சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

2012 தனது முடிவை நோக்கி அவசரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் எத்தனையோ நிகழ்வுகளைத் தனக்குள்ளே தாங்கியவாறு ஓடிக் கொண்டிருக்கிறது. இவற்றிலே சில மகிழ்ச்சியானவை சில துன்பகரமானவை ஆனால் அனைத்துமே நடந்த நிகழ்வுகளின் நிழல்களாகத்தான் மக்களின் மனங்களிலே பதிந்து போய் இருக்கின்றன.

எமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளாமல் எம்மை அடக்கி ஆள்பவர்களால் எமக்கு நடத்தப்படும் நிகழ்வுகள் எமது வாழ்க்கையில் பல திருப்பங்களை ஏற்படுத்தி விடுகிறது. இவைகளில் சில எம் வாழ்க்கைகளை முன்னேற்றுகிறது வேரு சிலவோ எமது வாழ்க்கையில் பல இன்னவொன்னா தொல்லைகளைத் தந்து அனுபவம் எனும் அத்தியாயத்தோடு இதயத்தை உறைய வைத்து விடுகிறது.

என்னடா இது ஏதோ ஒரு பெரிய பீடிகையுடன் ஆரம்பிக்கிறானே என்று எண்ணுவது போலத் தெரிகிறது ! பயப்படாதீர்கள் என்னுடைய ஆரம்பத்திற்கு ஒரு காரணம் உண்டு.

2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் வாழும் பல வம்சாவழி இந்தியர்களின் மனதினிலே நீங்காத வடுவைத் தாங்கி நிற்கிறது. ஆமாம் உகாண்டா நாட்டின் அதிபதியால் அந்நாட்டில் வாழ்ந்த இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட 40 ஆண்டு நிறைவேயாகும்.

உலகத்தில் எந்த நாட்டிலுமே கண்டிராத வகையில் மிக அதிக அளவில் மக்கள் நாடு கடத்தப்பட்டமை சமீப காலத்து உலக வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.

எப்படி இந்த இந்தியர்கள் உகாண்டா நாட்டிற்கு இடம், பெயர்ந்தார்கள்.

1882ம் ஆண்டு வாணிபம் செய்வதற்கு உள்ளே நுழைந்து நாட்டின் அதிகாரத்தையே வாணிபமாக மாற்றிய இங்கிலாந்து அரசியல் வியாபாரிகளே இதற்கு மூல காரணம்.

உலகின் பல நாடுகளையும் தமது Gun Boat Diplomacy எனும் கட்ற்படை ஆக்கிரமிப்பால் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பிரித்தானிய ஏகாதிபத்திய ராஜ்ஜியத்தில் ஆதவன் மறைவதே இல்லை என்று பறை தட்டிய இங்கிலாந்து அரசாங்கத்தினால் புலம் பெயரப் பண்ணப்பட்டவர்களே இவ்விந்தியர்களின் மூதாதையர்கள் எனலாம்.

1890களில் உகாண்டா நாட்டில் இரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபடுத்த சுமார் 32000 இந்தியர்கள் பிரித்தானிய அரசினால் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.

இப்புகையிரதப் பாதை அமைப்பு முடிவுற்றதும் உயிருடன் எஞ்சிய பலர் மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பினர் ஆனால் 6724 பேர் உகாண்டாவைத் தமது நிரந்தர வசிப்பிடமாக மாற்றிக் கொண்டனர்.

இந்தியர்கள் தையல் தொழிலும், வங்கித் தொழிலும் செய்து மேன்மையடைந்தார்கள். இயற்கையாகவே கடும் உழைப்பளிகளான என் தாயக மக்கள் தமது கடும் உழைப்பினால் உகாண்டா நாட்டின் பொருளாதாரத்தில் அதி முக்கிய நிலை வகித்தார்கள்.

எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் இந்தியர்கள் பெரும்பான்மையான உகாண்டா நாட்டு கறுப்பின மக்களை விட அதியுயர்ந்த நிலையில் இருப்பதா என வெகுண்டெழுந்த சில துவேஷ அரசியல்வாதிகளால் உகாண்டா நாட்டு மக்களுக்கு இந்தியர்கள் மீதிருந்த காழ்ப்புணர்ச்சி ஊதிப் பெருப்பிக்கப்பட்டது.

1968 ம் ஆண்டே அந்நாளில் உகாண்டா நாட்டு அதிபராக இருந்த மில்டன் ஓபட்டோ என்பவர் உகாண்டா நாட்டின் வணிகத்துறையையும், தொழிற்துறையையும் ஆப்பிரிக்க மக்கள் வசப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முடுக்குவதாகக் கூறி இந்தியர்களின் மீது பாரபட்சமாக நடந்து கொள்ளும் விதிமுறைகளை இயற்றினார்.

இந்தியர்களின் செல்வாக்கை மட்டுப்படுத்துவதற்காக 1969ம் ஆண்டு பல வேலை அனுமதிப் பத்திர முறையும், வியாபார அனுமதிப் பத்திர முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டன.

மில்டன் ஓபட்டோ , இடி அமீன் எனும் இராணுவ அதிகாரியால் தூக்கியெறியப்பட்டு இடி அமீன் உகாண்டா நாட்டின் அதிபராக பதவி ஏற்றதும் இந்தியர்கள் மீதான துவேஷத்தின் அடிப்படையில் தமது பதியை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக இந்திய எதிர்ப்புப் பிரச்சாரங்களை மேலும் முடுக்கி விட்டார்.

விளைவு !

1972ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி உகாண்டா நாட்டு இந்தியர்கள் உகாண்டாவை விட்டு வெளியேறுவதற்கு இடி அமீன் 90 நாட்கள் கெடு விதித்தார்.

கடுமையான உழைப்பை மூலதனமாகப் போட்டு தமது வியாபாரங்களைக் கட்டி எழுப்பி தமது தாயகத்திலிருந்து வலுக்கட்டாயமாக புலம்பெயர்க்கப்பட்டும் மன உறுதியை இழந்து விடாமல் தமக்கென ஒரு ஸ்திரமான வாழ்வை ஏற்படுத்தி வைத்திருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கண்ணீருடன் தமது வியாபாரங்களையும், தாம் கடினமாக உழைத்துச் சேமித்த தமது உடமைகளையும் கைவிட்டு உகாண்டாவை விட்டு வெளியேறினார்கள்.

அவர்களுடன் சேர்ந்து உகாண்டா நாட்டின் மனிதாபிமானமும் வெளியேறியது.

இங்கிலாந்து நாட்டு பிரஜாவுரிமை கொண்டவர்களில் இங்கிலாந்து நாட்டிற்கு இடம்பெயர விரும்பியவர்கள் சுமார் 30000 பேருக்கு இங்கிலாந்தில் அகதிகள் அந்தஸ்து அளிக்கப்பட்டது.

இவர்களில் பலர் 0 எனும் எண்ணிலிருந்து ஆரம்பித்து இன்று இங்கிலாந்து நாட்டின் கோடிஸ்வரர்களில் இருவர்களாகத் திகழ்ந்து எமது இந்திய நாட்டு மக்களின் உழைப்பின் மகிமைக்கு கிடைத்த வெற்றி என்று இங்கிலாந்து நாட்டின் பழுத்த அரசியல்வாதிகள் பலர் போற்றுவதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்.

இவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவராக மிக் ஜட்டெனியா (Mike Jatania) உம் அவரது மூன்று சகோதரர்களும் திகழ்கிறார்கள். உகாண்டா நாட்டிலிருந்து அகதியாக இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்படும் போது நிராதரவாக வந்த இவர்கள் இன்று 850 மில்லியன் பவுண்ஸ் பெறுமதியான சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளது ஒன்றே இம்மனிதர்களின் கடுமையான உழைப்பிற்கு உதாரணமாகத் திகழ்கிறது.

தமது தாய்நாட்டிலிருந்து அதனுடன் எந்த சம்பந்தமுமேயில்லாத ஒரு நாட்டின் அதிகாரவர்க்கத்தினால் நாடு கடத்தப்பட்டு தாம் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்ட நாட்டில் தமக்கென ஒரு வாழ்வைத் தமது கடுமையான உழைப்பினால் எற்படுத்திக் கொண்ட பின்னால் தமது உடமைகள் அனைத்தையும் பறிகொடுத்து மூன்றாம் நாட்டிற்கு அகதியாக இடம் பெயர்ந்து இன்று அந்த நாட்டின் கோடீஸ்வரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்களென்றால் அவர்களின் மனத்திடத்தையும், நம்பிக்கையையும் எதற்கு ஒப்பிட முடியும்.

இத்தகைய வாழ்க்கைகளை அலசுவதன் மூலம் இளய தலைமுறையின் நம்பிக்கை மேலும் வலுவடையும் என்பது எனது நம்பிக்கை.

இதற்காகத்தான் கவியரசர்,

வாழ்ந்து பார்க்க வேண்டும் அறிவில்
மனிதனாக வேண்டும்
வாசல் தேடி உலகம் உன்னை
வாழ்த்திப் பாட வேண்டும்!     என்று எழுதி வைத்தாரோ ?

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *