தனுசுimag va

அடி வானம் சிவந்தது
அது ஏன்?
பல வினாக்கள் என்னுள் எழுந்தது
அவைகளை உங்கள் முன் வைக்கிறேன்
தகுந்த விடை தந்தால் ஏற்கிறேன்!

பணி முடித்த சூரியன்
சொல்லாமல்
வீட்டுக்கு விரைவதால்
வானம் கோபத்தில் சிவக்கிறதா?

எரிக்கும் தன்னை வெறுத்து
குளிர் தரும் நிலவை
வரசொல்லும் வானுக்கு
சூரியன் தீ வைக்கிறதா?

ஒரு நாள் விளையாட்டில்
இரவோ பகலோ
யார் அத்து மீறுவதென புரியாமல்
அந்தி நேரம்
ஆட்டத்தை நிறுத்த
அடிவானத்துக்கு
சிவப்பு கொடி காட்டுகிறதா?

இரவுக்கு
அழகூட்ட வரும் நிலவுக்கு
வானம் ஆரத்தி எடுக்கிறதா?

இரவும் பகலும்
கலவிக்கு தயாரானதால்
வானம் வெட்கப்பட்டு சிவக்கிறதா?

இரவின் வானம்
நிலவாலும் நட்சத்திரத்தாலும்
பூச்சூடுவதால்
பகலின் முகம்
பொறாமையால் கீழ்வானில் எரிகிறதா?

இரவின் வண்ணத்திற்கு ஈடுகட்ட
பகலவள்
மருதாணியிட்டுக் கொண்டாளா?

ஜாம விருந்துக்கு
தயாராகும் வானம்
மகிழ்ச்சியில்
வெற்றிலை போட்டுக்கொண்டதா?

இரவின் இருளால்
உலகம் தவிக்காதிருக்க
பகல்
அடி வானில் தீப்பந்தம் ஏந்துகிறதா?

நிலவவளை வரவேற்க
பகலரசன்
வானில்
சிவப்பு கம்பளம் விரிக்கிறானா?

பூலோக பெண்களுக்கு போட்டியாக
மஞ்சள் அரைத்துக் குளித்த வானம்
இன்று கொஞ்சம்
அதிகமாக மஞ்சள் பூசிக்கொண்டதா?

ஏன்?
ஏன்? என்று எழுந்த
விளங்க முடியா வினாக்களை
உங்கள் முன் வைத்துவிட்டேன்
தகுந்த பதிலை தாருங்கள்
தலை வணங்கி ஏற்கிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “கீழ் வான சிவப்பு

  1. கண்ணகியின் கோபத் தீ,

    கதிரவனை எரித்த ழிக்க,

    விண்ணகத்தை நோக்கிப் பாய,

    விளைந்த திந்தச் செவ்வானோ?

    செங்கடலில் நீர் குடித்த,

    மேகங்கள் சூழ்ந்த தினால்,

    பொங்கிய திச் செவ்வானோ?

  2. செக்கச் சிவந்த செவ்வானமே புதுச் 
    சேலை உடுத்திய அடிவானமே
    கக்கத்தை கிள்ளிடும் கதிரவனின் காதலில் 
    சொக்கித்தான் போய் ஒளிர்கிறாயோ! 
    எக்கச் சக்கமாய் சிவந்தாயே -உந்தன் 
    வெக்கத்தை மறைக்க மறந்தாயே 
    எக்காரணத்தால் இப்படி நீச் சிவந்தாய் 
    அக்காரணமறிய வேண்டியே அழகாக 
    பக்கத்தில் நின்று கவிபாடும் கவிதனுசுக்கு  
    தக்கதொரு பதிலையும் கூறாயோ!

  3. /அடி.. வானம் சிவந்தது
    அது ஏன்?/
    இத்தனை அடிகளா கொடுப்பது
    அடிகளில் கண்ணிடச் சிவப்பது
    இருந்தும் எப்படி பொறுப்பது ?
    இதற்கு ஒருதீர்வை எடுப்பது ?
    மருந்திடு பாட்டி வைத்தியத்தால்
    மூலிகை தென்றல் எழும்பச்சொல்
    சுரந்திடும் அமுத மேகங்களால்
    சுகமாய் ஒத்தடம் தந்திடச்சொல்
    நாளை விடுமுறை எடுத்துவிட்டால்…
    அடுத்தக் கவிதை எப்படி ?
    வண்ண‌த் தனுசுகள் வந்துவிட்டால்
    தொடுக்கும் அம்புகள் இப்படி!

  4. அடிவானச் சிவப்பில்
    கிடைத்த கவிதை நன்று…!

  5. கவிதை தந்தவர் இந்திர தனுசுவா?

    வானவில்  வண்ணங்களாக‌
    மின்னலென ஜாலங்கள் காட்டி.
    பின்னூட்ட மேடையிலும்
    பொன்னொளிரும் கவிதைகளை
    கண்முன்னே காட்ட வைத்த‌
    சித்திரச் செவ்வான
    முத்திரை வரிகள்
    பத்தரை மாற்றுத் தங்கம்!!

    பகிர்விற்கு என் மனமார்ந்த நன்றி!!!! பின்னூட்டத்தில் கவிமழை பொழிந்த கவிஞர் பெருமக்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றி கலந்த வணக்கங்கள்.

  6. கவிதையாலேயே என்னை பாராட்டி சிலிரிக்க வைத்த அன்பு நண்பர்கள் சச்சுதானந்தம், ஆலாசியம்,சத்யமனி. சென்பகஜெகதீசன், பார்வதி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

Leave a Reply to -செண்பக ஜெகதீசன்...

Your email address will not be published. Required fields are marked *