முகில் தினகரன்

பிரசவ வார்டின் முன்பகுதியில் கேட்டுக் கொண்டிருந்த அந்தக் கத்தல்களும்…களேபரங்களும் சீஃப் டாக்டர்  நந்தினி வர சட்டென்று அடங்கிப் போயின.

“என்ன…என்ன இங்க சத்தம்?…இதென்ன பிரசவ வார்டா இல்ல மீன் கடையா?” குரலில் இருந்த கம்பீரம் எல்லோரையும் ஸ்தம்பித்து நிற்கச் செய்ய சற்று தைரியமான ஒரு நர்ஸ் மட்டும் முன் வந்து பதில் சொன்னாள்.

“டாக்டா;…ஒரு சிக்கலான பிரசவ கேஸ் அட்மிட் ஆகியிருக்கு, இவங்கெல்லாம் அந்தப் பொண்ணோட உறவுக்காரங்க..”

“இருக்கட்டும்…அதுக்காக சத்தம் எதுக்குப் போடணும்?”

“இல்ல டாக்டா;…அந்தப் பொண்ணு…சொன்ன பேச்சுக் கேட்காம இந்த நிலைல டூவீலர் ஓட்டிப் பழகப் போயி கீழ விழுந்திருக்கு…வயத்துல எக்கச்சக்கமா அடிபட்டிருக்கு… அதான் சொந்தக்காரங்கெல்லாம் …அதோட புருஷன் உட்பட அந்தப் பொண்ணைத் திட்டித் தீர்த்துட்டிருக்காங்க”

“வாட் நான்சென்ஸ்?..எதுக்கு அந்தப் பொண்ணைத் திட்டணும்?…அவளைத் திட்டிட்டா எல்லாம் சரியாய்டுமா?…இந்தக் கூட்டத்துல அந்தப் பொண்ணோட புருஷன் யாரு காட்டு… நான் கேட்கறேன்..” சீஃப் டாக்டர் நந்தினி கடுப்பாகி நோக்க,

சற்று மாநிறமாய்…அகன்ற முகத்துடன்…குள்ளமாய்…குண்டாய் இருந்த ஒருவனை நர்ஸ் முன்னுக்கு அழைத்தாள்.

வந்தவனிடம் பேச சீஃப் டாக்டர் நந்தினி வாயெடுக்கும் முன் அவனே முந்திக் கொண்டு,

“த பாரு டாக்டர்…நானும் எங்காத்தாவும் இந்தச் சனியன் புடிச்சவகிட்ட படிச்சுப் படிச்சுச் சொன்னோம்… “வாயும் வயிறுமாய் இருக்கறே..வண்டிய எடுக்காதே”ன்னு…கேட்டாளா?…இப்ப வந்திடுச்சல்ல…கேடு வந்திடுச்சல்ல?…அதான் சொல்லிப் போட்டோம்.. அதோட வயத்துல இருக்கறது எங்க வம்சத்தோட வாரிசு… அதுக்கு மட்டும் ஏதாச்சும் ஆகியிருக்கட்டும்… மவளே.. அப்புறம் கவனிச்சுக்கறோம் அவளை…”

“எங்க குல விளக்கு மட்டும் உசுரோட பொறக்கலே….இந்தச் சிறுக்கி மவளுக்கு நானே சங்கு ஊதி…நானே கொள்ளி போட்டுடுவேன்… ”மாமியார்க்காரி போல் தெரிந்த ஒருத்தி சாமியாடினாள்.

டென்ஷனாகிப் போன சீஃப் டாக்டர் நந்தினி, “இங்க பாருங்க…இதெல்லாம் எதிர்பாராம நடக்கற விபத்துக்கள்…யாரும் வேணுமின்னு எதுவும் செய்யறதில்லை…”

“நீ…என்ன வேணா சொல்லு டாக்டரம்மா..எங்க வம்ச விளக்கு மட்டும் நல்லபடியா வரலை… இங்க நடக்கறதே வேற…”

சொல்லித் திருத்த முடியாத இந்த ஜென்மங்களிடம் தொடர்ந்து பேசுவதில் சிறிதும் பிரயோஜனமில்லை என்பதை உணர்ந்த சீஃப் டாக்டா; பிரசவ அறையை நோக்கி வேகவேகமாக நடக்க,

கத்தல்களும்… களேபரங்களும் மறுபடியம் மெல்லமாய்த் தலை தூக்க ஆரம்பித்தன.

பிரசவ அறை.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேல் கடுமையாகப் போராடிய சீஃப் டாக்டர் நந்தினியால் பெரிய உயிரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.

“எங்க குல விளக்கு மட்டும் உசுரோட பொறக்கல….இந்தச் சிறுக்கி மவளுக்கு நானே சங்கு ஊதி…நானே கொள்ளி போட்டுடுவேன்…” என்ற மாமியாரின் மிரட்டலும்

“எங்க வம்ச விளக்கு மட்டும் நல்லபடியா வரலை…இங்க நடக்கறதே வேற…” என்ற புருஷனின் அதட்டலும்,  சீஃப் டாக்டா; நந்தினியின் காதுகளில் திரும்பத் திரும்ப எதிரொலிக்க, குழம்பிப் போனார்.

“இப்ப என்ன செய்யறது…எப்படி சமாளிக்கறது…இந்தச் சூழ்நிலைல வெளிய நிக்கற கூட்டத்துக்கு தகவல் தெரிஞ்சுது அவ்வளவுதான்…இந்தப் பொண்ணோட கதி அதோ கதிதான்”

“டாக்டா;…இப்ப என்ன பண்றது?” அசிஸ்டெண்ட் சர்ஜன் விமலா கேட்க,

நெற்றியைத் தடவிக் கொண்டு யோசித்த சீஃப் டாக்டா; நந்தினி, திடிரென ஒரு முடிவுக்கு வந்தவராய் “கரெக்ட்…அதுதான் ஒரே வழி” எனத் தனக்குள் சொல்லிக் கொள்ள,

“டாக்டா;…?”

“ம்ம்ம்…மிஸ்.விமலா..ஆறாவது வார்டுல இன்னிக்குக் காலைல ஒரு பெண்ணுக்கு பிரசவம் ஆச்சே..பெண் குழந்தை பிறந்ததே?…,”

“ஆமாம் டாக்டர்”

“அந்தப் பொண்ணு மயக்கம் தெளிஞ்சு எழுந்தாச்சா?”

“இல்ல டாக்டா;…இன்னும் தெளியலை” என்ற அசிஸ்டெண்ட் சர்ஜன் “ஏன் டாக்டர்?..எதுக்குக் கேட்கறீங்க?”

“அந்தப் பொண்ணு நேத்திக்கு என்கிட்ட ஒரு வேண்டுகோள் வெச்சுது”

“என்ன வேண்டுகோள் டாக்டர;?”

“ஏற்கனவே அவளுக்கு மூணு பெண் குழந்தைகளாம்..நாலாவதா ஒண்ணு போன வருஷம் பொறந்திச்சாம்… அதுவும் பொண்ணாப் போயிட்டதால அவளோட புருஷனும் மாமியார்காரியும் சேர்ந்து அந்தப் பெண் குழந்தையை கள்ளிப் பாலுக்கு பலியாக்கிட்டாங்களாம்… இப்ப ஐந்தாவதா பொறக்கப் போறதும் ஒரு வேளை பொண்ணாயிருந்திட்டா அவ மயக்கம் தெளியறதுக்கு முன்னாடியே அதை நான் அழிச்சிடனுமாம்… இல்லென்னா எங்காவது கொண்டு போய் அனாதை ஆசிரமத்துல சேர்த்துடனுமாம், ஏன்னா… எப்படியும் வீட்டுக்குப் போனதும் அவ புருஷனும் மாமியாரும் அந்தக் குழந்தையைக் கொல்லத்தான் போறாங்களாம்.. ஹூம்…ஒரு டாக்டரான நான் உயிர்களை காப்பாற்ற மட்டுமே செய்வேன் எந்தச் சூழ்நிலையிலும் அதை அழிக்க முற்பட மாட்டேன்னு பாவம் அந்தப் பொண்ணுக்குத் தெரியலை”

“டாக்டர் நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலை” அசிஸ்டெண்ட் சர்ஜன் விமலா புருவத்தைச் சுருக்கிக் கொண்டு கேட்க,

“அந்தப் பெண் மயக்கம் தெளியறதுக்கு முன்னாடி அந்தக் குழந்தையை எடுத்திட்டு வந்து இங்க போட்டுடு…அதே மாதிரி இறந்து பிறந்த இந்தக் குழந்தையைக் கொண்டு போய் அங்க போட்டுடு”

“டாக்டா;…..”

“யோசிக்கவே வேண்டாம்…எப்படியும் அந்தப் பெண் குழந்தை வீட்டுக்குப் போனதும் கள்ளிப் பாலுக்கு இரையாகத்தான் போகின்றது.. எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டாத அந்த ஜென்மங்க கிட்டயிருந்து இந்தப் பெண் குழந்தையைக் காப்பாத்த ஒரே வழி இதுதான்”

“டாக்டர் …நீங்க சொல்றதெல்லாம் சரிதான்…ஆனாலும்…இது…”

“மிஸ்.விமலா அப்படியே இந்தப் பக்கமும் கொஞ்சம் பாருங்க… “குழந்தை மட்டும் செத்துப் பிறக்கட்டும் உன்னையக் கவனிச்சுக்கறேன்”னு கட்டினவனும் அவளோட உறவுக்காரங்களும் குமுறிக்கிட்டிருக்கற இந்த நெலைல நாம போய் “குழந்தை இறந்துதான் பிறந்தது”ன்னு சொன்னா என்ன நடக்கும்?….யோசிச்சுப் பாரு”

“அய்யோ டாக்டர், அந்தக் கும்பல் அந்தப் பொண்ணை இங்கியெ வெச்சுக் கொன்னாலும் கொன்னு போட்டுடுவாங்க” சொல்லும் போதே அசிஸ்டெண்ட் சர்ஜன் விமலாவின் உடல் லேசாக நடுங்கியது.

“புரியதா?…இப்பப் புரியதா..நான் ஏன் அப்படிச் செய்யச் சொன்னேன்னு?”

“இருந்தாலும் டாக்டர், இது தப்பில்லையா?”

“மிஸ்.விமலா…ஆண்டவன் சில சமயம் சில தவறுகளை செய்து விடுகிறான்…அதாவது வேண்டாம்னு நெனைக்கறவங்களுக்கே திரும்பத் திரும்ப நிறையக் குடுக்கறான்…அதே சமயம் “வேணும்…வேணும்”னு  ஏங்கறவங்களுக்கு ‘இல்லை’ன்னு ‘பொசுக்’குன்னு கையை விரிச்சிடறான்…அதான் ஆண்டவனோட இந்தச் சிறிய தவறை நான் திருத்தறேன்… அவ்வளவுதான்… நான் செய்யற இந்தச் செயலினாலே ஒரு குழந்தை இந்த உலகத்துல உயிரோட இருக்கும்…ஒரு தாய் இந்த உலகத்துல சந்தோஷமா வாழ்வா…அது போதும்மா எனக்கு…”

அசிஸ்டெண்ட் சர்ஜன் விமலா பதிலேதும் பேசாது அமைதி காக்க,

“என்னடா இது…அதிகப் பிரசங்கித்தனமா ஆண்டவனையே திருத்தறேன்னு சொல்றாளே அப்படின்னு நீ நினைக்கறது எனக்குப் புரியது மிஸ்.விமலா…அதே நேரம் நீயும் ஒண்ணைப் புரிஞ்சுக்கோ டாக்டர்களுக்கு ஆண்டவனைத் திருத்தற அந்த உரிமை இருக்கு! ஏன்னா… அவங்க ஆண்டவனோட பிரதிநிதிகள்”

நெகிழ்ந்து போய் சீஃப் டாக்டர் நந்தினியை தலையாட்டலில் பாராட்டிய அந்த அசிஸ்டெண்ட் சர்ஜன் அவர; இட்ட கட்டளையை படு நாசூக்காக யாருக்கும் சிறிதும் சந்தேகம் ஏற்படாத வகையில் செய்து முடித்தாள்.

ஆறாவது வார்டில்

“இன்னாது…பொட்டக் கொளந்த செத்துப் பொறந்திச்சா?..ரொம்ப சந்தோஷம்..நமக்கு வேலை மிச்சம்” கல் மனசுக் கணவன் கரகரத்த குரலில் சொல்ல, அவன் தாய் முக மலர்ச்சியுடன் மேலும் கீழுமாய்த் தலையாட்டினாள்.

அதே நேரம்….பிரசவ வார்டில்…

“எப்படியோ டாக்டர் எங்க வம்ச வாரிச…மகாலட்சுமிய…உசுரோட பொறக்க வெச்சுக் குடுத்துட்டீங்க… நீங்க நல்லா இருக்கோணும்” புருஷன்காரன் சீஃப் டாக்டர்; நந்தினியைக் கும்பிட,

அவன் அம்மாக்காரி மருமகளின் தலையைத் தடவிக் குடுத்தபடி சொன்னாள் “பின்னே…எப்பேர்ப்பட்ட வம்சத்துல வந்து உதிச்சிருக்கற குழந்தை இது…இந்த மாதிரியான சின்னச் சின்ன விபத்துக்கெல்லாம் செத்துடுமா என்ன?”

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *