திவாகர்

மனிதர்களுக்கு இளமைப் பருவமும், இளமையில் காதலும், காமமும் மிக முக்கியமான கட்டங்களாகவே இருந்து வந்திருக்கின்றது. ஆண் பெண் இடையே காதலும் அதன் பின்னர் வரும் காமமும் மிகவும் அவசியமான ஒன்றாகவே நம் மூதாதையர் கருதி வந்திருக்கின்றனர். எத்தனையோ இலக்கியங்கள் இந்தக் காதலுக்கும் காமத்துக்கும் மிகவும் முக்கியமான இடத்தைக் கொடுத்தே வந்திருக்கின்றன.

இலக்கியத்தில் காதல் சுவையை இனிக்க இனிக்க சொல்லும்போதும் எழுதும்போதும் தேனுண்ட வண்டு போல நாமும் மயங்குவது கூட இயல்புதான். ஆனாலும் காதல் என்பதில் அன்பு எனும் வார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதும், இங்கே அன்பு எல்லையில்லாமல் பரந்து விரிந்து இருப்பதையும், அதே சமயத்தில் உடல் சம்பந்தப்பட்ட காமத்துக்கு எல்லை வகுக்கப்பட்டிருப்பதையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

இந்த முக்கியமான தெளிவைத்தான் திருக்குறளின் காமத்துப்பால் நமக்கு விளக்கி வருவதாக நினைக்கிறேன். இந்த திருவள்ளுவர் எல்லா வகை மக்களையும் மிக நன்றாக அறிந்தவர் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டுமென்பதில்லை. ஆனால் குறட்பாக்களில் காமத்துப் பால் இனிமையின் உச்சகட்டம். அறிவுரையை விட ருசிக்க இனிப்பு கொடுப்பது என்பது எல்லோருக்கும் இஷ்டம்தானே.

அப்படிப்பட்ட சுவையான காமத்துப்பால் பாடல்களை சிலவற்றை எடுத்துக்கொண்டு இந்த வார வல்லமையில் மேகலா இராமமூர்த்தி அவர்களின் ‘வள்ளுவர் வரைந்த காதற்கவிதை’ என்றதொரு அருமையான கட்டுரை ஒன்றை வரைந்துள்ளார்.

”நீ என் தலைவியின் முகத்தை ஒத்திருக்க விரும்பினாயானால் இப்படி நாணம் இல்லாமல் எல்லாரும் காணும்படி வானில் தோன்றாதே என்றுவேறு கூறுகின்றான்! புதுமையான வேண்டுகோள் இல்லையா?

”மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.” .

தலைவன் ஒருவன் தலைவி ஒருத்தியைக் கண்டு காதல் கொள்கின்றான். அவளுக்கும் அவன்மீது அன்பு தோன்றுகின்றது. ஆயினும், பெண்மைக்கே உரிய நாணம் தடை போடுவதால் தலைவன் தன்னை நோக்கும் போது நிலத்தை நோக்குகின்றாள். அவன் தன்னைப் பார்க்காத தருணத்தில் அவனை நோக்கி மெல்லப் புன்னகைத்துக் கொள்கின்றாள். இதனையே

“யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.” என்கின்றார் வள்ளுவப் பேராசான்.

”உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.”

மாந்தர்களே! இத்தலைவியொடு எனக்குள்ள நட்பு எப்படிப்பட்டது தெரியுமா? உடம்புக்கும், உயிருக்கும் உள்ள தொடர்பு எப்படிப்பட்டதோ அப்படிப்பட்டது என்கின்றான். இங்கே உறவு என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் நட்பு என்ற சொல்லை அவன் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. காதலுக்கு இதைவிட அருமையான விளக்கம் எதனையும் கொடுத்துவிட முடியாதென்றே தோன்றுகின்றது.

இவ்வாறு காமத்துப்பாலில் படித்து இன்புறத்தக்க பல குறட்பாக்கள் குவிந்து கிடக்கின்றன. சங்க இலக்கிய அகத்திணைப் பாடல்களின் சுருங்கிய வடிவாகவே (abridged version) காட்சியளிக்கின்றன இக்குறட்பாக்கள் எனலாம். களவு என்று சொல்லப்படுகின்ற காதல் வாழ்வையும், கற்பு என்று அறியப்படுகின்ற இல்லற வாழ்வையும் இருபத்தைந்து (25) அதிகாரங்களில் திருவள்ளுவப் பெருந்தகை சுவைபட நகர்த்திச் செல்லும் பாங்கு படித்து இன்புறத்தக்கது. காமத்துப்பால், கற்புநெறி பிறழா நல்லதோர் இல்லறத்திற்கு வழிகாட்டியாய்த் திகழ்கின்றது எனலாம். (மேலும் படித்து இன்புற  https://www.vallamai.com/literature/articles/32085/#comment-6111

நல்லதொரு சுவையான வள்ளுவ விருந்தினைப் படைத்த மேகலா இராமமூர்த்தி அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமையாளர் குழு தேர்ந்தெடுக்கிறது. அவருக்கு நம் இனிமையான வாழ்த்துகள்.

கடைசி பாரா: அமைதிச் சாரல் சாந்தி அவர்களின் கவிதை. இந்த இலையுதிர்களில் மரத்தின் கீழே படுத்திருக்கும் நாயையும் அவர் விடவில்லை.

பிளிறலுடன் நிலையத்தினுள்
நுழைந்தது ரயில்
மதம் பிடித்ததுவோ எனவஞ்சும்படி
ஆர்ப்பரித்துக்கொண்டு.
அரைகுறை உறக்கத்தில்
ஒவ்வொரு இலையாயுதிர்த்துக்கொண்டிருந்த
அரச மரமொன்று
தடதடவென அகிலமெங்கும் கிடுகிடுத்ததில்
சரசரவென வியர்த்துக் கொட்டியது
இலைத்துளிகளை
மடியில் உறங்கிக்கொண்டிருந்த
நாய்க்குட்டியின் மேல்..
அதிகபட்ச எதிர்ப்பாய்த்
திரும்பிப்படுத்துறங்குதலைக் காட்டிய
நாயிடம் கோபித்துக்கொண்டு
வெளியேறிக்கொண்டிருந்தது ரயில்

பதிவாசிரியரைப் பற்றி

15 thoughts on “இந்த வார வல்லமையாளர்

  1. வல்லமை இதழில் எழுதும் அரிய வாய்ப்பும் அதனைத் தொடர்ந்து உயரிய விருதாக நான் மதிக்கும் “வல்லமையாளர்” விருதும் அளித்து இச்சிறியவளைப் பெருமைப்படுத்திய வல்லமை இதழின் நிர்வாக ஆசிரியர், துணை ஆசிரியர்கள், ஆசிரியர் குழு, ஆலோசகர் குழு, வல்லமை இதழில் அதனை வெளியிட்ட உயர்திரு திவாகர் ஐயா ஆகிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி! வல்லமை இதழின் தரமான தமிழ்ப்பணி என்றும் சிறக்க என் வாழ்த்துக்கள்!!

    நன்றியுடன்,
    மேகலா

  2. இந்த வார வல்லமையாளர் எழுத்தாளர் மேகலாவிற்கும், சிறந்த கவிதை வரிகளுக்காகப் பாராட்டப் பட்ட சாந்திக்கும் வாழ்த்துக்கள்.

    ….. தேமொழி

  3. இந்த வார வல்லமையாளர் மேகலாவிற்கு வாழ்த்துகள்.

    இன்னும் பல வெற்றிக்கனிகள் உங்கள் மடியில் விழட்டும்..

  4. எனக்கு வாழ்த்துரை வழங்கிய தேமொழி மற்றும் அமைதிச்சாரல் சாந்தி ஆகிய இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். அருமையான (கடைசி பாரா) கவிதையைப் படைத்திருக்கும் சாந்தி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!

    -மேகலா

  5. உலகப் பொதுமறையாம் ‘திருக்குறளுக்கு’, இதுவரை விளக்கவுரை எழுதியவர்கள் ஏராளம். இரண்டே வரிகளில் அடங்கிய குறளுக்கு, இருநூறு வரிகளில் விரிவுரை ஆற்றியவர்களும் இருக்கிறார்கள். எழுத்தாளர் மேகலா ராமமூர்த்தி அவர்கள் மாற்றுச் சிந்தனையில் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு, மிக அருமையாக காமத்துப் பாலில் வருகின்ற சில குறள்களை காதலோடு ஒப்பிட்டு விளக்கமளித்துள்ளதை வெகுவாகப் பாராட்டுகிறேன்.

  6. ‘இந்த வார வல்லமையாளர்’ மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துகள்!!!

    ‘கடைசி பாராவில்’ இடம்பிடித்த கவிதை வரிகளை சிருஷ்டித்த அமைதிசாரல் சாந்திக்கும் என் வாழ்த்துகள்!

  7. இந்த வார வல்லமையாளார் எழுத்தாளர் திருமதி. மேகலா அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். அருமையான கவிதை அளித்த சாந்தி அவர்களுக்கும் என் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

  8. எனக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் மனமுவந்து வழங்கியுள்ள அன்புத் தோழர்கள், தோழியர் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகின்றேன்.

    அன்புடன்,
    மேகலா

  9. மேகலா இராமமூர்த்தி, மற்றும் அமைதிச் சாரல் சாந்தி, இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

  10. தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கவிநயா.

    –மேகலா

  11. திருக்குறளைப் புதியதொரு கோணத்தில் அணுகிய இந்த வார வல்லமையாளர் மேகலா ராமமூர்த்தி அவர்களுக்கும் கவிதை மூலம் என் கிராமத்து ரயில் நிலையத்தைப் படம் பிடித்துக் காட்டிய அமைதிச் சாரல் சாந்தி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

  12. வாழ்த்துக்களைத் தெரிவித்த திரு. சச்சிதானந்தம் அவர்களுக்கு நன்றி!

    -மேகலா

  13. அன்பு மேகலா ராமமூர்த்திக்கு          வல்லமையாளர்  பட்டம் பெற்றதற்கு  என் அன்பு கனிந்த வாழ்த்துகள் 

  14. வல்லமையில் ‘சதமடித்த’ சாதனையாளராகிய தங்கள் வாழ்த்துக்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் விசாலம் அம்மா!

    –மேகலா

Leave a Reply to மேகலா இராமமூர்த்தி

Your email address will not be published. Required fields are marked *