இந்த வார வல்லமையாளர்

4

வெ.திவாகர் 

ஆதி காலத்திலிருந்து பார்க்கிறோம்.. பெண்கள் என்றால் பொதுவாக போகப் பொருளாகத்தான் சமூகத்தில் சிற்சில ஆண்களின் கண்களுக்குத் தெரிகின்றார்களோ என்னவோ,. பெண்களின் அழகை வர்ணிப்பதென்றால் போதும்.. இந்தக் கவிஞர்களுக்குக் கற்பனா சக்தி விண்ணைத் தொடும் அளவுக்கு பறக்கும். பூ என்பார்கள், பூவினும் மெல்லிய இதழென்பார்கள்.. மென்மைக்கு மறுபெயரே பெண்மை என்பார்கள்.. ஆனால் பெண்கள் வன்கொடுமை என வரும்போது இவர்கள் வர்ணனைக்கு நேர்மாறாக நடக்கும்போது நல்நெஞ்சம் கொண்டோர் அவர் ஆணாயினும் பெண்ணாயினும் நெஞ்சம் பதறத்தானே செய்வர்.

பெண்கள் வன்கொடுமை இந்தியாவில் இப்போது அதிகம் நடப்பதாகச் செய்திகள், தொலைக்காட்சிகள் தெரிவித்தாலும் இது உலகம் முழுமைக்கும் ஒரே கதைதான் என்பது நம் பார்வையைச் சற்று அகல விரித்தால் புரியும்.. இதற்கான சமுதாயக் காரணங்களாக ஆண்களின் ஆதிக்கத் தன்மையை அதிகமாகக் காண்பித்தாலும், மனோதத்துவ ரீதியாகப் பார்க்கையில் ஆண்களின் தாழ்வு மனப்பான்மையும் அந்தத் தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாக அவர்கள் மனத்தில் தோன்றும் வெறித்தனமும், அந்த வெறித்தனத்தின் பயனாக அது பெண்ணின் மீது உடல்ரீதியாகத் துன்புறுத்தும்போது அது வன்கொடுமையாக மாறுகிறது. இயற்கையாகவே பெண்களின் மன உறுதி, ஆண்களை விடச் சற்று பலமானதுதான். ஆனால் வன்கொடுமை என வரும்போது பெண்ணின் மன உறுதி குலைக்கப்படுகிறது என்பது வாஸ்தவம்தானே..

இந்த வாரம் வல்லமையில் ஒரு கதை படித்தேன். ‘நிமிர்ந்த நினைவு’ (https://www.vallamai.com/?p=39956) கதை இந்த வன்கொடுமையினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கைப் போராட்டமும்,  பலம் உடைய அவள் எப்படியெல்லாம் மனோரீதியாக உடல்நீதியாக பாதிக்கப்படுகிறாள் என்பதையும் விவரிப்பது.

பெண்கள் ஆண்களோடு பிறந்தவர்கள். தாயாய், சகோதரியாய் பிறவியிலிருந்து ஆண்களோடு வாழ்பவர்கள். பின்னர் மகளாக வருபவள். இத்தனை உறவும் ஆண் ஒரு பெண்ணோடு இணைந்துதான் பெறுகிறான் என்றாலும் இந்த தாய் சகோதரி, மகள்,உறவுமுறைகள் அவனுக்கு நேர்மையாகப் புரியவேண்டும். சமுதாயம் சில நல்ல குறிக்கோள்களை ஆண்வர்க்கத்துக்கு அழுத்தமாகத் தெரியப்படுத்தவேண்டும். இதில் முக்கியமானது பெண்ணை வன்கொடுமைக்கு பலியாக்குவதை அடியோடு ஒழித்துத் தடுப்பதே.

இந்த வகையில் திருமதி நிர்மலா ராகவன் எழுதிய நிமிர்ந்த நினைவு சிறுகதை என்பது, சமுதாயம் மூலமாக உலகுக்குத் தரும் நல்ல குறிக்கோளின் ஒரு பகுதியாகத்தான் எடுத்துக்கொள்ளப்படவேண்டும். பெண் மதிக்கப்படுவதை விட முதலில் அவளுக்கு இழைக்கப்படும் உடல்ரீதியான, மனரீதியான கொடுமைகளைத் தடுக்க முன் வரவேண்டும். இந்தக் கொடுமைகள் தடுக்கப்பட்டாலே பெண் தானாகவே மதிக்கப்படும் நிலை உருவாகிவிடும்.

நல்லதொரு கதையை வழங்கிய திருமதி நிர்மலா ராகவனை இந்த வார வல்லமையாளராக விருது கொடுத்துக் கௌரவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். அவருக்கு நம் வாழ்த்துகள்.

கடைசிபாரா: குறட்டையைப் பற்றி திரு. சம்பத் (’வளையம்’ பின்னூட்டம்)

ஒரு முறை ஹவ்ரா மெயிலில் விசாகப்பட்டிணம் செல்லும் போது சக பயணி ஒருவர் பயங்கரமாகக் குறட்டை விட்டு அடியேனின் தூக்கத்தைக் கலைத்து விட்டார். அடுத்த நாள் காலையில் வண்டி விஜயவாடா சேர்ந்தது. இருவரும் காபியை சுவைத்தவாறு பேச ஆரம்பித்தோம்.

மெள்ள நான் அவரது முன்னிரவு குறட்டையைப் பற்றி பிரஸ்தாபித்தேன். பொறுமையாக என் புகாரைக் கேட்டபின், “ஐயா, நீங்கள் சொல்கிறீர்கள், நான் சொல்லவில்லை. அதுதான் வித்தியாசம்” என்று ஒரு போடு போட்டார்.

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “இந்த வார வல்லமையாளர்

  1. இந்த வார வல்லமையாளராக விருது பெற்ற திருமதி நிர்மலா ராகவன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.  சிறுகதை மூலம் பெண்களுக்கு அறிவுரை தரும் உங்கள் முயற்சிகள் சிறக்க வாழ்த்துக்கள், நன்றி. 

  2. வல்லமையாளர் நிர்மலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  3. இந்தவார வல்லமையாளர் திருமதி.நிர்மலா ராகவன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  4. உங்களள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

Leave a Reply to நிர்மலா ராகவன்

Your email address will not be published. Required fields are marked *