அறிவு வளர்ச்சிக்கு உகந்ததல்ல.//

    விசயராகவனுக்கே  அவரின் மேற்கண்ட வாசகம் மிகப் பொருத்தம். 

    // ர, ற இரண்டு எழுத்தும் தற்கால தமிழில் ஒன்றாகி விட்டன, அதனால் காலப்போக்கில் இவ்விரண்டில் ஒன்று தேவையில்லை.//

    தற்காலத் தமிழில் ர,ற எப்படி ஒன்றாகியிருக்கின்றன?  விசயராகவனின் உளக்கிடக்கை அப்படியெனின் ஊரில் உள்ள எல்லோரும் ர,ற வை விட்டு ஓடிவிடுவார்களா? விசயராகவன் போன்ற ஒருசிலர் உச்சரிப்பையும் குலைத்து, பேச்சையும் குலைத்தும் எழுத்தையும் குலைப்பதால் அதுவே தமிழின் இலக்கணமாகிவிட முடியுமா?  “காலப்போக்கில் இவ்விரண்டில் ஒன்று தேவையில்லை” என்று சொல்ல விசயராகவன் யார்? பிழைப்புத் தொழில் பார்த்து, பகுதி நேரத் தமிழ்க்குலைப்பில் ஈடுபடுபவர்களின் தமிழ்க்கேடுகளுக்கு முனைவர் அண்ணாமலை போன்றவர்களின் புலமை இடந்தரக்கூடாது என்பதும், மாறாக, தமிழின் அடிக்கட்டைச் சிதறடிக்க முனைந்திருக்கும் விசயராகவப் படையினரையும் திருத்துமாறூ அவரின் புலமை பயன்தரவேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பே தவிர வேறில்லை. B-P. D-T போன்ற ஆங்கில எழுத்துகள் இரண்டு வேண்டாம் ஒன்றே போதும் என்று எப்படிச் சொல்லமுடியாதோ அப்படித்தான் ர, றவும். 

  8. வன்பாக்கம் விசயராகவன், நல்லத்தான் சொன்னீர்கள் போங்கோ! அடக்கம் பற்றி நீங்கள் அல்லவா பேச வேண்டும்!! 🙂 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்படீன்னும் யாரோ ஒருவர் தெரியாமல் எழுதிவிட்டார், அதனையெல்லாம் நீங்கள் ஓரங்கட்டச் சொல்பவர் ஆயிற்றே ஆகவே உங்களுக்கு இதெல்லாம் பொருட்டன்று. எங்களுக்கு அது முகனை (முக்கியம்). பேரா. அண்ணாமலை அவர்களை filosofi என்று ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையில் எழுதச்சொல்லுங்களேன் பார்க்கலாம்! ஏன் நீங்கள்தான் எழுதுங்களேன்! எந்தவித ஒழுக்கமும் இல்லாமல் தமிழில் எழுதலாம் என்றும் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பதும் உங்கள் கொள்கையாக இருக்கலாம், அல்லது இல்லாமலும் இருக்கலாம். தமிழில் எழுதும்பொழுது தமிழ் முறையை, இலக்கண விதிகளைக் கூடியவரை பின்பற்றி எழுத வேண்டும் என்பதும், மொழி என்பது ஒரு பொதுக்கருவி என்பதால் அதனைக் கூடியமட்டிலும் எல்லோரும் ஓர் ஒழுக்கத்துடன் பயன்படுத்துவது வேண்டும் என்பதும் கருத்து. பேராசிரியர் அண்ணாமலை அவர்களை மதிப்பிற்குரிய பேராசிரியரே என்றுதான் விளித்துள்ளேன். அவர் மொழிவு தவறு என்னும் என் கருத்தை நேர்பட உரைத்தேன். தக்க காரணங்களையும் எடுத்துரைத்தேன்.ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு இயல்பு இருக்கும். சில மொழிகளில் சில மெய்யொலிக்கூட்டங்கள் கூடாது (தமிழில் விதியாகவே உள்ளன, பிறமொழிகளில் விதியில்லாமலே விலக்காக உள்ளன). எசுப்பானியம் (español) போன்ற மொழிகளில் பன்னூற்றுக்கணக்கான சொற்களில், சில மெய்யெழுத்துக்கூட்டம் முன்னே வரும் சொற்களில், உயிரெழுத்து முன்னே வரும்.
    எடுத்துக்காட்டாக:
    estrôncio என்பது ஆங்கிலத்தில் strontium என்னும் தனிமம்
    escultor என்பது ஆங்கிலத்தில் sculptor
    eslogan என்பது ஆங்கிலத்தில் slogan
    esmelter என்பது ஆங்கிலத்தில் smelter
    escala என்பது ஆங்கிலத்தில் scale
    escriba என்பது ஆங்கிலத்தில் scribe
    இப்படி ஏறத்தாழ ஆயிரம் சொற்களுக்கும் மேலுள்ளன.
    escuela என்றால் school . மொழியின் இயல்புக்காகக் கூறுகின்றேன்.
    ஏன் இதெல்லாம் அறியாதவரா பேரா. அண்ணாமலை அவர்கள்?
    ஏன் இந்தி மொழியில் spade என்பதை (சீட்டாட்டத்தில்) इस्पात என்று முன்னே இகரம் இட்டு எழுதுகின்றார்கள்? (எசுப்பானியர் espada என்கிறார்கள்).
    இந்தி மொழியர்களால் स्पात என்றும் கடைசி எழுத்தை டகர மெய்யாகக் கூட எழுத இயலுமே! மொழியின் இயல்புக்காகக் கூறுகின்றேன். இம்மறுமொழியை இங்கு கூறும் கருத்துகளை நேர்மையுடன் அணுகத் தெரிந்தவர்களுக்காக. எழுதுகின்றேன் (யாரொருவருக்காகவும் அன்று). தமிழின் இடைவிடாத சீர்குலைவுகளைக் கண்டும் மேலும் மேலும் வலிந்தேற்றும் சீர்குலைவுகளைக் கண்டும் வாளா இருத்தலைவிடக் கொடுமையானது அவற்றுக்குத் துணைபோவது! மொழிகள் மாறும் விதிகள் மாறும், என்பதெல்லாம் எங்களுக்கும் தெரியும். கொடுமைகள் நடக்கும் பொழுது சும்மா இருப்பது குற்றம்!!

  9. பேரா.அண்ணாமலைக்கு இன்னொரு கேள்வி, இதை தனியாக எடுத்துக் கொள்ளலாம்.

    தமிழில் சந்தி விதிகள் ஒரு சில அறிஞர்களை விட்டு யாரும் பின்பற்றுவதாகவும், தெரிந்து பேசுவதாகவும், உறுதியான கொள்கை கொண்டிருப்பவர்களாகவும் தெரியவில்லை. புணர்ச்சிகளில் வல்லினம் மிகுமா மிகாதா என்பது என் கணிப்பில் 99.99% எழுதும் தமிழர்களுக்கு தெரியாது. இந்த அளவு obscure நியதிகளை பேசுவது நியாயமா, அதில் கவனம் செலுத்தாமல் இருப்பதுதான் சரி என்று தோன்றுகிறது. இதைப்பற்றி பேராசிரியர் என்ன நினைக்கிறார்.? முன் நன்றியுடன் வன்பாக்கம் விஜயராகவன்

  10. // ர, ற இரண்டு எழுத்தும் தற்கால தமிழில் ஒன்றாகி விட்டன, அதனால் காலப்போக்கில் இவ்விரண்டில் ஒன்று தேவையில்லை.//

    ர. ல, என்னும் எழுத்துகள் மொழிமுதல் என்பதும் ர,ற இரண்டும் ஒன்றாகி விட்டன என்பதும் ‘பேதைமை’யாகும்.

    மரத்தை மறம் என்றும் பறவையைப் பரவை என்றும் கூறலாமா?

    தமிழ் எழுத்துகளின் வைப்புமுறையை அறியாமலும் புணர்ச்சி விதிகளை அறியாமலும் பிதற்றுகின்றவர்கள் கொட்டுகின்ற குப்பைகளை மேலை நாட்டில் வைத்துக்கொள்ளட்டும். தமிழ்மொழிக்குள் வேண்டாம்.

    // தமிழில் சந்தி விதிகள் ஒரு சில அறிஞர்களை விட்டு யாரும் பின்பற்றுவதாகவும், தெரிந்து பேசுவதாகவும், உறுதியான கொள்கை கொண்டிருப்பவர்களாகவும் தெரியவில்லை. புணர்ச்சிகளில் வல்லினம் மிகுமா மிகாதா என்பது என் கணிப்பில் 99.99% எழுதும் தமிழர்களுக்கு தெரியாது.////

    தமிழிலக்கணம் பயிலாதவர்களுக்குப் புணர்ச்சி விதி தெரியாமலிருக்கலாம்! அதற்காகப் புணர்ச்சி விதியே கூடாது என்று கூறமுடியுமா?

    தமிழ்ச் சொல்லிசையை நுகர வேண்டுமானால் புணர்ச்சியுடன் கூடிய வரிகளைப் படிக்க வேண்டும். செய்யுளின் வண்ணங்களைக் காண வேண்டுமானால் சொற்புணர்ச்சி வேண்டும்.

    பாடிகளெல்லாம் தமிழைப் பாட வேண்டுமால் தமிழ் மொழி மரபுச் சிதையாமல் எழுதினால் மட்டுமே இயலும் என்பதை அறியாதார் கருத்தை ஒதுக்குதல் நலம்.

  11. செல்வா கூற்று “பேராசிரியர் அண்ணாமலை அவர்களை மதிப்பிற்குரிய பேராசிரியரே என்றுதான் விளித்துள்ளேன்”

    ஆனால் கேள்வி கேட்டல், பேரா.அண்ணாமலை பதில்கள், எதோ தமிழை பாழ்படுத்தி விட்டன என்றால்லவா நீங்கள் கூருகிறீர்கள். அதுமட்டும் அல்ல, `அழுவாச்சி நாடக மன்றம்` என பொருள் உள்ள தமிழ்மன்றத்தில் தனிமடல் அனுப்பி , இங்கு பல பேர்களை என்னையும், பேரா.அண்ணாமலையையும், வல்லமை தளத்தையும் தாக்குவதற்க்கு அனுப்பவில்லையா?? உங்கள் தூண்டுதல் மேல்தானே ராம.கி, இளங்கோவன், இரவா, சுந்தர் ஆகியோர் மொழியியல் துறையை பழிப்பதற்க்கு் இங்கு பதில் அளித்து வருகின்றனர் ?? கேள்வி-பதில் முறையையே தாக்குகின்றனர்? இதெல்லாம் தமிழ் பற்றிய அறிவை ஒரு காலும் முன்னேற்றாது.
    .. வன்பாக்கம் விஜயராகவன். (பிகு : மற்றவர்கள் பெயரை அப்படியே எழுதுவதுதான் பண்பு)

  12. அரங்கின்றி வட்டாடுதல் போல், அறிஞர்கள் கூடுகின்ற அரங்கில் கூறியிருக்க வேண்டும்! அப்பொழுது தெரிந்திருக்கும். தமிழ் மரபை அறியாரும் இலவுகின்ற இணையத்தில், நச்சுக்கருத்துகளைப் பதிவு செய்துவிட்டு, நல்லறிஞர் என்று பட்டங்கட்டிக் கொள்ளவிழையாதீர்கள்.

    தொல்காப்பியம் என்பது உலக மொழிகளில் எந்த மொழிக்கும் கிடைக்காத மரபிலக்கண நூல். தொல்காப்பிய விதிகளைக் குறைத்து மதிப்பீடு செய்பவர் எவராக இருந்தாலும் அவர் மொழி நூலறிஞராகக் கருதவியலாது.

    சரி! தமிழ் எழுத்துகளிலும் இலக்கண மரபு விதிகளிலும் மாற்றம் செய்ய விரும்பும் நீங்கள் யார்? புதிய மரபை உருவாக்க முனையும் மொழியறிஞர்களா?

    வெட்டித்தனமாக விரும்பத்தகாததை எழுதுவதை விடுத்து வீட்டு வேலைகள் ஏதாவது இருந்தால் செய்யலாமே!

  13. //அழுவாச்சி நாடக மன்றம்` என பொருள் உள்ள தமிழ்மன்றத்தில் தனிமடல் அனுப்பி //

    வல்லமை மடற்குழுவில் இன்னொரு மடற்குழுவை நக்கலடிக்கும் வன்பாக்கங்களுக்கு அனுமதி உண்டா?  மின் தமிழ் என்ற மின்புற்றில் புழுத்த சில புழுக்கள் இணையம் முழுதும் சேற்றைப் பூசிவிடுவதைத் தொழிலாகக் கொண்டுள்ள நிலையை வல்லமையும் பேரா.அண்ணாமலையும் கண்டுகொள்ள வேண்டும், இங்கே மின் தமிழ் என்று எழுதியது பொதுவான இணையத்தமிழ்ப் பெயரே தவிர வேறெந்த மடற்குழுவையும் குறிப்பதல்ல. 

  14. // உங்கள் தூண்டுதல் மேல்தானே ராம.கி, இளங்கோவன், இரவா, சுந்தர் ஆகியோர் மொழியியல் துறையை பழிப்பதற்க்கு் இங்கு பதில் அளித்து வருகின்றனர் ?? கேள்வி-பதில் முறையையே தாக்குகின்றனர்? //

    வன்பாக்க அரசியல் என்றால் இதுதான். தமிழ் மொழியியலுக்கும், தமிழ் இலக்கண, இலக்கியலுக்கும் பெரிய ஆப்பைச் செருகுகின்ற நோக்கில் கட்சி கட்டி விடுகின்ற பணியை விசயராகவன் செய்கிறார். இதனை வல்லமை குழுவினர் புரிந்து கொள்ள வேண்டும். நானும் சரி, விசயராகவன் குறிப்பிட்டுள்ளவர்களும் சரி மொழியியற்துறையைப் பழிப்பவர்கள் அல்ல. மாறாக, கணிவழியே மொழியியல் ஆய்வுத்தளங்கள் நிறுவுகின்ற பணியைச் சிரமேற்கொண்டு செய்துவருபவர்களும், செய்துவருபவர்களோடு தோளோடு தோள் நிற்பவர்களும் ஆவர்.

    தமிழின் அடிக்கட்டு என்பது அதன் நெடுங்கணக்கில் தொடங்கி, இலக்கணத்தில் வலுப்பெறுகிறது. இந்த அடிக்கட்டுகளின் கூறுகளாக எழுத்து வடிவம் முதற்கொண்டு பன்னூறு கூறுகள் உள்ளன. இந்த அடிக்கட்டில் உள்ள எழுத்தை மாற்ற வேண்டும், இந்த எழுத்தே வேண்டாம் என்று உதறவேண்டும், இலக்கண விதியையே மாற்ற வேண்டும் என்ற நோக்கில் எங்கு, யாரின் கருத்துகள் வந்தாலும் அது தமிழழிவிற்குத்தான் இட்டுச் செல்லும். 

    இருக்கின்ற அடிக்கட்டைத் தகர்க்காமல், மேம்படுத்தி, உலகத்திற்கு முகப்பாக தமிழறிவுத்தளம் இருக்க வேண்டுமேயல்லாமல், “அங்கே இல்லை இங்கேயும் வேண்டாம்”, “என் வீட்டில் ர, ற வையும் ஒன்றாகப் பேசுகிறோம் – அதனால தொல்காப்பியத்தை மாற்றித் தீர்ப்புச் சொல்லவேண்டும் , நெடுங்கணக்கையும் மாற்றி விடவேண்டும்” என்பதெல்லாம் போகாத ஊருக்கு வழிகாட்டுவதாகும்.

    இதனை மொழியியல் அடிப்படையில் சொன்னாலும் சரி, மரபிலக்கண இலக்கிய வழி சொன்னாலும் சரி, இந்திய தேசிய அடிப்படையில் தமிழைக் கவிழ்த்தாலும் சரி – அவற்றை மறுப்பது எனது, எமது பணி.  இதில் பேரா.அண்ணாமலையோ, அல்லது வேறு பெயர்களோ எனக்கு முக்கியமல்ல. வெளிவரும் கருத்துகளும், அந்தக் கருத்து பிறக்கும் மூலமும், அந்தக் கருத்துகளுக்குக் கிடைக்கும் களமும்தான் எனது குறியே தவிர, எந்தத் தனிப்பட்டவர்களின் பெயர் காரணமல்ல.

    ஆதலால் விசயராகவனின் அலட்டல் ஒரு பொருட்டன்று. இவரை விட வன்மையான எண்ணம் கொண்ட பலரின் அரசியலை இணையத்தில் பார்த்தாயிற்று.

    செல்வா தூண்டுதலின் பேரால் ஏதோ வல்லமையைத் தாக்க வந்துவிட்டார்கள் என்று சிண்டுமுடியும் வேலையெல்லாம் வேண்டாம். இந்தச் சிற்றரசியலை எல்லாம் இணையத்தில் எத்தனையோ பார்த்தாயிற்று.  

    என்னைப் பொறுத்தவரை, வல்லமையின் துவக்க காலம் முதற்கொண்டு,
    அண்ணாமலையாரின் பதில்களைப் பார்க்கையில் அவரின் எழுத்துகள்,
    தமிழின் அடிக்கட்டை நெருடுவதாக அமைந்திருக்கிறது, இது குறித்து ஆண்டுகள் முன்னரே நான் வல்லமை தளத்தில் மறுமொழியிட்டிருக்கிறேன். தொடர்ந்து அதேமாதிரியான பதில்கள் வருவதால் வல்லமை என்ற ஒரு நல்ல களத்தின் மேல் ஐயமும் அலுப்பும் வருகிறதேயல்லாமல், வேறில்லை. 

    மாலைமாற்று எழுதும் தமிழாற்றல் படைத்த, சிறந்த தமிழ்ப் பற்றுடைய நண்பர் அண்ணா கண்ணனின் எதார்த்தமான பார்வைகள், களத்தின் மேல் கறை சேர்த்து விடுமோ என்ற ஐயம் பலருக்கு உண்டு. இதன் உட்கருத்தை நண்பர் அண்ணா கண்னனும் புரிந்து கொள்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

  15. வன்பாக்கம் விசயராகவன்,

    தொல்காப்பிய நல்லறிஞர் கவிஞர் செ. சீனி நைனா முகம்மது அவர்கள் தெளிவாக எடுத்துக் காட்டியபடி பேராசிரியர் அண்ணாமலையின் கூற்று தவறு (ஓர்-ஒரு என்னும் இழையில், மரபிலக்கணத்தில் இல்லை என்று கூறிய கூற்று).
    தமிழ் மன்றம் கூகுள் குழுமத்தில் இன்னும் சில நல்ல கருத்துகளும் இது பற்றிப்
    பதிவாகி உள்ளன.

    இலண்டண், இராமன், இராவணன் என்று எழுதுவது தமிழ் மரபு. தமிழ் மரபு மட்டும் அல்ல அது அறிவார்ந்த நுண்ணறிவால் வகுத்த முறை. எசுப்பானியம், போர்த்துகீசியம் போன்ற பிற மொழிகளிலும் வெவ்வேறு வகையான சூழல்களில் முன்னே துணை உயிரொலி இட்டு எழுதும் மரபு நெடுக உள்ளது. மெய்யெழுத்துக்கூட்டங்கள் மொழிக்கு மொழி மாறுபடும். பற்பல எடுத்துக்காட்டுகளும் தந்துள்ளேன். கூறப்பட்ட கருத்துகளில் மறுப்பு இருந்தால் கூறுங்கள். என் கருத்து தவறு எனில் என்னைத் திருத்திக் கொள்ள எந்தத் தயக்கமும் இல்லை. வெட்டியாகப் பேச்சை வளர்க்க வேண்டாம்!

    தமிழின் சீரழிப்பை, திட்டமிட்டும் அறியாமையாலும் செய்யும்
    சீர்குலைப்புகளைக் கட்டாயம் இன்னும் பெருவாரியான மக்கள்
    வந்து மறுத்துரைக்கவேண்டும். ஊடகங்கள் செய்யும் கொடுமைகளை
    முகநூல் போன்ற பல இடங்களில் கடுமையாக சாடுவோர்
    பல்லாயிரக்கணக்கானோர்….வல்லமை இயலும் அளவில்
    நன் முறைகளைப் போற்றி வளரவேண்டும் என்பதே குறிக்கோள்..

    உங்கள் பி.கு பற்றி: பிறர் பெயரை நீங்கள் எப்படிச் ‘சரியாக” எழுதியுள்ளீர்கள் என்று பாருங்கள்: http://www.jeyamohan.in/?p=3547 மேலும் பல இடங்களிலும் காணலாம். நீங்கள் உங்கள் பெயரை K.M. ஸுभाशिனியன் என்று எழுதினால் “தமிழில்” அப்படியே எழுத வேண்டும் என்று எந்த விதியும் இல்லை, அது முறையும் ஆகாது. கே.எம். சுபாசினியன் என்று வேண்டுமானால் எழுதலாம், அப்படித் தமிழில் எழுத எந்தத் தடையும் இல்லை. உங்கள் பெயரை விச’யராகவன் என்று எந்தச் சிக்கலும் இல்லாமல் சற்று கூடிய “துல்லியத்துடன்” என்னால் எழுதிக் காட்டவும் முடியும், புறமொழியின் ஒலிப்பு சிறிதளவு தெரியுமாறு பா’ரதி, கா’ந்தி என்றும் என்னால் எழுத வியலும். ஆனால் தமிழில் ஒழுக்கத்துடன் எழுதும்பொழுது அவை பாரதி (paaradhi), காந்தி (kaandhi) என்றுதான் தான் இருக்கும். எழுதும் மொழியையும் அதன் விதிகளையும் முதலில் நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள். இது எல்லாமொழிகளுக்கும் பொருந்தும்.

    ஆங்கிலத்தில் மணி, கண்ணன், ஞானசம்பந்தன், அழகப்பன் என்னும் பெயர்களை எழுதினால் எப்படிப் படிப்பார்கள்? மேனி, கேனன், க்’னேனசேம்பேன்டன், ஏலகே’ப்பன் என்பது போல ஏதோ ஒருவகையாக அல்லவா ஒலிப்பார்கள். உங்கள் பெயர் இடாய்ச்சு (செருமன்) மொழியில் வியயராகவன், எசுப்பானியத்தில் வி(பி)ஃகயராகவன். தமிழ் மொழியின் பெயரைக் கூட ஆங்கிலத்தில் டேஅமில் என்கிறார்கள். இயேசுநாதர் பெயரை எசுப்பானியத்தில் ஃகெசூசு (Hesoos) என்பது போல ஒலிப்பார்கள். இதெல்லாம் மொழிக்கு மொழி மாற்றியெழுதும் பொழுது ஏற்படும் தவிர்க்கவியலாத திரிபுகள். உரோமன் எழுத்தில் எழுதும் என் பெயரை, “Selvakumar” என்பதை, எல்லா ஒலியன்களும் ஆங்கிலத்தில் இருந்தபொழுதும் யாரும் சரியாக ஒலிப்பதில்லை. தூத்துக்குடி, திருவனந்தபுரத்தை (எல்லா ஒலியன்களும் ஆங்கிலத்தில் இருந்தும்)ஆங்கிலேயர் வேறு விதமாகவே ஒலிப்பர். இவற்றையெல்லாம் எத்தனையோ முறை உங்களுக்குச் சொல்லியும் உங்களுக்கு விளங்கவில்லை, அதற்கு நான் என்ன செய்ய இயலும். உங்கள் ‘அழுவாச்சி நாடகத்தைத்’ தொடர்ந்து செய்வதால் பயன் ஏதும் இல்லை.

  16. இராம.கி. ஐயா குறிப்பிட்டபடி, மறுமொழிப் பெட்டியில் இருந்த ஒற்றுப் பிழையையும் மொழிபெயர்ப்பையும் திருத்தியுள்ளோம். 

    முன்னரே குறிப்பிட்டபடி, வல்லமையில் கருத்துச் சுதந்திரத்தைக் காத்திடவே விரும்புகிறோம். எனவே, பொதுவான சட்ட / நெறிமுறைகளுக்கு உகந்த கருத்துகளை எவரும் இங்கே பகிர்ந்துகொள்ளத் தடையில்லை. கருத்துரைப்போர், தனி நபர்களையோ, இதர குழுமங்களையோ தாக்காமல், கருத்தில் மட்டும் கவனம் செலுத்துமாறு வேண்டுகிறோம்.

    வல்லமையில் வெளியாகும் ஆக்கங்கள் அனைத்தும் அவற்றை இயற்றியோரின் கருத்தே. வல்லமையின் கருத்து எனக் கொள்ள வேண்டாம். 

    மொழியியல் களத்தில் பணியாற்றி வரும் அறிஞர்களும் ஆர்வலர்களும் இங்கே தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதைப் பெரிதும் வரவேற்கிறோம். இதற்கு வித்திட்ட முனைவர் செல்வா அவர்களுக்கும் தமிழ் மன்றம் குழுவினருக்கும் நன்றிகள். 

    இந்த விவாதத்தின் தொடர்ச்சியாக, தமிழ் ஒலியியல் நுண்ணாய்வு நிகழுமாயின், அதனை வல்லமை பெரிதும் வரவேற்பதோடு, அந்த ஆய்வு முடிவுகளை வெளியிடவும் காத்திருக்கிறது.

  17. திரு.வன்பாக்கம் விசயராகவன், பொதுவரங்கினில் அரசியல் வட்டாடினால், எதிராளியும் அரசியல் தான் ஆடுவர். அப்புறம் அரசியற் பாதாளத்திற்குத் தயங்கக் கூடாது. பல்வேறு மடலாடற் குழுக்களிற் பார்த்திருக்கிறேன். நீங்கள் தமிழாய்வு தொடர்பாக எந்தப் பங்களிப்புஞ் செய்து நான் பார்த்ததில்லை. எல்லாவிடத்தும் அரசியற் சேறைத்தான் வாரியிறைத்திருக்கிறீர்கள். இப்பொழுது தமிழறிஞர்களை உங்கள் பக்கம் திருப்ப முயல்கிறீர்கள் போலும். பின் அரசியற் பின்னூட்டுக்களைத் தானே நாங்கள் தரமுடியும்? இனி நான் வேலைமெனக்கெட்டுக் கூகுள் போட்டு ”நீங்கள் எந்த வலைத்தளத்தில் எந்தக் குழுவில் ஒரு ரகரம் போதும், ஒரு லகரம் போதும் என்று சொன்னீர்கள்?” என்று தேடிக் கண்டுபிடித்துச் சொல்லவேண்டுமா? எனக்கு அது மட்டும் தான் வேலையா? உங்களின் தகுதிதான் வலையெங்கும் பரந்து கிடக்கிறதே? நீங்களே மார்தட்டி இந்த இடத்திற் சொன்னேன் என்று சொல்லலாமே? மொத்தத்தில் ஏதோவொரு தனி மாந்த நிகழ்ப்பு உங்களுக்கு இருக்கிறது. சுற்றிச் சுற்றி வந்து தமிழை அழித்துப் போட முயல்கிறீர்கள். உங்களுக்கும் பொழுது போகவேண்டும் அல்லவா? இதில் எத்தனை தமிழறிஞர்கள் உங்கள் பக்கம் வந்து சேருகிறார்கள் என்று பார்ப்போம்.
    துடுப்பாட்டம் ஆடுவது என்றால் அதற்கு ஒரு சில விதிகள் உண்டு. அதில் காற்பந்தாட்ட விதிகளை யாரும் கொண்டுவந்து மொங்குவதில்லை. சதிராட்டம் என்றால் அதற்குச் சில விதிகள் உண்டு. அதில் மேல்நாட்டு நடனக் கூறுகளை யாரும் கலந்தடிப்பதில்லை. அது போல அந்தந்த மொழிகள் பேசுவதற்கு அந்த நடைமுறைகள் இருக்கின்றன. தமிங்கிலம் போல ஒரு கலப்பு மொழியை உருவாக்க நினைப்போர்தான் இந்தக் கலந்தடிப்பு வேலையைச் செய்வார்கள். நீங்கள் தொண்டூழியம் செய்வது எந்த மொழிக்கு? தமிழுக்கா, தமிங்கிலத்திற்கா? சொல்லுங்களேன்.
    அன்புடன்,
    இராம.கி.

  18. நா.இளங்கோவன் கேட்கிறார் “வல்லமை மடற்குழுவில் இன்னொரு மடற்குழுவை நக்கலடிக்கும் வன்பாக்கங்களுக்கு அனுமதி உண்டா? .. “
    மற்ற விவாதக்காரர்கள் பெயரை வேண்டுமென்றே கொள்கையாக திரிப்பவர் , ஒரு மடற்குழுவை “நக்கலடிக்கூடாது” என்பது முரண்பாடு .

    வன்பாக்கம் விஜயராகவன்

  19. நா.இளங்கோவன் சொல்கிறார் “தமிழ் மொழியியலுக்கும், தமிழ் இலக்கண, இலக்கியலுக்கும் பெரிய ஆப்பைச் செருகுகின்ற நோக்கில் கட்சி கட்டி விடுகின்ற பணியை … “ வல்லமையில் கேள்வி-பதில் பகுதி ஏதோ தமிழுக்கு ஆப்பு வைத்து விட்டதாகவும், இளங்கோவன் அதைத்தடுக்க அவதாரம் செய்ததாகவும் காட்டுவது வேடிக்கையாக உள்ளது.. இதெல்லாம் இளங்கோவன் வார்த்தைகள் “ “ “திரு.விசயராகவனின் கேள்வியும் முனைவர் அண்ணாமலையின் பதிலும் திட்டமிட்ட ஒன்றாகவேத் தெரிகிறது……. வல்லமை இதழ் களமமைத்துக் கொடுப்பது வருந்தத் தக்கதாகும். ” இது பேரா.அண்ணாமலை, வல்லமை, நான் என்ற் மூன்று பேரின் மேல் தாக்குதல் அல்லாமல் வேறு என்ன ? ஏதோ “திட்டமிட்ட” கேள்வி-பதில் போல் எழுதுவது , சாதாரண விவாதங்களின் சகிப்பின்மையை காட்டுகிறது. ஒரு குழுவில் தனிமடலால் தூண்டப்பட்டு “படையோடு” வருபவர் , மற்றவர்களை “திட்டமிடுவது” என்ற குற்றச்சாட்டு முரண்நகை. இது ராம.கி.யின் வார்த்தை “”ஒரு மொழியியற் பேராசிரியர் இப்படித் தவறான நடைமுறைகளுக்குச் சப்பைக்கட்டுச் சொல்வது எப்படி? போகக் கூடாத இடத்திற்குப் போகும் வழி சொல்வதாகுமே? தவறுகளை நேரே கண்டு திருத்தாமல், புழங்குவோர் தவறுகளுக்கு நீக்குப் போக்கு சொல்லப் போனால், அப்புறம் வேலியே பயிரை மேய்ந்த கதையாகி விடுமே?” இது பேராசிரியரின் மீது தாக்குதல் அல்லாது வேறென்ன?. இனிமேல் , இணையத்தில் கேள்வி-பதில் பங்காளர்கள் ராம.கி அல்லது இளங்கோவனின் அனுமதி கேட்க வேண்டும் போல் அகங்காரம் மட்டுமே.

    ஆங்கிலத்திலேயே படித்து, ஆங்கிலத்தில் பிழைப்பு நடத்தி , தமிழுக்கு சம்பந்தம் இல்லாத துறைகளில் பிழைப்பு நடத்தியவர்கள் தமிழை காக்க வந்த அவதாரங்கள் போல் நடிப்பது , யாரையும் ஏமாத்தாது. வன்பாக்கம் விஜயராகவன்

  20. செல்வக்குமார் “என் கருத்து தவறு எனில் என்னைத் திருத்திக் கொள்ள எந்தத் தயக்கமும் இல்லை. வெட்டியாகப் பேச்சை வளர்க்க வேண்டாம்!” .. சரியாக சொன்னீர்கள் வெட்டிப்பேச்சை வளர்க்க வேண்டாம். உங்கள் “கருத்துகள்” என்னவாக இருந்தாலும் , அது எனக்கு பொருட்டு அல்ல. அதை நான் விமர்சனம் செய்யப்போவதில்லை. உங்கள் லெக்சர்களை வேறு யாருக்காவது சேமித்து வையுங்கள். சபை நாகரீகம் என்பது மற்றவர்களை அவர்கள் பெயரால் குறிப்பது, விளிப்பது. இது கருத்து விஷயமல்ல.. வன்பாக்கம் விஜயராகவன்

  21. ஒரு பொது பிரச்சினை: ஏன் பெட்டியில் தமிழை டைப் செய்தால் பத்திகள் பிரியமாட்டென் என்கிறது . இரு வாக்கியங்களுக்கிடையில் எவ்வளவு இடைவெளி விட்டாலும் பத்தி பிரியவில்லை. வகொவி

  22. யார் இந்த வன்பாக்கம் விஜயராகவன்?

    இவருக்குத் தாய் மொழியென ஒன்றிருக்குமல்லவா? அது எந்த மொழி? அந்த மொழியில் மாரடிக்க வேண்டியது தானே?

    தமிழ் மன்றத்தை, ”அழுவாச்சி நாடக மன்றம்` என்று பொருள் கூறக்கூடிய அளவிற்கு ஆணவம் கொண்ட இவரின் தாய் மொழி தமிழாக இருக்க முடியாது!

    தமிழுக்கும் தமிழ்த்தாய்க்கும் பிறந்தவனுக்குத்தான் தமிழின் அருமையும் பெருமையும் தெரியும்.

    எங்கோ எவருக்கோ பிறந்து எங்கள் மொழியைக் கற்றுப் பிழைக்கின்றவர்க்கு நன்றி உணர்வு இருக்க வேண்டும்! அந்த உணர்வு இருந்திருந்தால், நன்றியுணர்வுடைய நாய் என்றாவது கூறிக்கொள்ளலாம்!

    நன்றியில்லாதவர்களை நாயினும் கீழானவர் என்று தானே சொல்ல வேண்டும்? அப்படிப்பட்டவர்க்குத் தமிழைப் பற்றியும் தமிழ் மன்றத்தைப்பற்றிப் பேசவும் என்ன தகுதி இருக்கிறது?

    வன்பாக்கம் வம்பாக்கம் ஆகாமல் ஒழுங்காக வேண்டுமானால், முதலில் தன்னைப்பற்றியும் தனது தாய் மொழியைப் பற்றியும் தெளிவாகக் கூறிவிட்டு பிறகு பேசட்டும்.

    தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதவன் எவனாக இருந்தாலும் தமிழைப் பழித்தோ இழித்தோ பேச முனைந்தால் விபரீதமாகும்! என்று எச்சரிக்கிறேன்.

  23. // உங்கள் தூண்டுதல் மேல்தானே ராம.கி, இளங்கோவன், இரவா, சுந்தர் ஆகியோர் மொழியியல் துறையை பழிப்பதற்க்கு் இங்கு பதில் அளித்து வருகின்றனர் ??  //

    மொழியியல் துறையைக் கட்டிக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் விசயராகவன் கவனத்துக்கு. இங்கு யார் மொழியியலைப் பழித்தது? சிண்டு முடிவதற்கெல்லாம் அசருவதற்கு இங்கு யாரும் இல்லை. நான் தமிழ் தொடர்பான பணிகளில் ஈடுபடத் தொடங்கியதே கணிமொழியியலில் கணித்தலுக்கென முறைப்படுத்திய இலக்கணங்களினால் ஈர்க்கப்பட்டுதான். என் முதல் தமிழ்ப்பணியே வெண்பாவுக்கான இடம்சாரா இலக்கணம் (CFG) எழுதியதுதான். இங்கு கருத்தளவில் அறிவடிப்படையில் மறுப்பை வெளியிடுபவர்களையெல்லாம் மொழிக்காதலால் மொழியியலையும் மொழியியலாளரையும் பழிப்பவர்கள் போன்ற தோற்றத்தை உண்டாக்க முயல வேண்டாம்.

  24. ராம.கி . “”நீங்கள் எந்த வலைத்தளத்தில் எந்தக் குழுவில் ஒரு ரகரம் போதும், ஒரு லகரம் போதும் என்று சொன்னீர்கள்?” என்று தேடிக் கண்டுபிடித்துச் சொல்லவேண்டுமா? ” .. தாராளமாக செய்யுங்கள், இரண்டாவதை நான் எப்போதும் சொல்லவில்லை. 3/4 வருஷம் முன், கணேசன் நீங்கள் சொன்னதையே தமிழ்மன்றத்தில் சொன்னார், அதை மறுப்பதற்க்கே தம வில் சேர்ந்தேன், மறுத்தேன். விஜயராகவன்

  25. ராம.கி, இரவா, ஆகிய சிலர், பேரா. அண்ணாமலை சொல்வதை அவதானிக்காமல் , திசை திருப்பி என்னிடம் தேவையற்ற விஷயங்களை (உம்- ர,ல) வாதாடுவதால், இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். ஒரு விவாத கட்டுப்பாடை கடைப்பிடிப்பது அவசியம்.

    . வன்பாக்கம் விஜயராகவன்

  26. அன்புடையீர்,

    தனிமனிதத் தாக்குதலின்றி, கருத்துக்களை மட்டும் எதிர்த்தோ, மறுத்தோ உரையாடுதல் நலம். அருள்கூர்ந்து இந்த இழையில் இந்த அளவோடு இதை நிறுத்திக் கொள்வதே நல்லதென்று கருதுகிறோம். தங்கள் புரிதலுக்கு நன்றி நண்பர்களே. முக்கியமான மறுமொழிகள், தக்க நடையிலும் பாங்கிலும், தக்க கருத்துடன், இருந்தால் தடையின்றி வெளியாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து தங்களுடைய ஆக்கப்பூர்வமான கருத்துகளை வரவேற்கிறோம்.

    அன்புடன்
    பவள சங்கரி

  27. தற்காலத்தில் ர , ல சொற்களின் முதலில் வருவது சகஜமாகி விட்டது. ஆனால், சிலர் இன்னும் ரகர சொற்களின் முன் அ, இ போடுவதும், லகர சொற்களின் முன் இ போடுவதும் பழமையைத் தொற்றிக்- கொண்டிருப்பதாகவும், வேண்டாததாகவும் உள்ளது

    இந்தக் குழப்பத்திற்கு ஒரு எனது பேராசிரியர் அவர்கள் குறிப்பிட்ட ஒரு சிறு குறிப்பை இங்கு விட்டுச் செல்ல விரும்புகிறேன்.

    முதலில், தமிழ் சொற்கள் எதுவும் லகரத்திலோ அல்லது ரகரத்திலோ உருவாகுவதில்லை. அதே போலத் தான் மற்ற மெல்லினங்களிலும் வருவதில்லை. அப்படி ஒரு சொல் இருந்தால் அது தமிழ் சொல்லே அல்ல. பின் ஏன் வாதம்?

    ஆக, அப்படி ஒரு சொல்லை நாம் பேசுகிறோம், நமது பழக்கத்தில் இருக்கிறது என்றால் அது அயல் மொழில் சொல்லேயாகும். அயல் மொழிச் சொல்லைத் தமிழ் மொழிச் சொல்லாக்க முயலுவது அநாவசியமானது. பேராசிரியர் அவர்கள் குறிப்பிட்டதைப் போல, அந்த சொல்லை அப்படியே, (அ, இ சேர்க்காமல்) பேச வேண்டியது தான் எழுத வேண்டியது தான், ஏனென்றால் அது அயல்மொழிச் சொல். ராமன், லேசு, போன்றவை. சில கம்பீரம் என்பதை (Gambeeram) என்பார்கள், ஆனால் தமிழில் (ga) ஒலி கிடையாது (ka) ஒலி மட்டுமே உண்டு. இது போல இன்னும் பல சிறப்புகள் உண்டென்பதை அமெரிக்க மொழியியல் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply to வன்பாக்கம் விஜயராகவன்

Your email address will not be published. Required fields are marked *