ஒரு காதல் தோல்வியாகிறது
காதலே !
நீ ஒரு கானல் நீரே .
விலையில்லா
இந்த உயிர்களை
ஏன் ? விட்டில் பூச்சி ஆக்குகிறாய் .
உனக்கும்
தோல்விக்கும் ஏன்
இந்த பற்றுதல்
முதலில் பசுமை காட்டி
முன்னேற விட்டு
முடிவில்
தோல்விப் பாலைவனத்தில்
தள்ளும் நீ
ஒரு கானல் நீரே.
விளையாத நிலத்தில்
முளையாத
வித்தாக விழுந்து
வெறுப்பேற்றி
நெஞ்சங்களை ஏன்?
வேதனைப் படுத்துகிறாய் .
எங்களை எப்போதும்
ரோமியோ -ஜூலியட்
அம்பிகாபதி-அமராபதி
லைலா -மஜ்னு வாக
பார்க்கத்தான் விருப்பமா?
ஷாஷகான் -மும்தாஜ் ஆக
பார்க்க விருப்பமில்லையா?
தோல்விக்குத் தஞ்சம் அளிக்கும்
உன்னால்
துவண்ட நெஞ்சங்களுக்கு
வாழ்வு அளிப்பதில்
ஏனிந்த கஞ்சம் .
பருவக் குளத்தில்
துள்ளித் திரியும்
எங்களுக்கு
நீ
தூண்டில் புழுவாகவே
காட்சி அளிக்கிறாய்
தேனைத்
தேடி வரும் வண்டிற்கு
திராவகத்தை
கொடுப்பதிலையே மலர்கள் .
தோல்வி
சரித்திரத்தை நீ
தொடர
எங்கள் உயிர்தான்
உனக்கு மையாகுகிறது .
காதலே !
உன் தோல்வித் தாகம்
இன்னுமா தணியவில்லை.
உன்
தோல்வித் தொடரை
பல நூறு ஆண்டுகளாக
படித்து கொண்டுதான் இருக்கிறோம் .
நீயும் தொடரை முடிக்கவில்லை .
நாங்களும் திருந்த வில்லை .
காதலே !
உனக்காக கோயில்
கட்ட முனைந்தோம் .
நீ
எங்களை
தோல்விக் கல்லறைக்குள்
தள்ளுவாய் என்று அறியாமல் .
இளமைப் பூங்காவில்
நீ
தென்றலாய்த்தான் நுழைகின்றாய் .
அதை நீ
கடந்த பின்னர்
பார்த்தால்
அது
புயல் நுழைந்த
பூங்காவாக அல்லவா இருக்கிறது .
இது புரியவில்லை
இந்த பூஞ்செடிகளுக்கு .
உன்னால்
இணைந்த உள்ளங்கள் சில .
இடிந்த உள்ளங்களோ பல .
படத்துக்கு நன்றி
http://funtimebirdy.wordpress.com/2010/07/07/lovebirds-in-the-wild/