அனாமிகா

அகமதாபாத் மார்க்கெட்; காய்கறி வாங்கிக் கொண்டிருந்த சுமித்ராவின் தோளில் சிநேகமாய் ஓர் கை விழுந்ததும், திரும்பிப் பார்த்தாள்.

“சுமித்ரா! என்னைத் தெரியலை?! நான் தான் ப்ரியா!! சென்னைல பார்த்திருக்கோமே” என சிரிக்க, சுமித்ராவுக்கு நினைவு வந்தது. கூடவே அந்த நினைவுகள்; அக்கினியாய் எப்போதும் அவள் மனதை வாட்டும் நினைவுகள் தலை தூக்க, கஷ்டப்பட்டு அடக்கி புன்னகை செய்து கேட்டாள்:

“எப்பவோ பார்த்தது இல்லையா? அதான் சட்டுனு  ஞாபகம் வரலை; எப்படி இருக்கீங்க? எங்க இந்தப் பக்கம்?”

“வெகேஷனுக்கு நார்த் இண்டியா டூர் வந்தோம்; இங்க என் மச்சினர் வீடு இருக்கு. அப்படியே இங்க வந்திருக்கோம். வண்டியில அவரும், பொண்ணும் வெயிட் பண்றாங்க.”

ஃபார்மாலிட்டிக்கு தன்  வீட்டு முகவரியைக் கொடுத்து, கண்டிப்பாக வரும்படி அழைத்து விடை பெற்றாள் சுமித்ரா.
**********************************

அன்றிரவு. சுமித்ராவுக்கு உறக்கம் வரவில்லை. அவர் கண்டுபிடித்து விட்டார்.

“என்ன சுமி? என்னாச்சு? ஏன் இப்படி டல்லா இருக்கே?”

கணவர் கேட்டு முடிக்குமுன்பே சுமிக்கு கண்களில் நீர் கோத்து விட்டது.

“இன்னிக்கு மார்க்கெட்-ல தெரிஞ்சவங்களைப் பார்த்தேன்; அவங்க வி.எஸ். ஸகூல்ல ….பழக்கமானவங்க….”

திணறியபடி அழுது கொண்டே சொன்னாள்; அவருடைய பார்வை சுவரில் மாட்டியிருந்த புகைப்படம் மீது பதிந்தது.

எத்தனையோ ஆயிரம் முறைகள் எண்ணிப் பார்த்தும் ஆறாத அந்த அக்கினி நினைவுகளில் மீண்டும் சுமியின் மனம் மூழ்கியது.

இதே போன்ற ஒரு இரவு நேரத்தில் தான் அந்த ஃபோன் வந்தது; வி.எஸ் ஸ்கூல்-ல் படித்துக் கொண்டிருந்த சுமியின் மழலைச் செல்வங்கள் சத்யாவும், ரமேஷும் எக்ஸ்கர்ஷன் போன பஸ்  விபத்துக்கு உள்ளானதாக் வந்த ஃபோன்! அவர்கள் வாழ்க்கையே ஒரு கேள்விக் குறியானது!

என்ன செய்து என்ன?  பெற்ற இரு பிள்ளைகளையும் விதியின் கொடுமைக்கு பலி கொடுத்த ஒரு தாயின் துயரமும், வருத்தமும் ஈடு செய்ய முடியாதது!!!

அந்த ஒரு மாதம் சுமித்ரா பைத்தியமாகவே இருந்தாள்; வீடு முழுக்க இறைந்து கிடக்கும் பிள்ளைகளின் உடைகள், சாக்ஸ், புத்தகங்கள், விளையாட்டு பொம்மைகள்; துக்கம் கேட்டு வரும் உறவினர், நண்பர்கள்: வீட்டின் ஒவ்வொரு இன்ச்சிலும் அவர்கள் இழப்பு அவளை நெருப்பாய் சுட்டது. அவள் நிலையறிந்து அடுத்த மாதமே மாற்றல் வாங்கிக் கொண்டு இங்கே அகமதாபாத் அழைத்து வந்து விட்டார் அவள் கணவர்; இடத்தை விட்டு வர முடிவது போல, நினைவுகளையும் விட்டு விட்டு வர இந்த மனதால் முடியுமானால் எவ்வுளவு நன்றாக இருந்திருக்கும்?

ஆயிற்று; நான்கு வருடங்கள் ஓடி விட்டன; அதன் பின் சென்னை பக்கம் திரும்பவே இல்லை. விதியின் மேல் கொண்ட கோபத்தை சுமித்ரா சமூகத்திடம் காட்டினாள். யாரிடமும் பழகுவதில்லை; அவளே விதித்துக் கொண்ட தனிமைச் சிறை!!

அழுகையின் ஊடே எப்போது தூங்கினாள் என்று தெரியாமலே தூங்கி விட்டாள்.                                                          ****************************

நாலைந்து நாட்கள் ஆயின. “இனிமேல் ப்ரியா வர மாட்டாள்” என்று ஒருவாறு சுமித்ரா மனம் தெளிந்து விட்டிருந்தாள்.

சமையல் முடிந்து ஓய்வாக சுமித்ரா அமர்ந்திருந்தாள். அழைப்பு மணி அடித்தது.

வாசலில் ப்ரியா, அவள் கணவர் மற்றும் குழந்தை!

வலுக்கட்டாயமாக வரவழைத்த புன்னகையோடு வரவேற்று சுமித்ரா உள்ளே அழைத்துச் சென்றாள். குழந்தைக்கு நாலு வயசிருக்கும்.

“வீணா, ஆண்ட்டிக்கு வணக்கம் சொல்லு” என்றதும் அழகாக கைகுவித்து வணக்கம் சொல்லியது; அதன் பின் ஒரு இடத்தில் உட்காராமல் வீடு முழுக்க நடந்து, வீணா கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டாள். ப்ரியாவின் கணவரும் உடன் சென்றார்.

சுமித்ராவும் ப்ரியாவும் மட்டும் அமர்ந்திருந்தார்கள்; எதைப் பற்றி பேச வேண்டாம் என நினைத்து சுமித்ரா தவிர்த்தாளோ, சில நிமிஷங்களில் ப்ரியா அதைப் பற்றியே பேச ஆரம்பித்தாள்.

“வி.எஸ். ஸ்கூல் ஆக்ஸிடெண்ட்டுக்கு அப்புறம் இங்க வந்துட்டீங்க இல்லியா?”

சுமித்ரா எட்டிப் பார்த்த கண்ணீரை மறைத்து தலையாட்டினாள்.

“உங்க பையன் நிகிலை கூட்டிட்டு வரலியா?”

பேச்சை மாற்ற எண்ணி சுமித்ரா கேட்டதும், ப்ரியாவின் முகத்தில் சோகத்தின் நிழல்; கம்மலான குரலில், “அந்த ஆக்ஸிடெண்ட்டிலே நிகிலும் போய்ட்டான்”

என்று சொல்ல, சுமித்ரா ஒரு நொடி அதிர்ந்து தான் போனாள்!!

தன் பிள்ளைகளின் இழப்பு தெரிந்ததும் பிறகு எதையுமே சுமித்ரா தெரிந்து கொள்ளவில்லை; இப்போது தன் வேதனையையும், துக்கத்தையும் ப்ரியாவும் அனுபவித்திருக்கிறாள் என் தெரிந்ததும், அவளிடம் ஒரு பரிவு ஏற்பட்டது; கூடவே இப்போது தான் வீணா இருக்கிறாளே என்றும் தோன்றியது.

“அப்புறமா தான் வீணா பிறந்தாளா?”

“இல்லை” என ப்ரியா தலையாட்டினாள். சுமித்ராவுக்கு ஒன்றும் புரியவில்லை; ப்ரியாவே தொடர்ந்தாள்:

“என்னைப் போல் நீங்களும் பாதிக்கப்பட்டவங்க; அதனால உங்க கிட்ட சொல்றேன். இல்லாட்டி நான் இதெல்லாம் யார் கிட்டவுமே சொல்றது இல்லை” என்ற ஒரு முன்னுரையோடு தொடர்ந்தாள்:

“நிகில் போனப்புறம் எங்க வாழ்க்கையே இருட்டாயிடுச்சு; எனக்கு அதுக்கப்புறம் மறுபடி குழந்தை பிறக்க முடியாதுன்னு சூழ்நிலை. அப்ப திக்கு திசை தெரியாம முழிச்சிட்டிருந்தோம். ஒரு நாள் ‘பொம்முகுட்டி அம்மாவுக்கு’ ப்டம் பார்த்தப்போ, ஒரு யோசனை வந்தது; எனக்கும் அவருக்கும் இஷ்டம் இருந்ததாலே வீணாவை ஒரு அனாதை விடுதிலேர்ந்து முறையா தத்து எடுத்துக்கிட்டோம்; அப்ப அவளுக்கு ஒரு வயசிருக்கும்; வீணா வந்தப்புறம் மறுபடி எங்க வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வந்திருக்கு. ஒரு குழந்தையோட சிரிப்புக்கு மட்டும் தான் எந்த துக்கத்தையும் மறைய வைக்குற சக்தி இருக்கு.”

“ஆனா…ப்ரியா….யாரோ பெத்துப் போட்ட குழந்தையை வளர்த்தா, நம்ம கடைசி காலத்துல…” சுமித்ரா முடிக்கு முன்பே, ப்ரியா குறுக்கிட்டாள்.

“கடைசி காலத்துல அப்பா, அம்மாவைக் காப்பாத்தாத பிள்ளைங்க அவங்களுக்கு பிறந்தவங்க இல்லையா? நம்ம சொந்தப் பிள்ளைங்க நம்மைக் காப்பாத்தலேன்னா, நாம அவங்க மேல வைச்ச பாசம் பொய்யாயிடுமா என்ன? அதே மாதிரி நினைச்சுக்க வேண்டியது தான். வீணா நாங்க தத்தெடுத்த குழந்தைன்னு தெரியக் கூடாதுன்னு நாங்களும் பெங்களூர் வந்து செட்டில் ஆயிட்டோம். ரொம்ப நெருங்கினவங்களைத் தவிர மற்ற

எல்லாரும் வீணாவை எங்க குழந்தையா தான் நினைக்கிறாங்க. அது தான் எங்களுக்கும் சந்தோஷமா இருக்கு.”

ஆவேசமாய் பேசியதில் மூச்சு வாங்க, ஒரு நிமிடம் நிறுத்தியவள்,

“சுமித்ரா! நாம ஆசையா வளர்த்த செடி பட்டுப் போயிடுச்சு; ஆனா எத்தனையோ செடிங்க கவனிப்பார் இல்லாம கருகி கிடக்குது. அதுல ஒரு செடிய நாம வளர்த்தா என்ன? யோசிச்சுப் பாரு.

நாமே விதை போட்டு வளர்த்தாலும், நர்ஸரிலேர்ந்து வாங்கிட்டு வந்து தோட்டத்துலே வச்சாலும் எல்லா செடிகளோட மலர்களும் மணம் பரப்ப தானே செய்யுது!”

சுமித்ராவின் மனதில் புதிய தீர்மானம்!! அந்த மகிழ்ச்சியில் ஆமோதித்து புன்னகை செய்தாள்!!

ஆம், பூக்களில் பேதமென்ன?
*******************************

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பூக்களில் பேதமென்ன?

  1. கருத்துள்ள கதை 
    மிகவும் நன்றாக இருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *