மலர்சபா

புகார்க்காண்டம் – 06. கடல் ஆடு காதை
 
 
விஞ்சை வீரன் தன் காதலியுடன் வந்து விழாக் காணுதல்
 
 
உச்சி உயர்ந்த இமயமலையையும்
வளமையான நீருடைய கங்கையாற்றையும்
அழகு பொருந்திய உச்சயினி நகரத்தையும்
விந்திய மலை சூழ்ந்த காட்டையும்
வேங்கடம் என்னும் மலையையும்
நிலம் கொள்ளாத அளவு
பெருவிளைச்சல் காணும்
காவிரி பாயும் சோழநாட்டினையும்
தன் காதலிக்குக் காட்டிய பின்
இதழ்விரி பூக்கள் நிறைந்த
தோட்டங்களை உடைய
புகார்நகரம் அடைந்தனன்
விஞ்சையன்.
 
 
இந்திரனைத் தொழுது,
எல்லா இடங்களையும்
முறைமைப்படியே
அவளுக்குக் காட்டியபின்
வளம் பொருந்திய புகார் நகர்
இந்திரவிழாவினையும்
மாதவியின் ஆடலையும்
காணலுற்றனர்.
 
 
மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களைக் காதலிக்குக் காட்டி விஞ்சை வீரன் மகிழ்தல்
(முதல் ஐந்து வகைகள்)

 
திருமாலைப் புகழும் தேவபாணியும்
வருணப்பூதர் நால்வரைப் புகழும்
நால்வகைத் தேவபாணியும்
பல வகை உயிர்களும் தம் ஒளியால்
நன்மை பெறும் தன்மையுடைய
வானூர்ந்து செல்லும்
நிலவைப் பாடும் தேவபாணியும்
ஆகிய
இசைப்பாடல்களைப் பாடிய பின்னர்
அவதாளம் நீங்கிய
நல் தாளத்தின் இயல்பு பொருந்த
மாதவி புரிந்த நடன வகைகள்
ஒவ்வொன்றையும் தன் காதலிக்குக்
காட்டி மகிழ்ந்தனன்.
 
 
1. கொடுகொட்டி
 
 
பாரதி(பைரவி) ஆடியமையால்
பாரதியரங்கம் எனப்பட்ட சுடுகாட்டில்…
திரிபுரத்தையும் எரியச் செய்ய
தேவர்கள் வேண்டியதால்,
தீயினைத் தலையாய் உடைய
திருமாலாகிய அம்பினை
ஏவிய சிவன்
திரிபுரத்தைச் சாம்பலாக்கினன்.
 
அத்தருணத்தில்
உமையவளைத் தன் ஒருபாகமாகக் கொண்டு
தேவர் யாவரினும் சிறந்த இறைவன்
வெற்றிக் களியில் கைகொட்டி ஆடிய
கொடுகொட்டி ஆடல்
இது பாராய்!
 
 
2. பாண்டரங்கம்
 
 
தன் தேரின் முன்
பாகன் என நின்றிட்ட
நான்முகன் காணும்படி
பாரதி வடிவம் பூண்டு
திருநீறு அணிந்து
சிவபெருமான் ஆடிய
பாண்டரங்கக் கூத்து
இது பாராய்!
 
 
3. அல்லியம்
 
 
கஞ்சனின் வஞ்சனை
வெல்ல நினைத்து
அவன் ஏவி அனுப்பிய
யானையின் கொம்பை ஒடிப்பதற்காக
அஞ்சன வண்ணன் நின்றாடிய
அல்லியக் கூத்து
இது பாராய்!
 
 
4. மல்லாடல்
 
 
கஞ்சன் அவன் ஏவிய
அசுரர்களை வெல்ல
திருமால் ஆடிய
மல்லாடல் எனும் கூத்து
இது பாராய்!
 
 
5. துடிக் கூத்து
 
 
கருமையான கடலது நடுவே
நீர் அலைகளே அரங்கமெனக் கொண்டு
தன்னை எதிர்த்து முன்நின்ற
வஞ்சச் சூரனை
எதிர்த்துக் கொன்ற முருகன்
துடி கொட்டி ஆடிய
துடிக் கூத்து
இது பாராய்!

 

அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 28 – 30
 
 
அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 31- 51
 
 

படத்திற்கு நன்றி :

http://macaulay.cuny.edu/eportfolios/judell12/2012/09/15/the-elegant-dance-form/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *