ஜோதிர்லதா கிரிஜா

ஆண்-பெண் நட்புறவின் சாத்தியம் பற்றிய கேள்வியைப் பிரபஞ்சன் அவர்களின் கட்டுரை (புதிய தலைமுறை (23.2.2012) யின் சில பகுதிகள் எழுப்புகின்றன. அந்தக் கேள்வியை மட்டுமே தொட்டு இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

ஆண்களும் பெண்களும் கலந்து பழகவே கூடாது என்பதில் நம் முன்னோர்கள் காலம் காலமாக மிகப் பிடிவாதமாக இருந்து வந்துள்ளார்கள். இது முழுவதுமாய் ஏற்கத்தக்கதன்று என்பதே எனது கருத்தாகவும் இருந்து வந்துள்ளது. ஒன்று சொன்னால் நம்புவீர்களா? தோழிகளைக் காட்டிலும் எனக்குத் தோழர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்! ஆண்களது நட்பு உயர்வானது, நட்புக்கு ஆண்களே அதிகம் உரியவர்கள் என்பதே எனது கருத்து. நட்பைப் பொறுத்த வரையில், பெண்களைக் காட்டிலும் ஆண்களே சிறந்த நண்பர்கள் என்பதாய், ‘இன்றும் நாளையும் இளைஞர்கள் கையில்’ எனும் எனது நூல் ஒன்றில் நான் குறிப்பிட்டிருந்ததை ஒரு பத்திரிகை ஆசிரியர் எடுத்தெழுதியிருந்ததோடு அது பற்றிய தமது வியப்பையும் வெளிப்படுத்தியிருந்தார். கட்டுரையின் தொடக்கத்தில் இதைக் குறிப்பிட ஒரு பொருத்தமான காரணம் இருக்கிறது. பெண்ணுரிமைவாதி என்பதோடு, ஆண் எதிர்ப்பாளி என்பதாகவும் நான் அறியப்பட்டு வந்துள்ளதால், எப்போதும் அப்படி இல்லை என்பதைச் சுட்டிக்காட்டும் பொருட்டே இது இங்கே குறிப்பிடப்படுகிறது!

ஆண்-பெண் நட்புறவில் இங்கே ஆணுக்கு எதிராய் நான் சொல்லப் போகும் கருத்தை என்னைப்பற்றிய ஏற்கெனவே இருக்கக்கூடிய கணிப்பின் அடிப்படையில் விமர்சித்தல் சரியாக இருக்காது என்பதை எடுத்துச் சொல்ல இந்தச் சுயத் தம்பட்டம் தேவைப்படுகிறது. மன்னிக்கவும்.

ஆண்களுடன் பழகுவது தீமை பயக்கும் என்பதாய்ச் சின்னஞ்சிறு வயதிலிருந்தே ஒரு பெண்ணுக்குச் சொல்லப்பட்டு வருகிறது. இது தவறானது என்று அறவே புறந்தள்ளிவிட முடியாது. பத்து வயதுச் சிறுவர்கள் கூட நம்பத்தகுந்தவர்கள் அல்லர் என்பதே உண்மை! விகாரங்களைத் தூண்டும் ஊடகங்கள் இல்லாத அந்த நாளிலேயே இப்படி யெனில், இந்த நாள் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. ‘எல்லாத்துக்கும் சின்னவன்; ஆனா, கல்யாணத்துக்கு மட்டும் பெரியவன்’ என்பதாய் ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு. இது பற்றிய அறிவால்தான் நம் பெரியவர்கள் ‘ஆம்பளப் பசங்களோட வெளையாண்டா, காது அறுந்து போகும்’ என்று பெண் குழந்தைகளை அச்சுறுத்தி வந்தார்கள் போலும்.

ஒரு பெண்ணோடு பழகும் போது ‘இவள் ஒரு பெண்’ என்கிற நினைவையும் நினைப்பையும் அகற்றி அவளை ஒரு நண்பணைப் பார்ப்பது போல் ஒரு தோழியாக மட்டுமே பார்ப்பவர் ஆண்களில் அரிது என்பதே கசப்பான உண்மை. இத்தகைய அரிய ஆண்களை மட்டுமே தன் உள்ளுணர்வால் கண்டுணர்ந்து பழகும் கெட்டிக்காரத்தனம் பெண்ணுக்கு இருந்தால்தான் அவள் உருப்படியாக மீண்டு வர முடியும்!

இயல்பான உள்ளுணர்வு பெண்ணுக்கு உண்டு. அது இறைவன் அவளுக்கு அளித்த கொடை. முதுகுக்குப் பின்னால் இருந்தபடி எவரேனும் முறைத்தாலும் திரும்பிப் பார்க்கும் உள்ளுணர்வு அவளது பிறப்பியல்பு. பெண் அதைச் சரியாகவோ, முழுமையாகவோ பயன்படுத்திக்கொள்ளாத போதுதான் அவள் கண்மூடித்தனமாக ஆணை நம்பி ஏமாந்து போகிறாள். தனது உள்ளுணர்வைப் புறக்கணிக்காமல், அதை ஏற்று நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் பெண் ஏமாந்து போவதில்லை. எதிர்ப்பாலைச் (Opposite sex) சேர்ந்தவனாக ஆண் நண்பன் இருப்பதால் அதிகப்படியாக நிகழக் கூடிய வன்னுகர்வு எனும் ஆபத்தைத் தவிர்த்தல் கட்டாயமாகிறது. ஒரு பெண் இன்னொரு பெண்ணைத் தோழியாக்கிக் கொள்ளும் போது பாலுணர்வு சார்ந்த இந்தக் கசப்பான ஆபத்து அவளுக்கு இல்லை. எனவே தன் உள்ளுணர்வைச் சார்ந்துதான் ஒருத்தி தன் தோழியைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்கிற இன்றியமையாத் தேவையும் இல்லை. சண்டை வரும் போது விலகவோ, விலக்கவோ செய்யலாம். (பெண்களிடையே சண்டை அடிக்கடி வரும்!)

தன்னோடு வெறும் நண்பனாக மட்டுமே பழகி வந்துள்ள நிலையிலும் – அது புனிதமான நட்பு மட்டுமே என்பது இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையிலும் – திடீரென்று அந்த நண்பன் அத்துமீறிய வக்கிரச் செயலில் ஈடுபடும்போது, அந்தப் பெண் அதிர்ந்து போகிறாள். சின்னச் சின்ன அத்து மீறல்கள் ஏற்படும் போதே, அதைப் புரிந்து கொள்ளும் – ஆனால் அதை விரும்பாத – பெண் அவனைப் புறந்தள்ளி விடுவாள்.

ஆனால், ஆண் இவ்விஷயத்தில் தந்திரமானவன். நம்ப வைத்துக் கழுத்தறுப்பவன். தன்னைப் புரிந்துகொண்டு பெண் தன்னைத் தவிர்த்துவிடுவாளோ என்னும் உணர்வால், சிறு அத்து மீறல்களைக் கூடத் தவிர்த்துக் கண்ணியவானைப் போல் நடப்பதில் (நடிப்பதில்) மிகுந்த கவனம் காட்டி அவளது நன்மதிப்பைச் சம்பாதித்த பின் பிரபஞ்சன் குறிப்பிட்ட அந்த ஐந்து இளைஞர்களைப் போல் மிகக் கீழ்த்தரமாக நடந்து கொள்ளுபவன். தன் உண்மையான தன்மையை அவளுக்குக் காட்டிக்கொடுக்கக் கூடிய சிறு அத்து மீறல்களைஅவன் செய்ய மாட்டான்! தோதான வாய்ப்பின் போது, எடுத்த எடுப்பிலேயே வன்னுகர்வுதான்! அந்த வாய்ப்பையும் அவனே ஏற்படுத்திவிடுவான்.

எனவே, ஒரு புற்றில் பாம்பு இருக்கிறதா, அல்லது எறும்பு இருக்கிறதா என்றெல்லாம் ஒரு பெண் அதனுள் கையை விட்டுப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. அது தேவையற்ற அபாய நிலை (risk). ஆக, (100%) மிக, மிக, மிகச் சரியான கணிப்பு இருந்தால் மட்டுமே அவள் ஆண் நண்பர்களைச் சேர்த்துக்கொள்ளலாம்! மிக மிக நல்லவர்கள் என்கிற மதிப்பீடே யானாலும், அவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பதுதான் அவளுக்கு நல்லது. ஏனெனில், மிகுந்த கெட்டிக்காரத்தனமும் கவனமும் உள்ள பெண்களே கூட இந்தத் தேர்வில் ஏமாந்துவிடக்கூடும்.

காதலித்துத் திருமணம் செய்துகொண்டு, அவளோடும் அவள் பெற்றுத் தந்த குழந்தைகளோடும் வாழும் ஆண்களே சமயங்களில் தம் பெண் நண்பர்களிடம் “வழிவது” பற்றிய கதைகள் காதில் விழுவதுண்டு. பெரும்பாலான ஆண்கள் முழு நம்பிக்கைக்கு உரியவர் அல்லர் என்னும் காரணத்தால், அவர்களுடன் பழகும் பெண்களும் சரி, தோழிகளுடனான தன் கணவனின் நடத்தையை நம்பாத பெண்களும் சரி, வீண் மனக் கலக்கம், குழப்பம், கவலை ஆகியவற்றுக்கு ஆளாகிறார்கள் என்பதே உண்மை. (பெண்களிலும் “வழிசல்கள்” உண்டென்றாலும், அவர்களின் எண்ணிக்கை மிக, மிகக் குறைவே.)

பல்லாண்டுகள் எந்த விதச் சலனமோ, வக்கிரமோ இல்லாமல் பழகும் ஆணே கூடச் சறுக்கிவிடுவதை அறிந்துள்ள பெண் தன் கணவனையும் அவனுடைய தோழியையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்க முற்பட்டுவிடுகிறாள். சென்ற ஆண்டு “கல்கி” யில் வந்த துர்வாசரின் “உள்ளும் புறமும்” எனும் தொடர்கதை (நான் பாதியிலிருந்து முடிவுவரை படித்தது) இதைத்தான் மிக அழகாய், மிக இயல்பாய்ச் சொல்லுகிறது.

ஆணின் நெருக்கமான நட்பு ஒரு பெண்ணுக்கு இன்றியமையாத தேவை இல்லை. ஆணின் நட்பு இருந்தால்தான் அவளது பிறவி சாபல்யம் அடையுமா என்ன!

பெண்ணையும் ஆணையும் பால் வேற்றுமையால் பிரித்து வைப்பதும், அவர்களை நெருங்கிப் பழகவிடாமல் தடுப்பதும்தான் ஆண்களின் கவர்ச்சிக்கும், அதன் விளைவான தவறான நடத்தைக்கும் அடிகோலுகிறது என்பது பச்சைப் பொய்! அபத்தத்திலும் அபத்தமான கருத்து!

பெண்களோடு அவர்களைப் பழக விட்டாலும். பழகவிடாவிட்டாலும், அவர்கள் காட்டுகிற இயல்பு ஒன்றுதான்! அதை மாற்றுவது மிக, மிக………மிகக் கடினம். எனவே, பெண்கள் கவனமாக இருத்தல் வேண்டும் என்பது அவளது பத்திரமும், நலனும் சார்ந்த கோட்பாடாகும். கிழவனோ, குமரனோ, மணமானவனோ, பள்ளி /கல்லூரி மாணவனோ, சிறுவனோ, இவ்வனைவரிலும் பெரும்பாலோர் பெண்ணை உடலுறவு சார்ந்த துய்பொருளாகத்தான் பார்க்கிறார்கள். எனவே, விஷப்பரீட்சை செய்து கொண்டிராமல், நம்பிக்கைக்கு உரியவன் என்பதே தனது கணிப்பானாலும், ஒரு நண்பனைக் குறிப்பிட்ட தொலைவில் வைத்து ஓர் எல்லை வகுப்பதே அறிவுடைமையாகும். நட்பின் தொடக்கத்திலேயே அதை அவனுக்குப் புரிய வைப்பவள் இன்னும் அதிக அறிவாளியாவாள்!

நமது கல்வித் திட்டம் குறைபாடு உடையது. பெண்களைச் சகோதரிகளாகவும், சக உயிர்களாகவும் கருதும் பக்குவத்தையும், அவர்களைக் காக்கும் ஜடாயுத்தனத்தையும் சிறு வயது முதலே ஆண்களுக்குக் கற்பிக்கத் தவறியுள்ள கல்வித் திட்டம் நம்முடையது.

வட இந்திய ஊர் ஒன்றில் அண்மையில் நடந்தது நினைவுக்கு வருகிறது. ஒரு நண்பனுடன் நடந்து சென்றுகொண்டிருந்த இரண்டு பெண்களைச் சில கயவர்கள் வழிமறித்து வன்னுகர்வுக்கு முயல, அருகே வயல் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த ஆணகள், கூக்குரலிட்டு உதவி கோரிய அந்தப் பெண்களை நோக்கி ஓடி வந்து, அவர்களுக்கு உதவாமல், ஆனால், கூட்டு வன்னுகர்வில் தாங்களும் கலந்து கொண்ட கொடுமையை என்ன சொல்ல! பொதுவாக இதுதான் ஆண்களின் ‘லச்சணம்’ ! இது போன்ற நேரத்தில் பெண்ணைக் காப்பற்றத் தங்கள் உயிரையே தியாகம் செய்துவிடும் ஆண்களும் உண்டுதான். மறுக்கவில்லை. ஆனால் அவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்பதால், ஆணின் பொதுவான இயல்பின் அடிப்படையில் தான் ஒரு பெண் தன் நடவடிக்கைகளை அமைத்துத் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும்.

ஆண்களும் பெண்களும் கலந்து பழகினால் இத்தகைய குற்றங்கள் குறையும் என்று சில மனத்தத்துவ வல்லுநர்கள் கூறுவது வெறும் பிதற்றல். இதனால் எல்லாம் ஆணின் பிறவி இயல்பை மாற்றிவிட முடியாது. நற்சிந்தனையும், உயரிய எண்ணங்களும், பெண்களை நுகர்பொருளாய்ப் பார்க்காமல் சகமனிதர்களாய்ப் பார்க்கும் நியாய உணர்வும் கொண்ட பிரபஞ்சன் போன்ற சிலருக்கு இந்த உண்மை கசக்கும்தான்.

எனவேதான் நல்லிதயம் படைத்த ஆண்கள் சிலர் (மகாபாரத தருமபுத்திரர் போல்) தங்களைப் போன்றே மற்றவர்களையும் எடை போட்டு ஆண்-பெண் நட்புக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். அவ்வாறு இல்லாத பிற ஆண்களும் கூட இதனை ஆதரிக்கிறார்கள் – ஆனால், வேறு உள் நோக்கத்துடன். அவர்கள் காட்டில் மழை பெய்யுமன்றோ! அதற்காக!

நன்றி – தினமணி

……..

jothigirija@live.com

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “ஆண்-பெண் நட்புறவு

  1. ஆணும் பெண்ணும் கலந்து பழகுதல் குறித்து எழுதப்பட்டிருந்த கட்டுரை எனக்குச் சில பழைய நினைவுகளை ஏற்படுத்தின. 1970களில் குமுதம் இதழில் ஒரு பெண் எழுத்தாளர் (அந்தப் பெண் எழுத்தாளர் யார் என்பது நினைவில் இல்லை) எழுதிய கதையோ அல்லது கட்டுரையோ சரியாக நினைவில்லை; அதில் பேருந்தில் பயணம் செய்யும் அத்தனை ஆண்களும் பெண்கள் மேல் உரசுவதற்காகவே பயணம் செய்பவர்கள் என்ற கருத்து அதில் மிகுந்திருந்தது. அடுத்த வாரமே அந்தக் கதை/கட்டுரையின் தாக்கத்தினால் நான் ஒரு கடிதம் குமுதத்துக்கு எழுதினேன். அதில் நான் குறிப்பிட்டிருந்த வரிகள் நன்றாக நினைவிருக்கிறது. “ஆண்கள் எல்லாம் கார்த்திகை மாதத்து நாய்கள் அல்ல” என்று நான் எழுதினேன். அந்தக் கடிதம் குமுதத்தில் கடிதம் பகுதியில் நடுவில் வெளியிடப்பட்டது. அந்த சமயத்தில் என் அலுவலகத்தில் பணிபுரிந்த பெண்கள் சிலர் கூட என்னுடைய கருத்தை வரவேற்றார்கள். வெளியில் செல்லும் அல்லது பயணம் செய்யும் ஆண்கள் எல்லோரும் பெண்களைக் கனவில் அல்லது மனத்தில் தாங்கி வாழ்பவர்கள் அல்ல. அவரவர்க்கு எத்தனையோ கவலைகள், பிரச்சனைகள். இளம் வயது முதல் கிழவன் வரை அனைவருமே ஏதோவொரு காரணத்துக்காக புகைவண்டியில் அல்லது பேருந்தில் பயணம் செய்ய நேருகிறது. அப்போது பெரும்பாலோர் தங்கள் கவலைகளைச் சுமந்து கொண்டுதான் செல்வார்களே தவிர அப்போதைக்கு அருகில் நிற்கும் அல்லது உட்கார்ந்திருக்கும் பெண்களிடம் சில்விஷமம் செய்யும் மனநிலையில் இருப்பதில்லை. இன்னும் சிலர் மணிமேகலையில் காணப்படும் வரிகளை நினைவில் கொள்வர். அது “வினையின் வந்தது; வினைக்கு விளைவாயது; புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது; பற்றின் பற்றிடம்; குற்றக் கொள்கலம் மனித யாக்கை இது”. இன்னும் சிலருக்கு பட்டினத்தாரின் பாடல்கள் கூட நினைவில் வரலாம்.

    ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி ஏதோ ஒரு குறைவான சதவீதத்தினர் சதா காலமும் உடலுறவு ஆசையை மனத்தில் ஏற்றிக் கொண்டு திரியலாம். அவர்கள் தங்களது வக்கிர எண்ணங்களை சமயம் வாய்த்தபோது பயன்படுத்திக் கொண்டு உடன் இருப்பவர்களுக்குத் தொல்லை கொடுக்கலாம். ஆனால் பெரும்பாலும் அவ்வாறு இருப்பதில்லை. மனத்தில் அப்படியொரு வக்கிரம் இருந்தாலும், அந்தச் சந்தர்ப்பத்தில் மிகவும் பெருந்தன்மையோடு நாகரிகமாக நடந்து கொள்ளும் மனிதர்களையும் பார்த்திருக்கிறேன். இளம் வயது பெண்கள் பலர் ஒன்று சேரும்போது அவர்கள் உத்சாகத்தின் மிகுதியால் பொது இடங்களில் நடந்து கொள்ளும் முறை, பலரையும் பார்த்து வியப்படையவோ, அருவெறுப்படையவோ, அல்லது அவர்களது கொண்டாட்டங்களில் ஆர்வம் செலுத்தவோ செய்துவிடுகிறது. அந்த சமயங்களில் அந்தப் பெண்களுக்குத் தெரிந்தவர்கள் செய்யும் குறும்பு அல்லது சேஷ்டைகளை பொறுத்துக் கொள்வது உண்டு. அன்னியன் இதில் நுழைந்தால் அந்தப் பெண்களும் சரி, கூட இருக்கும் அவர்களுக்குத் தெரிந்த ஆண்களும் சரி இந்த மூன்றாவது மனிதனை ஒரு கை பார்த்து விடுவார்கள். மனித இயல்பு இது. 

    பல நேரங்களில் என்னைப் பொறுத்தவரை தனிமையில் நிற்கும்போது சுற்றிலும் நடக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை கவனித்துப் பார்த்த அனுபவம் உண்டு. பெரும்பாலும் என் வாழ்நாள் முழுவதிலும் நண்பர்களுடன் கூட்டம் கூடி சுற்றுவது பழக்கம் இல்லை. நான் ஒரு தனிமை விரும்பி. நான் எனும் நிலை வரும்போது முதலாவது எனக்கு இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு மனதில் தைரியம் கிடையாது; நம்முடைய சுய கெளரவம், மரியாதை, சமுதாய அந்தஸ்து இவைகள் பொதுவாக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுத்து விடும். ஆனால் இவற்றையும் மீறி சிலர் நடந்து கொள்கிறார்கள் என்றால் அது வக்கிரம்.

    நான் இங்கு சொல்ல வந்த கருத்து எல்லா ஆண்களும் அயோக்கியர்கள் என்றோ, பெண் பித்தர்கள் என்றோ கொள்ள முடியாது என்பது போலவே, பெண்கள் அனைவருமே பாரத பண்பாட்டின் பிரதிநிதிகள் சுய கட்டுப்பாடு உள்ளவர்கள் என்பதும் இல்லை. ஆங்காங்கே விதிவிலக்குகள் உண்டு. மறுக்க முடியாது. மறுப்பது என்றால் நாட்டில் விபசாரம் என்பது வருமானத்துக்காகவோ, வேறு எதற்காகவோ திரும்பிய பக்கமெல்லாம் கொடிகட்டிப் பறக்கவேண்டிய அவசியம் என்ன? யாரும் யாரையும் குற்றம் சொல்வது என்பது சரியான முடிவாகாது. சமூகத்தில் புறையோடிவிட்ட சில தவறுகள் அல்லது குற்றங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அது ராமராஜ்ய காலமாக இருந்தாலும் கூட இருக்கும். இல்லாவிட்டால் சீதை அயலான் ஊரில் சிறை இருந்தாள் என்பதற்காக அவள் கற்பில் சந்தேகப்படும் நிலைமைக்கு ராமன் வந்ததோ, அல்லது அவனை அந்த சிந்தனைக்கு ஆளாக்கியதோ நடந்திருக்குமா? அவரவர் தங்கள் மனத்தை உறுதியாக, நியாயமாக, தவறுக்கு இடம் தராமல் வைத்துக் கொள்ள பழகிவிட்டால் ஊரும் நல்லதே. ஆண் பெண் நட்பு சகஜமாக இருக்குமானால் அவர்களிடையே உள்ள பழக்கத்தில் வக்கிரம் நுழைவது என்பது இருக்காது. அதிகம் நட்போடு பழகும் பெண்களை தன் சகோதரியாக எண்ணும் ஆண்கள் பலரை நான் அறிவேன். தனிமையில் இருக்கும்போது கூட நாகரிகம் கெடாமல் பழகுபவர்கள் நிச்சயம் உண்டு. சிலர் இந்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றால் அவர்கள் மனிதப் பதர்கள். அவ்வளவே! நாம் நல்லவராக இருந்தால் ஊர் நல்லதாகத் தோண்றும், இல்லையெனில் நாம் எப்படியிருக்கிறோமோ அப்படித்தான் இந்த உலகமும் என்று எண்ணத் தோன்றும். 

    இந்தப் பகுதியில் வந்த கட்டுரையினால் ஏற்பட்ட என் மனவோட்டத்தை இங்கு வடித்திருக்கிறேன். யாரையும் குற்றம் சொல்லவோ, குறை காணவோ அல்ல என்பதை திட்டவட்டமாக அறிவிக்கிறேன். என் கருத்தில் மாற்படுபவர்களுக்கு அந்த உரிமை உண்டு. நன்றி.

  2. அன்பு ஜோதிர் லதா கிரிஜா நலமா ? உங்கள் படைப்பை விரும்பி படிப்பவள் நான் .நான்கு முறை உங்கள் இல்லமும் வந்திருக்கிறேன் .ஆண் பெண் உறவைப்பற்றி இன்றைய காலத்தில் சொல்ல வேண்டுமென்றால் இதில் தவறு ஒன்றுமில்லை என்று நினைத்து  சகஜமாக போகும் பெண்கள் பலர் பெருகி வருகின்றனர்  நீங்கள் சொல்வது போல் பள்ளி மாணவர்கள் தன் கேர்ல்பிரண்டுடன்  மணிக்கணக்காக பேசி எல்லை மீறுவதை நான் பலமுறை பார்த்தும் பார்க்காதது போல் வந்திருக்கிறேன் இதில் வளர்ப்புமுறைக்கும் பங்கு உண்டு என  நினைக்கிறேன்  

  3. திருமதி ஜோதிர்லதா கிரிஜா அவர்களுக்கு, 
    வணக்கம். சிறுபிள்ளைப் பருவத்தில் கல்கண்டு இதழில் உங்கள் கட்டுரைகளைப் படித்துச் சுவைத்ததோடு சரி. பிற்காலத்தில் கதை இலக்கியங்கள் படிப்பது குறைந்துபோயிற்று. 
    இந்த உங்கள் கட்டுரை எனக்கு மிகவும் பிடித்தது! பலருக்கும் பிடிக்காமல் போகும், அதில் வியப்பில்லை!!!
    பலவகைப் பரிமாணங்களை மிக அழகாக உங்கள் கட்டுரை சுட்டுகிறது. ஆனால் … குண்டுச்சட்டியில் சுகமாகக் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கும் ஆட்களுக்கோ, புலம்பெயராமல் தான் பிறந்து வளர்ந்த தன்வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து வெத்திலை எச்சில் துப்பும் பிறவிகளுக்கோ, தான்தான் ideal பிறவி என்ற கற்பனையில் நடமாடும் பிறவிகளுக்கோ, இன்ன பிறருக்கோ உங்கள் கட்டுரை பிடிக்காது, உங்கள் கருத்தும் புரியாது!! 
    எல்லாரும் தம்முடைய தனித்தனி வாழ்வில் உங்கள் கட்டுரைக் கருத்துகள் எவ்வளவில் பொருந்தும் என்று பார்ப்பார்கள்; உடனே உங்கள் கருத்தைப் புறந்தள்ளிவிட வாய்ப்பு மிகுதி; ஏனென்றால் அவரவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் சுகம் அப்படி. ஒவ்வொருவரும் தனியாக அடிபடும்போது கொஞ்சம் வலி புரியும். 
    இப்படிக்கு,
    ராஜம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *