நான் அறிந்த சிலம்பு – 104
மலர் சபா
புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை
மறையோர் இருக்கையும் உழவர் இருக்கையும் ஆகிய
ஊர்கள் இடையிட்ட நாட்டின் வழியாகச் செல்லுதல்
புலிச்சின்னம் பொருந்திய கொடியை
உயர்த்தித் தாங்கிய தேரையுடைய
வலிமைவாய்ந்த சோழமன்னனின் வெற்றிக்காகவும்,
மழை பொழியும் சூழலை உருவாக்குவதற்காகவும்
தேவர்களுக்கு உணவு சமைக்கும் மடைப்பள்ளியில்
வேதியர்கள் தீ வளர்த்தனர்.
அந்த வேள்வித்தீயில் எழுந்த நறும்புகை
வானுயர்ந்த மாடமாளிகையைச் சூழ்ந்து நிற்க
அவை மேகங்கள் சூழப்பட்ட மலையைப் போல்
மிகச் சிறப்பாய்க் காட்சியளித்தன.
இத்தகைய மங்கலச்சிறப்பு பொருந்திய
மறையோர் வாழும் இல்லங்கள் பல நிறைந்த நல்ல ஊர்.
இரந்து கேட்பவர்களின் சுற்றத்தையும்
புரந்து காக்கும் அரசரின் வெற்றியையும்
தம் உழவுத்தொழில் மூலம்
காத்து நிற்பவர்கள்
பரந்த நீருடைய காவிரிப்பெண்ணின்
புதல்வர்களான உழவர்கள்.
அவர்கள் வாழும் பழஞ்சிறப்பு வாய்ந்த ஊர்களில்
கரும்பாலைகளில் கரும்புச்சாறு காய்ச்சும்போது
எழுகின்ற புகையானது
தூற்றப்படாத நெற்குவியல்களைச் சூழ்ந்து நிற்கும்.
அந்தத் தோற்றம்
மேகம் சூழ்ந்த மலைபோலக் காட்சியளிக்கும்.
அதுபோன்ற உழவர்கள் பலரும்
வாழ்கின்ற இடங்கள் நிறைந்த பல ஊர்கள்;
இதுபோன்ற ஊர்கள் இடையில் கொண்ட
நாடுகளை எல்லாம் கண்டு,
ஒரு நாளில் ஒரு காத தூரத்துக்கு மேல்
நடக்க முடியாதவர்களாய்,
ஆங்காங்கே இடையிடையே தங்கி
நாட்கள் பலவாய் நடந்துதான் சென்றனர்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 142 – 155
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html