யோகா கிளாசுக்கு
பாரதி நகர் போயிருக்கும்
அம்மாவுக்குத் தெரியாமல்
தாத்தாவுக்கு காப்பி
போட்டுக் கொடுக்கிறாள்
தாயம்மா பாட்டி!
அந்த மாமாவிடம்
இனிமேல் இங்கு
வர வேண்டாமென்று
சொல்லி அழும்
சின்னமணி அக்காவுக்கு
கன்னத்தில் நல்ல அறை!!
சாக்கடையில்
தவறி விழுந்த
பிரவீணாவுக்கு
கைகால் கழுவிவிட்ட
பிச்சைக்காரத் தாத்தாவை
பிடித்துக் கொண்டு
போகிறது போலீசு!
சதர்ன் மில்
முரளி அண்ணனுக்கு
ஷிப்ட் மாறினது தெரியாமல்
மொட்டை மாடிக்குப் போகும்
மெளலி மாஸ்டர் வீட்டு
சந்திரகலா அக்கா!
மேரி மிஸ்ஸுடைய
செல்போனில் ரீடையல்
போட்டுப் பார்த்ததில்
அது எங்க ஸ்கூல் பஸ்
டிரைவர் அண்ணன்தானாம்
பிடீ பிரியடில் சொன்னான்
த்ரீ ஏ தினேஷ் குமார்!
அம்மாவிடம் சொல்லி
பெர்மிசன் வாங்க வேண்டும்
என்னுடைய ஸ்கூல் டே
பெர்பாமன்சுக்கு ட்ரீட்
ஓசன் ரெஸ்டாரண்ட்டில்!
ஆமாம் நான் இன்றைக்கு
கலைமகள் வித்யாலயா
பிரைமரி ஸ்கூலில்
ஒன் சீ படிக்கும் வித்யா!!
முனைவர் நா. கணேசன் ஹூஸ்டன் மாநகரில் 30 ஆண்டுகளாக விண்வெளி இயங்கியல் (Space Dynamics) பொறியாளராகப் பணியாற்றுகிறார். இணையம் தொடங்கிய நாளிலிருந்து தமிழ், இந்தியாவின் வரலாற்றில் திராவிட மொழிகளைப் பேசுவோரின் பங்கு, சிந்து சமவெளியும் தமிழர்களும், சொல்லாய்வுகள் பற்றி எழுதிவருகிறார். அமெரிக்காவில் பேரா. ஹார்ட் அமைத்த பெர்க்கிலி தமிழிருக்கை அமைய உதவியவர். தற்போது ஹூஸ்டன் பல்கலையில் 6 மில்லியன் டாலரில் நிரந்தரமான தமிழிருக்கை அமைக்கும் குழுவின் பொருளாளர், யூனிக்கோடு குறியேற்றம் தமிழுக்கு கணினி, இணையம், செல்பேசிகளில் அமைய உழைத்தவர். ’எழுத்து என்பது ஒரு கருவி. பொருளாதாரம், பணிகள் போன்றன நெருங்கிவரும் இந்தியாவில், ரோமன்/ஆங்கில எழுத்தில் இந்திய மொழிகள் எழுதும்முறை (ISO 15919) பரவலாக வேண்டும். அரசியல், உணர்ச்சி என்பதற்கும் மேலாக, இந்தியமொழிகளுக்கு இடையே உள்ள உறவுகளை அறிய இம்முறை உதவும். அப்போது, இந்தி எழுத்தைத் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் திணிக்கும் தேவை இல்லாமல் போய்விடும். ’India as a Linguistic Area’ எனும் பேரா. எமனோவின் கோட்பாட்டை ரோமன் இலிபி துணையாக இந்திய அரசாங்கம் ஏற்பது நாட்டுவளர்ச்சிக்கு உதவும்’ என்ற கொள்கையுடையவர். உசாத்துணை: http://muelangovan.blogspot.com/2008/06/blog-post_29.html