எங்கும் பரவும் டெங்கை முறியடிப்போம்

2

 

திருமலை சோமு

மனிதன்.. மகத்தானவன்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், சுத்தம் சுகாதாரம் தரும்.. வரும் முன் காப்போம் என்றெல்லாம் எத்தனையோ மூத்தோர் சொல்லை  நாம் நினைவில் வைத்திருந்தாலும். இன்றைய அதிவேக விஞ்ஞான உலகத்தில் மருத்துவத்துக்கு சவால் விடும் வகையில் புதுவகையான நோய்கள் அவ்வப்போது மனிதனை அச்சுறுத்திக்கொண்டேதான் இருக்கிறது.. சில நாட்களாக சிக்குன் குனியா, பன்றிக்காய்ச்சல், பறவைக் காய்ச்சல் என்று பயந்து  கிடந்த நாம் இப்போது மீண்டும் டெங்கு காய்ச்சலை கண்டு அச்சப்பட்டு இருக்கி றோம்.. டெங்கு காய்ச்சல் பற்றி பயப்பட வேண்டாம் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்கும் என்றெல் லாம் நம்பிக்கை வார்த்தைகளை அவ்வப்போது சொன்னாலும்.. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்பது போல் டெங்கு தாக்கி அவதிபட்டு வரும் மக்களிடம் என்ன பேச முடியும்.?
இந்த டெங்கு நேற்று இன்று முளைத்ததில்லை உலகின் பல நாடுகளில் 200 ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கும் கொடிய தொற்றுநோயே டெங்கு காய்ச்சல். கடந்த 30 ஆண்டுகளில் இதன் தாக்குதல் அதிகரித்துள்ளது. 1779ம் ஆண்டு முதல் டெங்கு காய்ச்சல் நோய் சீனாவில் உறுதி செய்யப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.1820-ன் முற்பகுதியில் கிழக்கு ஆப்ரிக்காவில் டெங்கு தொற்று நோய் உருவானது என்றும் உலகம் முழுதும் சுமார் 2500 மில்லியன் மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டுள்ளனர். ஆண்டுக்கு சுமார் 50 மில்லியன் மக்களை டெங்கு தாக்குகிறது என்று ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது.

டெங்கு காய்ச்சலுக்கு மூல காரணம் ‘எடியஸ் எஜிப்டி’ வகைக் கொசுக்கள் என்று நாம் அறிவோம்.. இக்கொசுக்கள் தேங்கியுள்ள மழைநீரில், நன்னீரில் இனப்பெருக்கம் செய்கிறது. . சூரிய உதயத்திலிருந்தது 2 மணி நேரமும் சூரியன் மறையும் மாலையில் 2 மணி நேரமும் இவை கடிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. டெங்கு பாதித்தவருக்கு 105 டிகிரி வரை காய்ச்சல். கடுமையான தலைவலி, தலையில் அதிக சூடு, கருப்பு நிறத்தில் வாந்தி, வயிற்றுப் போக்கு, தோலில் தடிப்பு, காய்ச்சல் முற்றிய நிலையில் வலிப்பு, மூட்டுக்களில் வலி, உடல் துளைகளின் வழியாக ரத்தப்போக்கு, சீறுநீர்த் தடை போன்ற பிரச்சனைகள் இருக்கும். கடுமையான காய்ச்சல், வாந்தி, வயிற்றுப் போக்கு இருப்பதால் உடலின் நீர்ச்சத்து விரைவாக குறைந்து விடும் (De hydration) ஆபத்து உருவாகிறது. அபாய கட்டத்தை நெருங்கும் போது மூக்கு இதர உடல் துளைகள் வழியாக ரத்தக் கசிவு ஏற்படுகிறது. கடுமையான காய்ச்சலின் போது குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படுகிறது. டெங்கு வைரஸ் ரத்தத்தில் அதிவிரைவில் பெருகுகிறது. இந்த வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டுக்களை (Platelets) அழித்து விடுகிறது. இதன் காரணமாக ரத்தம் அதன் தன்மை மாறி துளைகளின் வழியாக வெளியேறுகிறது. மேலும் ரத்தம் உறைகிற தன்மையும் குறைந்து விடுகிறது.

 ”பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்சலுக்கு உரிய சிலவகைமருந்துகளைக் கொடுத்து விட்டு நீர்ச்சத்து குறைந்து விடாமலிருக்க பழரசங் கள்,தூய்மையான குடிநீர், இளநீர் ஆகியவற்றைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். சர்க்கரையும் உப்பும் கலந்த கரைசலை யும் கொடுக்கலாம்” என்று மருத்துவர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.  ரத்தத்தின் மூலப் பொருட்களுள் ஒன்றாகிய பிளேட் லெட்ஸ் வெகுவேகமாக குறைவ தால் ரத்தத்திலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட பிளேட்லெட்டை தனியே உடலில் ஏற்ற வேண்டும். பிளேட்லெட் கிடைக்காத போது ரத்தத்தையே ஏற்றலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பாதிக்கப் பட்டவரின் நோய் எதிர்ப்பாற்றல் குன்றிவிடுவதால் அவருக்கு வேறு வகையான தொற்றோ அல்லது பாதிப்போ ஏற்பட் டால் அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.இல்லாவிட்டால் உயிர்சேதம் ஏற்படலாம்.

டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை ஆங்கில மருத்துவத்தில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.. சித்த ஆயுர்வேத மருந்துகள் பயனளிக்கின்றன. ஆயுர்வேதத்தில் அம்ருதாரிஷ்டம் (Amrutha Aristitam) 25 மிலி மருந்து  சமஅளவு வெந்நீருடன் கலந்து காலை, மாலை பருகினால் டெங்குவை தடுக்க முடியும். மேலும் நிலவேம்பு கசாயம் தினம் – காலை, மாலை 30 மிலி வெறும் வயிற்றில் 3 வாரம் தொடர்ந்து பருகினால் டெங்கு உள்ளிட்ட வைரசால் பரவும் காய்ச்சலை தடுக்க முடியும். சித்த மருந்துகளில் பிரமானந்த பைரவம், வாதசுர குடிநீர் போன்றவை டெங்கு சுரத்தைத் தடுக்கவும், குணப்படுத்தவும் உதவுகின்றன.1996-ல் டெல்லியில் டெங்கு பேரளவில் தாக்கிய போது அரசின் உத்தரவுக்கிணங்க, டெல்லி மாநில ஹோமியோபதி கவுன்சில் ‘Eupatorium Perf ’ என்ற ஹோமியோபதி மாத்திரையை பல்லாயிரம் பொதுமக்களுக்கு தடுப்பு மருந்தாக வழங்கி முழுவீச்சில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தினார்கள். மேலும் டெங்கு காய்ச்சல், ரத்த கசிவு டெங்கு சுரம் இரண்டையும் (ஆங்கில மருத்துவத்தில் உரிய மருந்துகள் இல்லாத நிலையில்) ஆற்றல் மிக்க 25 ஹோமியோபதி மருந்துகள் மூலம் குணப்படுத்திக் காட்டினர். டெங்கு நோயைத் தடுக்க அல்லது ஒழிக்க பல ஆராய்ச்சிகள் உலகின் பல பாகங்களிலும் செய்யப்பட்டு வருகின்றன.

கப்பி (guppy) எனும் ஒருவகை மீன்வகைகளை தேங்கிக் கிடக்கும் நீர்நிலைகளில் வளர்ப்பது, அவை கொசுக்களின் குடம்பிகளைத் தின்னுவது மூலம் கொசுக்களின் இனவிருத்தி கட்டுப்படுத்தப்படுகின்றது. இம்முயற்சி ஓரளவு வெற்றியைத் தந்துள்ளது என அறியப் படுகின்றது. மேலும் ஒவ்வொரு வீட்டைச் சுற்றியும் தண்ணீர் தேங்காமல் தடுப்பது அவசியம். ஜக்குகள், வாளிகள், பூந்தொட்டிகள், நீர்த் தொட்டிகள், பாட்டில்கள்,டயர்கள், தேங்காய் சிரட்டைகள், பானைகள் போன்றவற்றைச்சுத்தப்படுத்துவதும், வெயிலில் காய வைத்து பயன்படுத்துவதும் அவசியம். குளிர்சாதன பெட்டியை (பிரிட்ஜ்) வாரம் ஒரு முறையேனும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு நாம் சில நோய் தடுப்பு நடவடிக்கைகளை செய்து கொண்டால் நம்மை யார்தான் வெல்ல முடியும்? கொசுக்கடிக்கு இரையென மாயும் அற்ப ஜீவனாய் வீழ்வோம் என்று நினைத்தாயோ.. மனிதன்.. மகத்தானவன்!

படத்திற்கு நன்றி

http://blogs.burlingtonfreepress.com/weather/2011/09/20/vermonts-mosquito-coast/

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “எங்கும் பரவும் டெங்கை முறியடிப்போம்

  1. மக்களுக்கும் சுத்தம் சுகாதாரம் பற்றிய போதிய அறிவுரைகள் தரப்படுவதில்லை, பள்ளிகளிலும் (பள்ளிகளே அவல நிலையிலிருக்கின்றன) சரிவர சொல்லிக்கொடுப்பதிலை (ஆசிரியர்களுக்கே தெரிந்திருக்கவேண்டுமே).  இங்கு நான் வசிக்கும் சிங்கப்பூர் ஒரு சிறிய நாடாக இருந்தாலும்,  போற்றத்தகு நடவடிக்கைகளினால், மிகச் சிறந்த அழகு மிளிரும் சுத்தம் மிகுந்த நாடாகத் திகழ்கிறது.   சுகாதார அதிகாரிகள் அவ்வப்போது அபார்ட்மென்ட்களிலும் ஒவ்வொரு வீட்டிலும் குளியலறைகளிலும், சமையலறையிலும், பூத்தொட்டிகளிலும் தண்ணீர் தேக்கம் இருக்கிறதா, இருந்தால், அதில் கொசு முட்டைகள் இருக்கின்றனவா என்று பரிசோதிக்கின்றனர்.   இருந்தால், நோய் பரவும் காரணத்திற்காக அவர்கள் அபராதத் தொகையுடன் தண்டிக்கப்படுகிறார்கள். இந்தியா மிக மிக பெரிய மிக மிக மக்கள் தொகை கொண்ட நாடு எதுவும் செய்ய இயலாது என்ற வாதிப்பவர்கள் பலர்.  ஆனாலும், ஒவ்வொரு சிறு சிறு பாகங்களையும் ஒரு அதிகாரியின் கீழ் கொண்டுவந்து, முயற்சி செய்தால், சிங்கப்பூரை விட, ஒரு உன்னத நாடாக இந்தியா விளங்கும்.    டெங்கு காய்ச்சலுக்கு பப்பாளி இலைகளின் சாறு ஒரு நல்ல மருந்தாகும் என்று இந்த வளைத்தளத்திலிருந்து தெரிகிறது  http://www.indianexpress.com/news/papaya-leaf-juice-helps-fight-dengue-fever/1022585/

Leave a Reply to திருமலைசோமு

Your email address will not be published. Required fields are marked *