நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

3

விசாகை மனோகரன்

சென்னை வரும் லுப்தாஸா பிளைட் துபாயிலிருந்து புறப்பட்ட 10 நிமிடத்தில் நித்திராதேவியின் மடியில் தவழ ஆரம்பித்து விட்டான் அரவிந்த். ஆனால் நிம்மதியான தூக்கம் வரவில்லை. ஏதேதோ எண்ணங்கள் அவன் மனதிற்குள். அந்த எண்ண ஓட்டத்தை ‘ தாகத்திற்க்கு ஏதாவது வேண்டுமா’ என்று ஒயிலாக வந்த ஏர் ஹோஸ்டஸ் கேட்டு தடுத்துவிட்டாள்.

இங்கு நான் கட்டாயம் அரவிந்த் பற்றி சொல்ல வேண்டும். நான் எதற்கு உங்கள் நடுவே. அவன் வாயாலேயே கேளுங்க அவன் கதையை.

என் வயது இருபத்தேழு. பெத்தவங்களுக்கு ஒரே மகன். ஒரு சாதாரன கம்பெனியில் சாதாரண குமாஸ்தா எங்கப்பா. வீட்டைத் தவிர வேறு உலகம் தெரியாத அம்மா. மாதம் 3ம் தேதி சம்பளம். 5ம் தேதி தட்டுப்பாடு ஆரம்பம். கீழ் நடுத்தர வர்க்கம். படிப்பில கெட்டிக்காரன். விளையாட்டுகளிலும் அப்படியே. ஆனா நான் காரணமில்லாத ஒரு தப்பால வாழ்க்கையில அவதிப்பட்டவன். அந்த தப்பு நான் மேல்ஜாதின்னு சொல்லப்படற குலத்தைச் சேர்ந்தவன் என்பது தான். எந்த ஸ்காலர்ஷ்ப்பும் கிடைக்கல. ஆனா படிக்கணும்கிற வெறி மட்டும் இருந்தது. அந்த கஷ்டத்திலேயும் என்னை படிக்க வைச்சாங்க. 10ம் கிளாஸ் தேறினேன். +2வும் முடித்தவுடன் வீட்டின் நிலைமை புரிந்து எனது ஆசைகளை புதைத்து விட்டு படித்தது போதும் எங்காவது வேலைக்கு போகலாம் என்று முடிவு செய்தேன்.

ஒரு நாள் ‘அம்மா! நான் படிச்சது போதும்மா. ஏதாவது வேலைக்கு போய் சம்பாதிச்சா கொஞ்சம் கஷ்டம் குறையும்’ அப்படின்னேன்.

‘டேய் அரவிந்தா! நீ நல்லா படிக்கற பிள்ள. ஏண்டா நிப்பாட்டனும். நல்லா படிச்சு பெரிய வேலைக்கு போடா. என் உயிரகொடுத்தாவது நான் படிக்கவெக்கறேண்டா.’

‘சரிம்மா. இனிமே என் லட்சியமே படிப்பு படிப்பு படிப்பு தான்மா.’

அப்ப ஆரம்பிச்சு ஒவ்வொரு பொருளா அடமானம் வெச்சு அதத் திருப்ப முடியாம வித்து என் படிப்பு தொடர்ந்திச்சு. M.Tech கடைசி வருஷம். Project Work பண்ண எங்க அப்பாவோட பழைய ஸ்கூட்டரையும் வித்தாச்சு. கடைசியா பரிட்சைக்கு பணம் கட்டனும். வெக்கவும் ஒண்ணுமில்ல விக்கவும் ஒண்ணுமில்ல. பணம் கட்ட கடைசி நாள் அம்மா என் கையில பணத்த கொடுத்தாங்க. எனக்கு ஒன்னும் புரியல.

‘அம்மா! ஏதும்மா பணம்?’

பதில் இல்ல.

‘அம்மா உன்னத்தான் கேட்டேன் ஏது பணம். சொல்லலேன்னா நான் அத தொடமாட்டேன்’. அப்பத்தான் அம்மா கண்ல நான் எந்த கஷ்டத்திலயும் பாக்காத கண்ணீர பாத்தேன்.

டேய் போய் பணத்த கட்டிட்டு வாடா அப்பறமா பேசிக்கலாம்ன்னு சொன்ன அம்மாவ உத்துப் பார்த்தேன். ஏதோ வித்தியாசமா புதுசா தெரிஞ்சிச்சு. சட்னு பொறி தட்டிச்சு. புதுசா தெரிஞ்சது அம்மா கழுத்துல மஞ்ச கிழங்கு தாலிக்கு பதிலா. கட்டிபிடிச்சிட்டு அழுதேன்.

அம்மா சொன்ன ஒரே வார்த்தை ‘சீக்கிரம் போய் பணத்த கட்டு’

எனக்கு வேற வழி தெரியல. போய் கட்டிட்டு வந்து அசுரத்தனமா படிச்சு ஒரு அமேரிக்க சாப்ட்வேர் கன்பெனில வேலைக்கு சேர்ந்து இரண்டு வருஷம் கழிச்சு இப்ப வரேன் பெத்தவங்கள பாக்க. இதோ இன்னும் ஒருமணி நேரத்தில சிங்காரச் சென்னை. அங்கேந்து ரெண்டுமணி நேரப் பயணம்.

சொன்னபடி 3மணி நேரத்தில் வீட்டில் இருந்தேன். அப்பா அம்மா ரெண்டு பேர் கண்லேயும் கண்ணீர். ஆனா இது ஆனந்தக் கண்ணீர். கட்டிபிடிச்சு கால்ல விழுந்து வணங்கியபின். ரெண்டு பேரையும் உட்காரவெச்சு அவங்க காலடில நான் வாங்கி வந்திருந்த ஒரு பெட்டிய வெச்சுட்டு ‘அம்மாஇ இதுல நீ எனக்காக கடைசியா கழட்டிக் கொடுத்தியே தாலி அதுவும் மிச்சம் நகையும் இருக்கும்மா. மொதல்ல அப்பாவ அந்த தாலிய கட்டச் சொல்லும்மா’

அரவிந்த் நீ நல்லா இருந்தா போதும்பா. தங்கத் தாலி கட்டிக்கிட்டாத்தான் பொண்டாட்டியா? தங்கத்தவிட மஞ்சளுக்கு மகிமை ஜாஸ்திப்பா.

அம்மா சும்மா சினிமா டைலாக் பேசாதம்மா. கட்டிக்கம்மா

சரிடா நாளைக்கு வெள்ளிக்கிழமை நீயும் நல்லபடியா திரும்பி வந்திருக்கே. கோயிலுக்கு போய் சாமி முன்னாடி கட்டிக்கலாம்.

ராத்திரி சூப்பர் விருந்து. சாப்டுட்டு 12மணி வரைக்கும் பேசிக்கிடிருந்துட்டு படுத்துட்டோம் காலேல சீக்கிரம் எழுந்திரிச்சு கோயிலுக்கு போகணும்னு சொல்லிட்டு.

சூரியன் முகத்தில பட்டு எழுந்திரிச்சு உக்காந்தேன். அப்பத்தான் ஞாபகம் வந்துச்சு கோயிலுக்கு போகணுமேன்னு. அம்மா ஏன் எழுப்பல? இப்படியா தூங்க விடுவாங்கன்னு சொல்லிக்கிட்டே போய் கை கால் கழுவிட்டு உள்ள போய் அம்மான்னு கூப்பிட்டா பதில் இல்ல. எங்க போனாங்க? ஒரு வேள பிள்ள அசதியா தூங்குதுன்னு எழுப்பாம கோயிலுக்கு போய்ட்டாங்களா? நினச்சிக்கிட்டே அவங்க ரூம தாண்டும்போது அம்மா படுத்திருந்தது தெரிஞ்சிச்சு. அம்மா இந்நேரத்துல படுத்திருக்காங்கன்னா ஏதாதவது உடம்பு சரியில்லயான்னு யோசிச்சிக்கிட்டே கதவ தெறந்தேன்.

அங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் படுத்திருக்க, நடுவில நான் வாங்கி வந்திருந்த நகைங்க கிடக்க, அந்த தாலிய மட்டும் கையில பிடிச்சிட்டு அம்மாவும் அம்மாவ பிடிச்சிட்டு அப்பாவும் அவங்க கடமை முடிஞ்சிருச்சின்னு நிம்மதியா நிரந்தரமா துங்கிட்டிருந்தாங்க.

அந்த மஞ்சகிழங்கு அம்மா கழுத்தில தங்கத்தவிட அதிகமா ஜொலிக்குது.

எந்த பிடிப்பும் இல்லாம நான் தனியா நிக்கிறேன். டாக்டர்லாம் வந்தாங்க. ஏதோதோ சொன்னாங்க ரெண்டு பேருக்குமே இதயம் வீக் ரொம்ப ரேர் இப்படி வர்ரது அது இதுன்னு. கொடுத்துவச்சவங்கன்னு சில பேர் சொன்னாங்க. ஆனந்த அதிர்ச்சில போய்ட்டாங்கன்னு சில பேர் சொன்னாங்க.

ஆனா போனவங்க போனவங்க தானே.

எந்த பிடிப்பும் இல்லாம நான் தனியா நிக்கிறேன்

எங்கேயோ பாட்டு கேட்குது

‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை’. 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

  1. There is many a slip between the cup and the lip. இதுதான் அரவிந்த் வாழ்க்கையில் நடந்திருக்கிறது. ‘ நீ நல்லாயிருந்தா போதும்’ என்ற அவன் அன்னையும் தந்தையும், அந்நிலையை அவன் அடைந்ததும் மனநிறைவோடு ‘போதும் இந்த வாழ்க்கை’ என்று போய்விட்டார்கள் போலும்!
    ஸம்பத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *