இன்னும் மாயை இருக்கிறது
-சு.ரவி
இன்னும் மாயை இருக்கிறது- அது
என்னில் என்னை மறைக்கிறது!
மின்னல் கீற்றாய் மெய்யுணர்(வு) அந்தோ!
எப்பொழுதாகிலும் ஸ்புரிக்கிறது. ( இன்னும்)
புலன் உணர்வெல்லாம் பொய்மைஎன்றே ஒரு
பொறிபறந்தாற்போல் புரிகிறது;
நிலத்தில் இவ்வாழ்வும் நிலைகிடையாதெனும்
நிச்சய உண்மை தெரிகிறது- மனம்
சிலபோதேனோ இனிப்பை அவாவும்
சிறுமதலை போல் அலைகிறது-உடல்
பலமிழந்தோய்ந்தால் பயந்து நடுங்கிப்
பரிதவித்தேங்கிக் குலைகிறது! ( இன்னும்)
‘மனநிறை(வு) என்பதோர் மாரீசம் – அது
மயக்கி இழுத்துனைச் செயும் மோசம்
இனம் குலம் என்பவை வெளிவேஷம் “- என
இன்னும் பலப்பல கதை பேசும்= உடன்
தனயன், தாய், மனை இவர் முகம் பார்த்திடில்
தயங்கும், தடுக்கும், தவறி விழும்!
கனவும் நனவும் கடந்த பின்னாலும்
கணப்பொழுதாசையில் கவிழ்ந்து விடும்! ( இன்னும்)
விண்ணியல் கண்டு தெளிந்தாலும்- மறை
ஓதிய பண்டிதன் ஆனாலும்
எண்ணிய மட்டினில் ‘யான்’ ,‘என(து)’ எனும் இவை
எங்கோ பாதலம் ஆழ்த்திவிடும்
திண்ணிய நெஞ்சுரம் வைராக்யம் இவை
திரும்பவும் இடிந்து பொடியாகும்
நுண்ணிய நூலிழைதான் பாசம்- அது
நோற்ற தவங்களை விலைபேசும் ( இன்னும்)
ஓட்டம் இதற்கோர் இலக்கில்லை
ஓடாதிருக்க விலக்கில்லை
ஓட்டுவ தாரோ, ஓடுவ தேனோ
ஓடும் எவர்க்கும் தெரிவதில்லை
ஓட்டம் முடிந்தபின் ஓடு கழன்றால்
ஓய்வுண்டோ எனில் அதுவுமிலை
ஓட்டத்தின் ஊடே ஓராயிரம் தடை!
ஓட்டத்தில் நாட்டம் குறையவில்லை ( இன்னும்)