நரசய்யா

என்னைப் பொறுத்தவரையில் இக்கதை உண்மையாக நடந்த விஷயம்.சிறிதும் புனைவு கிடையாது!. நான் தான் கதாநாயகன். இப்போது நினைத்துப் பார்த்தாலும் பயமாக உள்ளது.


1955 ஆம் வருடம் இறுதி மாதங்கள் – நான் ஐ. என். எஸ். பெங்கால் என்ற கப்பலில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். கப்பல் பம்பாய்த் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நின்றிருந்தது. அது மைன் ஸ்வீப்பர் வகையைச் சேர்ந்தது. சுமார் 100 அடி நீளமே கொண்ட மிகச் சிறிய இரண்டாம் உலக மஹா யுத்தத்தில் பங்கு கொண்ட கப்பல்; சுதந்திரத்தின் போது, பாகிஸ்தானும் இந்தியாவும்  பங்கு போட்டுக் கொண்ட போது இந்தியாவுக்குக் கிடைத்த வெகுமதிக் கப்பல் – என் போன்றவர்களுக்கு ஒரு தண்டனை. 22 வயதில் என் வயதினையொத்தவர்கள இன்னும் பெற்றோர் அரவணைப்பில் இருந்து கொண்டிருந்த நிலையில், நான், அந்தத் தண்டனைக் கப்பலில், (ஆம்; மற்ற மாலுமிகள் இம்மாதிரிக் கப்பல்களைத் தண்டனைக் கப்பல்கள் என்றுதான் அழைப்பர்) ஒரு விதமான சௌகரியங்களும் இல்லாத, எப்போதும் நின்று விடக்கூடிய பழுது பட்ட இயந்திரங்களுடன் அதில் பணி புரியும் எல்லோருக்கும் மிக்க வேதனையைத் தந்து கொண்டிருந்த கப்பலின் ஒரு மாலுமி! அதுவும் கப்பற்பொறியியல் துறை பயின்ற ஒரு மாலுமி! இத்தனை துன்பம் தந்துகொண்டிருந்தாலும் ஏதோ ஒரு காரணத்தால் என்னால் மிகவும் விரும்பப்பட்ட கப்பல்! அதன் கேப்டன் கமாண்டர் டி அல்மைடா எனபவருக்கு எப்போதும் கடல் வியாதி உண்டு! பக்கத்தில் ஒரு வாளியை வைத்துக்கொண்டு அதில் வாந்தி எடுத்துக் கொண்டு பிரிட்ஜில் (கப்பல் செலுத்துமிடம்) நின்று கொண்டிருப்பார். எஞ்சின் நின்றுவிட்டால் எங்கே அந்த நரசய்யா என்பார். அதுவும் அடிக்கடி நிகழும் சங்கதி! சீஃப் எஞ்சினீயரோ கோவாவைச் சேர்ந்த ஒரு வயலின் இசைக் கலைஞர். அவரை எஞ்சினீயர் என்று கூறுவதே தவறு! அவரே சொல்வார்: “எனக்கு எஞ்சின் எப்படி வேலை செய்கிறது என்று கூட தெரியாது. ஆனால் நரசய்யா இருக்கும் வரை எனக்குக் கவலை இல்லை!” அதையே தான் கமாண்டர் அல்மைடாவும் உறுதி செய்வார்! ”நீ நீரோ போல பிடில் வாசிக்கத்தான் தகுதி; ரோம் எரிந்தாலும் கவலையில்லையே!” என்பார் அதே போல கொந்தளிக்கும் கடலிலும் வயலின் வாசித்துக் காட்டுவார். “பீதோவனின் கோதெர்ட் வாசிக்கிறேன் கேட்கிறாயா?” என்பார். தலையெழுத்து என்றால் இதுதான்; ஆனாலும் சிறந்த மனிதன் எவரும் கஷ்டப்படுவதை விரும்பமாட்டார்.

அப்போது இந்தியாவையே அச்சுறுத்திய ஃப்ளூ காய்ச்சல் பம்பாயிலும் தனது கைங்கரியத்தைத் துவங்கியது. முதலில் கேப்டனுக்கு அந்தக் காய்ச்சல் வந்தது. தொடர்ந்து எல்லோருக்கும் வந்தது.

ஓரிரவு எனக்குத் தலைவலி மிக அதிகமாகி விட்டது. நடு இரவில் காய்ச்சல் அதிகமாகிவிடவே என்னை பக்கத்திலிருந்த (எங்கள் கப்பலில் ஒரு விதமான மருத்துவ உதவியும் கிடையாது) ஒரு பெரிய கப்பலுக்குப் படகில் அழைத்துச் சென்றார் எனது நண்பர் தான்சாமா என்ற அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். அந்தக் கப்பலிலிருந்த ஒரே ஒரு எஸ். பி. ஏ (ஆண் நர்ஸ்) மருத்துவம் தெரிந்த அளவில் என்னைப் பரிசோதித்து விட்டு காய்ச்சல் மிகவும் அதிகமாக உள்ளதால், ஐ. என். எஸ் அஸ்வினி என்ற பம்பாயின் சிறந்த இந்திய கப்பற்படையின் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லும்படி கூறி விட்டார். அப்போது என்னை அங்கு அழைத்துச் செல்ல தான்சாமாவுக்குக் கிடைத்த வாகனம் ஒரு கடற்படையின் ஒரு பெரிய லாரிதான்! அந்த லாரியில் சில சாமான்கள் கொலாபாவுக்குச் சென்று கொண்டிருந்தன. அந்த சாமான்களுடன் என்னையும் மற்றொரு சாமான் போல, கம்பளியால் சுற்றிவைத்துக் கொண்டு வந்தார் அந்த தான்சாமா. வழி நெடுக அவர் இந்திய கப்பற்படையையும் அதிகாரிகளையும் திட்டிக்கொண்டு வந்தார். எனக்கு நினைவு வருவதும் போவதுமாய் இருந்தது. சுமார் இரண்டு வருடங்கள் அம்மாதிரி பிராயாணம் செய்த பிறகு, (அப்படித்தான் எனக்குத் தோன்றியது ஆனால் எடுத்துக் கொண்டது ஒரு மணிநேரம்) மருத்துவ மனை சென்றடைந்தோம்.

அந்த மருத்துவமனையில் என்னைப் பரிசோதித்த ட்யூடி டாக்டர் என்னை அங்கே அட்மிட் செய்து விட்டு தான்சாமாவைப் போகச் சொல்லி விட்டார்! அவரையும் திட்டி விட்டு தான்சாமா ஃபிளீட் கேண்டீனுக்கு பியர் குடிக்கச் சென்று விட்டார். கோபம் வந்தால் அவருக்குக் குடிக்கத்தான் தெரியும். அதுவும் பியர் ஒன்றுதான்.

நான் உணர்விழந்திருந்திருக்க வேண்டும். ஏனெனில் நான் கண் விழித்த போது மருத்துவ மனையின் ஒரு கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தேன். என்னைச் சுற்றியிருந்தவர்கள் பேசிக்கொள்வது எனக்குக் கேட்டது. என்னைப் பரிசோதித்த டாக்டர் என்னை “டி. ஐ. எல்” லில் (Dangerously Ill List) போட்டு விட்டதோடல்லாமல் என்னை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றச் சொன்னது எனக்குக் கேட்டது. திரும்பவும் பிரக்ஞை இழந்து விட்டேன்!  காலம் வெவ்வேறு விதமாக ஓடுகிறது. காத்திருக்கும் காதலர்களுக்கும் கட்டிலில் கிடக்கும் நோயாளிக்கும் வினாடிகள் நாட்களாக காணப்படுகிறது. அதுவும் தெரியாமல் இந்த மாதிரி ‘மிலிட்டரி’ ஆஸ்பத்திரிகளில் இருந்து விட்டால் சொல்லவே வேண்டாம். சாதாரணமாக இவையெல்லாம் கால்நடை மருத்துவ மனை போலத்தான் செயல் படுகின்றன. ‘தேசத்திற்காகத் தமது உயிரைத் தியாகம் செய்ய வந்திருக்கும்” என்று அரசியல் வாதிகளால் (வெட்கமற்றவர்கள் ) வருணிக்கப்படும் போர்வீரர்கள் கால்நடைகள் போலத்தான் நடத்தப்படுகிறார்கள் என்பது நான் கண் விழித்த போது தெரிந்தது. நான் இப்போது வெராந்தாவில் கிடத்தப்பட்டிருந்தேன். கண் விழித்த போது மிகவும் பெரிய மார்பகங்களை உடைய நர்ஸ், (இவருக்கே 50 வயதிருக்கும் போலத் தோன்றியது எனக்கு) என்னைத் தட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவரைப் பார்த்ததைக் கண்டு, எனக்குப் பதிலாக அவரது மார்பகங்களைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த ஆர்மி டாக்டருக்குச் சொன்னார்: “இன்னும் உயிருடன் தான் உள்ளான்” அவர் குரலில் ஏமாற்றம் இருந்தது போல எனக்குப் பட்டது! சித்திரகுப்தனும் எமனும் பேசிக்கொள்வது போல இருந்தது. “இன்னும் டயம் வரவில்லை” டாக்டர் தமது கண்களை வைத்த இடத்திலிருந்து எடுக்காமலேயே கூறினார்.

சில நல்லதுகளும் இம்மாதிரி மருத்துவ மனைகளில் நடக்கின்றன. அந்த நர்ஸ் மிகவும் நல்லவர் என்பது பிறகு தான் எனக்குப் புரிந்தது. “நீ ஒரு வெஜிடேரியனா?”

அப்போது நானிருந்த நிலையில் எனக்கே புரியவில்லை என்ன கேட்கிறாரெனப் புரியவில்லை. நான் மிரளுவதைப் பார்த்து, ஒரு தாயின் உணர்வோடு பேசினார். “நீ மெட்ராசி தானே? உன்னோடே மார்பிலே பூணூல் தெரிகிறது. அதனால் தான் கேட்டேன்” என்று மராத்தி கலந்த ஹிந்தியில் கேட்டார். “நிறைய பால் சாப்பிடு காய்ச்சல் போயாச்சு, தண்ணியும் நெறய்ய குடி” இப்போது அவர் தமிழில் பேச முயன்றது ஆச்சரியத்தை அளித்து! ஹிந்தியில் தொடர்ந்தார். அவர் சிறிது காலம் மெட்ராஸ் மிலடரி ஆஸ்பத்திரியில் வேலை செய்த போது தமிழ் கற்றாராம்! தமிழுக்கு வந்த தலைவலி!

டாக்டர் வந்தார். பஞ்சாபி; எல்லோரையும் திட்டிக் கொண்டு வந்தார். என்னைப் பார்த்தும் கத்த ஆரம்பித்து விட்டார். “ஏன் கீழே கிடக்கிறாய்? செத்துத் தொலைவதற்கா?” அவர் கேள்வி எனக்கு ஆச்சரியத்தை அளித்து. ஏதோ நானே இங்கு வந்து படுத்திருப்பதாக எண்ணமோ?

அவர் போன பிறகு அந்த நர்சை அழைத்தேன்.  ”நான் இங்கே வந்து எத்தனை நாளாயிற்று?”

அவர் சொல்லித்தான் தெரிந்தது. மூன்று நாட்கள் முன்பு நான் அட்மிட் ஆன போது மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாகவும் எங்கள் கமாண்டிங் ஆபிசர் வந்த பார்த்துச் சென்றதாகவும் ஆனால் அவரும் இங்கே பின்னர் அட்மிட் ஆகி விட்டதால் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லயென்பதும் நான் சென்றுவிட்டால், (அதாவது உலகத்தை விட்டு) என்ன செய்வதெனப் பேசிக்கொண்டிருந்ததாகவும் சொன்னார். சிரித்துக் கொண்டே சொன்னார்!

வெராந்தாவிலிருந்து உள்ளே  வார்டுக்கு மாற்றப்பட்டேன் அங்கு வேலைசெய்யும் ஆண்  நர்சுகள் திருமூலர் படித்திருப்பார்கள் போலும் என் பெயர் சொல்லாமல் பெயரினை நீக்கி என்னைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்! “பரவாயில்லை பயப்படாதே; இனிமேல் ஒரு ப்ராப்ளமும் இல்லை. ட்யூடி டாகடர் வருவார். அவரும் ஒரு பஞ்சாபி தான். கிறுக்கும் கூட. ஏதாவது கேட்டால் மருந்து சாப்பிட்டேன் என்று மட்டும் சொல். அவர் தான் உன்னை வெராந்தாவில் போடச் சொன்னவர்; நீ போகல்லை என்று வருத்தப்பட்டாலும் படுவார்!”

அவர் வந்தார்! வந்தாரா? சுனாமி போல நுழைந்தார். “நீ இன்னும்  இருக்கிறாயா?”  வந்த கோபத்தை அடக்கிக் கொண்டேன் ஆனால் அவர் தொடர்ந்து பேசியது என் மனதை இளக வைத்தது. “ஒங்க அப்பா அம்மா செஞ்ச புண்ணியம் தான் ஒன்னைக் காப்பாத்தியிருக்கு!: எஸ்பெஷலி ஒங்க அம்மா! உனக்கு இனிமே சாவே கெடையாது!” என்று சொல்லி டிஸ்சார்ஜ் என்று எனது கேஸ் ஷீட்டில் எழுதிச் சென்று விட்டார். எங்களுக்குச் சகட யோகம் லாரிதான்! இந்தத்தடவை ஒரு த்ரீ டன்னர். பரவாயில்லை பெஞ்ச் போல சீட் கூட இருந்தது. திருமபவும் படகில்; ஆனால் சக மாலுமிகள் ஜாக்கிரதையாக்க் கப்பலில் ஏற்றினர். .

மறுநாள் கப்பலில் தன்சாமா  ஒரு கப்பில் தக்காளி  சூப் மிகச் சூடாகக் கொண்டு வந்து கொடுத்தார். அமிர்தம் போலிருந்தது. அல்மைடா வந்து  பார்த்தார். “ந்ல்ல வேளை ஆஸ்பத்திரியில் உன்னைக் கொல்லாது விட்டார்கள்!”  ஒரு கிளாசில் விஸ்கியும் எலுமிச்சம் பழ ஜூசும் கலந்து அத்துடன் கொதிக்கும் நீரை ஊற்றி, “இது தான் ஹாட் ஸ்காட்ச். இதைக் குடித்தால் எல்லாவியாதியும் பறந்துவிடும்” என்றார்.

பழனியில் அபிஷேகப் பாலை எடுத்துக் கொள்வதைப் போல அதைக் குடித்துவிட்டு நான் திருமுருகாற்றுப்ப்டையைச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

தன்சாமா நல்ல(?)ழ் கெட்ட வார்த்தைகளால் எல்லோரையும் திட்டிக் கொண்டிருந்தார். சீப் இஞ்சினீயர் பிடிலில் பீதோவன் வாசிக்கக் கண்ணயர்ந்து விட்டேன். கனவில் அந்த நர்ஸ் தனது பெரிய மார்பகங்களில் என்னை அணைத்துக் கொண்டு என்னைத் தாலாட்டுவது போலத் தெரிந்தது. அப்போதுதான் உண்மையும் புலப்பட்டது. சாவுக்கும் வாழ்வுக்கும் அதிக வித்தியாசமில்லை! நான் வைதர்ணியின் கரைகளைப் பார்த்தவனாயிற்றே!

படத்திற்கு நன்றி:
http://www.navsource.org/archives/11/05idx.htm

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “அங்கிங்கெனாதபடி!

  1.  “ஒங்க அப்பா அம்மா செஞ்ச புண்ணியம் தான் ஒன்னைக் காப்பாத்தியிருக்கு!: எஸ்பெஷலி ஒங்க அம்மா! உனக்கு இனிமே சாவே கெடையாது!” என்று சொல்லி டிஸ்சார்ஜ் செய்து விட்டார்.  இது நாங்கள் செய்த புண்ணியம்.

    அன்பன்
    கி.காளைராசன்

  2. >>> நான் வைதரணியின் கரைகளைப்
    பார்த்தவனாயிற்றே<<<

    :))
    சுவையான கட்டுரை;
    அழகான இளமைத் தோற்றத்தையும் காண
    முடிகிறது

    தேவ்

  3. வாழ்த்துகள் ஐயா.

    உண்மையான ஒரு வரலாற்றை, கதையாகக் கொடுத்து இன்புற வைத்து விட்டீர்கள். வணக்கமும் நன்றியும்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *