த்ரில்
கோதை நாராயணன்
“ஏய் உன் பட்டிக்காட்டு மச்சான் வந்துட்டாண்டி ….”
“வாட் நான்சென்ஸ்… இன்னொரு தடவை என்னோட மச்சான்னு சொன்னீங்க நடக்கிறதே வேற….”
“ஏண்டி நீ ப்ரொபசர் பொண்ணு அப்டிங்கறதுக்காக ஒன்லி ஃபார் சிட்டி பாயிஸ் அப்டின்னு ரூல் இருக்காடி… அவன் உன் சொந்த காரன் வேற…. “தோழிகள் மேலும் கலாய்க்க…
“ஐயோ…. ஸ்டாப் திஸ் சில்லி திங்… ரித்திகா உண்மையிலேயே டென்ஷன் ஆக ஆரம்பித்தாள் .
அவனும் அவன் மூஞ்சியும், ஐய…பேரப் பாரு துரைப்பாண்டி… அம்மாவை சொல்லணும் என்னமோ நன்றி கடனாம், அதுக்கு வேற கல்லூரியில் சீட் வாங்கி கொடுத்திருக்கலாமே… இப்டி நான் படிக்கிற,அதுவும் என் டிபாட்மெண்டெ… ஐயோ ஒவ்வொரு நாளும் ப்ரண்ட்ஸ் அடிக்கிற கொட்டம் தாளல… இதுக்கு ஒரு முடிவு கட்டணும்… தீர்மானித்தபடியே வகுப்புக்கு சென்றாள் .
ப்ரொபசர் மல்லிகாவின் புதல்வி ரித்திகா, சிறு வயதிலேயே ரித்திகாவின் அப்பா பரலோக பதவி அடைந்து விட்டதால், தனி பெண்ணாக போராடி முன்னிலைக்கு வந்தவர் மல்லிகா. அப்படி அவர் கஷ்டப்பட்ட காலங்களில், மேல்படிப்பிற்கு பணம் கட்ட வழி இல்லாத ஒரு காலகட்டத்தில் பணம் கொடுத்து உதவியவராம் மயில்சாமி தாத்தா. அதற்கு நன்றி கடனாக தான் அவருடைய மகன் வழி பேரன் துரைப்பாண்டிக்கு, தான் வேலை பார்க்கும் அதே கல்லூரியில் சீட் வாங்கி கொடுத்தார். கிராமத்திலேயே பிறந்து வளர்ந்து, பள்ளிப் படிப்பையும் முடித்தமையால் துரைப்பாண்டி இங்கு நகரத்திலேயே பிறந்து வளர்ந்து நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் தன் சக தோழர்களுக்கு நடுவில் அல்லோலபட்டுக் கொண்டிருந்தான்.
மறுநாள் கல்லூரி சுற்றுலா செல்ல அனைவரும் ஆயத்தப்பட்டு கொண்டு இருந்தார்கள். அனைவர் மனதிலும் உற்சாகமும், குதூகலமும் …..
ரித்திகாவும் தன் தோழிகளுடனும்,தோழர்களுடனும் அமர்க்களப்படுத்தி கொண்டு இருந்தாள். ப்ரொபசர் என்பதால் மல்லிகாவும் வேறு சில பேராசிரியர்களும் என ஒரு பெரிய படையே கிளம்பியது. மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் என இரண்டு பேருந்துகள் கிளம்பின .
மல்லிகாவின் பைகளை கொடுக்க வந்த ரித்திகா மாணவர்களின் பேருந்திலேயே இருக்கும்படி ஆயிற்று. ரித்திகாவுக்கு அம்மாவின் மேல் ஒரே கோபம் .
“போம்மா ….உன்னால தான் லேட் …”
“சரி இப்போயென்ன ரித்தி… அடுத்த நிறுத்தத்தில் நீ இறங்கி மாறிக்கோ….”
அவருக்கு தெரியாது அல்லவா அடுத்த நிறுத்தம் வரப்போவதே இல்லை என்று.
“ப்ச்” என சலித்தபடியே தன் மாணவ தோழர்களுடன் போய் அமர்ந்து கொண்டாள் .
அனைவரும் கை தட்டி பாட்டு பாடிய படியே பேருந்து சென்று கொண்டிருந்தது.
“ஏலே …”
“ஏ …துரைபாண்டி …!” மாணவர்கள் கிண்டலாக இப்படி தான் அழைத்து கொண்டிருந்தார்கள். இங்கும் அங்குமாக அவர்கள் இழுப்புக்கெல்லாம் சிரித்தபடியே சென்று கொண்டிருந்தான்.
ரித்திகாவுக்கு தமாசாக இருந்தது அவனைப் பார்க்க……கை தட்டி துரையை அழைத்தாள்.
வேகமாய் வந்து நின்றான்.
“போய் …பின்னாடி ராஜேஷ் கிட்ட வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வா ….”
“சரி”யென …வெட்கமாய் சிரித்தபடியே சென்றான்.
“கொடுமைடா சாமி” என முணுமுணுத்துக் கொண்டாள்.
போன வேகத்தில் இல்லையென வந்தவனை …ப்ச் … என எரிச்சலாய் முறைத்து விட்டு தானே எழுந்து பின் சீட்டிற்கு சென்றாள்.
ரித்திகாவை கண்டதும் சில ஆல்ஹகால் பாட்டில்கள் மறைக்கப்பட்டன…
“என்ன ரித்தி ….?”
“இல்ல …நானும் அப்போதிலிருந்து பார்த்துக்கிட்டு இருக்கேன், எல்லோரும் அப்பப்போ பின்னாடி சீட்டுக்கு வந்துட்டு போறீங்களே… அதான் நானும் வந்தேன்…”
அசட்டு சிரிப்பு சிரித்தபடியே “இதையெல்லாம் கண்டுக்காத ரித்தி… உனக்கு தெரியாதாயென்ன?” — இது ராஜேஷ்.
மறைக்கப்பட்ட பாட்டில்களை பார்த்த ரித்திகா, “ஐயோ! கர்மம் கர்மம்! ஏண்டா, இன்னும் நாம பார்க்க வேண்டிய இடத்தை ரீச் பண்ணவே இல்ல … அதுக்குள்ளவா ?”
“இதெல்லாம் ஒரு த்ரில் ரித்தி… காலேஜ் டூர் அதிலும் இறுதி ஆண்டு ஒரு த்ரில் வேண்டாமா?” — இது ரவி.
“ஒவ்வொரு நிமிஷத்தையும் என்ஜாய் பண்ணனும் ரித்தி” — இது ரிஷி.
“அங்க முன்னாடி உங்க மாம் பிளஸ் மேம் இருக்கிறதால இப்டி பின்னாடி வந்துட்டு போறோம்” –அரவிந்த் கிண்டலாக.
“ம்….அதுவரைக்கும் சந்தோஷம்” எனக் கூறி சிரித்தபடியே ரித்திகா தன் இருக்கைக்கு வர திரும்பிய கணப்பொழுதில் அது நடந்தது.
எதிரே வந்த லாரியின் மேல் இவர்களது பேருந்து மோதுவதிலிருந்து காப்பாற்ற அருகிலிருந்த மரத்தில் லேசாக மோதி டிரைவர் வண்டியை நிறுத்த, நின்று கொண்டிருந்தமையால் ரித்திகாவால் சுதாரிக்க முடியாமல் போக, உடைந்த கண்ணாடி ஒன்று அவள் தோளில் பலமாக பதம் பார்க்க, இரத்த வெள்ளத்தில் மயங்கினாள் ரித்திகா.
கூக்குரல் எடுத்து முதலில் கத்தி பின் நிலைமையை உணர்ந்த அனைவரும் படபடவென இறங்கினார்கள். மாணவர்கள் என்பதால் வேக வேகமாக செயல்பட்டார்கள்.
மல்லிகா சத்தமாக அழ ஆரம்பித்தார் .”ஐயோ ரித்தி… கண்ணை முழிச்சு பாருடி…”
“மேம்… டோண்ட் ஒரி மேம்… பக்கத்துல தான் ஹாஸ்ப்பிடல்… சீக்கிரம் போய்டலாம்”
“டே ய்! வாங்கடா சீக்கிரம்”
ஆம்புலன்ஸ் வரவழைக்கப் பட்டு அனைவரும் ஹாஸ்ப்பிடல் வந்து சேர்ந்தனர்.
எமர்ஜென்சி பிரிவுக்கு அனுமதிக்கப்பட்ட ரித்திகாவை சோதித்து விட்டு வெளியே வந்த டாக்டரை அனைவரும் சூழ்ந்தனர்.
அழுதபடியே மல்லிகா,”டாக்டர் ……..?”
“நத்திங் டு ஒர்ரி… மயக்கம் இன்னும் கொஞ்ச நேரத்துல தெளிஞ்சுடும்… ஒரு மைனர் ஆபரேஷன் தோளில் பண்ணனும்… இரத்தம் ரொம்ப வெளியேறி இருப்பதால் உடனடியாக இரத்தம் தேவை… அதற்கு பிரச்சனை இருக்காது இல்லையா…?”
“பிரச்சனை இல்லை டாக்டர் அதற்கு என் மாணவர்கள் இவ்ளோ பேர் இருக்கிறார்கள் …” என திரும்பி தன் மாணவர்களை பார்த்தார்.
‘த்ரில்லில்’ ஈடுபட்டிருந்த அத்தனை மாணவர்களும் மல்லிகாவை எதிர் கொள்ள முடியாமல் திகைத்து பின்வாங்க, “நான் தருகிறேன் டாக்டர் என் இரத்தத்தை” எனக் கூறிய துரைப்பாண்டியின் குரல் மயக்கதிலிருந்த ரித்திகாவின் காதுகளுக்கு உயிராக ஒலித்தது.
நல்ல கதை ! நல்ல திருப்பம். வாழ்த்துகள் கோதை நாராயணன் !
மிகவும் நல்ல த்ரில். .. அருமையான கதை. .
அருமை…. கோதை நாராயணன் !!!