குறவன் பாட்டு – 6
சச்சிதானந்தம்
பூனைப் புனுகு சேகரித்தல்
நாய்போல் வளர்ந்த புனுகுப் பூனை,
நரிவால் போன்ற அடர்வால் சுருட்டி,
நாள்முழுதும் மரத்தில் பதுங்கித் தூங்கி,
நன்முன் னிரவில் உணவைத் தேடும்! 45
உணவைக் கூடத் தவிர்த்துத் தனித்து,
மினுக்கும் கண்களை மூடித் தூங்கும்,
புனுகுப் பூனை பதுங்கும் புதரை,
அணுகிப் புனுகுப் பூனை பிடித்தான்! 46
அஞ்சிப் பதறிய அந்தப் பூனை,
அட்ரினலின் போல் அதி வேகத்தில்,
ஆசன வாயின் அருகில் இருக்கும்,
அமுதச் சுரப்பியில் புனுகைச் சுரந்தது! 47
அடர்ந் திருக்கும் புனுகின் நெடியை,
நுகர்ந் திடாமல் தவிர்த்திட வேண்டி,
முகமூடிக் கொள்ளையன் போலக் குறவன்,
முகத்தைத் துணியால் மூடிக் காத்தான்! 48
புனுகை எடுத்துப் பத்திரப் படுத்தி,
பூனையை மீண்டும் மரத்தில் விடவே,
புழுவைப் போலத் துடித்த பூனை,
பாம்பைப் போல உடனே மறைந்தது! 49
அமிலம் போன்று அடர்ந்த புனுகை,
அமுதம் போன்று ஆக்கும் பொருட்டு,
அதிலே நீரைக் கலந்து குழைத்து,
அரும் பொருளாக மாற்றி விட்டான்! 50
ஆசன வாயில் சுரந்த புனுகு,
வாசனை மிக்க திரவிய மாகி,
ஈசனை மிக்கப் போற்றிட ஏற்ற,
பூசனைப் பொருளாய்ப் பூத்து விட்டதே! 51
கவிதைகள் நன்று.
குறவன் செய்கின்ற செயல்களையெல்லாம் நீங்கள் பட்டியலிடுவதைப் பார்த்தால் அருகிருந்து பார்த்துக் கவிவடித்தது போலல்லவா தோன்றுகின்றது!!
கவிதைகள் கற்பனையில் உதித்தவையா அல்லது நேரடி அனுபவத்தின் சாரமா… என அறிய ஆவல். ஐயத்தைத் தெளிவியுங்கள் கவிஞரே!
தங்களது வார்த்தைகள் என்னை உண்மையிலேயே உற்சாகத்தில் ஆழ்த்தி விட்டன திருமதி.மேகலா இராமமூர்த்தி அவர்களே. நன்றி!
சிறு வயதில் குறவர் இன மக்கள் தெருக்களில் பொருட்களை சுமந்து கொண்டு விற்பனை செய்ய வருவதைப் பார்த்திருக்கிறேன்.
அவர்கள் கொண்டு வரும் பொருட்களை அவர்களே நேரடியாகக் கானகத்திலிருந்து சேகரித்திருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டேன். பின்னாளில் எனது தந்தை உதகையில் பணியாற்றிய பொழுது மலைவாழ் மக்களுடன் ஏற்பட்ட நேரடித் தொடர்பால், அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் செல்லும் வாய்ப்பைப் பெற்றார். அவரது அனுபவங்களை வீட்டிற்கு வந்து எங்களுடன் பகிர்ந்து கொள்வார். அவ்வாறு கேள்விப்பட்ட செவிவழிச் செய்திகளுடன், எனது கற்பனையையும் புகுத்தி எழுதியுள்ளேன். நேரடி அனுபவம் இதுவரை ஏற்படவில்லை. நேரடி அனுபவம் கிடைத்தால் இன்னும் மகிழ்வேன்.
நன்றி!
நல்ல கவிதையில் வரும் குறவன் பாட்டு.
கால நேரம் கை கொடுக்காததால் ஆரம்பத்தில் படிக்க தவிர்த்து விட்டேன். குறவனுக்கு நரியும் பூனையுமே அடையாளம், இன்று குறவர்கள் சற்றே மேலோங்கிய வாழ்க்கைக்கு வந்து விட்டார்கள் என்பது மகிழ்சிக்குரியது.
நண்பர் தனுசு அவர்களுக்கு என் நன்றிகள்.
புனுகுப் பூனையின் ஆசனவாயில் வடித்திரவம்
வாசனைப் பொருளாய் வடிவமுற – குறவன்
அனுகும் முறையை அழகாய்வடித்த ழகுத்தமிழ்
வாசம் நிறைந்த கவிதை!
திரு.ஆலாசியம் ஐயா அவர்களுக்கு என் நன்றிகள்.
ஈசனார் பூசனைக்கென புனுகுச் சட்டம் சார்த்தும் போது பார்த்திருக்கிறேன். இது புனுகுப் பூனையிலிருந்து கிடைப்பதெனத் தெரியும். ஆனால் இவ்வளவு விவரம் இப்போது தான் அறிந்து கொண்டேன். இத்தனை நுண்ணிய விவரங்களோடு கூடிய கவிதைகளைத் தருவது நிச்சயம் ஒரு அரும் பெரும் செயல். ‘குறவன் பாட்டு’ ஒரு முக்கிய கவிநூலாக ஆவணப்படுத்தப்படும் என்று நினைக்கிறேன்.அவ்வாறு நிகழ குறிஞ்சி நிலக் கடவுளை மனமார வேண்டுகிறேன். பகிர்விற்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
தங்களது மனப்பூர்வமான வார்த்தைகளுக்கு என் நன்றிகள் திருமதி.பார்வதி இராமச்சந்திரன் அவர்களே!
புனுகெடுக்கும் தெழில்நுட்பத்துடன்
புறப்பட்டு
புதுவரலாறு படைக்கிறது ‘குறவன் பாட்டு’..
வாழ்த்துக்கள்…!
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் திரு.செண்பக ஜெகதீசன் அவர்களே!