சக்திசக்திதாசன்

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்கள்.

2013 பிறந்தவுடன் கனத்த நெஞ்சுடனும், பனித்த விழிகளுடனும் இம்மடலை வரைகின்றேன். பெண்களின் மதிக்கும் அடிப்படை வலுத்த கலாச்சாரமிக்க பின்புலங்களிலிருந்து வந்தவர்கள் நாம்.

நாகரீகம் எனும் பெயரில் இந்த உலகம் வெகுவேகமாக இன்று ஏதோ ஒரு திசையை நோக்கி ஓடுவதை போல ஓடிக் கொண்டிருக்கிறது போலத் தென்படுகிறது.

பெண்ணடிமைத்தனத்தை ஒழிக்க செந்தமிழ்ப்புலவன் பாரதி தன் தமிழெனும் சாட்டையெடுத்து சமுதாயத்தை நோக்கி வீசினான். தீந்தமிழ்ப் பாடல்களிலே பெண்களுக்கு இழைக்கப்படும் ஆநீதிகளை தெட்டத்தெளிவாக எடுத்துச் சொன்னான்.

சமுதாயத்தில் ஆணுக்குப் பெண் எவ்விதத்திலும் தாழ்ந்தவளில்லை என்னும் நிலைப்பாட்டை அந்நாட்களில் பின் தங்கிய சமுதாயம் என வர்ணிக்கப்பட்ட கீழைத்தேச சமூகங்களை நோக்கி வலியுறுத்திச் சொன்னான்.

1893ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ம் திகதி சுவாமி விவேகானந்தரின் பேச்சு சிக்காகோவில் ஓங்கி முழங்கியது. ஆமாம் இந்திய நாட்டு கலாச்சாரத்தின் மகிமையைப் பற்றிப் பேசும் போது ” தாய்மார்களே ” என அவர் விளித்த போது அவரைப் பார்த்து நகைத்தவர்களைப் பார்த்து எமது நாட்டில் தனது மனையாளைத் தவிர்ந்த அனைத்துப் பெண்களையும் நாம் தாயே என்றுதான் அழைக்கிறோம் ஏனெனில் அவர்களை அத்தகைய ஒரு கெளரவத்திற்குரிய ஒரு இடத்தில் வைத்திருக்கிறோம் என்றார்.

ஆனால் இன்றோ ?

அத்தகைய உன்னத பண்பு நிறைந்த நாட்டின் தலைநகரிலே மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் மானபங்கப் படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

உள்ள‌ம் கனக்கிறது ! உணர்வுகள் கொதிக்கின்றன ! ஏதோ இனம்புரியா பீதியுடன் கலந்த வேதனை நெஞ்சத்தின் ஓரங்களை நெருஞ்சி போல் தைக்கின்றது.

சரி மிருகவெறி கொண்ட காடையர் கூட்டமொன்றின் செயல் என்றுமே நடந்திராத ஒன்று என்ற எண்ணத்தை வீழ்த்தியடிப்பது போல் தினந்தோறும் கற்பழிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை என்று ஒரு புள்ளி விபரமும், குடும்பத்திற்குள் பெண்களின் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளின் புள்ளி விபரமும் ஊடகங்களில் பிரஸ்தாபிக்கப் படும்போது விடையில்லா வினா நெஞ்சில் பூதாகரமாக எழுகின்றது.

சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்ட அந்தச் சமூகம் , கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட இக்காலச் சமூகம் வரை எத்தகைய மாற்றங்களுக்குள்ளாகியதால் இப்படியான் நிகழ்வுகள் நிகழக்கூடிய சூழல் தோன்றியது ?

சிக்கலான கேள்வி, விடை தெரியாமல் உள்ளம் தடுமாறுகிறது. 19ம் நூர்றாண்டிலே வாழ்ந்த விவேகானந்தர் காலச் சமுதாயமும் 22ம் நூற்றாண்டு காலத்திலே வாழும் எக்காலச் சமுதாயமும் உடைகளணியும், உத்தியோகம் பார்க்கும் , பிரயாணம் செய்யும் வழிமுறைகளிலே பெரும் மாற்றங்களுக்குள்ளாகியிருக்கலாம். ஆனால் அன்று “அம்மா” என்று அழைத்த குழந்தை இன்றும் “அம்மா” என்றுதானே அழைக்கிறது ? அந்த உறவின் அழுத்தம் மாற்றம் காணக்கூடியதா ?

இல்லையே ! அப்படியாயின் எப்படி தாரத்தைத் தவிர்ந்த மற்றைய பெண்களைச் ச்கோதரிகளாகவும், தாய்மார்களாகவும் கெளரவிக்கும் பண்பை மட்டும் மாற்ற‌த்துக்குள்ளாக்கலாம் ?

காலத்துக்குக் காலம் வாழ்க்கையின் நடைமுறை வழக்கங்களினால் காலம் எம்மீது எறியும் சில மாற்றங்கள் , அவை மானிடத்தின் அடிப்படைத் தன்மைகளைச் சிதைக்காதவரை எம்மைக் காலமாற்றத்தை உள்வாங்கப் பண்ணுவதைத் தவிர்க்க இயலாது.

அதற்காக தூய பண்புகளின் தன்மையைக் காலம் மாற்றத்தையோ அன்றி நாகரீக வளர்ச்சியையோ காரணமாகக் கூறி மாற்றிக் கொள்வது என்பது ஏற்றுக் கொள்ள‌ முடியாத ஒன்று.

சில தினங்களுக்கு முன்பு இது சம்பந்தமாக இந்தியாவில் நடைப்பெற்ற போராட்டங்களைப் பற்றிக் காட்டிய இங்கிலாந்து பி.பி.ஸி தொலைக்காட்சிச் செய்திச் சேவையில் பேட்டி காணப்பட்ட இந்தியப் பெண் ஒருவரின் கூற்றுப்படி ” இப்படியான சம்பவங்கள் நடப்பதன் அடிப்படைக் காரணம் பெண்களுக்குத் தகுந்த பாதுகாப்பு இல்லை என்பது மட்டுமல்ல, சமுதாயம் பெண்களின் மீது கொண்டுள்ள ஒரு தாழ்ந்த பார்வையுமே ” என்று கூறினார்.

இப்படியான பிரச்சனைகளை அரசாங்கம் மட்டுமே சட்டங்கள் இயற்றுவதன் மூலம் தீர்த்துவிட முடியுமா?

சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் சில அழுக்கு மனப்பான்மைகளை கழுவியகற்றும் பணியில் முக்கியத்துவம் வகிக்க வேண்டியது எமது இளைய தலைமுறையே !

வாலிப வயதில் பெண்களின் மீது காதல் கொள்வது வாலிபரின் வழக்கம் அதே போல மனம் கவர்ந்த வாலிபனிடம் தன் மன‌தைப் பறிகொடுப்பதும் வனிதையரின் உரிமை. ஆனால் இவை அவரவர்களுக்கு அவர்கள் கொடுக்கும் கெள்ரவம் எனும் எல்லைக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.

பெண்களைக் காமப் பொருட்களாகப் பார்க்கும் ஆண்களின் மனப்பான்மை முற்றிலும் மாற்றப்பட வேண்டும், அதே போல தமது கட்டழகை காமத்தின் அடிப்படையில் காட்சிப் பொருளாக்கும் பெண்களின் மனோபாவமும் மாறவேண்டும்.

கெள்ரவமாக நாகரீகமான முறையில் உடையுடுத்தி ஆண்களுடன் சகஜமாகப் பழகும் பெண்கள் அனைவரும் தமது விளையாட்டுப் பொருட்கள் என எண்ணும் ஆண்கள் பலர் நம்மிடையே இருப்பது உண்மை. அத்தகையவர்களின் தவறைச் சுட்டிக்காட்டி புதுமையான  பெண்களை மதித்துக் கெளரவிக்கும் புரட்சிகர தலைமுறையைத் தோற்றுவிப்பது எமது ஆற்றல்மிக்க இளைய தலைமுறையின் கடமையாகிறது.

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *