நாகேஸ்வரி அண்ணாமலை

kenewzz

நாங்கள் கென்யா ஏர்வேஸில் பம்பாய் வழியாக கென்யாவின் தலைநகரான நைரோபிக்குச் செல்வதென்று முடிவு செய்தோம். கென்யா ஏர்வேஸ் விமானம் எல்லா விமானங்களையும் போல் இருந்தாலும் விமானப் பணியாளர்கள் எனக்கு ஏற்கனவே பரிச்சயமாகியிருந்த விமானப் பணியாளர்கள் போல் இல்லை. அவர்களைப் போல் இவர்கள் நளினமாக நடந்துகொள்ளவில்லை. கடனே என்று இல்லாவிட்டாலும் ஒரு இயந்திர கதியில் உணவைப் பயணிகளுக்குக் கொடுப்பது, வேறு ஏதாவது தேவையா என்று கேட்பது ஆகிய காரியங்களைச் செய்தார்கள். விமானத்தில் நிறைய இடங்கள் காலியாக இருந்தன. பணியாளர்கள் நடந்துகொண்டதற்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் இன்னும் கொஞ்சம் சேவையின் தரத்தை உயர்த்தினால் நல்லது என்று நினைக்கிறேன்.

நைரோபி விமான நிலையத்தில் போய் இறங்கி விமானத்தை விட்டு வெளியேறியதும் அதை அடுத்து இருந்த பகுதி எல்லா விமான நிலையங்களையும் போல் விஸ்தாரமாகவே இருந்தது. ஆனால் அதன் பிறகு உள்ள பகுதிகள் மிகச் சாதாரணமாக இருந்தன. அமெரிக்காவில் குடியேறல் பகுதி மிக பிரமாண்டமாக இருக்கும். அமெரிக்காவிற்குப் பல நாடுகளிலிருந்தும் விமானங்கள் வந்தவண்ணமாக இருக்கும். குடியேறல் பகுதியில் ஒரு அதிகாரி வரும் பயணிகளைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் இங்கே போங்கள், மற்றவர்கள் அந்தப் பக்க்ம் போங்கள் என்று அரட்டிக்கொண்டிருப்பான். அங்கு இருக்கும் அதிகாரிகள் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டிருப்பார்கள். நைரோபி விமானநிலயத்தின் குடியேறல் பகுதி மிகவும் சிறியதாக இருந்தது. இரண்டே அதிகாரிகள் இருந்தனர். கென்யாவிற்கு வரும் பயணிகளுக்கு விசா விமானநிலயத்திலேயே வழங்க வசதி இருந்ததால் அதற்கு இரண்டு அதிகாரிகள் இருந்தனர். அவ்வளவே.

சில நாட்கள் தங்குவதற்குரிய விசாவைப் பெற்றுக்கொண்டு விமானநிலையத்தை விட்டுவெளியே வந்தோம். சில்லென்று குளிர்ந்த காற்று வீசியது. அப்படிக் குளிர் அடித்ததே ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. சாதாரணமாக நாங்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியா வரும்போது விமானநிலையத்தை விட்டு வெளியே வந்தால் ஒரே வெக்கையாக இருக்கும். அது மாதிரி அமெரிக்கா சென்றடையும் போதும் கோடை காலமாக இருக்குமாதலால் குளிராக இருக்காது. மேலும் ஆப்பிரிக்க நாடுகள் எல்லாம் வெக்கையாக இருக்கும் என்று நான் தவறாக எண்ணியிருந்தேன். எங்கள் மாணவ நண்பர்கள் நைரோபி காலநிலை மைசூர் காலநிலை மாதிரி இருக்கும் என்று சொல்லியிருந்தாலும் அவர்கள் சொன்னது மனதில் பதிவாகியிருக்கவில்லை. நல்ல வேளை ஆளுக்கு ஒரு ஸ்வெட்டர் கொண்டுபோயிருந்தோம். வேக வேகமாக அதை எடுத்துப் போட்டுக்கொண்டோம்.

பூமியில் பூமத்தியரேகைக்கு வடக்கில் இருக்கும் நாடுகள் வடமண்டலம் என்றும் தெற்கே இருக்கும் நாடுகள் தென்மண்டலம் என்றும் அழைக்கப்படுகின்றன. கென்யா நாட்டின் நடுவே பூமத்தியரேகை ஓடுகிறது. அதனால் பூமத்தியரேகைக்கு வடக்கே இருக்கும் பகுதிகள் வடமண்டலத்தைச் சேர்ந்தவை. தெற்கே இருக்கும் பகுதிகள் தென் மண்டலத்தைச் சேர்ந்தவை. கென்யாவின் தெற்குப் பகுதியில் இருக்கும் நாட்டின் தலைநகரான நைரோபி தென் மண்டலத்தைச் சேர்ந்ததால் இப்போது, அதாவது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், அங்கு குளிர்காலம். குளிர்காலம் என்றாலும் பூமத்தியரேகைக்குப் பக்கத்தில் அவ்வளவு குளிர் இருப்பதில்லை. கடல் மட்டத்திற்கு மேலே 3000 அடி உயரத்தில் நைரோபி இருப்பதால் கொஞ்சம் குளிர்கிறது. சிங்கப்பூர் பூமத்தியரேகைக்கு வடக்கே 100 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. நைரோபி பூமத்தியரேகைக்குத் தெற்கே 100 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இரண்டும் பூமத்தியரேகையிலிருந்து சம தூரத்தில் இருந்தாலும் சிங்கப்பூர் கடல் மட்டத்தில் இருப்பதால் எப்போதும் சென்னையைப் போல வெக்கையாக இருக்கும். நைரோபி கடல்மட்டத்திற்கு மேலே இருப்பதால் எப்போதுமே மைசூரைப் போல கொஞ்சம் குளிராக இருக்கிறது.

நைரோபி என்ற பெயர் அங்கு வாழ்ந்துவந்த மசாய் பழங்குடி மக்கள் அங்கு ஒடும் நதிக்கு இட்ட பெயர். அதன் மூலப் பெயர் நைலோபி மருவிப். பின்னால் நைரோபி ஆயிற்றாம். மசாய் மக்கள் நாடோடி மக்கள்; ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு இடம்விட்டு இடம் போய்க்கொண்டிருப்பர்கள். இப்போது இம்மக்கள் இந்த நகரத்திலும் அதன் பக்கத்திலும் இல்லை.
ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் கென்யாவின் தலைநகரான நைரோபி ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள மற்ற நகரங்களை விட பின்தோன்றியது; வேகமாக வளர்ந்துவரும் இது அதி நவீனமானது; கிழக்கு ஆப்பிரிகாவில் அதிக உயரத்தில் இருப்பது; மற்ற நகரங்களை விடப் பெரியதும் கூட்.

ஆப்பிரிக்கா கண்டம் முழுவதும் ஆதிவாசிகள் வசித்துவந்தனர். ஐரோப்பிய நாடுகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் காலனி ஆதிக்கத்தை ஏற்படுத்தியபோது அவைக்ளுக்கிடையே அடிக்கடி போர் நடந்தது. அதனால் ஐரோப்பிய நாடுகள் எல்லாம் பெர்லினில் ஒரு மாநாட்டைக் கூட்டி தங்களுக்குள் ஒரு ச்மரச உடன்படிக்கை செய்துகொண்டனர். அவரவர் பிடித்துக்கொண்ட இடஙகளை அவரவர் அதிகாரத்தில் வைத்துக்கொள்வதென்றும் பிடித்துக்கொண்ட ஒவ்வொரு இடத்திலும் அந்த இடங்களின் பாதுகாப்பிற்காக துருப்புக்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் அந்த மக்களிடம் நாகரீகத்தைப் பரப்ப கிறிஸ்துவ மதத்தை அந்த மக்களிடம் பரப்ப வேண்டும் என்றும் தங்களுக்குள் விதிகளை வகுத்துக்கொண்டனர். இப்படி அந்த நாடுகள் ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள இடங்களை ஆக்கிரமித்துக்கொண்ட முறையிலேயே பல நாடுகளின் எல்லைகள் வகுக்கப்பட்டன. உலகில் உள்ள வெள்ளை இனத்தவர்கள்தான் நாகரீகம் அடைந்தவர்கள், மற்ற கருப்பு இனத்தவர்களை நாகரீகப்படுத்தும் ‘பொறுப்பு, சுமை’ வெள்ளை இனத்தவர்களைச் சேர்ந்தது என்று வெள்ளை இனத்தவர்கள் தாங்களாக நினைத்துக்கொண்ட காலம் அது. மற்ற நாடுகளைக் கைப்பற்றி தங்கள் ஆளுகைக்குள் வைத்துக்கொண்டதற்கு அவர்கள் கற்பித்துக்கொண்ட நியாயம் என்றும் சொல்லலாம். இப்படி மனிதனை மனிதன் அடிமை செய்து அரசாட்சி செய்தவர்கள் இப்போது மனித உரிமை பற்றி வாய்கிழியப் பேசுகிறார்கள்.

இப்படி ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தைப் பிரித்துக்கொண்டபோது ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள இப்போதைய கென்யா, டான்சினியா, எத்தியோப்பியா, உகாண்டா, போன்ற நாடுகளின் பல பகுதிகள் பிரிட்டனின் அதிகாரத்திற்குள் வந்தது. ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து கென்யா வழியாக உகாண்டா வரை பிரிட்டிஷ் அரசு தன் வணிகத்தை வளர்க்க ரயில்பாதை அமைக்க முடிவுசெய்தபோது பல இந்தியர்களை – அப்போது இந்தியாவும் பிரிட்டிஷாரால் ஆளப்பட்டு வந்தது – ரயில்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட அழைத்து வந்தது. ரயில்பாதை அமைக்கப்படும்போது பல இடங்களிலிருந்து வந்தவர்கள் தங்கும் இடமாக அமைந்த நைரோபி ஒரு நகரமாக 1899-இல் உருப்பெறத் தொடங்கியது. தற்காலிக நகரமாகத் தோன்றிய நைரோபி இன்று வெகு வேகமாக வள்ர்ந்துகொண்டிருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளிலேயே கென்யாதான் தென்னாப்பிரிக்காவிற்கு அடுத்தபடி அதிக வளர்ச்சி பெற்ற நாடு என்று கூறுகிறார்கள்.

நைரோபியை உலகின் சஃபாரி தலைநகர் என்று குறிப்பிடுகிறார்கள். நாட்டின் மக்க்ள்தொகையில் பத்து சதவிகிதத்தினர் இந்த நகரில் வசிக்கிறார்கள். சுமார் 32 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நகரில் நேஷனல் மியூசியம் ஆஃப் கென்யா, சுமார் எண்பதாயிரம் பேர் கூடக்கூடிய கென்யாவின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் மக்களுக்கு உரையாற்றும் பெரிய நேஷனல் பார்க், கன்வென்ஷன் சென்ட்ர், நைரோபி சிட்டி மார்க்கெட், விலங்குகள் சரணாலயம், யானைகள் சரணாலயம் ஆகியவை இருக்கின்றன. சிறிய வேன்கள் அளவில் நிறைய டொயோட்டக்களும் ஹுயுண்டாக்களும் பவனி வரும் இந்நகரின் பெரிய தெருக்களில் கைவண்டிகளில் சாமான்களை ஏற்றிக்கொண்டு மனிதர்கள் தள்ளிக்கொண்டு வருவதைப் பார்க்கும்போது கென்யாவின் வறுமையும் ஏற்றத்தாழ்வும் மனதை நோகச் செய்கின்றன.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கென்யா பயணம் 2

  1. கென்யா பற்றிய செய்திகளை மிக அழகாகக் கொடுத்துள்ளீர்கள். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *