சொர்க்க வாசல்!
பவள சங்கரி
அகக் கண்கள் திறந்து
காட்சிகள் விரிகின்றன.
அழகான நீர் நிலையைக் காண்கிறேன்!
இரு புறமும் கொத்துக் கொத்தாக
மலர்கள் தாங்கிய குறுஞ்செடிகள்
நீலமேகக் கூரையில்
வெண்பஞ்சுப் பொதிகள்
வெளிர்நீல மலைக் குன்றுகளில்
பனிபடர்ந்த மரக் கன்றுகள்!
அந்தி மயங்கும் நேரம்…..
கூட்டில் அடையப் போகும்
புள்ளினங்களின் கீச்சுக் கீச்சு கீதம்.
மனம் அமைதியில் திளைத்த இன்பம்.
அந்த ஓடைக்கரையிலொரு குச்சு வீடு
சின்ன அறையில் நிறைமனதுடன் நான்!
குச்சு வீட்டின் கொல்லைப்புறத்து
பசுமையான வயல் வெளி
நாணம். கொண்ட பயிர்களின் மோனம்
கரையோரத்து மலர்களின் நறுமணம்
குடில்… அழகான குடில்
எளிமையான மனிதரும்
அழகான புள்ளினங்களும்
பகிர்ந்து வாழும் அழகிய குடில்!
குடிலின் அருகில் என் சொந்தங்கள் இல்லை
என் சாதி இல்லை… என் மதம் இல்லை
என் இனம் கூட இல்லை
பெயர் மட்டுமே அடையாளமாக…..
அன்பு மட்டுமே ஆதாரமாக
இயற்கையின் இனிமையைக்
கொண்டாடும் இனமாக
அந்த அழகைப் பகிர்ந்து
பருகும் இனமாக.
திறந்த இதயத்துடன், பரந்த
மனதுடன் வாழும் இனம்.
அங்கு என் அமைதியான
ஆனந்தமான வாழ்க்கை!!
நன்றி – இன் & அவுட் சென்னை பிரசுரம்
படத்திற்கு நன்றி:
http://www.allpics4u.com/nature/top-10-natural-scenery.html
‘பெயர் மட்டுமே அடையாளமாக’..
பெயர் சொல்லும் கவிதை..
வாழ்த்துக்கள்…!
-செண்பக ஜெகதீசன்…
“காணி நிலம் வேண்டும்” படித்தால் வரும் ஏக்கம் இந்தக் கவிதையைப் படித்தாலும் வருகிறது
அன்பின் திரு செண்பக ஜெகதீசன்,
தங்கள் அன்பான வாழ்த்துரைக்கு மனமார்ந்த நன்றி.
அன்புடன்
பவள சங்கரி
அன்பின் தேமொழி,
தங்களின் வாசிப்பிற்கும் , அன்பான வார்த்தைகளுக்கும் நன்றி தோழி.
அன்புடன்
பவள சங்கரி
தரணி எங்கும் தேடினும்
கிட்டாது எட்டாது,
ஊர் பேர் தெரியாது
ஜாதி மதம் பாராது
காணும் இன்பம்
மாறாத மனிதநேயம்!
அன்பின் டாக்டர் ஜான்சன் அவர்களுக்கு,
தங்களுடைய அன்பான புரிதலுக்கும், வாசிப்பிற்கும் ஊக்கமான வார்த்தைகளுக்கும் மனமார்ந்த நன்றி.
அன்புடன்
பவள சங்கரி