மேகலா இராமமூர்த்தி

மனித வாழ்க்கையின் வெற்றியே அவர்தம் எண்ணத்தின் வலிமை கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது எனலாம். உற்சாகமும், தன்னம்பிக்கையும் மனத்தில் நிறைந்திருந்தால் எத்துணை கடினமான வேலையையும் நம்மால் துவளாமல் செய்யமுடியும். மாறாக மனம் சோர்வுடனும், ஆற்றல் குன்றியும் இருந்தால் எளிய வேலைகள் கூட நமக்கு மிகப்பெரிய சுமையாக மாறிவிடக்கூடும்.

நம் மனத்தை மகிழ்ச்சியின் ஊற்றாய், ஆற்றலின் கொள்கலனாய் எப்போதும் வைத்திருக்க முடியுமானால் நம் கனவுகள் மெய்ப்படும். வானம் வசப்படும். நடைமுறை வாழ்வில் சிலவற்றை நாம் பின்பற்றுவதன் வாயிலாக நம் மனத்தைச் சோர்வற்றுப் புத்துணர்ச்சியோடும், மகிழ்ச்சியோடும் வைத்திருக்க முடியும். அவை யாவை என்பது குறித்துச் சற்றே ஆய்ந்து பார்ப்போம்.

காலை எழுந்தவுடன் சூரிய உதயத்தை இரசிப்பது, அந்த இளவெயிலில் (பச்சைப் புல்வெளியில்) சற்றுதூரம் காலார நடப்பது போன்றவை நம் அன்றாட வாழ்க்கையை மகிழ்ச்சியோடு தொடங்க உதவி புரிபவை. அதுமட்டுமல்ல, இளங் காலைநேரச் சூரியஒளியில் நிறைந்திருக்கும் வைட்டமின் ’டி’ (vitamin D) நம் உடலுக்கு மிகவும் நன்மைதரக் கூடியது. இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் சூரிய நமஸ்காரம் என்ற ஒன்றை அக்காலத்தில் தினசரி வழக்கமாகப் பின்பற்றி வந்திருக்க வேண்டும்.

அதிகாலைச் சூரிய ஒளியில் நடக்க இயலவில்லையா? வருந்தத் தேவையில்லை. வீட்டிலிருந்தபடியே இயற்கை அன்னையின் அழகைக் கண்களால் பருகி மகிழலாம். சன்னலோரம் நின்ற வண்ணமே பறவைகள் எழுப்பும் இனிய ஒலிகளைச் செவிகுளிரக் கேட்டுக் களிக்கலாம்.

காக்கை குருவி எங்கள் சாதி

நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்

நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்.”

என்ற மகாகவியின் பாடலைப் பாடியபடியே பறவைகளின் அழகையும், அவற்றின் இனிய கீதத்தையும் ரசிக்கலாம். இன்றைய நகர (நரக) வாழ்க்கையில் பறவைகளை எங்கே போய்த் தேடுவது என்று கேட்கின்றீர்களா……சாத்தியமானால் வீட்டிலிருந்தபடியே புள்ளினங்கள் பாடும் பள்ளியெழுச்சியைக் கேட்டு மகிழ்வோம். இல்லையெனில் பறவைகளின் இனிய கீதம், அருவிகள் பாயும்போது எழும் ஓங்கார ஒலி முதலியவற்றைப் ’பதிவு’ செய்து வைத்துக்கொண்டுகூட அதிகாலை நேரத்தில் கேட்டு மகிழலாம். அவ்வொலிகள் நம் மனத்திற்குப் புதிய உற்சாகத்தை அளிக்கும்; அன்றைய நாளின் தொடக்கத்தை இனியதாக்கும் என்று உளவியலாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதனால் நாம் அறிவது என்ன? இயற்கையை இரசிப்பதும், இயற்கையோடு இயைந்து வாழ்வதுமே மானுட வாழ்வின் இயல்பான மனமகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதே. நகரமயமாதலினால் (urbanization) எழில் கொஞ்சும் சோலைகளும், நீர்நிலைகளும், புள்ளினங்களும் விரைவாக அழிந்துவருகின்றன. அதனால் இயற்கையோடு இயைந்த இனிய வாழ்வு என்பதே இப்போது அருகிப்போய் வருகின்றது.

மனத்தை நாள்முழுவதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் அடுத்த வழிமுறையாகக் காலையில் படுக்கையைவிட்டு எழுந்தவுடன் சில நிமிடங்கள் கண்களை மூடி அன்றைய தினம் எவ்வாறு இருக்கவேண்டும் என்று நாம் விரும்புகின்றோமோ அவ்வாறே கற்பனை செய்து பார்க்கலாம். (இதற்கான தியானப் பயிற்சிகளும் இப்போது கற்றுத் தரப்படுகின்றன.) அன்று செய்யவேண்டிய வழக்கமான செயல்களை நம் மனக் கண்ணில் வரிசைப்படுத்தி அதில் ஓரிரு செயல்களையேனும் நமக்குப் பிடித்தமானவைகளாகச் சேர்த்துக்கொள்வோம். உதாரணமாக, நமக்கு இசையை இரசிப்பதில் ஆர்வம் என்று வைத்துக்கொண்டால் அதற்காகச் சிறிது நேரத்தை ஒதுக்கி நம் மனத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கலாம். அது இசையரசி எம். எஸ். சுப்புலட்சுமியின் தேவ கானமாகவும் இருக்கலாம் அல்லது திரைப்படப் பாடலாகவும் இருக்கலாம்……நமக்குத் தேவை மன மகிழ்ச்சி. இசையை விடப் புத்தகங்கள் படிப்பதில் ஈடுபாடு அதிகமா? சிறிது நேரம் புத்தக வாசிப்பில் பொழுதைச் செலவிட்டு மனத்தை உற்சாகப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு நமக்குப் பிடித்த செயல்கள் ஒன்றிரண்டையேனும் நம் அன்றாட அலுவல் பட்டியலில் நுழைத்துவிட்டால் போதும். நமக்கு அவ்வளவாக விருப்பமில்லாத மற்ற செயல்களையும்கூட நாம் விருப்பத்தோடு செய்யத் தொடங்கிவிடுவோம். அப்புறமென்ன…? மனச்சோர்வு, மனஅழுத்தம் ஆகியவை நம்மைக் கண்டு காததூரம் ஓடிவிடும்.

அடுத்ததாக, நம்மைக் குறித்தும், நம்மிடமிருக்கும் திறமைகள் குறித்தும் அவ்வப்போது சிந்தித்துப் பார்க்க நேரம் ஒதுக்க வேண்டும். ‘தன்னை அறிய தனக்கொரு கேடில்லை’ என்பது திருமூலர் வாக்கு. ஆகவே நம்மிடம் உள்ள திறமைகளை இனம்கண்டு நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ளவேண்டும். அத்திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்வது எப்படி என்பது குறித்துச் சிந்தித்து அவற்றை மேலும் மெருகேற்றிக் கொள்ள முயலவேண்டும். ஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒரு திறமையேனும் நிச்சயம் ஒளிந்திருக்கும். அதனைச் சரியாக அடையாளம் கண்டுகொண்டாலே போதும், பாதிவெற்றி அடைந்துவிட்ட மாதிரிதான். நம்மைப் பற்றியும், நம் திறன்கள் பற்றியும் உயர்வாகவும், பெருமிதத்துடனும் எண்ண  ஆரம்பித்துவிட்டாலே, தாழ்வு மனப்பான்மை அகன்று வாழ்வைப் பிறர் போற்றும் வகையில் நடத்தும்வழி நமக்குப் புலப்பட்டுவிடும்.

“உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து.” என்பது வள்ளுவம்.

எப்போதும் உயர்வானவற்றையே சிந்தித்து நம் வாழ்வையும் உயர்வானதாகவும், வளமானதாகவும் ஆக்கலாம்.

மனித மனம் மகிழ்ச்சியிழப்பதற்கு மற்றொரு முக்கியக் காரணமாக உளவியலாளர்கள் சொல்வது ‘தனிமை.’ தனிமையிலே இனிமை காண முடியுமா? முடியாதுதான். ஆனால் இன்றைய நவநாகரிக உலகில் யாரும் யாருடனும் பேசுவதில்லை; பழகுவதில்லை, கேட்டால்….’இதற்கெல்லாம் நேரம் எங்கே இருக்கிறது?’ என்ற கேள்வி உடனே புறப்படும். அண்டை வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பது கூடப் பலருக்குத் தெரிவதில்லை. இதனாலேயே பிள்ளைகளைப் பிரிந்து தனியே வசிக்கும் முதியோரில் பலர் மன அழுத்தத்திற்கும், வேறுபல மனநல பாதிப்புக்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.

இன்றைய வாழ்க்கைமுறையில் தனிமை என்பது அனைவருக்குமே (வயது வித்தியாசமில்லாமல்) ஏதோ ஒரு காலகட்டத்தில் தவிர்க்கவியலாததாகவே இருக்கும்பட்சத்தில், அந்தத் தனிமையைத் துன்பம் நிறைந்ததாகவும், கழிவிரக்கம் கொள்ளத்தக்கதாகவும் மாற்றிவிடாமல் அதிலும் மகிழ்ச்சியோடு இருப்பது எப்படி? உற்சாகத்தோடு வாழ்வது எப்படி? என்று சிந்தித்தால் வழிகள் புலப்படாமலா போய்விடும்?

’மனமிருந்தால் மார்க்கமுண்டு’ என்பது அனுபவ மொழி. யோசித்துப் பார்த்தால், நம்மைச் சூழ்ந்துகொண்டு பயமுறுத்தும் தனிமையை விரட்டவும் சில நல்ல வழிகள் இருப்பது புலப்படும். நமக்குத் துணையாகவும், ஆறுதலாகவும் இருக்கக்கூடிய உறவினர்கள் யாரேனும் இருக்கிறார்களா….எனப் பார்த்து அவர்களுடனான நம் உறவை பலப்படுத்திக் கொள்ளலாம். அவர்களோடு நாமும் அல்லது நம்மோடு அவர்களும் இணைந்து வாழ்ந்து, மனம்விட்டுப் பேசி வாழ்வில் புதுவசந்தம் ஏற்படுத்திக் கொள்ளலாம். அல்லது புதிய நட்புக்களை (வாய்ப்பிருந்தால்) ஏற்படுத்திக் கொண்டு அவர்களோடு நம் எண்ணங்களையும், உணர்வுகளையும் பகிர்ந்து மன மகிழ்ச்சி கொள்ளலாம்.

உறவுகளும், நட்பும் சரியாய் அமையவில்லையா? சோர்வடையத் தேவையில்லை. நம் உடலில் வலுவிருந்தால், உள்ளத்தில் ஊக்கமிருந்தால் வீட்டிலேயே தோட்டம் அமைப்பது, அவற்றைப் பராமரிப்பது போன்றவற்றில் நேரத்தைச் செலவிட்டுத் தனிமைக்கு வடிகால் தேடலாம்.

தோட்டவேலைகள் (gardening) செய்வதில் சிலருக்கு மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் இருக்கும். அப்படி இருப்பின் அத்தகையோர் அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்லலாம். ஏனெனில் அதனால் விளையும் நன்மைகள் பல. தோட்டவேலைகள் செய்வதென்பது ’ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிப்பதற்குச் சமமாகும்’. எப்படியென்றால்…வீட்டிலே தோட்டங்கள் அமைப்பதும், அவற்றைப் பராமரிப்பதும் சிறந்த, பயன்தரும் உடலுழைப்பாக அமைந்துவிடுகின்றது. அதன்மூலம் வீட்டிற்குத் தேவையான இரசாயன உரங்களற்ற காய்கனிகள், பூக்கள் போன்றவற்றை நாம் பெறுகின்றோம். அத்தோடு, உடற்பயிற்சியாகவும் அது அமைந்துவிடுகின்ற காரணத்தால் உடலும் நோய்களின்றிச் சுறுசுறுப்பாகத் திகழ்கின்றது. இரவில் நல்ல உறக்கமும் வருகின்றது. சமீபத்தில் டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் (University of Texas, America) நடத்தப்பட்ட ஆய்வில் வீட்டிலே தோட்டம் அமைத்து அவற்றின் பராமரிப்பில் நேரம் செலவிடுவோர், அதனைச் செய்யாத மற்றவர்களைக் காட்டிலும் அதிகச் சுறுசுறுப்பானவர்களாகவும், வாழ்க்கையில் திருப்தி நிறைந்தவர்களாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் தோட்டவேலைகள் செய்வது மனஅழுத்த நோய்க்கு மிகச் சிறந்த மாற்று மருந்தாகவும் திகழ்கின்றது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ‘Horticultural therapy’ என்ற பெயரால் இதனை அழைக்கும் மருத்துவ உலகம் பல்வேறு மனநோய்களுக்கும் (anxiety and depression disorders), மறதிநோய்க்கும் (dementia) ’கைகண்ட’ மருந்தாக (நாம் மிகவும் சாதாரணமாக எண்ணும்) தோட்டவேலையைச் சிபாரிசு செய்கின்றது.

அடுத்தபடியாக, நமக்குப் பிடித்த கலையையோ, மொழியையோ கற்றுக்கொள்வதன் மூலமாக மனச்சோர்வை விரட்டி மகிழ்ச்சியைச் சொந்தமாக்கிக்கொள்ள முடியும். யோகக் கலை, மனவளக் கலை போன்ற வாழ்வை வண்ணமயமாக்கும் எண்ணற்ற கலைகள் இப்போது எல்லா ஊர்களிலும் பயிற்றுவிக்கப்படுகின்றன. அவற்றில் ஏதேனும் ஒன்றில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளலாம். ஆன்மிக நாட்டம் மிகுந்தோராயின் அவர்களுக்குப் பிடித்த கோயில், குளங்களுக்கும், புனிதத் தலங்களுக்கும் சென்றுவரலாம்.

நம்மை விட வாழ்விலும், வசதியிலும் நலிவடைந்திருப்பவர்களைச் சந்தித்து அவர்கட்கு உதவலாம். ’உனக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என்ற கவியரசு கண்ணதாசனின் பொருள்பொதிந்த பாடல் வரிகளை எண்ணி மன அமைதியடையலாம். இவ்வாறு மனத்திற்கும், ஆன்மாவிற்கும் மகிழ்ச்சியையும், நிறைவையும் தரத்தக்க நல்ல செயல்களைத் தேடித் தேடிச் செய்வது, பயனுள்ள வகையில் நேரத்தைச் செலவிடுவது என்று ஆரம்பித்தால் தனிமை தானாகவே விடைபெற்றுப் போய்விடும்.

அதுபோலவே, நம் மனத்திற்குப் பிடித்த மனிதர்கள், அவர்களோடு செலவிட்ட இனிய தருணங்கள், வாழ்வில் நடைபெற்ற என்றும் மறக்கவியலா இனிமையான சம்பவங்கள் ஆகியவற்றை அவ்வப்போது நம் மனத்திரையில் ஓடவிட்டுப் பார்ப்பது மனித மனங்களுக்கு ’இன்ஸ்டண்ட்’ மகிழ்ச்சியைத் தரக்கூடியது. அனைவர் வாழ்விலும் ஏதேனும் ஒன்றிரண்டு நல்ல சம்பவங்களேனும் நடந்திராமல் போயிராது. மனிதர்களாகிய நாம்தான் எப்போதும் நம் வாழ்வில் நிகழ்ந்த அவலங்களையும், துன்பங்களையும், மனத்தில் ஏற்பட்ட இரணங்களையுமே நினைத்து நினைத்து வருந்தி, நம்மைச் சுற்றி ஓர் சோக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி அதிலேயே காலம் கழிக்கின்றோம். பொதுவாக எதிர்மறையான எண்ணங்களுக்கு நற்சிந்தனைகளைவிட வலிமை அதிகம்தான்; மறுப்பதற்கில்லை. அதனால்தான் அவை நம் மனத்தை எளிதில் ஆக்கிரமித்து நம்மைச் செயலிழக்க வைக்கின்றன என்பது உளவியல் ரீதியான உண்மை. ஆயினும், அந்த வலிமை வாய்ந்த பகைவனை ’ நல்லதையே எண்ணுவோம்; நல்லதே நடக்கும்’ என்ற நற்சிந்தனையின் துணையோடு நாம் வீழ்த்தி வெற்றிகாணத்தான் வேண்டும்.

நாம் உடலால் வளர்ந்து விட்டாலும் நம் மனம் என்றுமே ஓர் குழந்தைதான். எப்படி ஒரு குழந்தை சாக்லெட் தந்தால் சிரிக்கின்றது….ஊசி போட்டால் அழுகின்றதோ….அதுபோலவே நம் மனமும், அது மகிழும்படியான இனிய தகவல்களையும், நிகழ்வுகளையும் அதனிடம் பதிவுசெய்தால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கின்றது. வருத்தம் தரத்தக்கத் துயர நிகழ்வுகளையும், நேர்ந்த அவமானங்களையும் பதிவு செய்யும்போது, ஒன்று கோபம் கொண்டு வெகுண்டெழுகின்றது; அதனால் பழிவாங்கும் உணர்ச்சி மேலிடுகின்றது….அல்லது தன் இயலாமையை நினைந்து வருந்தி அழுகின்றது. ஆகவே, நல்லவற்றையே நம் மனத்திற்குத் தீனியாகக் கொடுத்து அதனை எப்போதும் உற்சாகமாகவும், இன்பமாகவும் வைத்திருப்போம்.

மன மகிழ்ச்சிக்கு வித்திடுவதில் நகைச்சுவை உணர்வுக்கு ஓர் முக்கியப் பங்குண்டு. நகைச்சுவை உணர்வு மிகுந்தவர்கள் எப்போதும் தம்மைச் சுற்றி மகிழ்ச்சி அலைகளைப் பரப்பிக் கொண்டே இருப்பர் எனலாம். அந்த நகைச்சுவை உணர்வு அவர்தம் முகத்தில் புன்னகையை நிரந்தரமாகக் குடியமர்த்தும். அதனால் கவலைகளும், மன அழுத்தமும் அங்கே தங்குவதே இல்லை. அவர்கள் தாமும் மகிழ்ந்து, தம்மைச் சுற்றி இருப்பவர்களையும் தம் நகைச்சுவை ததும்பும் பேச்சுக்களால் வசீகரித்து விடுவதால் அவர்கள் அருகில் இருப்பதே ஓர் மகிழ்ச்சியான அனுபவம்தான்.

மன வலிமை, மன மகிழ்ச்சி என்று பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருப்பதனால் அது கிடைத்துவிடுமா? சுவர் இருந்தால்தானே சித்திரம் எழுத முடியும். அதுபோல மனம் மகிழ்ச்சியோடிருக்க மிகவும் அடிப்படையானது நல்ல உடல்நலம். அதற்கு உடலை நன்றாய்ப் பேணுதல் மிக அவசியம்.

”உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.” என்கிறார் திருமூலர்.

உடலை ஓம்பவேண்டியதன் அவசியத்தை அழகாயும், ஆழமாயும் விளக்குகின்றது இப்பாடல்.

உடல் தெம்பாகவும், திடமாகவும் இருக்க நல்ல சத்துள்ள, சமச்சீரான உணவை (well-balanced diet) அதற்கு எப்போதும் அளிக்க வேண்டும். காய்கறிகள், கீரைகள், பழங்கள், முழு தானியங்கள் (whole grains), சிறு தானியங்கள் ( தினை, கம்பு, கேழ்வரகு முதலியன), பால், முட்டை, மீன் வகைகள் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலிற்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதேசமயம் ’மீதூண் விரும்பேல்’ என்ற பொன்மொழியையும் நினைவில் கொண்டு பசியறிந்து, உண்ணும் அளவறிந்து உண்டால் நம் உடலில் நோய்கள் குடிபுகா. உடல் பிணியற்றிருந்தால் உள்ளமும் பிணியின்றி மகிழ்ந்திருக்கும்.

இவ்வாறு அனுதினமும் அதிகாலையில் எழுந்து இயற்கையை இரசித்து, இனியவைகளையே நினைந்து, தன்னம்பிக்கையோடும், மகிழ்வோடும் நாளைத் தொடங்கினால் அங்கே மனச் சோர்வுக்கோ, சோம்பலுக்கோ இடமேது?

இயற்கையிலேயே அதிகச் சக்தியுடனும், திறனுடனும் படைக்கப்பட்டுள்ள நம் மனத்தில் வேண்டாத எண்ணங்களாகிய குப்பைகளையும், கூளங்களையும் நிரப்பி அங்கே துர்நாற்றம் வீசச் செய்வதைத் தவிர்த்து இனிய நினைவுகள், நிகழ்வுகள், நம்மிடமுள்ள சாதகமான அம்சங்கள், திறமைகள், கிடைத்த அங்கீகாரங்கள், இனியும் தொடர்ந்து செய்ய வேண்டிய நற்பணிகள் ஆகியவற்றைக் குறித்துச் சிந்தித்துச் செயலாற்றுவோம். மனதிலுறுதியும், வாக்கினில் இனிமையும், நல்ல எண்ணங்களும் கொண்டவர்களாய் ஒவ்வொரு நாளையும் தொடங்குவோம். மனத்தின் அளப்பரிய ஆற்றலைப் பன்மடங்கு பெருக்குவோம். வாழ்வில் உயர்வோம்.

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “மனமே மகிழ்ச்சி கொள்!….

  1. எண்ணம் போல் வாழ்வு என்பதை அழகாக, தெள்ளத் தெளிவாக விளக்கும் கட்டுரை. வாழ்வில் வெற்றி பெறத் தேவை மகிழ்வான மனம், அது தரும் தெளிவான சிந்தனை. மணி மணியான வழிமுறைகளை அருமையாகத் தந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் மற்றும் இதயம் நிறைந்த நன்றிகள் மேகலா அவர்களே!!!

  2. தற்கால கணிணி யுகத்தில், அனுதினமும் கணிணியின் பயன்பாடு அதிகமாகிவிட்ட நிலையில்,  கணிணியில் தேவையில்லாத கோப்புகள் சேர்ந்து விடும்போது கணிணியின் செயல்திறன் தடைபடுகிறது. ஒரு சமயம் எல்லாமே ஸ்தம்பித்து, செயல்படாமல் நின்று விடுகிறது. அப்போது தேவையில்லாத கோப்புகளை அகற்றி விடுகிறோம் அல்லது ரிசைக்கிள் பின் என்ற குப்பைத் தொட்டியில் வீசி விடுகிறோம். இதேபோலத்தான் நமது மனத்தையும் பராமரிக்க வேண்டும். ‘மனித மனம் ஒரு குரங்கு’ என்பது போல, அதை தாவ விடாமல், தேவையில்லாத சமாச்சாரங்களில் கவனம் செலுத்தாமல், ஒன்றுக்கும் பிரயோசனமில்லாத விஷயங்களை அவ்வப்போது மனதிலிருந்து அகற்றி விட்டாலே, மனம் சஞ்சலத்திலிருந்து விடுபட்டு மன மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும். தற்போது, மாறிவரும் கலாச்சாரங்களினால், அதிகம் படித்தவர்களிலேகூட மனதளவில் பாதிக்கப்பட்டவர்களின் விகிதாச்சாரம் அதிகமாகிக்கொண்டே வருவதால், மனவளக்கலை பயிலுவதென்பது, இன்று அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது.

  3. கட்டுரையைப் படித்துப் பாராட்டியதோடு தங்கள் கருத்துரைகளையும் அழகாய் இணைத்து வழங்கிச் சிறப்பித்திருக்கும் திருமதி. பார்வதி இராமச்சந்திரன், அன்பு நண்பர் ‘நல்வழிகாட்டி’ திரு. பெருவை பார்த்தசாரதி இருவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்!!

  4. மேகலா அவர்களே அம்மாடி எனும் பெருமூச்சுதான் வந்தது உங்களின் கட்டுரை படித்ததும். “மனதை நாள் முழுதும் மகிழ்சியாக வைத்துக்கொள்ள” எனும் தலைப்பில் ஆசிரியராக மாறி ஒரு வகுப்பையே நடத்தியிருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.

  5. எனக்கு ஆசிரியைப் பட்டம் தந்து சிறப்பித்த தனுசு அவர்களுக்கு நன்றிகள்!

Leave a Reply to பெருவை பார்த்தசாரதி

Your email address will not be published. Required fields are marked *