Manavaalan.pmd

ஐக்கியா டிரஸ்ட் நிறுவனம் மற்றும் வல்லமை இணைய இதழும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் அனைத்தையும், ஐக்கியா டிரஸ்ட் நிறுவனரும் மற்றும் எழுத்தாளருமான திரு. வையவன் அவர்கள் ’வல்லமைச் சிறுகதைகள்’ என்ற பெயரில் நூலை மிக அழகாக வெளியிட்டிருக்கிறார்கள். டபுள் கிரவுன் அளவில், 102 பக்கங்களில், எழுத்தாளர்களின் படங்களுடனும் சுருக்கமான அறிமுகத்துடனும் இந்நூல் வெளிவந்துள்ளது. வாசுவின் பல்வண்ண ஓவியங்கள், அட்டையை அலங்கரிக்கின்றன. திரு வையவன் அவர்களுக்கும், இந்த போட்டியில் பங்கு பெற்ற கதைகளிலிருந்து சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ள திரு வெங்கட் சாமிநாதன் மற்றும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கும் வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகளும், நன்றியும். பங்கு பெற்ற அனைத்து படைப்பாளர்களுக்கும் பாராட்டுகள்.

அன்புடன்
பவள சங்கரி.

ரூ.100 விலையுள்ள இந்த நூல், கிடைக்குமிடம்:

தாரிணி பதிப்பகம்,
பிளாட் எண்: 4-ஏ, ரம்யா பிளாட்ஸ்,
32/79, காந்தி நகர் 4ஆவது பிரதான சாலை,
அடையாறு, சென்னை – 600020
மின்னஞ்சல்: vaiyavan.mspm@gmail.com

என்னுரை

 ஐக்கியா தொண்டு நிறுவனம் மற்றும் நம் வல்லமையும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டிக்கு மகத்தான ஆதரவு அளித்திருக்கும் அனைத்து படைப்பாளர்கள் மற்றும் வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றி.  2012 – 2013 ஆம் ஆண்டிற்கான சிறுகதைப் போட்டி இனிதாக முடிந்திருக்கிறது. . நல்ல படைப்புகள் வாசகர் மனதில் என்றும் நீங்காத இடம் பெற்றுவிடுகிறது. இது போன்று நிலைத்து நிற்கச் செய்யும் படைப்புகளை ஊக்குவிப்பதே  இப்போட்டியின் முக்கிய குறிக்கோள். அந்த வகையில் நம் படைப்பாளிகள் அனைவரும் பாராட்டும், வாழ்த்தும் வாசகர்களிடமிருந்து பின்னூட்டமாகவும் பெற்று வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்ற ஊக்கங்களே மேலும் ஆகச்சிறந்த படைப்புகளை உருவாக்கக்கூடியது. ஆக, வாசகர்களின் முழுமையான ஈடுபாடும் மிக அவசியமாகிறது. தமிழ் சிறுகதை இலக்கியங்களின் வளர்ச்சிப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் ஐக்கியா டிரஸ்ட் நிறுவனர் திரு வையவன் அவர்களின் பேராதரவுடன் நடத்தப்பட்டிருக்கும் போட்டியில் பங்குபெற்ற  சிறுகதைகளை பொறுமையாக வாசித்து அதற்கான மதிப்பீட்டை பாரபட்சமின்றி வழங்கி வந்திருக்கும் பிரபல விமர்சகர் உயர்திரு வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும் நம்முடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அவருக்கே உரிய தனிப்பட்ட பாணியில் விமர்சனங்கள் சுவை கூட்டின. அதன் மூலம் தங்களை  மேலும் செம்மையாக்கிக் கொள்ள எழுத்தாளர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது.  ஐக்கியா நிறுவனத்தின் உரிமையாளர், எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர், திரு வையவன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதையை எழுதியவருக்கு தாம் அறிவித்திருந்தபடி மாதாமாதம், பரிசுத் தொகையை அனுப்பியிருந்தார். அவருடைய முழுமையான ஒத்துழைப்பு நமக்கு பெரிய பலமாக அமைந்திருந்தது. அனைத்திற்கும் மகுடம் சூட்டியது போல பிரபல எழுத்தாளர் திரு நாஞ்சில் நாடன் அவர்கள் மாதப்பரிசு பெற்ற அனைத்துக் கதைகளையும் பொறுமையாக வாசித்து அதிலிருந்து பரிசுக்குரிய ஒரு கதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். அனைத்து கதைகளுக்கும் அருமையான விமர்சனமும் கொடுத்து எழுத்தாளர்களை மேலும் ஊக்குவித்திருக்கிறார். அவருக்கும் நம்முடைய நன்றியும்,  மனம் நிறைந்த பாராட்டுகளும் உரித்தாகுக.

ஒரு எழுத்தாளனுக்கு செய்யும் சிறப்பை வைத்து அந்த நாட்டை மதிப்பிடலாம் என்பார்கள். அந்த வகையில் இந்த சிறுகதைப் போட்டி பல எழுத்தாளர்களை சிறப்பித்திருக்கிறது. இந்த 2013ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ள சமகால சிறுகதை எழுத்தாளரான, 82 வயதான கனேடிய எழுத்தாளர் அலைஸ் மன்றோ அவர்கள் மனிதரின் நலிவுற்ற நிலைமைகளையும், தலைமுறை வேறுபாடுகளையும்  மையமாகக்கொண்டு எழுதிய சிறுகதைகளுக்காக இந்த பரிசை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவருடைய கதைகள் அனைத்தும் தெளிவாகவும், உளவியல்பூர்வமான ஆதாரங்களுடன் இருபதனாலேயே இவருக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நோபல் சபை அறிவித்துள்ளது. 1.24 மில்லியன் அமெரிக்க டாலரை பரிசாகப் பெறப்போகும் அலைஸ் ஏற்கனவே புக்கர் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். ஒரு சிறுகதையை உருவாக்க ஆறு முதல் எட்டு மாதங்கள் எடுத்துக்கொள்வதாகக் கூறும் இவரது  முதல் தொகுப்பான, Dance of the happy shades (1968) வாசகர் கைகளுக்குக் கிடைக்க இருபது ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. அதைத் தொடர்ந்து 15 தொகுதிகள் வெளியாகியுள்ளன. கடைசி தொகுப்பு Dear Life 2012ல் வெளியாகியுள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக புனைவுக்கதைகளைப் படைத்துக் கொண்டிருப்பவர் அலைஸ் மன்றோ. அந்த வகையில் நல்ல சிறுகதை இலக்கியங்கள் சரித்திரம் படைக்கலாம் என்பதற்கு அலைஸ் மன்றோ ஒரு முன்னுதாரணம். தமிழில் நல்ல சிறுகதைகள் நிறைய வரவேண்டும். நம் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் நல்ல சிறுகதைகள் எதிர்காலத்தில் நிலைத்து நிற்கும்.  இன்று வெற்றி வாகை சூடி நிற்கும் அனைத்து எழுத்தாளர்களும் மென்மேலும் உயர்ந்து நிற்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பனிரெண்டு கதைகளில் சில புதிய பார்வைகளை தந்தவர்கள் உண்டு அவர்கள் லட்சிய உலகை முன்னிறுத்துகிறார்கள். சிலர் ஒப்புக்கொள்ளப்பட்ட மதிப்புகளைத் திரும்பச் சொல்கிறார்கள் சிலர்  அலங்கார வார்த்தைகளை, உணர்ச்சிப் பெருக்கெடுத்துக் கொட்டுகிறார்கள். வார்த்தைகள் வெள்ளமாகப் பெருக்கெடுக்கின்றன. திரு. வெங்கட் சாமிநாதன் அவர்கள் ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றி கூறியுள்ள நுணுக்கமான செய்தியை பகிர்ந்து கொள்வது மற்றவர்களையும் ஊக்கப்படுத்தலாம்.

 பழமைபேசி தன் அனுபவங்களிலிருந்து ஒரு புதிய உலகை நமக்குப் படிக்கத் தருகிறார்  தன்னுடைய ஒவ்வொரு கதையிலும் வாழ்க்கையின் வெவ்வேறு அனுபவங்களை நம் முன் மிகத்திறமையுடன் வைக்கிறார். அன்னிய சூழலில் தொடர்ந்து இருந்த போதிலும், பிறந்த மண்ணின் வாசம் விடாது, அதே  சமயம் வாழும் அன்னிய மண்ணின் சூழலில் ஆழ்ந்த அனுபவம் நிறைந்த வாழ்நிலைகளை எழுதுகிறவர்

வித்தியாசமாக எழுதிப் பார்க்கிறார்கள். அவர்கள் முயற்சி வரவேற்கத்தக்கது. கவிதை வடிவில் எழுதுகிறார்கள். ஒரு பொழுதின் நகைச் சுவையை எழுதிப் பார்க்கிறார்கள். துப்பறியும் கதை எழுதிப் பார்க்கிறார்கள். இப்புதிய முயற்சிகளில், தேமொழியின் துப்பறியும் கதை முயற்சி வந்தவற்றுள் படிக்க சுவாரஸ்யமாக சிறப்பாக வந்துள்ளது

புதிய எழுத்தாகவே தோன்றவில்லை. பழகிய கை மாதிரிதான் இருக்கிறது எழுத்தின் தேர்ச்சி. அந்தச் சூழலின் சித்திரம். பார்வதி ராமச்சந்திரனின் கதையை இப்படித்தான் சொல்ல விரும்புகிறேன்.

மாதவன் இளங்கோவின்  கதை முழுதும் கடைசி வரை ஒரு அயல் நாட்டின் கலாச்சார மேலாதிக்கத்தின் அகங்காரம் எனத் தோன்றினாலும் கடைசியில் அங்கும் மனித வாழ்வின் அவலங்கள் வேதனைகள் சில நமக்குக் கடைசி வரை புரியாமலேயே போகின்றன. எல்லா இடத்திலும் நாடுகளிலும் கலாச்சாரங்களிலும் மனிதம் இல்லாமல்  போய்விடுவதில்லை. ப்ரஸ்ஸல்ஸும் மயிலாப்பூரும் இணையாதவை. இணைக்க முடியும் என்று  ஒரு நல்ல விஷயத்தைத் தான் எழுதியிருக்கிறார்.

அதே மனிதப்பண்புகள், தான் மில்லியன் டாலர்கள் கணக்கில் நஷ்டப்பட்டாலும் மனித உயிரின் பாதுகாப்பு முக்கியம் என்ற உணர்வு.சரி இப்படித்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்படுகின்றனவா எங்கிலும் என்பது தெரியவில்லை. இருப்பினும் அது இன்னமும் உயிர்த்திருப்பது காணும் ஒரு இடத்தையாவது காண முடிகிறதே.

 மணி ராமலிங்கத்தின் கதை தடம் மாறும்போது திரும்ப தடம் வந்து சேரும் மனிதப் பண்பைச் சொல்கின்றன. மணி பேசாப் பொருளை எவ்வளவு தூரம் பேசவும் வேண்டும், பேசாது ஒதுங்கவும் வேண்டும், என்று தானே எல்லைக் கோடு இட்டு விளையாடியிருக்கிறார். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் அதற்குரிய அழகுகளோடுதான் இருக்கிறது. குழந்தைப் பருவம், பள்ளி வாழ்க்கை, போலத்தான் விளையாட்டுப் பருவமும்.  அங்கும் மனித உறவுகள் உண்டு, மனிதனின் பலங்களும் பலவீனங்களும் பங்கு கொள்கின்றன. அது ஒரு கால கட்டம் இருப்பினும் பின்னர் அந்தக் கட்டம் முடிந்து திரும்பிப் பார்க்கும் போது கடந்த உறவுகளும் அதன் சந்தோஷங்களும் மனதை பின்னும் ஒரு nostalgia வோடு பாதிக்கின்றன.  மணி மிகத் திறமையாக, convincing -ஆக அந்த அனுபவங்களையும் பின்னர் ஒரு ஏக்க உணர்வோடு திரும்பிப் பார்த்தலையும் எழுதியுள்ளார். யாரும் தொடாத அனுபவ தளம். வாழ்க்கையின் ஒரு பகுதி.

ஜெயஸ்ரீ ஷங்கர் கதை இது காறும் அவர் வல்லமையில் எழுதிய கதைகளிலிருந்து  நாலடி கோபுரங்கள் மாறுபட்டது.  தாய் தந்தையரால் கூட உதறிவிடப்பட்ட ஒரு குள்ள மனிதனின் அனுபவங்கள், கேலியும் தனக்கு மறுக்கப்பட்ட வாழ்க்கையும் கூட பாதிக்கவில்லை. அதெல்லாம் சரி. கடைசியில் லிப்டிலிருந்து குழுந்தையைக் காப்பாற்றியது – இது நடக்கலாம் தான் ஆனால் – இது வரை இயல்பாக எழுதப்பட்டது இங்கு இந்த சம்பவம் உருவாக்கப்பட்டு சேர்க்கப்பட்டது போலத் தோன்றுகிறது.

மிகச் சிக்கலான ஒரு ஆளுமை தன்  அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சின்னச் சின்ன கஷ்டங்கள், மனப் பிரள்வுகள், தன் இச்சைக்கும் மற்றோர் எதிர்பார்ப்புக்கு வாழும் முரண்களுமான நிரந்தர மனப் போராட்டம். ஆணாகப் பிறந்தும் பெண்மை சார்ந்த விருப்பங்கள் மறைத்தே மறைந்தே தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நிர்ப்பந்தங்கள் தன் திருமணத்திற்குப் பின்னும் தொடர்கிறது.  இதன் உண்மை பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் கதை சொல்ல சம்பவங்கள், விருப்பங்கள் நம்பக வட்டத்துக்கு வெளியே போவதில்லை. நன்றாக, திறமையுடன் எழுதப்பட்டுள்ளது. – அரவிந்த் சச்சிதானந்தனுக்கு வாழ்த்துகள்.

 சுதாகர் எழுதியுள்ள காட்சிப் பிழை என்ற கதை, நாடு இழந்தாலும், வாழ்க்கை சிதைந்தாலும், மனித சுபாவம் மாறுவதில்லை. அது நாடு கடந்தாலும், வாழ்க்கையின் கடைசிப் படியில் இருந்தாலும், வெறுப்பையும், தன் ego -ஐயும் துறக்கத் தயாராயில்லை. இது வாழ்க்கையின் யதார்த்தம்.

 மன்னிக்கத் தயாராக இருக்கும் அமீரும் தனனை அவமானப்படுத்திய மாமாவை மன்னிக்கத் தயாராக இல்லாத பாலாவும், அப்பாவுக்காகவாவது எல்லாத்தையும் மறந்து ஒரு வார்த்தை சொல்லலாமே என்னும் செல்வியும், மரணப்படுக்கையிலும் தன் வீராப்பை மறக்காத தெமெட்ட கொட மாமாவும் அவரவர் இயல்புப்படி நம் முன் காட்சிப்படுத்தப்படுகிறார்கள். அனாவசிய வார்த்தைகள் இல்லை. செயற்கையாக சித்தரிக்கப்பட்ட லட்சிய நோக்கு இல்லை. உணர்ச்சிக் கொப்பளிப்பு இல்லை. மனித சுபாவம் சிலரது சூழலும் வாழ்க்கையும் என்ன மாற்றம் பெற்றாலும். மாறுவதே இல்லை.  சிக்கனமான எழுத்து. இயல்பான மனிதர்கள். எனக்கு மிகவும் பிடித்த எழுத்து.

அனைவருக்கும் வாழ்த்துகள் நண்பர்களே.

அன்புடன்

பவள சங்கரி

ஆசிரியர்

வல்லமை இணைய இதழ்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *