சு.கோதண்டராமன்

சுகமான கனவு. சட்டென்று கலைந்தது. ஊதுபத்தி அணைந்த பின்னும் அதன் மணம் அறையில் சூழ்ந்திருப்பதைப் போலக் கனவு கலைந்த பின்னும் அதன் ஆனந்தம் மனம் முழுவதும் நிறைந்திருந்தது. கண்களைத் திறக்காமலேயே சில நொடிகள் அதை அனுபவித்தேன். பகல் கனவின் சுவையே தனி தான்.

பிரக்ஞை வந்தது. நான் எங்கிருக்கிறேன்? உட்கார்ந்திருக்கிறேனே? அடேடே, தியான வகுப்பில் அல்லவா உட்கார்ந்திருக்கிறேன்? ஆண்களும் பெண்களுமாக 70 பேர் கொண்ட வகுப்பு. சே, என்ன அவமானம்! சுற்றிலும் 69 ஜோடிக் கண்கள் நான் கண் திறந்தவுடன் கொல்லென்று சிரிக்கத் தயாராகி என்னையே பார்த்துக் கொண்டிருப்பது போல உள்ளுணர்வு. எல்லோரும் கட்டாயமாக மௌனம் கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதி இருப்பதால் சத்தம் வரும்படியாகச் சிரிக்க மாட்டார்கள். என்றாலும் அத்தனை பேருடைய இதழ் ஓரங்களில் ஒரு பரிகாசப் புன்னகை தோன்றி மறைவதை என்னால் தாங்க முடியுமா?

என்ன செய்வது? வருவதை எதிர்கொள்ளத் தான் வேண்டும். கண்ணைத் திறக்கிறேன். அப்பாடா, யாரும் என்னைப் பார்க்கவில்லை. அனைவரும் கண்களை மூடியிருந்தனர். உற்றுப் பார்த்ததில் அவர்களும் உறங்குவதாகத் தெரிந்தது. சிலர் குறட்டை கூட விட்டுக் கொண்டிருந்தனர். மேடை மேல் அமர்ந்திருந்த தியான ஆசிரியரின் தலையும் தொங்கலிட்டிருந்தது. நான் தான் முதலில் விழித்திருக்கிறேன்.

பத்து நாள் முகாம். அங்கேயே தங்கி உணவு உண்டு நாள் பூராவும் யாருடனும் பேசாமல் தியானம் ஒன்றே வேலையும் பொழுதுபோக்குமாக இருக்க வேண்டும்.  அமைப்பாளர்களைப் பாராட்டவேண்டும். இலவசம் என்பதற்காக ஏனோ தானோ என்று உணவளிக்கவில்லை. பத்து நாளும் மூன்று வேளையும் வித விதமான வட இந்திய தென் இந்திய உணவு வகைகளைச் செய்து போட்டு அசத்தினர்.

வாய்க்கு ருசியாக வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டு வேறு வேலை இல்லாமல் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் தியானத்தில் உட்கார்ந்தால் தூக்கம் வராமல் என்ன செய்யும்?

முகாம் பயனற்றது என்று சொல்லலாமா? கூடாது. 12 மணி நேரத்தில் அவ்வப்போது சில வினாடிகள் உறக்கமும் விழிப்பும் கனவும் அல்லாத ஒரு நிலை ஏற்பட்டது உண்மை. இதைத்தான் துரிய நிலை என்கிறார்களோ?

என்ன செய்வது? ஒரு வைரக் கல்லைக் கண்டுபிடிக்க டன் கணக்கில் தானே மண்ணைப் புரட்ட வேண்டியிருக்கிறது? 

படத்திற்கு நன்றி :

http://2.bp.blogspot.com/-yYos8mtGOUg/TdzImP8GDKI/AAAAAAAAGHY/6Mu5_IBwl9A/s1600/meditations.jpg

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *