இசைக்கவி ரமணன்

ஸ்ரீ ஷிர்டி சாயி ஆறு

(அக்டோபர் 21, 1985 விஜயதசமி அன்று எழுதியது)

 

பாடத் திறந்தவாய் மூடமுடி யாதபடிப்
பாயும்கங் கைப் பிரவாகம்
பருகத் திறந்தவிழி பரிதியாய் விரியவே
பரவுமின் பப் பிரகாசம்
சாடப் பிறந்தகலி ஓடச் சிரித்தபடி
சஞ்சாரம் செய்யும் நாகம்
தரையேது வானேது தெரியாத விதமாகத்
தாயாகப் பொழியு மேகம்
தண்மையை தழலான தங்கதீபம் நெஞ்சைத்
தாலாட்டும் தேவ கீதம்
தந்திகளை உந்திவரும் சங்கநாதம் நல்ல
தருணத்தில் வந்த வேதம்
ஆடாஆ டப்பெருகும் ஆவேசம் நெஞ்சைவிட்
டகலாது நீளும் தாபம்
அள்ளஅள் ளப்பரவும் ஆனந்த சாகரம்
அமிழ்தமென் சாயிரூபம்!

 

நந்தா விளக்காக நமதுவினை எரியவதில்
நாயகன் குளிர்காய்கிறான்
நாளாக இரவாக வாளாகத் நின்றுதுயர்
நண்ணாமல் காவல் செய்வான்
வந்தாடும் பிள்ளையெனைப் பந்தாடி வீடெங்கும்
வாசலாய் மாற்றிவிட்டான்
வருவதெது செல்வதெது விரைவதெது தெரியாமல்
வண்ணவிண் நாய்நிறைந்தான்
என் தாயுமல்லவோ என் தந்தையல்லவோ
எல்லாமும் நீயல்லவோ!
ஏனோ வெறித்தபடி எங்கோநீ நோக்குவதும்
எமதுநலன் தானல்லவோ?
சந்திநே ரத்தொளிரும் தங்கத் தடாகத்தில்
தாமரை எங்கள் தேகம்
சந்நிதி உலாவந்து சஞ்சலம் தீர்க்கும் ஆச்
சர்யமென் சாயி நாமம்!

 

யார்சொல்லி வீதியினில் யாகத்தின் ஜ்வாலையாய்
யாசகம் கேட்டுவந் தாய்?
யார்சொல்லி ஆனந்த லீலைகள் மாயங்கள்
அன்றாடம் என்றாக்கினாய்?
யாரழைத் தாலும்வந் தருள்செய்யும் கருணையை
ஐயனே எங்கு கற்றாய்?
அபலையாய் நின்றவெனை அன்போடு தடவியேன்
அருள்மொழிகள் பேசவைத்தாய்?
ஓரிழை கூடவொளி நுழையாத நெஞ்சிலேன்
உள்ளங்கை யாகநின்றாய்?
ஓங்காரம் ரூபமாய் ஒளியெலாம் நாதமாய்
ஓயாமல் விந்தைசெய்தாய்
ஆரழைத் தாலும்விசி அகலாமல் கடலுன்னுள்
அலையாய்க் கலந்திருக்கும்
அல்லல்புயல் வீசுமொரு தொல்லைப்ர தேசத்தின்
ஆச்சரியம் சாயிதீபம்!

 

விட்டாலும் எனைவிட்டு வெளியெங்கும் போகாமல்
வீடாக வாழவேண்டும்
கொட்டாமல் உள்ளழகுக் கோலத்தை யேகாண
ஒத்தாசை செய்யவேண்டும்
சுட்டாலும் உன்கோவில் சுவரிலே மோதிநான்
சுமையின்றி வீழவேண்டும்
ஒட்டாமல் நின்றபடி உயிரெலாம் தழுவுமுன்
உள்ளன்பில் நெகிழவேண்டும்
முட்டாமல் முட்டிமடி மோதிக் களிக்கும்நான்
மோகனக் கன்று நீ தாய்
தொட்டாலும் வானமாய்த் தொலைவெங்கும் செல்லாமல்
தூபமாய் நீ நிறைந்தாய்
எட்டாத படியென்று முட்டிமுட் டிக்கதறி
எத்தனைக் காலமழுதேன்!
முட்டா ளெனைக்கொன்று முகமெலாம் ஆனந்தம்
மூட்டியது சாயிதீபம்!

 

விழிதிறந் தாலென்ன இமைவிழுந்தா லென்ன
வேண்டியதை மனம்பார்க்குமே!
வெளியென்றும் உள்ளென்றும் விளையாட்டு நின்றகணம்
விரிகின்ற புதுலோகமே!
மொழியெலாம் சுடராகிச் சுடரெலாம் மொழியாகி
மோடி தலை சுழலுதையா!
மோனமா ஞானமா மூண்ட அபிமானத்தில்
வானெலாம் அழுததையா!
வழியெலாம் திருநாட்கள் வாசலில் கைபொத்தி
வரவேற்றுப் பாடுதையா
தவழ்ந்திடத் தவழ்ந்திடத் தரையெலாம் மடியாகித்
தடுமாற வைக்குதையா!
அழவேண்டி வரும்கண்ணீர் ஆகாய கங்கையாய்
அடிநெஞ்சில் மோதுதையா!
தொழவேண்டும் என்றேனும் தோணாத மூடனின்
தோள்தட்டும் சாயிநாமம்!

 

நரகத்தில் வாழ்வதே நலமென்று நம்பினேன்
நாதனே வந்துநின்றாய்!
நான்பார்க்கி றேனென்னும் மடமையினி யில்லையெனை
நீபார்க்கும் நினைவுபோதும்!
விரகத்தைக் கொண்டாடும் வீணனைத் துரியத்தின்
வெட்டவெளி தொட்டருளினாய்
வீணான காலங்கள் விளைக்கின்ற உரமாகும்
விந்தையதை யும்புரிந்தாய்
கரகங்கள் தலைமீது காலடியில் கனலாறு
கடுவெய்யில் சுட்டெரிக்க
கங்கையாய் வந்தென்னைக் காப்பாற்றி மாறாத
கடனாளி யாக்கிவிட்டாய்
சிரசுக்குன் சீரடி சிந்தைக்கு ஷீரடி
சித்தமெல் லாமுன் துனி!
செப்புவதும் உந்நாமம் சிந்திப்ப துன்ரூபம்
சேரும்கதி உன்தீபமே!

படத்திற்கு நன்றி :
http://www.saibaba.ws/quotes/shirdi100sayings.htm

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *