தொல்லை காட்சி- அரவிந்த் சாமி- மிஸ்டர் பீன்- மௌன ராகம்

1

மோகன் குமார்

டிவி யில் பார்த்த படம் – மௌன ராகம்

தமிழின் மிக சிறந்த பட வரிசையில் வரக்கூடிய மௌன ராகம் மீண்டும் ஒரு முறை காண முடிந்தது. மணி ரத்னம் மனதளவில் Fresh -ஆக இருந்த போது எடுத்த படம். மனம் ஒவ்வாத கணவன் – மனைவி, மனைவிக்கு ஒரு பழைய காதல் என  இன்றைக்கும் பொருந்துகிற மாதிரி இருப்பது ஆச்சரியம். கார்த்திக்கின் கேமியோ, ராஜாவின் அதி அற்புத பாடல்கள், PC  ஸ்ரீராமின்  ஒளி ஓவியம் (அந்த வார்த்தைக்கு தங்கர் பச்சான் காப்பி ரைட் எதுவும் வாங்கலையே ?) , ரேவதியின் அழகு.. என மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று.

கடல் பார்த்து விட்டு , கட்டு போட்டு கொண்டு படுத்திருப்போர் பாலு மகேந்திரா போல மணிரத்னமும் சினிமாவிலிருந்து ரிட்டையர் ஆகிடனும் என சொல்ல ஆரம்பித்துள்ளனர். மணிரத்தினத்தின் சமீபத்துப் படங்களை பார்த்தால் (அதுவும் 3 முறை ஹார்ட் அட்டாக் வந்த அவரது  உடல்நிலையை  கணக்கில் எடுத்துக் கொண்டால்) – இந்த கூற்று சரியென்றே தோன்றுகிறது

மிஸ்டர் பீன்

போகோவில் இப்போதும் அவ்வப்போது மிஸ்டர் பீன் காட்சிகள் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறோம்…. நானும் மகளும் . என் பெண்ணுக்கு 10 வருஷத்துக்கும் மேலாக மிஸ்டர் பீன் அலுப்பதே இல்லை.  நண்பர்கள் சிலர் வீட்டில் குழந்தைகளுக்கு மிஸ்டர் பீன் காமெடி காட்டுவதில்லை சற்று அடல்ட் கண்டெண்ட் வரும் என்பதால்.. அப்படி ஒன்றும் செக்சியாய் இருக்காது. திடீரென எப்போதாவது ஒரு முறை உடையின்றி ஓடுவார் .அவ்வ ளவு தான்.. :))

மிஸ்டர் பீன் பரீட்சை எழுதும் காட்சி, சர்ச்சில் பிரேயர் நடக்கும் போது செய்யும் லூட்டிகள் .. இவையெல்லாம் எவர் கிரீன் காமெடி..

நிற்க. புகழ் உச்சியில் இருக்கும் போதே மிஸ்டர் பீனாக நடிக்கும் ரோவன் அட்கின்சன் நடிப்பதை நிறுத்திக் கொள்கிறேன் என அறிவித்து விட்டார். உங்களுக்கு இதில் மெசேஜ் ஏதும் இருக்கா மணிரத்னம் சார் மற்றும் டெண்டுல்கர் ?

பிளாஷ் பேக் : வந்தே மாதரம்

இன்றைய சோ – தன் ஜால்ரா நடவடிக்கையால் நம் மதிப்பை இழந்து வந்தாலும், அவரது பழைய நாடகங்கள் சில அட்டகாசம் என்பதை மறுக்க முடியாது

குறிப்பாக வந்தே மாதரம் என்கிற இந்த நாடகம் ஞாயிறு காலை 9 மணியளவில் ஒளிபரப்பாகும். டிவி வந்த புதுசு. தூர்தர்ஷனில் தான் பார்த்த நினைவு. ஒவ்வொரு ஞாயிறும் மிக எதிர்பார்ப்புடன் பார்த்து ரசித்த நாடகம். நமக்கு நன்கு தெரிந்த சுதந்திரப் போரை செம சுவாரஸ்யம் மற்றும் சஸ்பென்சுடன் காட்டி அசத்தியிருந்தார். அன்றைய அரசியலை அதிகம் நக்கல் செய்யாமல் எடுத்துக் கொண்ட விஷயத்தை மட்டும் ஒரே கோட்டில் எடுத்துச் சென்ற சீரியல். இப்போது DVD -யாகவும்   கிடைக்கிறது என இணையம் மூலம் அறிகிறேன்.

ஜெயா டிவி யில் விஸ்வரூப செய்தி

விஸ்வரூபம் பிரச்சனை கொழுந்து விட்டு எரிந்தபோது பேசாமல் இருந்த ஜெயா டிவி, கமலுக்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்ட போது தொடர்ந்து அதை பிளாஷ் நியூசாக போட்டது. பிரச்சனை முடிவுக்கு வருவதை சொல்வது நல்ல விஷயம் தான்..

ஆனால் பிளாஸ் நியூஸ் இப்படி சொன்னது: முதல்வர் நடவடிக்கை : விஸ்வரூப பிரச்சனை தீர்ந்தது.. !

ஆமா, ஜெயா டிவிக்கும், முதல்வருக்கும் சம்பந்தமே இல்லியாமே?  நம்பிட்டோம் !

அரவிந்த் சாமியும் அடுப்புல வெந்த ஆசாமியும்

கடல் படம் பற்றி அரவிந்த்சாமி விஜய் டிவியில் 1 மணி நேரம் பேசினார். அரவிந்த்சாமியின் கடல் பார்த்து அடுப்புலே வெந்த ஆசாமியாகி போனவர்கள் இந்த நிகழ்ச்சி பார்த்தால்  நொந்து நூடுல்ஸ் ஆகியிருப்பார்கள்

படம் ஆஹோ ஓஹோ என படக் குழு பேசும்போது கவுண்டர் படத்தில் வரும் ” போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சுது ” தான் நியாபகத்துக்கு வந்தது.

அரவிந்தசாமியை ஓரிரு வருடங்களுக்கு முன் பார்த்துள்ளீர்களா? நன்கு வெயிட் போட்டு முடி ஏகமாய் கொட்டி. முக நூலில் சில நண்பர்கள் கூட ” எப்ப பார்த்தாலும் பெண்கள் சைட் அடித்த மனிதன் இன்று எப்படி ஆனார் பாருங்கள் ” என்று போட்டோ போட்டு மகிழ்ந்தனர் ஆனால் மனிதர் மீண்டும் பழைய ஆளாக வந்து எல்லார் வயிற்றிலும் புளியைக் கரைத்துள்ளார் . வெயிட் குறைத்து சரி. கொட்டிய முடி எப்படி திரும்ப வந்துச்சு சார்? சினிமாவில் தான் விக் என்றால் வெளியிலுமா?

என்னமோ போடா மாதவா.. !

படத்திற்கு நன்றி :

http://www.joystiq.com/2007/04/06/mr-bean-game-coming-to-playstation-2/

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தொல்லை காட்சி- அரவிந்த் சாமி- மிஸ்டர் பீன்- மௌன ராகம்

  1. //மிஸ்டர் பீன் அலுப்பதே இல்லை//
    இங்கும் அதே கதை தான், மோகன். 
    நீங்கள் கூறிய பரிட்சை எழுதும் காட்சியும், சர்ச் காட்சியும் எனக்கும் மிகவும் பிடித்தமானவை. 
    JOHNY ENGLISH REBORN 2 நிச்சயம் பார்த்திருப்பீர்கள்!! அதில் ஒரு காட்சி.  பிரதமருடனான ஒரு முக்கியமான சந்திப்பின் போது ஜானி இங்லிஷின் (பீன்)  நாற்காலி மட்டும் ஏதோ கோளாறு காரணமாக மேலும் கீழும் சென்று கொண்டிருக்கும். மூச்சு கூட விடமுடியாத அளவிற்கு சிரித்து சிரித்து, நெஞ்சு அடைத்துக் கொள்ளுமோ என்று பயந்தே போய் விட்டேன். நான் மட்டும் அல்ல; என் மனையாளும் தான். நாங்கள் எதற்குச் சிரிக்கிறோம் என்றே தெரியாமல், எங்கள் மூன்று வயது மகனும் சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தான். 
    Awesome Scene. எல்லோரும் அவசியம் பார்த்து மகிழ வேண்டிய ஒரு காட்சி.
    அவருடைய நேர்காணல்களை எல்லாம் கண்டவுடன் அவர் மீது ஒரு பெரும் மரியாதை வந்து விட்டது. நாம் படத்தில் காணும் மிஸ்டர் பீனுக்கும், நிஜ ரோவன் அட்கின்சனுக்கும் துளிக் கூட சம்பந்தமே இல்லை. சிறந்த அறிவாளி. அருமையான மனிதர்.
    கட்டுரைக்கு நன்றி! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *