நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’:: தொடர்-22

2

பெருவை பார்த்தசாரதி

அன்றாடம் அதிகாலை எழுந்தவுடன், தேனீர் அருந்திவிட்டு, தினசரிகளை முழுவதும் படிக்காமல், தலைப்புச் செய்திகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அவசரமாக ஒவ்வொரு பக்கத்தையும் திருப்பி, மனதுக்குப் பிடித்த விஷயங்களில் ஓரளவுக்கு கவனம் செலுத்தும் போது, முழுவதும் படிக்க முடியாமல் அலுவலகத்துக்கு நேரம் ஆகிவிடுகிறது. அவசர அவசரமாக குளித்து முடித்துவிட்டு உடலில் துவளும் தண்ணீர்த் துளிகளைக் கூட துவட்டாமல் அப்படியே நின்று கொண்டு சாப்பிட்டுவிட்டு, மீண்டும் அவசரகதியில் அலுவலகம் சென்று விடுகிறோம். அவரவர் வேலைக்கேற்றபடி அயறும் வரை உழைத்துவிட்டு மறுபடி பசியாறுகிறோம். அந்திசாயும் வேளையில் சிற்றுண்டி அருந்திவிட்டு, மறுபடி கணிணியின் மானிட்டரில் முகத்தை நுழைத்து, மெளஸைக் (mouse) கையில் பிடித்துக்கொண்டு, காதில் ஹெட்போனுடன் நேரம் தெரியாமல் எதையோ, யாருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டேயிருக்கிறோம். அலுவலகப் பணி முடிந்தவுடன் வாகனத்தை வேகமாக ஓட்டி, வீடு வந்து சேர்கிறொம். என்ன சாப்பிடுகிறோம் என்றுகூடத் தெரியாமல், காதைப் பிளக்கும் சத்தத்துடன் டிவி பார்த்துவிட்டு, பத்து பதினோரு மணிக்கு நித்திரா தேவி அருளால் கண்ணைமூடி, உண்ட களைப்பில் கிடந்து உறங்குகிறோம். அடுத்த நாள் காலை அதிகாலையில் எழுந்திருப்பதற்கு அலாரம் வைத்துவிட்டு, மணி ஒலித்ததும் நிதானமாக அணைத்துவிட்டு, மீண்டும் தூங்குவதற்கு எத்தனிக்கிறோம். இதுதான் இன்றய வாழ்க்கை முறை என்பது பொதுவாக அனைவருக்குமே பொருந்தும் விஷயமாக ஆகிவிட்டது.

இயல்பாக நம்முடைய வாழ்க்கை முறையை நாம் சிந்தித்துப் பார்த்தோமானால், நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களையும் நாம் எதற்காகச் செய்கிறோம் என்று கூடத் தெரியாமல் அதைச் செய்துகொண்டே இருக்கிறோம். இவற்றையெல்லாம் தீர ஆராய்ந்து பார்த்தால், பல விஷயங்கள் நமக்குப் புலப்படாது. இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்த நமது முன்னோர்கள் பின்வரும் சந்ததியினருக்கு சூட்சுமமான விஷயங்களை எளிதில் புரியும்படி ஏட்டில் எழுதிவைத்துச் சென்றிருக்கிறார்கள். இதையெல்லாம் படித்துத் தெரிந்து கொள்ளவோ?..சிந்தித்துப் பார்க்கவோ நேரமில்லாமல் எதை எதையோ தேடி அலைந்து கடைசியில் மனிதப் பிறவி எடுத்த வாழ்க்கை முற்றுப் பெறாமலேயே முடிந்து விடுகிறது. நம்முடைய உடலும் உள்ளமும் சில நாள் சுறு சுறுப்பாக இயங்குகிறது, மறுநாள் உழைக்க மறுக்கிறது. நமது வயிறும் நான்கு வேளை உண்டதை, ஒரு சில நாள் ஒரு வேளை போதும் என்று மறுக்கிறது. சுறுசுறுப்பாக இயங்கிய மூளை சில நேரம் மக்கர் செய்து, சிந்தனையை மழுங்கச் செய்து, தேவையில்லாத கற்பனை உலகத்துக்குள் அழைத்துச் சென்று விடுகிறது. அமைதியாக இருந்த மனதுக்குள் புயலை உண்டாக்குகிறது. ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு பயம் வந்து, எதிர்காலத்தை நம் கண்முன் காட்டி நம்மை ஆட்டிப்படைக்கிறது. ஒரு வீடுதானெ இருக்கிறது, இரண்டு குழந்தைகள் ஆயிற்றே, இன்னமும் அலுவலகத்தில் அசிஸ்டண்டாகவே (&) இருக்கிறோமே, நம்மோடு சேர்ந்தவர்கள் அனைவரும் வானில் பறக்கும் (&) போது, நம்மிடம் கார் மற்றும் ஏசி இல்லையே, என்றெல்லாம் மனம் அலைபாய்கிறது. அடுத்த ஐந்து வருடத்தில் ரிடையர்மெண்ட் (&) வரப்போகிறது, அதற்குப் பிறகு எந்த அலுவலகத்தில் ‘கன்சல்டண்ட்’ (&) ஆகப்போகிறோம்?…………….மனது இன்றிலிருந்தே கணக்குப் போடத் தொடங்குகிறது. பன்னெடுங்காலத்திற்கு நல்ல வாழ்க்கை வாழ பட்ஜெட் போட்டுக்கொண்டே ஓவ்வொரு நாளையும் கூட்டி அதை மாதமாக்கி, வருடமாக்கி காலம் கழிந்து கொண்டே இருக்கிறது.

இப்படியாக, சிறுவயது முதல் யாரோ ஒருவரது வழிகாட்டுதலின் உதவியுடன், பல இன்னல்களைக் கடந்து படிப்படியாக முன்னேறி, பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்து, 25 வயது நிரம்பிய வாலிபனாக மனதில் பலவித ஆசைகளுடன் வேலைதேடிச் செல்லும்போது சிந்தனையும், செயலும் சுறுப்பாக செயல்படுகிறது. விருப்பப்பட்ட வேலை கிடைத்தவுடன் மனது மகிழ்ச்சியில் தாண்டவமாடுகிறது. முழு குதூகலத்துடன் எட்டாவது மாடியில் உள்ள அலுவலகத்துக்கு, லிஃப்டைத் தவிர்த்து மாடிப்படிகளை  வேகமாகக் கடந்து சென்றடைகிறோம். பால்ய வயதில் நடந்த சம்பவங்கள் அவ்வப்போது நினைவுக்கு வருகிறது. வேகமாக ஓடும் ஆற்றிலே எதிர் நீச்சல் போட்டதெல்லாம் நினைவுக்கு வரும். எங்கும் எதிலும் வேகம்தான். பல மைல் தொலைவில் உள்ள பள்ளிக்கு, சைக்கிளில் பத்து நிமிடத்தில் சென்றடைந்தோம். சைக்கிள் இல்லையேல் நடையும் ஓட்டம்தான். அன்றைக்குத் தொடர்ந்த ஓட்டம் இன்று வரையில் தொடர்கிறது. ஒவ்வொரு நாளாக ஓட்டமெடுத்து,  பல வருடங்கள் கடந்து விட்டதை நினைக்கும்போது மனதுக்கு மலைப்பாகக் தோன்றும். இன்றும் ஓய்வில்லாமல் ஓடி ஓடி உழைத்து, நாம் நினைத்தையெல்லாம் அடைந்து விட்டோம். சாதிக்க நினைத்தை சாதித்துவிட்டோம். இன்று நம் வயதைக் கேட்டால், ஓட்டமாக ஓடிய அனுபவங்களை முன்வைத்து 45, 50, 60 என்று நம் வயதைச் சொல்லிவிட்டு, மீண்டும் வாழ்க்கைப் பாதையில் ஓட எத்தனிக்கிறோம். ஆனால் முடியவில்லை, நடை தளர்ந்து, வேகம் குறைந்து, தள்ளாமையால் ஓடமுடியாமல் நிதானத்தை அடைந்து விடுகிறோம்.

பாதை முடிந்துவிட்டாலும் பயணம் முடியவில்லை என்பது போல ஒவ்வொரு நாளும் ஓடிக்கொண்டிருக்கிறோம். இப்படி தினமும் கவலையுடனோ, கவலை இல்லாமலோ, ஒரு நாள் என்பது, ஒரு நிமிடம் போல் கழிந்து விடுகிறது. இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் எங்கு நாம் ஓடிக்கொண்டிருகிறோம், எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம் என்று கூடத் தெரியாமல், வாழ வேண்டிய வாழ்க்கையேல்லாம் சட்டெனக் கழிந்து கொண்டே வருகிறது. ‘நாளை’ என்பதே நிச்சமில்லாமல் இருக்கும்போது, அடுத்த ஐந்து, பத்து ஆண்டுகள் என்றில்லாமல், நூற்றாண்டுகளை நல்ல முறையில் கடக்க நம் மனம் எந்நேரமும் கணக்குப் போட்டுக் கொண்டே இருக்கிறது. ஓய்வில்லாமல் மனதில் எழும் கேள்விகளுக்கு விடை தேடி எண்ண அலைகள் விரிவடைந்து கொண்டே செல்கிறது.

குடியிருக்கும் வீடு பழுதடைந்து, கூரை எந்த நேரமும் விழக்கூடிய நிலையில் இருந்தால், அந்தவீட்டில் குடியிருப்போமா, இதைப்போலவே, இந்த உடம்பு நன்றாக இருக்கும் வரையில், நம்மால் இயன்றவரை பொருள் ஈட்டுகிறோம். இங்கிருப்பது போதாதென்று சீமை தேடி ஓடுகிறோம். மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், பார்க்கும் இடமெல்லாம் விலையுயர்ந்த பொருட்கள், மார்பில் தவழும் முத்து மாலைகள் இவையெல்லாம் நமது உடம்பு நன்றாக இருக்கும்போது ஓடி, ஓடி சம்பாதித்தவை. வசதியாக வாழும்போது, உற்றார், உறவினர், நண்பர்கள், சுற்றத்தார் போன்றோர்களின் கூட்டம் நம் அருகே என்றுமே உண்டு.  வசதி இல்லாதபோதோ அல்லது கடைசி காலத்தில் யார் நம்மோடு கூட வருவார்கள் போன்ற எண்ண அலைகள் வரும்போது, ‘வீடு வரை உறவு, காடு வரை பிள்ளை, கடைசிவரை யாரோ’?…………….என்ற கவியரசர் பாட்டுதான் நம் நினைவுக்கு வரும். அந்திமகாலத்தில் உயிர்பிரியும்போது இவையெல்லாம் கூட வருமா?  என்றால், “எதுவுமே கூடவராது” என்பதுதான் நமக்கு முன் வாழ்ந்த ஞானிகளின் கூற்று. இத்தொடரில் இடம்பெற்ற அனைத்துக்கும் முற்றுப் புள்ளி வைப்பது போல், சிறந்த சிவனடியார்கள் என்ற பெயர்பெற்ற 63 நாயன்மார்களில் ஒருவரும், திருமாலே சரணாகதி என்று வாழ்ந்த பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரும் நமது சிந்தனைக்கு விருந்தாக, செவிக்கு இனிதான பாடல் மூலம் மனதில் எழும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக நமக்கெல்லாம் நல் வழிகாட்ட வருகிறார்கள்.

ஒன்றே ஒன்றைத்தவிர, நாம் வாழ்ந்த காலத்தில்  சம்பாதித்தது எதுவுமே இறந்த  பிறகு நம்முடன் வராது என்கிறார் திருமூல நாயனார். நம்முடன் காலம் பூராவும் வாழ்ந்து, நம்மோடு ஒட்டி உறவாடிய மனைவி மற்றும் நாம் சம்பாதித்தையெல்லாம் அனுபவித்து வாழ்ந்த நம் மக்களும் கூட வரமாட்டார்கள்.  அப்படியென்றால் எதுதான் நம்முடன் கடைசி வரையில் வரும்?…என்ற வினாவுக்கு அருமையான பதிலை இங்கே நம் முன் வைக்கிறார் நாயனார். வாழ்க்கையின் அனுபவத்தில் நாம் பெறுகின்ற ஞானமும், நாம் கற்றுக்கொண்ட நல்லொழுக்கம் தவிர வேறொன்றும் கூட வராது என்பதை நான்கே வரிகளில் பின் வருமாறு விளக்குகிறார்:-

பண்டம்  பெய் கூரை பழவி விழுந்தக்கால்
உண்ட அப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அன்றி
மண்டி அவ்வழி நடவாதே.

நாயனாரை ஆழ்வாரோடு  ஒப்பிட்டு நோக்கையில், வாழ்க்கை அனைத்தையும் பெருமானிடத்தில்  சமர்ப்பித்து விட்டு, இப்பூவுலக  வாழ்க்கையில் கிடைக்கும் பணம், பதவி, புகழ் எதுவுமே  வேண்டாமென்கிறார் ஆழ்வார்களில் ஒருவரான விப்ர நாராயாணர். வாழ்க்கையில் வழிதவறும் போது, உறவினர்கள் அல்லது நண்பர்கள் போன்றோர் நமக்குதவ முன்வருவார்கள். ஒரு பெண்ணிடம் மனதைப் பறிகொடுத்து, வாழ்க்கையில் அனைத்தையும் இழந்த ஆழ்வாருக்கு உதவ அரங்கனே வந்தான் என்கிறது வரலாறு. ஒவ்வொரு மனிதனும் நிம்மதி தேடி, அது எங்குமே கிடைக்காமல் கடைசியில் இறைவனைச் சரணடைவது இயற்கை. துன்பம் வரும்போது இறைவனை நினைந்து பிறகு மகிழ்ச்சியில் திளைக்கும்போது மறந்து விடுவது மனித இயல்பு. உலகத்திலேயே உயர்ந்த பதவியினால் கிடைக்கும் சுகத்தைவிட இறையுணர்வுதான் மிகப்பெரியது என்கிறார் ஆழ்வார். அடியார்களின் காலடி பட்ட மண்ணை தன் தலையில் சுமந்து தொண்டரடிப்பொடி என்ற பெயர் பெற்ற இவர் இறைவனிடம் பின்வருமாறு வேண்டுகிறார்.

பச்சைமா மலைபோல்  மேனி, பவளவாய்க் கமலச்  செங்கண்
அச்சுதா அமரர்  ஏறே, ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.

வாழ்க்கைப்  பயணத்தில் சாதாரண மனிதன் அனுபவிக்கின்ற இன்ப துன்பங்கள் அனைத்தையும் சமாளிக்கும் திறனையும், கடைபிடிக்க வேண்டிய அறநெறிகளையும் மேற்கூறிய ஒன்றிரண்டு பாடல்கள் மட்டுமல்ல, அரிய பெரிய பல்லாயிரம் பாடல்கள் (ப்ரபந்தம்-4000, திருமந்திரம்-3000) மூலம் நாம் எளிதில் அறிந்துகொள்ளுமாறு நம்மிடையே விட்டுச் சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

தொடரும்…….

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’:: தொடர்-22

  1. Dear Sir,
    Your articlals are given good confident and self Discipline. This is very useful to my life way. 
    Thanks

  2. Hello,

    Good article on current portray of human life. We can certainly take some parts of good things written by scholars in the past. But I reckon not all can be implemented in these times of life.

    It is all upto the individual on how they want his/her life to lead…

    Regards

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *