வெ.திவாகர்

Sundarji Prakashசென்ற வாரம்  ஹைதராபாதில் மணமான ஒரு பெண், தன் கணவனின் கொடுமை தாங்காமல் திடீரென மூன்றாவது மாடியில் இருந்து குதித்து, ‘தம்’மெனப் பெரிய சப்தத்துடன் கீழே விழுந்து மரணித்துப் போன காட்சி.. நாங்கள் அப்போது ஒன்றாவது மாடியில் இருந்து இந்தப் பெரிய சப்தத்தைக் கேட்டு ஓடிப் பார்ப்பதற்குள் கூட்டை விட்டு அவள் உயிர் போய்விட்டது என்றுதான் நினைத்தேன். நமக்கு சம்பந்தமில்லாதவள்தான்.. இருந்தாலும் அந்தக் குடும்பத்தில் ஏதோ தகராறு போல.. தாங்க முடியாமல் அந்தப் பெண் தன் உயிரைத் தானே இப்படி மாய்த்துக்கொண்ட சோகம் இன்னமும் என் மனத்தை விட்டு விலகவில்லை..

எத்தனைதான் இருந்தாலும் உயிர் என்ன அத்தனை மலிவா.. சடக்கென்று நினைத்தமட்டில் உதறிக்கொள்ள, அது என்ன அன்னப் பறவையா.. நீரில் வந்ததால் படர்ந்த ஈரத்தை சிறகடித்துப் போக்கிக் கொள்ளுவதைப்போல நினைத்த மாத்திரத்தில் நீக்கிக்கொள்ள முடியுமா.. இறைவன் கொடுத்த உயிரை இறைவனே எடுத்துக்கொள்ளும்வரை பொறுத்திருக்க வேண்டாமா.. நம்முடைய உடலில் உள்ள நம்முயிர்தான் அது.. ஆனாலும் நமக்கென்ன உரிமை அதன் மீது? மனிதனுக்கு அந்த உரிமை இல்லை என்றுதான் பெரியவர்கள் ஆண்டாண்டு காலமாகச் சொல்லி வருகிறார்கள். உயிர் வரும்போது அதை உணரும் அளவுக்குத்தான் மனிதனுக்கு உரிமை உண்டு என்றுதானே சொல்லி வருகிறார்கள். அந்த உயிர்உள்ள உடல் நீண்டகாலம் நிலைக்கவேண்டும் என்பதால்தானே இந்த உலகமே இத்தனை அல்லாடுகின்றது. உடலிலிருந்து முடிந்தவரை, உயிர் போக விடக்கூடாது என்றுதானே உலகத்து மருந்துகள், மாத்திரைகள், மருத்துவர்கள் என்று கோடிக்கணக்கானவர்கள் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்..

சென்று போனவள் எப்படியோ போய்விட்டாலும் எத்தனை கேள்விகளை விதைத்துவிட்டுப் போய்விட்டாள். ஆனால் இதற்கான விடையை அன்பர் சுந்தர்ஜி இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஒரு மடலில் கவிதையாக எழுதி அனுப்பி இருந்தார். இதோ சுந்தர்ஜியின் கவிதை உங்கள் பார்வைக்கு:

         எறும்புக்கு ஒற்றை விரல்.

கொசுவுக்கு ஒரு கை.

ஓணானுக்கும்

தட்டானுக்கும் ஒரு சுருக்கு.

குருவிக்கு ஒரு சிறுகல்.

பாம்புக்கு ஒரு கழி.

தவளைக்கு ஒற்றை அடி.

நத்தைக்கு ஒற்றை மிதி.

நாய்க்கோ கல்லெறி.

மாட்டுக்கும் பன்றிக்கும்

ஆட்டுக்கும் கோழிக்கும்

அதனதற்கேற்றாற் போல்.

மீனுக்குப் புழு.

யானைக்குப் பெரும்பள்ளம்.

மானுக்கு ஒற்றைக் குறி.

காளைக்கும் கழுதைக்கும்

பெரும் பாரம்.

ஒட்டகத்துக்கு

முடிவில்லாப் பாலை.

குதிரைக்கோ விதவிதமாய்.

வாழாதிருந்து சாகிறான்

மனிதன்.

சாகாதிருக்க வாழ்கின்றன

உயிர்களெல்லாம்.

சுந்தர்ஜியின் கவிதையைப் படித்ததும் எத்தனை அருமையான விவரிப்பு என்றுதான் எனக்குப் பட்டது. மரணம் என்ற ஒன்றைப் பற்றி மனிதனுக்கு மட்டுமே உணர்வு உண்டு. அந்த உணர்வு உணரப்படுவதால் மனிதப் பிறவியை நல்ல விதத்தில் அவன் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் அந்தப் பிறவியைப் பயன்படுத்தி இன்னமும் மேல்நிலை அடையவேண்டும் என்பதுதான் இறைவன் விதித்த விதி. அந்த உணர்வை மதிக்காதவர் அருமையான இந்தப் பிறவியைப் பாழாக்கிக்கொண்டார்களே என்றுதான் வருத்தப்பட வைக்கிறது.

நல்லதொரு விவரணையைக் கொடுத்த திரு. சுந்தர்ஜியை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கிறோம். அவர் மேலும் மேலும் பல கவிதைகள் தரவேண்டும் என்பது என் விருப்பம். அவருக்கு நம் வாழ்த்துகள்.

கடைசி பாரா: தடையின்றிக் கேட்கவும், சிந்திக்கவும் சுயமாய் ஒன்றைக் கண்டறிய முடிகிறபோதும்தான் உண்மையில் நீங்கள் அறிவுத் திறன் உடையவராய் இருக்க முடியும். ஜே.கிருஷ்ணமூர்த்தி – (திருமதி பவளசங்கரியின் ‘வெற்றிக் கனியைத் எட்டிப் பறிப்போமா’ என்ற கட்டுரையில் பார்த்தது)

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “இந்த வார வல்லமையாளர்

  1. சுந்தர்ஜி, ஜே.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்!!

  2. மரணமடைந்த அந்த பெண்ணின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்லவனிடம் வேண்டிக்கொள்கிறேன். ‘கணவனின் கொடுமை தாங்காமல்” என்ற 3 வார்த்தைகள் என்ன நடந்திருக்கும் என அனுமானிக்க வைக்கிறது. அந்த பெண்ணின் உயிரை அவராக விலக்கவில்லை. கணவன் என்பவன் விலக்கி இருக்கிறான் என்பதே உண்மை. அது தான் சரி. சுந்தர்ஜி கவிதையின்

    வாழாதிருந்து சாகிறான்
    மனிதன்.

    என்ற வரிகள்தான் இந்த சம்பவத்தில் அவள் கணவனை குத்திக்காட்டி நிலைத்து நிற்கிறது. கவிதைக்கும் விருதுக்கும் வாழ்த்துக்கள் சுந்தர்ஜி.

  3. மற்ற உயிரினங்கள் தேவைக்கே அடுத்த விலங்கின் மீது கை வைக்கின்றன…சொந்த இனத்தைக் கொல்லும்  வெறி அவற்றுக்கு ஒரு போதும் இருப்பதில்லை…
    மனிதன் தன்னுயிர் தரிக்கவும் தெரியாதவனாகவும், அடுத்த உயிர் மதித்து அறியாதவனுமாக இருக்கிறான்….
    வன்முறையைத் தனது பார்வையிலும் சொற்களிலும் உடல் மொழியிலும் வைத்திருக்கும் ஒரே விலங்கும் அவன் மட்டுமே.
    சுந்தர்ஜி அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்….மிக வலுவான சொற்களும் கூர்மையான சிந்தனைகளும் அழகியல்  நிறைந்தவை அவரது கவிதைகள்….

    எஸ் வி வேணுகோபாலன் 

  4. என் கவிதைக்காக நீங்கள் அளித்திருக்கும் அங்கீகாரத்திற்காக நெகிழ்கிறேன். மிக்க நன்றி. ஆனாலும் என் கவிதையின் இலக்கு, பிற உயிர்கள் பால் கண்மூடித் தனமான வன்மம் காட்டும் மிருகமாய் வாழும் மனிதனைக் குறித்தே. அந்த இலக்கு உங்கள் பார்வைக்குச் சற்று வெளியே வீழ்ந்திருப்பதாய் உணர்கிறேன்.

    இந்தக் கவிதையைச் சரியாய் நெருங்கி, நெருக்கமான வார்த்தைகளில் இந்தக் கவிதைக்குப் பின்னூட்டமிட்ட திரு. எஸ்.வி.வி. அவர்களுக்கு என் நன்றி.

    பழமைபேசி மற்றும் தனுசுக்கும் என் நன்றி.

  5. உளமார்ந்த வாழ்த்துகள் சுந்தர்ஜி பிரகாஷ்!!! தங்கள் கவிதைகளை ரசித்துப் படித்திருக்கிறேன். தங்களுக்கு வல்லமையாளர் விருது கிடைத்துள்ளது உவகையளிக்கிறது.

    அருமையான கவிதை! 

    எறும்புக்கும், எருதுக்கும், மானுக்கும், மாட்டுக்கும் மட்டுமல்ல. அவனுக்குமாயும் வைத்திருக்கிறான் – ஒரு அணுகுண்டு! (இன்னும் சொல்லப்போனால் – ‘ஒரு பட்டியல்’; ஒரு பட்டியலே வைத்திருக்கிறான். அதில், இது முதலில் நிற்கிறது!) 

    யாரோவொருவர் அல்லது ஏதோவொன்று சாவதற்கு பொறிகளை வைத்துக்கொண்டே போகிறான்; வாழ்கிறான். கடைசியில் அவனும் அந்தப் பொறியில் சிக்கிக்கொண்டு சாகிறான். வாழாதிருந்து சாகிறான் விந்தை மனிதன்.

    // மிருகமாய் வாழும் மனிதனை// 

    தங்கள் கவிதையை படித்தபிறகு இந்த ஒப்பீட்டை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. 🙂 சாகாதிருக்க வாழ்கின்றன அவை.

    ஜே.கே அவர்களின் வரிகளை நினைவுபடுத்தியதற்கு ஆசிரியர் பவளசங்கரி அவர்களுக்கும், திவாகர் ஐயா அவர்களுக்கும், நன்றி!

  6. உங்களின் விரிவான பார்வை கவிதைக்கு இன்னும் மெருகேற்றுகிறது மாதவன் இளங்கோ.

    ஒரு கவிதையில் வாசகனுக்கான தளம் எப்போதுமே நிரப்பப்படாமல் இருப்பதாய் நான் உணருகிறேன். உங்களைப் போன்றவர்கள்தான் அந்தக் கவிதையை எழுதி முடிக்கிறார்கள்.

    மனம் பெருகும் நன்றிகளும், மகிழ்ச்சியும் மாதவன் இளங்கோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *