தொல்லை காட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயா நானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல்

1

மோகன் குமார்

ஒரு மாறுதலுக்கு இவ்வார தொல்லை காட்சியில் விஜய் டிவி நிகழ்ச்சிகள் மட்டுமே !
*****
விஜய் டிவியின் பெரும் பலம்: அதன் கேம் ஷோக்கள் தான். குறிப்பாக வார இறுதியில் வரும் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகள் பெரிதும் ரசிக்கப்படுகிறது. ஒவ்வொரு வகையிலும், ஒவ்வொரு ஸ்லாட்டிலும் தான் தான் நம்பர் 1- ஆக இருக்க வேண்டுமென நினைக்கும் சன்னை கூட வார விடுமுறையில் விஜய் டிவி முந்தி விடும் என்றே தோன்றுகிறது.

கேம் ஷோக்கள் அதன் பலம் என்றால் – பயணம், சிறுத்தை, வாகை சூடவா, சாட்டை என 10 படங்களை மட்டுமே மாற்றி மாற்றி ஒவ்வொரு வாரமும் போட்டு ஜல்லியடிப்பது சூர மொக்கை. இந்த விஷயத்தில் ஏன் தான் விஜய் டிவி இப்படி இருக்கோ தெரியலை !
************
நீயா நானாவில் கௌரவ கொலைகள்

பிரகாஷ் ராஜ் கௌரவ கொலைகள் குறித்த தனது புதிய படமான கௌரவம் படத்தின் பாடல் வெளியீட்டை நீயா நானாவில் நடத்த விரும்பி அணுக, அதே தலைப்பில் ஒரு விவாதமும் வைத்து பாடல் வெளியீடு நடந்தது.

சாதி விட்டு சாதி மாறி திருமணம் செய்து உறவினர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட பலரும் வந்திருந்து தங்கள் கதையை கூறினர். குறிப்பாக ஒரு பெண் சாதி விட்டு திருமணம் செய்ததால் தனது கணவர் கொல்லப்பட்டதாகவும், தான் இப்போது குழந்தையுடன் சாப்பாட்டுக்கே வழியின்றி தவிப்பதாகவும் சொன்னது பரிதாபம்.

நிகழ்ச்சியில் பேசியர் ஒருவர் சொன்ன தகவல் சிந்திக்கத்தக்கது.

” கி.மு 2000 முதல் சாதி இருந்துள்ளது. ஆனால் தீண்டாமை கி. பி 500 -ல் தான் வந்தது. அதாவது முதலில் சாதி இருந்தது. ஆனால் தீண்டாமை இல்லை. சாதி வந்து 2500 ஆண்டுகளுக்கு பின் தான் தீண்டாமை வந்தது”

” Scheduled Caste என்று சொல்ல எவரும் தயங்க தேவையில்லை; பிற்படுத்தப்பட்டவர்கள் என்று சொல்லும் போது தான் மேலே, கீழே என ஏற்ற தாழ்வு வருகிறது. Scheduled Bank என்று சொல்வது போல  தான் Scheduled Caste.. அரசு இவர்களை குறிப்பிட்ட பட்டியலில் வைத்துள்ளது என்பதை மட்டுமே குறிக்கிறது “

நிற்க. கௌரவம் பட டிரைலர் பெரிதாய் கவரவில்லை. கிராமத்தில் ஒரு கௌரவ கொலை – அதை எதிர்த்து போராடும் கல்லூரி மாணவர்கள் என போகிறது கதை..

ஒரு லட்சம் வென்ற ஜோடிகள்

ஜேம்ஸ் வசந்தன் நடத்தும் ” ஒரு லட்சம் பரிசு போட்டியில் இதுவரை மூவர் தான் – கடைசி லெவல் வரை வென்று ஒரு லட்சம் பரிசு வேன்றுள்ளனராம். மறு ஒளிபரப்பில் அப்படி ஜெயித்த 3 க்ரூப்பையும் காண்பித்தனர். வேணு அரவிந்த்- அபிஷேக், வடிவுக்கரசி- சின்னத்திரை இயக்குனர் ஆனந்த், இரு இளம் டிவி சீரியல் நடிகைகள்.

கடைசி நிலைகளில் சற்று கடினமான வார்த்தைகள் இருந்தாலும், நிதானமாய் பொறுமையாய் ஆடி ஜெயித்தது ஆச்சரியமாய் இருந்தது.

சில நேரம் எதிரணிக்கு மிக கஷ்டமான வார்த்தைகளும் மற்றொரு அணிக்கு சற்று இலகுவான வார்த்தைகளும் வருவதை கவனித்து சரி செய்தால் நன்றாயிருக்கும் !

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி

எடுத்தவுடன் ஒரு உண்மையை சொல்லி விடுகிறேன்: சூர்யா இருந்த போது இருந்த ஜோஷ் இப்போது சுத்தமாக இல்லை. பிரகாஷ் ராஜ் என்னதான் கலந்து கொள்வோரை எப்போதும் ” எக்சலண்ட் ” ” சூப்பர்ப்” என்கிற சூபர்லேடிவ்களை மட்டுமே வைத்து பாராட்டினாலும் நிகழ்ச்சி நிச்சயம் செல்ப் எடுக்கலை.

எளிமையாய் சொல்லுணும் என்றால் முன்பெல்லாம் சூர்யா வரும்போது நிகழ்ச்சி தவற விடாமல் பார்க்கணும் என தோன்றும். இப்போது அநேகமாய் பார்ப்பதே இல்லை.

விஜய் டிவி விழித்து கொள்ளா விட்டால் இதன் TRP அதள பாதாளத்தில் தான் இருக்கும்.

அசத்தும் காம்பியர்கள்

விஜய் டிவியில் மட்டும் எப்படி தான் நல்ல நல்ல காம்பியர் பிடிக்கிறார்களோ தெரியவில்லை. சற்று கவனித்து பாருங்கள். மற்ற தமிழ் டிவி காம்பியர்கள் எத்ததனை பேரின் முகமோ, பெயரோ நினைவுக்கு வருகிறது? ஆனால் விஜய் டிவி காம்பியர்கள் சிலர் சினிமா நட்சத்திர ரேஞ்சுக்கு புகழோடு உலா வருகிறார்கள்.

சந்தானம், சிவகார்த்திகேயன், இன்றிய மா. கா. பா ஆனந்த என பலரும் இங்கு காமெடி அல்லது காம்பியரிங் செய்து பின் பெரிய திரைக்குள் நுழைந்தவர்கள் தான்.

இன்னொரு பக்கம் கோபிநாத் தினம் ஒரு மகளிர் ஷோவும் வார கடைசியில் ரெண்டு ஷோவும் அலுக்காமல் நடத்துகிறார். ஒரு வார்த்தை ஒரு லட்சம் நடத்தும் ஜேம்ஸ் வசந்தனாகட்டும், தமிழ் பட்டி மன்றம் நடத்தும் இளைஞர் ஆகட்டும் பெரும்பாலானோர் ரசிக்க வைக்கிறார்கள்

இப்படி சரியான காம்பியர் கிடைப்பது அதிர்ஷ்டமா அல்லது இங்கு யாரோ சரியான ஆள் தேர்வு குழுவில் இருக்கிறாரா தெரியலை !

சீரியல் பக்கம் சரவணன் மீனாட்சி

படிக்குற வேலை, சமையல் வேலை எல்லாம் முடிஞ்சு 9 மணிக்கு டிவி போடுவோம். அப்படி தான் சூப்பர் சிங்கர் ரொம்ப காலம் பார்த்தது. இப்போ சூப்பர் சிங்கரை ஒன்பதரைக்கு தள்ளிட்டு ஒன்பது மணிக்கு “சரவணன் மீனாட்சி ” சீரியல் வருது. மனைவியும் மகளும் பார்ப்பதால் கருமமே என கொஞ்சம் பார்த்து தொலைக்க வேண்டியிருக்கு. சரவணன் & மீனாட்சி – தங்கள் பெற்றோரை விட்டுட்டு அதே ஊரில் தனிக்குடித்தனம் போறாங்க. அந்த கதை தான் சில வாரமா ஓடிகிட்டு இருக்கு.

குயிலி மாதிரி தளுக்கி மினுக்கி எந்த பெண் பேசுறாரோ ? ஓவர் ஆக்டிங்கின் இலக்கணம் இந்த சீரியலில் வரும் குயிலி தான். முடியல !

இந்த மீனாட்சி பொண்ணு இருக்கே.. ரொம்ப நாளா சொல்ல வேணாம்னு பார்த்தேன். சரி இன்னிக்கு சொல்லிடலாம்..

வீட்டில் இருக்கும்போதும் சரி, புருஷனோட தனி அறையில் இருக்கும்போதும் சரி இடுப்பில் துளி கூட தெரியாம முழுக்க மறைச்சு புடவை கட்டுது. வீட்டில் கூட – அதுவும் கணவனுடன் தனியறையில் இருக்கும்போதுமா?

சின்னத்திரையில் இருந்தாலும் அம்மணி அநியாய ஆர்த்தடாக்ஸ் போல..

லோ ஹிப் கட்டுவதை பார்த்தால் வருகிற எரிச்சல் இப்படி ஒரேயடியா இழுத்து சொருகிகிட்டாலும் ஏனோ வரத்தான் செய்யுது.

புதிய நிகழ்ச்சி – ஜோடி சீசன் – 4

விஜய் டிவி யில் மீண்டும் ஜோடி நம்பர் சீசன் – 4 துவக்கி இருக்கிறார்கள். இப்போதைக்கு சனிக்கிழமை இரவு 7.30 முதல் எட்டரை வரை ஒளிபரப்பாக உள்ளது. ரம்யா கிருஷ்ணன் சரோஜா தேவி ஆகியோர் நடுவர்களாக இருக்க, ஏழெட்டு புது ஜோடிகள் அறிமுக ஆகிறார்கள். மீண்டும் திவ்ய தர்ஷினி தொகுப்பாளினி ஆக வருகிறார்

ரசிக்கும் படி யாரேனும் இருந்தால் அவர் ஆடும்போது எட்டி பார்க்கலாம் மற்றபடி நடுவர்கள் கருத்து சொல்லுபோது சானல் மாற்றிவிடுவது நல்லது

சூப்பர் சிங்கர் பாண்டிச்சேரி விஜயம்

சூப்பர் சிங்கரில் இப்போ டாப் 30 க்கு வந்துள்ளனர். பாடகர்கள் அனைவரையும் வேனில் போட்டு பாண்டிச்சேரி கூட்டி சென்று, எலிமினேஷன் இன்றி ஜாலியாய் பாடவைத்து ஒரு வாரம் ஓட்டினர்.

இந்த டாப் 30-ல் சென்ற சீசனில் இறுதி நிலை வரை வந்த சவுந்தர்யா (சவுண்டு சவுந்தர்யா என்பார் DD ) இருக்கிறார். அவர் அளவுக்கு மற்றவர்கள் நிச்சயம் பாடலை. சவுந்தர்யா பைனல் வரை வரவும், பரிசு வெல்லவும் கூட வாய்ப்பு உண்டு

ஆள் ஆளுக்கு தேவனை திட்டுவது அவர் காதில் விழுந்துச்சோ என்னவோ.. இவ்வாரம் பாடியவர்களை அவர் அதிகம் திட்டலை.

இனி ஒவ்வொரு எலிமிநேஷனாக ஆரம்பிப்பார்கள். பத்தரை வரை செல்வதால் தொடர்ந்து பார்க்க முடிவதில்லை

அது இது எது

இவ்வாரம் அது இது ஏதுவில் கேடி பில்லா கில்லாடி ரங்கா – டீம் வந்திருந்தது. விமல், சிவகார்த்திகேயன் மற்றும் பிந்து மாதவி.

சிவாவுக்கு இது வித்யாச ஹோம் கம்மிங். பல வருடங்கள் இந்நிகழ்ச்சி நடத்தியவர் இன்று அதில் ஒரு போட்டியாளராக… மா. கா. பா – சிவா இருப்பதால் அடக்கி வாசித்து அவரை நிறையவே பேச விட்டார்.

பிந்து மாதவி முடியெல்லாம் வெட்டி கொண்டு பையன் மாதிரி இருந்தார் அதை வைத்து அவரை நன்றாக ஓட்டி தள்ளி விட்டார் சிவா. விமல் சிவாவுக்கு நேர் எதிர் போலும். மனுஷன் சுத்தமா பேசவே மாட்டேங்கிறார். 3 ரவுண்டிலும் ஜெயித்தது பிந்து மாதவி மட்டுமே ! இவ்வாரம் சிரிச்சா போச்சு ரவுண்டு செம கலக்கல். முடிஞ்சா இணையத்தில் தேடி கண்டு களியுங்கள் !

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தொல்லை காட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயா நானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல்

  1. நிகழ்ச்சியில் பேசியர் ஒருவர் சொன்ன தகவல் சிந்திக்கத்தக்கது.
    ” கி.மு 2000 முதல் சாதி இருந்துள்ளது. ஆனால் தீண்டாமை கி. பி 500 -ல் தான் வந்தது. அதாவது முதலில் சாதி இருந்தது. ஆனால் தீண்டாமை இல்லை. சாதி வந்து 2500 ஆண்டுகளுக்கு பின் தான் தீண்டாமை வந்தது”

    ~ பாயிண்ட் மேட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *