கவிநயா

பெரும்பானை வயிற்றுக்குள் பேருலகை வைத்திருக்கும்
பெருமகனே போற்றி போற்றி!
வரு வினையைத் தடுக்கின்ற வந்த வினை தீர்க்கின்ற
வல்லபனே போற்றி போற்றி!
 
சிவனாரின் மகனாகிச் சேந்தனுடன் சேர்ந்துலகைக்
காப்பவனே போற்றி போற்றி!
சிந்தையிலே வைத்தவர்க்கு சிந்திக்கா தருள் புரியும்
செல்வனே போற்றி போற்றி!
 
சுழி போட்டுத் தொடங்கி விட்டால் தடையேதும் வாராமல்
செயல்முடிப்பாய் போற்றி போற்றி!
வழி கேட்டு உன்னடிகள் பணிந்து விட்டால் வழித்துணையாய்
வந்திடுவாய் போற்றி போற்றி!
 
மழுவேந்தி மாந்தர் தமைக் காக்கின்ற மூஞ்சூறு
வாகனனே போற்றி போற்றி!
பழுவெல்லாம் தந்து விட்டால் பரிந்தெம்மைக் காக்கின்ற
புண்ணியனே போற்றி போற்றி!
 
அகத்தியருக் கருள்செய்த அத்திமுக நாயகனே
ஆனைமுகா போற்றி போற்றி!
அருகம்புல் பூசையிலும் அகம்மகிழ்ந்து அருள்செய்யும்
எளியவனே போற்றி போற்றி!
 
வியாசருக் கருளிடவே ஒருதந்தம் உடைத்தவனே
உத்தமனே போற்றி போற்றி!
மாசற்ற மன்னவனே மஞ்சளிலும் இருப்பவனே
மூத்தவனே போற்றி போற்றி!
 
கந்தனுக் குதவிடவே களிறாக வந்தவனே
கற்பகமே போற்றி போற்றி!
சங்கரனின் புத்திரனே சங்கடங்கள் களைபவனே
சுந்தரனே போற்றி போற்றி!
 
நம்பிக்கு அருள் செய்த தும்பிக்கை நாதனே
ஐங்கரனே போற்றி போற்றி!
நம்பிக்கை வைத்துன்னைப் பணிகின்றோம் தூயவனே
திருவடிகள் போற்றி போற்றி!

 படத்துக்கு நன்றி

http://reshmi-on-art.blogspot.in/2009/01/quilling-design-lord-ganesha.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *