நான் அறிந்த சிலம்பு!…91
மலர் சபா
புகார்க்காண்டம்- 09.
கனாத்திறம் உரைத்த காதை
கோவலன் மதுரை சென்று பொருள் ஈட்ட எண்ணியுள்ள தனது கருத்தை வெளியிட்டு, விடியுமுன் கண்ணகியுடன் மதுரைக்குப் புறப்பட்டுச் செல்லுதல்
கோவலன் கண்ணகியிடம் கூறினன்:
சேயிழையே! நான் சொல்வது கேள்;
நீ குறிப்பிட்ட இச்சிலம்புதனை
முதல் எனக் கொண்டு
மிக்க புகழுடைய
மாடமதுரைக்குச் சென்று
வணிகம் செய்து
முன்பு நான் இழந்திட்ட பொருட்களையும்
தொலைத்திட்ட அணிகலன்களையும்
மீட்டெடுக்க முடிவு செய்துள்ளேன்.
இதழ்விரிந்த மலர்களையுடைய
மாலையணிந்தவளே..
நீயும் என்னுடம் புறப்படுவாயாக!
முற்பிறவியில் செய்திட்ட
ஊழ்வினை உருத்து வந்து
மதுரைக்குப் போகும்படி தூண்ட
அவ்வினையதன் ஏவல் மேற்கொண்டு
மறுதினம், காலைக் கதிரவன் உதித்து
வைகறை இருளை ஓட்டும் முன்பே
அவ்விருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.
வெண்பா
மாதவி வசந்தமாலையிடம் கூறிய
“மாலை வாராராயின் காலை காண்போம்”
என்ற மொழியைக்
கண்ணகி கண்ட கனவது
பயனற்றதாக்கிவிட்டது.
ஊழ்வினை உருத்து வந்து
நெஞ்சைத் தூண்டி நிற்க
காலைக் கதிரவன் வைகறை இருளை விரட்டுமுன்னே
கண்ணகியுடன் புறப்பட்டுச் சென்றான் கோவலன்.
கனாத்திறம் உரைத்த காதை முற்றிற்று.
அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 74 – 83
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html
படத்துக்கு நன்றி:
http://www.hindustantimes.com/photos-news/Photos-World/venustransit/Article4-866678.aspx