தமிழ்த்தேனீ

ஆகாஷ் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்துடன் தெளிவான பார்வையுடன் நின்றிருந்தான்.“ஏண்டா, உங்க டீச்சர் உன் மேலே புகார் குடுக்கறாங்க, நீ அதிகப் பிரசங்கித் தனமா நடந்துக்குறியாமே?” என்று அதட்டினான் ரமேஷ்.

“இல்லேப்பா நான் சரியாத்தான் நடந்துக்கறேன். டீச்சர் என்னை ஆஃல்பாபெடிக் ஆர்டர்லே ஏ பீ சீ டீ எழுதச் சொன்னாங்க, எழுதினேன். மறுபடியும் அதையே தலைகீழா எழுதச் சொன்னாங்க, எனக்கு கையெல்லாம் வலிச்சிதுப்பா. அதுனாலே ஒரு ஐடியா பண்ணேன், நான் ஆஃல்பாபெடிக்லே எழுதியிருந்ததை தலைகீழாக் காமிச்சேன், அப்போ தலைகீழாத் தெரியுமில்லே அதான். அந்த டீச்சருக்குப் புரியலைப்பா, திட்றாங்க” என்றான் ஆகாஷ்.

 “அப்புறம் தமிழ்லே ஒரு பாடம் எழுதச் சொன்னாங்க, அதிலே ஒரு வரிலே “அவள் சென்றாள்” ன்னு எழுதினேன், அதைப் படிச்சிட்டு எல்லாம் சரியாத்தான் எழுதி இருக்கே. ஆனா இந்த “அவள்“ அப்பிடீங்கிறதுலே மட்டும் தப்பா எழுதி இருக்கே. “அவல்” ன்னு எழுதி இருக்கே, அதுனாலே பெரிய “ள்” போடணும்னாங்க. சரின்னு சொல்லிட்டு ‘அவல்’ன்னு பெரிசா எழுதிக் காட்டினேன் திட்றாங்க” என்றான்.

பேரனை உச்சி மோந்தபடி, “என் பேரன் கெட்டிக்காரன் நல்லா யோசிக்கறான்” என்றாள் பாக்கியம். “போதும்மா, நீங்க அவனுக்கு ரொம்பச் செல்லம் குடுக்கறீங்க அதான்” என்றான் ரமேஷ். ஆனாலும் மனதுக்குள் இந்தச் சிறு வயதில் ஆகாஷோட புத்திசாலித் தனம் அவனுக்குள் ஒரு சிரிப்பை வரவழைத்திருந்தது. மகனை ரசித்துக் கொண்டே உணவருந்தினான் ரமேஷ்.

“பாட்டி, ஒரு கதை சொல்றியா?” அன்பாகக் கேட்டான் பேரன் ஆகாஷ்.   “என்னாலே முடியாது!” என்றாள் பாக்கியம் தீர்மானமான குரலில். உண்டு முடித்துக் கை கழுவித் துடைத்துக் கொண்டே வந்த ரமேஷ், “ஏம்மா? அவன் ஆசையாக் கதை கேக்கறான், ஏன் சொல்ல மாட்டேங்கற? என்றான்.

 “உன் பையனுக்குக் கதை சொல்ல என்னாலே முடியாதுப்பா. நீ சொல்லு, அவன் கேக்கட்டும்” என்றாள் பாக்கியம்.

“டேய் கண்ணா ஆகாஷ், இங்கே வா” என்று மடியில் உட்கார வைத்துக் கொண்டு, “அப்பா நான் சொல்றேன் கதை” என்றான் ரமேஷ். “போப்பா, உனக்குக் கதை சொல்லத் தெரியாது” என்றான் ஆகாஷ். அதிர்ந்தான் ரமேஷ். இன்றைக்குத் திரை உலகமே வியந்து பாராட்டும் ஒரு முதன்மை இயக்குனன் அவன். ஆகாஷ் சொன்னது ரமேஷின் தன்மானத்தையே பாதித்து விட்டது. “இல்லைடா கண்ணா, நான் நல்லாக் கதை சொல்லுவேன், இப்போ ஒரு கதை சொல்றேன், நீ கேக்கணும்” என்றான் அதட்டும் குரலில். ஆகாஷ் பயந்து போய் வேறு வழியில்லாமல் கதை கேட்க ஆரம்பித்தான்.

 பாக்கியம் நமுட்டுச் சிரிப்புடன் அவனையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். “ராமாயணம் கதை உனக்குச் சொல்லட்டுமா? ராமரோட பொண்டாட்டி சீதையை ராவணன் தூக்கிண்டு போயிட்டான். அவங்களை எங்கே வெச்சிருக்கான் ராவணன்? அப்பிடீன்னு கண்டு பிடிக்க அனுமாரை அனுப்பினாங்க”

“போங்கப்பா, இது வரைக்குத்தான் சொல்லிக் கிட்டே இருக்கீங்க, அதுக்கு மேலே சொல்ல மாட்டேங்கறீங்க, அது சரி, உங்களுக்குப் புதுசா எதுவும் கதை சொல்லத் தெரியாதா? எனக்கு இந்தக் கதை வேணாம், உண்மையாக் கதை வேணும்” என்றான் ஆகாஷ்.

 “சரிதான், உனக்குப் பாட்டி ஏன் கதை சொல்ல மாட்டேங்கறாங்கன்னு இப்போ புரியுது. பெரியவங்க சொன்னாக் கேட்டுக்கணும். எதுத்துப் பேசக் கூடாது” என்றான் ரமேஷ். “அப்பிடித்தான் கேப்பேன், பாட்டிதான் சொன்னாங்க. சந்தேகம் வந்தாக் கேக்கணும். அப்போத்தான் அறிவு வளரும்ன்னு” என்றான் ஆகாஷ்.

 “ஏம்ப்பா. உன்னோட ரசிகர்கள் உன்னைக் கேள்வி கேக்கறதில்லே? அதே மாதிரிப் பையனும் உன்னைக் கேள்வி கேக்கக் கூடாதுன்னா முடியுமா? ரசிகர்கள் எதிர்க் கேள்வி கேட்டா எப்பேர்ப்பட்ட டைரக்டரும் பதில் சொல்ல முடியாதுப்பா. ஆனாப் பையன் கிட்டே உன் பாச்சா பலிக்காது” என்றாள் பாக்கியம்.    “சரி.. சரி.. நீ பாட்டி கிட்டயே கதை கேட்டுக்கோ” என்றபடி அங்கிருந்து நழுவினான் ரமேஷ்.

 “பாட்டி ஒரு கதை சொல்லு பாட்டி, நான் சமத்தாக் கேக்கறேன்” என்றான் ஆகாஷ். மனமிளகிய பாட்டி பாக்கியம், “சரி உங்க அப்பா சொன்னாரே, அந்தக் கதையைச் சொல்றேன். அனுமார் கதை சொல்றேன் சரியா” என்றாள் ஆர்வமாகக் கதை கேட்க உட்கார்ந்தான் ஆகாஷ்.

 “அனுமார் வானத்திலே பறந்து போயி” என்று ஆரம்பித்தாள் பாட்டி, உடனே “ஆகாஷ் ஏன் அப்போல்லாம் ஏரோப்ளேன் கிடையாதா?” என்றான். “இல்லேடா, அப்போக் கண்டு பிடிக்கலே”

 “சரி, மேலே கேளு. லங்கைக்குப் போனார். அங்கே போயிப் பார்த்தா அந்த நாட்டுலே ஒரு அழகான வனம் இருந்துது, அங்கே போயி இறங்கினார். அவருக்கு மனசுக்குள்ளே ஒரே கோவம். அவர் தெய்வமா நினைக்கிற ஶ்ரீராமனோட பொண்டாட்டி சீதையை ராவணன் கடத்திண்டு வந்துட்டான். அந்தக் கோவத்திலே ஆக்ரோஷமாப் போயிண்டு இருக்கார். அப்போ இந்திரஜித்னு ஒரு ராட்சசன் பிரும்மாஸ்திரம் போட்டு அவரைக் கட்டிப் புட்டான்.”

 “அங்கே இருந்த ராக்‌ஷசா எல்லாம் அனுமாரைக் கேலி செஞ்சுண்டே அவரோட வால்லே நெருப்பு வச்சா” என்றாள் பாக்கியம்.   “ஏன் பாட்டி, உடனே அனுமார் ஃபயர் இஞ்சினுக்குப் போன் போட்டுக் கூப்பிட வேண்டியதுதானே?” என்றான் ஆகாஷ்.

 “இதோ பாரு, எனக்குத் தூக்கம் வருது, நானும் நீயும் தூங்கலாமா” என்றாள் பாக்கியம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *