ஷைலஜா

shylajas snapஎங்கள் வீட்டிற்கு ரங்கன் வந்ததிலிருந்து தாத்தா ரொம்பவும் பிசி ஆக ஆகிவிட்டார். யார் அந்த ரங்கன்?. அப்படி என்ன அவனுக்கு ஸ்பெஷல் கவனிப்பு?.

ரங்கன் சுமார் நாலு மாதக் குரங்கு. தாத்தாவுக்கு ரங்கனை குரங்கு என்று சொன்னால் கோபம் வரும். இனிமேல் நாமும் ரங்கன் என்றே அவனை அழைப்போம். அவன் இந்த வீட்டில் நுழைந்ததே தோட்டத்தில் ஏற்பட்ட ஒரு கவனக்குறைவு காரணமாகத்தான். தேங்காய் உரிக்க மண்ணுக்குள் சொருகியிருந்த கடப்பாரையை எடுக்க மறந்ததன் விளைவு தாய் குரங்கு கடப்பாரை நுணிக்கு பலியானது. அப்போது அனாதையாக இருந்த குட்டிக்குரங்கை, ஸாரி.. ரங்கனை உடனே தாத்தா வாரி அணைத்துக்கொண்டு வீட்டுக்கு கொண்டு வந்து விட்டார். தோட்டத்தில் இருந்த அத்தனை வேலையாட்களையும் கடிந்து கொண்டு ஒரு வாரம் பேசவேயில்லை.

உள்ளே நுழைந்த உடனே நேராக தாத்தாவின் ரூமுக்குள் அவனுக்காக ஏகப்பட்ட வசதிகள் தயாராகிக்கொண்டிருந்தன. காஷ்மீரிலிருந்து அவரது மகளால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட சால்வை மெத்தையாகவும், சோலாபூர் கம்பளம் போர்வையாகவும் மாறியிருந்தன. பால் அருந்த பீங்கான் கப், சாப்பிட ஒரு ப்ளேட், பழங்கள் என்று ஒரு மினி ஜூவாகவே அந்த அறை மாறியிருந்தது.

தாத்தாவின் அறை ஏறக்குறைய ஒரு ஐசியு அறையாகவே காணப்பட்டது. யாருக்கும் அனுமதி கிடையாது. முதல் ஒரு வாரம் நடந்த சம்பவங்களை வைத்து ஒரு சின்னத் திரை சீரியலே தயாரித்துவிடலாம். தாத்தாவுக்கு வேண்டிய உணவு, காபி, டிபன் கூட ரூமுக்கு வெளியேயிருந்து கொடுக்கப்பட்டது. ரங்கனுக்குத் தேவையான பால், வாழைப்பழம் ஆகியவையும் உள்ளே அனுப்பி வைக்கப்பட்டது.

மாலை நேரத்தில் தாத்தாவின் பால்ய நண்பர் பாபு வந்து ரங்கனை பரிசோதிக்க வருவார். அவர் தான் அந்த ஊரின் முதல் வெடினெரி டாக்டர்.

“இது ஒரு ஜெனரல் டிப்ரெஷன். கவலைப்படவேண்டாம். சரியாப் போயிடும். இன்னும் பதினைந்து நாளைக்குள் ரங்கனை காவேரிக்கரை ஓரம் உள்ள தாத்தாச்சாரியார் தோப்பில் விட்டு விடலாம். கவலைப்படாதேடா.. திருமலை” என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.

ரங்கனுக்கு பாலோ பழமோ பிடிக்கவில்லை. தாத்தாவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. தனக்காக தயாரிக்கப்பட்டு வைத்திருந்த தட்டை திறந்தவுடன் ஓடி வந்து அவர் அருகில் அமர்ந்து கொண்டது. அவருக்காக வைத்திருந்த உப்புமாவை தனக்குத் தர வேண்டும் என்று கண்களால் கெஞ்ச, தாத்தா ரங்கனுக்கு ஊட்டி விட ஆரம்பித்தார். கத்திரிக்காய் கொத்ஸு வையும் அது மிகவும் ரசித்து சாப்பிட தாத்தாவுக்கு ஆனந்தம் தாங்கவில்லை.

உடனே பாபுவுக்கு ஃபோன் போட்டு, “ பாபு.. ரங்கனுக்கு என்னோட உப்புமா தான் பிடிச்சுருக்கு. கொடுத்துவிட்டேன். தப்பில்லையே?” என்று கேட்டார்.

பாபு “ஓ.கே. கோ.. அஹெட். ஒன்னும் ப்ராப்ளம் இல்லை” என்றார்.

‘எத்தனை பறவைகள், விலங்குகள், அதன் பசியை போக்கிக்கொள்ள பசியாறுகின்றன.. இப்படி ஒவ்வொறு உயிரினத்துக்கும், அதற்கு பிடித்த உணவை இறைவன் ஏற்கனவே படைத்துவிட்டான். ஒரு குரங்குக்காக இப்படி உயிரை விடுகிறானே… எத்தனை இளகிய மனஸு..’ என்று தனக்குள் பாபு சிரித்துக்கொண்டார்.

அன்று இரவு அவனுக்கு காஷ்மிர் ஷால்வை, முள்ளாய் குத்தியதோ என்னவோ, தாத்தாவின் அருகிலே படுத்துக்கொண்டான். தாத்தாவின் வேட்டி நுணியை பிஞ்சு விரல்களால் பிடித்தவாறு மெல்ல தூங்க ஆரம்பித்தான்.

சிறிய வயதிலே தன்னுடைய தாயை இழந்த திருமலைக்குத் தான் தெரியும் ‘ஒரு தாயின் பிரிவு என்றால் என்ன என்று. பாபு சொல்கிற மாதிரி பதினைந்து நாட்களுக்குள் எப்படி எப்படி சரியாகும்? இன்னமும் அம்மாவை இழந்த துக்கம் என்னுள் புதைந்து கிடக்கிறது. கொஞ்சம் தட்டி விட்டால் போதும், இப்பவும் இந்த தலையணையும் போர்வையும் நனையும் வரை கண்ணிலிருந்து ஜலம் வரும். மனிதர்களுக்கு மட்டும் தானா இந்த பிரிவு, ஏக்கம் எல்லாம்? மிருகங்களுக்கு கிடையாதா?. பதினைந்து நாட்கள் கழித்து ரங்கனை நிச்சயம் பிரியத்தான் வேண்டுமா?.. வேறு வழியே இல்லையா?’ இப்படி பல கேள்விகளுக்கும் விடை கிடைக்காமல் வேறு வழி இன்றி அவர் நித்திரையில் லயிக்க ஆரம்பித்தார்.

மறு நாள் முதல் ரங்கன் ரொம்பவும் உரிமையுடனும், நீண்ட நாள் பழகிய தினுசில் தாத்தாவுடன் விளையாட ஆரம்பிக்க அந்த அறையில் சிரிப்பும், விளையாட்டும் வீட்டில் இருக்கும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின

அதற்கு மேல் அந்த அறையில் ரங்கனை வைத்திருக்க அவசியமே இல்லாமல் போயிற்று. ஹால், சமையல் அறை, மாடி, தோட்டம், என்று இப்படி எங்கெல்லாம் தாத்தா செல்கிறாரோ அங்கெல்லாம் அவன் அவருடன் உலவ ஆரம்பித்தான்.

தாத்தா வாக்கிங்க் ஸ்டிக் வைத்துக்கொண்டு இருப்பதைப் போல அவனும் ஒரு சிறிய குச்சியுடன் அவர் பின் நடப்பது வேடிக்கையாக இருந்தது.

“போகிற போக்கைப் பார்த்தால் அவன் பெயரில் உயிலையே எழுதி வைத்து விடுவீர்கள் போலிருக்கிறதே!” என்று பாட்டி சொல்ல.

தாத்தா “ பாவம் தாயில்லா ஜீவன். யாரு இருக்கா அவனுக்கு? மிருகங்கள் மனிதர்களுக்காக தங்களின் வாழ்க்கையே அர்ப்பணம் செய்யவில்லையா? அது நாம் நடமாடும் தெய்வமாக கும்பிடும் மாடாகட்டும் அல்லது நாயாகட்டும், நம் வாழ்க்கையில் எத்தனை பெரிய உதவிகளை பிரதி பலன் பார்க்காமல் செய்கின்ற்ன!. நாம தான் கடவுளுக்கு அர்சசனை செய்தால் அவர் நமக்கு என்ன கொடுப்பார்னு கணக்கு பார்க்கிறோம்.” தாத்தா உணர்ச்சி பொங்க பதில் அளிக்கவும் பாட்டிக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.

ஆயிற்று. பாபு சொன்ன பதினைந்தாம் நாள் ‘டாண்’ என்று வாசலில் நின்று கொண்டு, “ திருமலை! சீக்கிரம் வா.. காரில் ஏறு. ரங்கனை வழி அனுப்பிவிட்டு வரலாம்” என்று கூவ, திருமலை “ பாபு! சொன்னா கேளுடா.. கொஞ்ச நாளுக்கு அப்புறம்

பார்துக்கலாம். இப்போ என்ன அவசரம்?” என்றார்.

“இதோ.. ஐந்து நிமஷம். அவனுக்குப் பிடித்த அரிசி உப்புமா, கத்திரிக்காய் கொத்ஸு கொடுத்துவிட்டு அழைத்து வருகிறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

அரை மனதுடன் காரில் ரங்கனுடன் ஏறிக்கொள்ள, பாபு காரை வேகமாக மாம்பழ சாலையை கடந்து இடது புறமாக செலுத்தினார். வெட்டிச்சாய்த்துவிட்ட பல மரங்களின் நடுவே அங்கும் இங்குமாய் தெரiிந்த நாலைந்து மரங்களை நோக்கி நெருங்க நெருங்க திருமலைக்கு துக்கம் தொண்டையை அடைத்துகொண்டது.

பாபு காரைத்திருப்பிக்கொண்டு, “ திருமலை, காரை விட்டு இறங்க வேண்டாம். இங்கேயே அவனை இறக்கி விடு. அவன் போய் விடுவான்” என்றார்.

மனதைக் கல்லாக்கிக்கொண்டு ரங்கனை காரின் கதவைத் திறந்தவுடன் விட்டு விட்டு வந்த வேகத்தில் வேகமாக காவிரிப் பாலத்தைக் கடந்து மெயின் கார்டு கேட் தேவர் ஹால் எதிரே உள்ள பத்மா காபியில் நுழைந்து காபியை ருசிக்க ஆரம்பித்தனர்.

திருமலைக்கு காபி வேப்பிலை சாறு போல கசந்தது. அவர் மனம் எல்லாம் ரங்கனின் பின்னே. ‘தப்பு செய்து விட்டோமே. அவனை இனிமேல் பார்க்க முடியுமா? அவனை மற்ற குரங்குகள் ஏற்றுக்கொள்ளுமா?’ ஒரே கவலை திருமலைக்கு.

திருமலையிடம் பாபு, “திருமலை! பீ ப்ராக்டிகல். நாம விலங்குகளின் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது. ரெண்டு நாளில் அதுக்கு எல்லாம் சரியாப் போயிடும்.” என்றார்.

“என்ன செய்வது. உன் மாதிரி நான் கல் நெஞ்சக்காரன் இல்லை”
திருமலையின் வார்த்தையில் சோகம் தோய்ந்திருப்பதை பாபுவால் உணர முடிந்தது.

திரும்பி வருகையில் ஜோஸஃப் கல்லூரியைக்கடந்து சத்திரம் பஸ் ஸ்டான்டை தாண்டி காவேரிப் பாலத்தின் மேல் கார் செல்லும் போது திருமலையின் கண்கள் தாத்தாச்சாரியார் தோட்டத்தைத் துளைக்கத் தொடங்கியது.

பாபுவின் கார் இடது புறம் திரும்பி அம்மா மண்டபம், காந்தி சிலையை கடந்து மேலூர் ரோடில் உள்ள வீட்டின் முன் நிற்கும் போது வீட்டின் வாசல் முன் ரங்கன் அவருக்காக காத்து நின்றான்.

தாத்தாவுக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

தாத்தாவைக் கண்டதும் ஓடி வந்து அவரது வேட்டி நுனியை கையால் கவ்வி அவர் மேல் பாய்ந்து தனது அன்பை வெளிப்படுத்த, பாபு, “ என்னை மன்னிச்சுடுடா. அவன் இவ்வளவு திரும்பி வந்திருக்கிறான் என்றால் அதற்கு காரணம் இல்லாமலா போய்விடும்? பீ ஹாப்பி அண்ட் எஞ்சாய் வித் ஹிம். நான் வருகிறேன்.” என்று சொல்லிவிட்டு வெளியே போய் விட்டார்.

வழக்கம் போல இரவு 9 மணிக்கு தாத்தாவும் ரங்கனும் அவர்களின் அறையில் படுத்தனர். ரங்கன் தாத்தாவின் அருகில் படுத்துக்கொண்டான். தாத்தா “ என்னை மன்னிச்சுடுடா.. இனிமேல் அந்த தப்பு செய்ய மாட்டேன்” என்றபடியே ரங்கனை வாஞ்சனையாக வருடியபடியே தூங்கிப்போனார்.

இரவு ஒரு மணி இருக்கும். திடீரென்று ரங்கன் தாத்தாவின் தோள்களைக் குலுக்கி ஆரவாரம் செய்ய, தாத்தா விழித்துக்கொண்டார். அவரை இழுத்துக்கொண்டு பாட்டி அருகில் சென்றான்.

கீழே நிலை தவறி விழுந்திருந்த அம்புஜம் தலையில் லேசான அடி பட்டு இரத்தம் வந்து கொண்டிருந்தது. மூச்சு சீராக வந்து கொண்டிருந்தது. முகத்திலும், கைகளிலும் வியர்த்திருந்தது. அவள் அப்போதுதான் விழுந்திருக்கவேண்டும்.

ஆம்புலன்ஸை வரவைத்து, அமெரிக்கன் ஆஸ்பத்திரி விரைந்தார்.

பாட்டிக்கு அவசர சிகிச்சை அளித்த டாக்டர் “ சிவியர் ஹார்ட் அட்டாக். நல்ல வேளை. உடனே வந்தீர்கள். கொஞ்சம் தாமதித்திருந்தாலும், உயிருக்கு ஆபத்தாக முடிந்திருக்கும். இந்த மருந்துகளை உடனே வாங்கி வாங்கோ” டாக்டர் இப்படி சொன்னதும் திருமலையின் பார்வை ரங்கனின் பக்கம் சென்றது.

‘இப்படி ஒரு பெரிய விஷயத்தை செய்து விட்டு, ஒன்றுமே தெரியாதது போல உட்கார்ந்திருக்கிறானே!. ரங்கனின் வருகைக்கு பாபு சொன்ன காரணம் இது தானோ?’ என வியந்தார்.

அப்புறம் என்ன!.. ரங்கனிடம் அந்த வீட்டில் எல்லோரும் அன்பைப் பொழிந்தனர். ரங்கனுக்கு கிடைத்த மரியாதையும் சலுகைகளும் ஏராளம்.

ரொம்பவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த தாத்தாவுக்கு உடம்புக்கு வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. டாக்டர் வந்து பார்த்துவிட்டு, “ கவலைப்படாதீர்கள். சரியாகிவிடும். வயசானாலே ஏதாவது சின்ன நோய் அப்பப்ப வருவது தான்.” வழக்கமான டயலாக்கை உதிர்த்துவிட்டு சென்றார்.

தாத்தா அன்று இரவு அவருக்குப் பிடித்த உப்புமாவை சாப்பிடவில்லை. ரங்கனுக்கும் ஊட்டிவிடவில்லை.

அன்று இரவு படுத்தவர்தான், மறு நாள் காலை எழுந்திருக்கவில்லை. ரங்கன் தாத்தாவின் பிரிவை பொறுக்கமுடியாமல் அவரைச் சுற்றி சுற்றி வந்தான்.

தாத்தாவின் உடலைத் தகனம் செய்து காவிரியில் அஸ்தி கரைத்துவிட்டு வந்தாயிற்று.

ரங்கனுக்கு தாத்தாவின் அறையில் இருந்த அவனுடைய தட்டில் உப்புமா பறிமாறப்பட்டது.

மறு நாள் காலை எழுந்து பார்க்கும்போது ரங்கன் அறையில் இல்லை. தட்டில் உப்புமா அப்படியே இருந்தது.

ரங்கனை கடைசியாக காவிரிக்கரை ஓரத்தில் பார்த்ததாக யாரோ சொன்னார்கள். அவனுடைய குச்சி மட்டும் வீடு வந்து சேர்ந்தது. அதற்கு அப்புறம் அவனை யாரும் பார்க்கவே இல்லை.

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “உள்ளம் கவர்ந்தானை

  1. மனதை உருக்குகிறது கதை. வாயில்லா ஜீவன் என்றாலும் கள்ளம் கபடமற்ற அன்பைப் பொழிவது அவற்றுக்கும் சாத்தியம் தானே!!. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத வெள்ளை உள்ளம் கொண்ட ரங்கனை நினைத்து ஏக்கம் மிகுந்தது. வெகு நேரம் கதையின் பாதிப்பில் ஆழ்ந்திருந்தேன். மனமார்ந்த நல் வாழ்த்துகள்.

  2. உள்ளம் கவர்ந்தானை உள்ளம் கவர்ந்தது.

  3. ஆஹா….ஜீவகாருண்யம் என்பது இதுதான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *