செழியன்

காதலே !
நீ ஒரு  கானல் நீரே .
விலையில்லா
இந்த உயிர்களை
ஏன் ? விட்டில்    பூச்சி  ஆக்குகிறாய் .

உனக்கும்
தோல்விக்கும் ஏன்
இந்த பற்றுதல்

முதலில் பசுமை காட்டி
முன்னேற விட்டு
முடிவில்
தோல்விப் பாலைவனத்தில்
தள்ளும்  நீ
ஒரு கானல் நீரே.

விளையாத  நிலத்தில்
முளையாத
வித்தாக  விழுந்து
வெறுப்பேற்றி
நெஞ்சங்களை  ஏன்?
வேதனைப்  படுத்துகிறாய் .

எங்களை  எப்போதும்
ரோமியோ -ஜூலியட்
அம்பிகாபதி-அமராபதி
லைலா -மஜ்னு வாக
பார்க்கத்தான்  விருப்பமா?
ஷாஷகான் -மும்தாஜ்  ஆக
பார்க்க விருப்பமில்லையா?

தோல்விக்குத் தஞ்சம் அளிக்கும்
உன்னால்
துவண்ட  நெஞ்சங்களுக்கு
வாழ்வு  அளிப்பதில்
ஏனிந்த  கஞ்சம் .

பருவக் குளத்தில்
துள்ளித் திரியும்
எங்களுக்கு
நீ
தூண்டில்  புழுவாகவே
காட்சி அளிக்கிறாய்

தேனைத்
தேடி வரும்  வண்டிற்கு
திராவகத்தை
கொடுப்பதிலையே  மலர்கள் .

தோல்வி
சரித்திரத்தை  நீ
தொடர
எங்கள்  உயிர்தான்
உனக்கு மையாகுகிறது .
காதலே !
உன் தோல்வித் தாகம்
இன்னுமா  தணியவில்லை.

உன்
தோல்வித்  தொடரை
பல நூறு  ஆண்டுகளாக
படித்து  கொண்டுதான் இருக்கிறோம் .
நீயும்  தொடரை  முடிக்கவில்லை .
நாங்களும்  திருந்த வில்லை .

காதலே !
உனக்காக  கோயில்
கட்ட முனைந்தோம் .
நீ
எங்களை
தோல்விக் கல்லறைக்குள்
தள்ளுவாய்  என்று  அறியாமல் .

இளமைப்  பூங்காவில்
நீ
தென்றலாய்த்தான்  நுழைகின்றாய் .

அதை நீ
கடந்த பின்னர்
பார்த்தால்
அது
புயல்  நுழைந்த
பூங்காவாக  அல்லவா  இருக்கிறது .

இது புரியவில்லை
இந்த  பூஞ்செடிகளுக்கு .

உன்னால்
இணைந்த உள்ளங்கள்  சில .
இடிந்த உள்ளங்களோ  பல .

படத்துக்கு நன்றி

http://funtimebirdy.wordpress.com/2010/07/07/lovebirds-in-the-wild/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *