பிரபஞ்ச மண்டலமே
சத்தியமணி
பிரபஞ்ச மண்டலமே ! வானவெளி அண்டமே
உயிர்அஞ்ச செயும் உன்சினம் நியாயம் தானோ !
இனமொன்று எனச்சொல்லி இனவிரிசல் கிளப்பிட்டோம்
மதமில்லை எனச்சொல்லி மதங்களுக்கு மாறிட்டோம்
சாதியில்லை எனச்சொல்லி சலுகைகள் எதிர்பார்த்தோம்
நீதிசமம் எனச்சொல்லி நியாயங்களை வேட்டுவைத்தோம்
பாதிபகல் பழிகூறி பலர்வாழ்வில் புகைவைத்தோம்
பகுத்தறிவு எனப்பேசி பிறர்பேச்சின் வழிநடந்தோம்
கருத்தறிவு தர்பாரில் அரசியலைக் கலந்துவிட்டோம்
ஆட்சிக்கு வரவிழைந்து அத்துனையும் முயற்சித்தோம்
காட்சிக்கு தேவைமட்டும் காட்டியதில் விளையாண்டோம்
எதற்காக கல்லெறிந்து எங்களை தாக்குகிறாய் ?
எங்களின் சட்டசபை போல்புவியை ஆக்குகிறாய் ?
எச்சரிக்கைப் போலெங்கோ இப்போது செய்தவிதி
எம்மண்ணில் வீசுவது எப்போது சொல்லிவிடேன் ?
திருந்தவிலை நாங்கள் ! திருந்தவும் விழையவில்லை!
ஊழற்சுவை கண்டோம்! உன்மேலும் பயமில்லை!
இருந்தும்
பிரபஞ்ச மண்டலமே ! வானவெளி அண்டமே
உயிர்அஞ்ச செயும் உன்சினம் நியாயம் தானோ !
விண்கற்களின் வீழ்ச்சியில் விளைந்ததிந்தக் கவிதை
திரு. சத்தியமணி அவர்களே இந்தக் கவிதையில் என்னைக் கவர்ந்தது நாம் செய்யும் அநியாயங்களுக்கு பிரபஞ்சம் கோபம் கொண்டதாகக் காட்டிய தற்குறிப்பேற்ற அணி. அதற்கடுத்து சட்டசபையுடன் புவியை ஒப்பிட்ட உவமை. கவிஞர்களுக்கு எப்படி இது போல கற்பனைகள் தோன்றுகிறது என்பது எனக்குப் புதிராக இருக்கிறது.
அன்புடன்
….. தேமொழி
Large asteroid heading to Earth? Pray, says NASA …..?