கடவுளான பாட்டி !
தேவா
என் பாட்டி சொல்லும் கதைதான்
என் இரவு நேர தூக்க மாத்திரைகள் ,
காலையில் என்னை எழுப்புவது என் பாட்டிதான் – அன்று
ஏனோ மாலை வரை அவள் எழவில்லை ,
மாலை அணிந்து அவள் படுத்துக் கிடந்தாள் – தலை மாட்டில் விளக்கு ,
எங்கும் மவுனம்
அதைக் கலைத்த சில அழுகைகள் ,
அதையும் தாண்டி தாரை தப்பட்டைகள் ,
அவளை நாலு பேர் தூக்கிச் சென்றனர் , முன்னால் என் தந்தை ,
தீச்சடியுடன் ,
‘அம்மா ,பட்டியை எங்க கூட்டிட்டுப் போறாங்கம்மா ? – .நான் ,
‘பாட்டி சாமி ஆயிட்டா, அதான் கோவிலுக்கு எடுத்துட்டுப் போறாங்க – அம்மா.
‘அம்மா பாட்டிய நிப்பாட்டும்மா இரவு பாதிகதையை சொல்லிட்டு
மீதி கதையை,சொல்லாம போறாங்கம்மா – நானும் அழுதேன்.
ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் ,மீள்வதுண்டோ?
எனக்கு தெரியாமல் போனது.
ஒருநாள் கோவிலுக்கு சென்றோம்
என் கண்கள் எதையோ தேடியது ; என் தாய் அதைக் கண்டு ,
‘என்ன தேடுகிறாய் என்றாள்’?
‘சாமியை தேடுகிறேன்’ என்றேன்.
‘அதோ உள்ளே இருக்கிறது சாமி ’, உள்ளே இருக்கும் சிலையைக்
காட்டினாள்.
அந்த சாமி ,இல்லம்மா ,
நம்ம பாட்டி சாமி ஆகிட்டாள்னு சொன்னாயே
அவளைத்தான் ,தேடிக்கிட்டு இருக்கேன்.
என் தந்தையின் கண்களில் ,கண்ணீர்.