முகில் தினகரன்

வழக்கத்திற்கு மாறாக பேருந்து நிறுத்தத்தில் கூட்டம் அதிகமாயிருக்க எனக்குள் ஏதோவொன்று பிறாண்டியது. கைகளைப் பிசைந்தபடி கலவர முகத்துடன் நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் மெல்ல விசாரித்தேன்.

‘அதையேன் சார் கேட்கறீங்க?…மெயின் ரோட்டுல ஏதோ ஜாதிக் கட்சியோட பேரணியாம்…இந்த ரோட்டுக்கு இன்னும் ரெண்டு மூணு மணி நேரத்துக்கு பஸ்ஸே வராதாம்..கர்மம்..ஆபீஸ் முடிஞ்சு போகிற நேரத்தில்தானா இந்த சோதனையெல்லாம் வரணும்?…ச்சை’ சொல்லும் போது அஷ்டகோணலாய்ப் போனது அந்த அழகு முகம்.

அவளைப் போலவே பல யுவதிகள் பஸ் இப்போதைக்கு வராதென்று தெரிந்தும் அது வரும் திசையை திரும்பித் திரும்பிப் பார்த்து திட்டிக் கொண்டிருந்தனர்.

‘ஏய்..நாம இப்படி நின்னுட்டிருந்தா நின்னுட்டே இருக்க வேண்டியதுதான்! டூவீலர்க போயிட்டுத்தானே இருக்கு? பாரு…எத்தனை ஆம்பளைங்க தனியாளா சிங்கிள்ஸ்லே போய்க்கிட்டிருக்காங்க!….அவங்களை நிறுத்தி லிப்ட் கேட்டா என்னடி?’ துணிச்சலாய்ப் பேசிய சுடிதார்ப்பெண் என் கவனத்தை ஈர்க்க, ‘அட…பரவாயில்லையே’ கவனிக்கலானேன்.

சொன்னதோடு நில்லாமல் அந்தப் பேருந்து நிறுத்தத்தைக் கடந்து செல்லும் டூவீலர் ஆசாமிகளை குறுக்கே கை நீட்டி மறித்தாள்.

‘என்னம்மா…என்ன வேணும்?’ ஹெல்மட் தலையனொருவன் கத்தலாய்க் கேட்க,

‘சார்..இந்த ரோட்டுக்கு இப்போதைக்கு பஸ் வராது..பாருங்க எத்தனை லேடிஸ் பரிதாபமா நின்னுட்டிருக்காங்க…நீங்க தனியாத்தானே போறீங்க…யாராவது ஒருத்தருக்கு லிப்ட் கொடுத்து உதவலாமில்ல?’

‘வாட?;…லிப்ட்டா?..நோ…நோ..நமக்கு அந்தப் பழக்கமெல்லாம் கெடையாது…அதுக்குன்னு எவனாச்சும் வருவான் அவன்கிட்டக் கேளுங்க!..வழிய விடுங்க மொதல்ல..’

‘என்ன சார் லேடீஸ்க்கு லிப்ட் குடுத்தா என்ன சார் தப்பு?..மனுசனுக்கு மனுசன் இந்த உதவி கூடச் செய்யக் கூடாதா?’ சுடிதாரப்பெண் விடாமல் பேசினாள.;

‘த பாரும்மா..பொண்ணுங்களையெல்லாம் நான் டபுள்ஸ் ஏத்தினதில்லை…ஏத்தவும் மாட்டேன்’

‘அதான் ஏன்னு கேட்கறேன்?..பயமா?…யாராச்சும் பார்த்து ஏதாச்சும் கதை கட்டிடுவாங்களோன்னு பயமாயிருக்கா?..இல்ல உங்க சம்சாரத்துக்கு தெரிஞ்சு..குடும்பத்துல குழப்பம் உண்டாயிடுமோன்னு அச்சமாயிருக்கா?’

அவன் மௌனமாய் விழிக்க,

‘என்ன சார்…அதைப் பத்திக் கவலைப்பட வேண்டிய பொண்ணுங்களே தைரியமா லிப்ட் கேக்கறாங்க…நீங்க ஆம்பளை..அதுவும் அடர்த்தியா மீசை வெச்சிருக்கற ஆம்பளை நீங்க பயப்படறீங்களே’

‘இல்லம்மா…அது..வந்து..பிரச்சினை…’

‘யோவ்…பிரச்சினைக்கு பயப்படற நீயெல்லாம் எதுக்கய்யா வெளிய வர்றே,..வீட்டுக்குள்ளாரவே முடங்கிக் கெடக்க வேண்டியதுதானே?’

அவள் பேச்சில் மரியாதை தடாலென்று இறங்க அவன் தர்ம சங்கடமாய் எல்லோரையும் பார்த்தான்.

‘இங்க பாருய்யா..உம்மனசு சுத்தமான மனசுன்னா..யாராவது ஒருத்தரை கூட்டிக்கிட்டுப் போ’ என்றவள் பெண்கள் பக்கம் திரும்பி ‘ஏய் காயத்ரி…நீ இந்தப் பக்கம்தானே போகணும்?..வா..வந்து சார் வண்டில உட்காரு’ என்றழைக்க,

அந்த காயத்ரி நிதானமாய் நடந்து வந்து ‘ணங்’கென்று பில்லியனில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

ஹெல்மட்காரன் வேறு வழியில்லாமல் முனகியபடியே வண்டியைக் கிளப்பினான்.

எனக்கு அந்தச் சுடிதார்ப்பெண்ணின் பேச்சும் செயல்பாடும் மிகவும் பிடித்திருந்தது. ‘வெரிகுட்..பெண்கள்ன்னா இப்படித்தான் இருக்கணும்..பாரதி கண்ட புதுமைப்பெண்’

தொடர்ந்து அதே போல் பல இருசக்கர வாகனாதிபதிகளை நிறுத்தி சாம…பேத…தான…தண்ட முறைகளைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட பெண்களை அங்கிருந்து வெற்றிகரமாக அனுப்பி வைத்தாள்.

இறுதியில் அந்த சுடிதார்ப்பெண் மட்டும் தனித்து நிற்கையில் ஒரு டூவீலர்க்காரன் கடந்து செல்ல நான் கேட்டேன். ‘என்னம்மா…ஒரு வண்டி போகுது…அத நிறுத்தி அதுல நீ போகலாமே?’

‘இல்ல சார் எங்க வீட்டுக்காரர் வந்திட்டிருக்கார்..என்னை பிக்அப் செய்ய’

அடுத்த ஐந்தாவது நிமிடம் ஒரு பைக் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய அந்த இளம்பெண் ‘ரொம்ப தேங்க்ஸ் சார்…எங்க ஹாஸ்டல் இங்கிருந்து பக்கம்தான்…நான் நடந்தே போயிடறேன்’ என்று சொல்லி விட்டு நகர,

அந்த பைக்காரனை நோக்கி வேகவேகமாயச் சென்றாள சுடிதார்க்காரி.

‘யார் அவ?’ கேள்வியில் கோபம் தெறித்தது.

‘தெரியாதுடா…இங்கதான் எங்கியோ லேடீஸ் ஹாஸ்டல்ல தங்கியிருப்பா போலிருக்கு!..இந்த ரோட்டுலதான் பஸ் வரலையே…தனியா நடந்து வந்;திட்டிருந்தா…நான்தான் நிறுத்தி…கேட்டு..லிப்;ட் குடுத்தேன்’

கண்களைப் பெரிதாக்கிக் கொண்டு பற்களை ‘நற..நற’வென்று கடித்த சுடிதார்க்காரி ‘கொஞ்சம் செவப்பா…அழகா இருந்தாப் போதுமே…உடனே.. ‘ஈஈஈஈ’ ன்னு இளிச்சுட்டு லிப்ட் குடுத்துடுவீங்களே’

‘அட என்னம்மா…இதுல என்ன இருக்கு?..மனுசனுக்கு மனுசன் செய்யற உதவிதானே?’

‘போதும் பேசாதீங்க’ ‘சட்’டென அவன் வாயை அடைத்து விட்டு, பிசாசுத்தனமாய் பில்லியனில் ஏறி அமர்ந்தாள்.

அவன் நிதானமாக வண்டியைக் கிளப்ப,

‘வீட்டுக்குப் போய் உங்கள வெச்சுக்கறேன் இருங்க’

போகிற போக்கில் அவள் கோபமாய்ச் சொல்லிக் கொண்டே சென்றது என் காதுகளில் விழ நான் மூரச்சையாகாத குறைதான். ‘அடிப்பாவி..போறவனையெல்லாம் நிறுத்தி…இல்லாத வசனமெல்லாம் பேசி லிப்ட் குடுக்க வெச்சிட்டு…உம்புருஷன் ஒரு பெண்ணுக்கு லிப்ட் குடுத்ததுக்கு இந்த உறுமு உறுமுறியே..ச்சே..உன்னைப் போயி புதுமைப்பெண்ணுன்னு நெனச்சேனே…நீயும் சராசரிதானா?’

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *