காயத்ரி பாலசுப்பிரமணியன்

மேஷம்: பெண்கள் நினைக்கின்ற விஷயங்களில் வெற்றி பெற உங்கள் வாக்குச் சாதுர்யம் கை கொடுக்கும். மாணவர்கள் சஞ்சலங்கள் வளர இடம் கொடாதாவாறு மன திடத்துடன் இருந்தால், மகிழ்வுக்கு குறைவிராது. முதியவர்கள் நோய்களுக்கு நீங்களே மருந்துகளை தேடாமல், தகுந்த மருத்துவரை அணுகுதல் நல்லது. கொடுத்த வாக்கை காப்பாற்றக் கூடிய அளவிற்கு வியாபாரிகளுக்கு மன வலிமையும், உடல் வலிமையும் கூடும். பணியில் இருப்பவர்கள் புதிய ஊழியர்களிடம் உங்கள் வாதத் திறமையை காட்டாமல் எளிய முறையில் பழகிவந்தால், நல்ல நட்பு உருவாகும். சரளமான பணப்புழக்கம் தனித் தெம்பைத் தரும்.

ரிஷபம்: இந்த வாரம் கலைஞர்களுக்கு ஏமாற்றமாய் இருந்த விஷயங்கள் சாதகமாய் மாறும் சூழல் உருவாகும். வியாபாரிகள் பண விவகாரங்களில், பங்குதாரர்களுடன் கலந்து பேசி செயல்படுதல் நல்லது. மாணவர்கள் உங்கள் அமைதி, கடும் வார்த்தைகளாலும், அவசர செயல்களாலும் பாதிப்படையாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். பெண்கள் அலுவலக அளவில் நட்புகளை ஓர் எல்லையோடு நிறுத்திக் கொண்டால்,மன சஞ்சலம் குறைவதோடு அதிக இழப்புகளும் இராது. சுய தொழில் புரிபவர்கள் ஆரம்ப முயற்சிகளில் சுணக்கம் காட்டாமலும் இருந்தால், வெற்றி வரும் வழி, லாபம் இரண்டும் உறுதியாகும்.

மிதுனம்: மாணவர்கள் செய்ய வேண்டிய காரியங்களை பட்டியலாக்கி வைத்துக் கொண்டால், மறதியால் வரும் சிக்கல்கள் அகலும். கலைஞர்கள் வருமானத்தை அதிகப்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்கு உறவும், நட்பும் கை கொடுப்பதால், மகிழ்ச்சிக்கு குறைவிராது. இந்த வாரம் கரைந்த சேமிப்பை ஈடுகட்ட எடுக்கும் முயற்சியில் பெண்கள் ஓரளவு வெற்றி காண்பார்கள். சுய தொழில் புரிபவர்கள் உங்களுக்கு உதவக் காத்திருக்கும் நண்பர்களையும், வாய்ப்புக்களையும் நழுவ விடாமல் தக்க சமயத்தில் பயன்படுத்திக் கொண்டால், எதிர்காலம் வளமாய் அமையும்.கடினமான பணிகளில், மூத்த அதிகாரிகளின் ஆலோசனையை பின்பற்றுதல் நலம் .

கடகம்: பெண்கள் தங்களின் உயர்வான எண்ணங்கள் ஈடேறுவதற்கு ஆரோக்கியம் தடையாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் ஈடுபாடோடு எந்தச் செயலைச் செய்தாலும் அதில் வெற்றி காண முடியும். பிள்ளைகள் பெற்றோர்களின் மனதிற்கேற்ப நடந்து கொள்ள முன்வருவார்கள். நண்பர்கள் பிணக்கை மறந்து இணக்கமாக நடந்து கொள்வர் . பணியில் உள்ள ஒரு சிலருக்கு தேவையில்லாத இடமாற்றம் உண்டாகும். கலைஞர்கள் உங்கள் புகழைக் கண்டு பொறாமைப் படுபவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்வது அவசியம். மறைமுக எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபட மன உறுதி தேவைப்படும்.

சிம்மம்:கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கின்ற சலுகையை முறையாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. சரக்கு வினியோகம் செய்பவர்கள் வெறும் வாய் வார்த்தையை நம்பி பொருள் கொடுப்பதைக் குறைத்துக் கொண்டால் நஷ்டம் இராது. பெண்கள் இல்லத்திலும், அலுவலகத்திலும் வீண் பேச்சுக்களைக் குறைத்தால், அமைதிக்கு பங்கம் வராமலிருக்கும். சுய தொழில் புரிபவர்கள் காலத்தின் மதிப்பும் அருமையும் உணர்ந்து செயல்பட்டால், எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும். வியாபாரிகள் சுகமான வாழ்க்கைக்கு ஆசைபட்டாலும்,இந்த வாரம் அங்கும், இங்கும் சுற்றித் திரியும் நிலைதான்.

கன்னி: முக்கியமான பொறுப்புக்களை வகிப்பவர்கள், சிந்தனையை பணியில் செலுத்தி எச்சரிக்கையுடன் செயல்பட்டால், வரவிருக்கும் பிரச்சனைகளைத் தவிர்த்து விடலாம். வெளியூர்ப் பயணங்களால் செலவுகள் கூடினாலும், வியாபாரிகள் நினைத்த காரியத்தை முடித்து விடுவீர்கள். கவனக் குறைவாகச் செயல்படும் பிள்ளைகளை இதமாகக் கண்டிப்பதே நல்லது. புதிய இடங்களுக்குச் செல்பவர்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைத்தால், பயணங்கள் இனிமையாக அமையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருப்பதால் பெண்கள் இல்லத்தை அழகு படுத்தும் பணிகளை விருப்பத்துடன் செய்வார்கள்.

துலாம்: நாணயத்தின் அடிப்படையில் செயல்பட்டால் எந்த ஒப்பந்தமும் எளிதில் கலைஞர்கள் வசமாகும். பணியில் இருப்பவர்கள் அதிகமாகப் புகழ்பவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள் சமயோசிதமாகச் செயல்பட்டால், எதிரிகளின் கரம் மேலோங்காதிருக்கும். குற்றம் சொல்லும் உறவினரின் தேவைகளை பெண்கள் முதலில் பூர்த்தி செய்தால், இல்லம் அமைதியாக இருப்பவும், உறவுகள் வலுவாகவும் திகழும். மாணவர்கள் சாதாரணமாய் சொல்லும் வார்த்தைகளை சண்டைக்குக் காரணமாக்குபவர்களிடமிருந்து விலகி இருங்கள். பாதி பிரச்சனைகள் தானே குறைந்து விடும்.

விருச்சிகம்: வாடிக்கையாளர்களின் வரவால், வியாபாரிகள் மகிழ்வர். இந்த வாரம் தந்தை வழி உறவுகளுடன் மோதல், அதிருப்தி அன்று அங்கலாய்த்துக் கொள்ளும் நிலை இருந்தாலும்,பக்குவமாக நடந்து கொள்வது புத்திசாலித்தனமாகும். கலைஞர்கள் செய்யும் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தால், நல்ல பெயரைப் பெற இயலும். பணிச் சுமை கூடுவதால்,பெண்களுக்கு எரிச்சலும், அசதியும் அவ்வப்போது வந்து போகலாம். பணியில் இருப்பவர்கள், தெரிந்தவர்களுக்கு மட்டும் சில சலுகைகளை அளிப்பது, விதிமுறைகளைத் தளர்த்துவது போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். உங்கள் கௌரவம் குலையாமலிருக்கும்.

தனுசு: வீடு,மனை விஷயங்கள் உங்களுக்கு சாதகமாய் முடிய, சமாதானமாய்ப் போவது புத்திசாலித்தனமாகும். .மாணவர்கள் எந்தவொரு விஷயத்தையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் கவனத்துடன் இருப்பது அவசியம். வரவுக்கும் செலவுக்கும் சரியாய் இருப்பதால், வியாபாரிகள் கட்டட விரிவாக்கம் ஆகியவற்றை சற்று ஆறப் போடுவது நல்லது. பெண்கள் உங்களை புகழ்பவர்களை நல்லவர்கள் என்று நம்பி உங்கள் ரகசியங்களை பரிமாறிக் கொள்ள வேண்டாம். உயர்பதவி வகிப்பவர்கள் நிர்வாக விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் அதனைத் தீர்க்கும் நபரிடம் பொறுப்புக்களை அளிப்பது அவசியம்.

மகரம்: பங்குதாரர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் வீண் சண்டைகளைத் தவிர்த்தால், வெற்றிக்கான வாய்ப்பு கை நழுவாமல் உங்கள் வசம் இருக்கும். எடுத்த காரியம் யாவும் நன்கு முடிவதால், பொது வாழ்வில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவார்கள். கலைஞர்கள் கடன் தொல்லைகளிலிருந்து பெருமளவு விடுபடுவர். எனினும் எந்த சூழலிலும் சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளாமலிருப்பது அவசியமாகும். பிள்ளைகள் வெளியில் செலவிடும் நேரம் அதிகமாக இருக்கும் என்பதால், பெற்றோர்கள் அவர்களின் நடவடிக்கையை கவனித்து வருவதோடு இதமாக புத்தி சொல்லித் திருத்தினால், அவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவர்.

கும்பம்: வண்டி வாகனங்களை வாங்கி விற்பவர்கள் முறையான வழியைக் கடைப்பிடித்தால், எந்த சிக்கலும் தோன்றாமலிருக்கும். உயர் பதவியில் இருப்பவர்கள் தங்களுடைய கொள்கைகளைக் கட்டிக்காக்க போராட வேண்டியிருக்கும். கூட்டுத் தொழிலில், பங்குதாரர் விலகினாலும், புதியவர் சேர்க்கையால் தொழில் வளம் சீராக இருப்பதால், வியாபாரிகள் தெம்புடன் திக்ழ்வார்கள். பொது வாழ்வில் இருப்போர்கள் வந்து சேரும் பொறுப்புகளை சுமப்பதற்கு அதிக உழைப்பை போட வேண்டியிருக்கும். மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் சொற்படி நடந்தால், மனக் கவலையின்றி சிறகடித்துப் பறக்கலாம்.

மீனம்: மாணவர்கள் உங்கள் கருத்துக்களை கோர்வையாகச் சொன்னால், எவரிடமும் நல்ல பெயரை பெற்றுவிடலாம். பெண்கள் பேச்சில் இனிமை இருந்தால், உறவுகளும் இனிமையாகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். கலைஞர்கள் கடுமையாக உழைத்தால், தடை என்ற சொல்லுக்கு இடமின்றி வெற்றிகள் வந்து குவியும். பொது வாழ்வில் இருப்போர்கள் பிறருக்காக கடன்பட நேரிடும் . எனவே எதிலும் அளவாக இருப்பது நல்லது. பெண்கள் பணியிடத்தில் கோபதாபங்களுக்கு இடம் கொடாமல் இருந்தால், உங்கள் கௌரவம் சிறப்பாகவே இருக்கும். முதியவர்கள் மனதில் சிலசமயம் எதிர்மறையான எண்ணங்கள் ஓடும். அதனை மற்ற தியானம்,மூச்சுப் பயிற்சி மற்றும் நல்ல பொழுது போக்கு அம்சம் ஆகியவற்றில் தங்கள் கவனத்தை திசை திருப்புவதே புத்திசாலித் தனம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *